Tuesday, February 28, 2006

2. வரப்போவது........

அடுத்த பதிவு...
"களவு போகும் புரவிகள்"
சிறுகதைத் தொகுப்பு
எழுதியவர் : சு.வேணுகோபால்

Monday, February 27, 2006

1. ஸ்ரீரங்கத்துக் கதைகள்

புத்தகத்தை வெளியிட்டோர் - "உயிர்மை பதிப்பகம்", சென்னை
புத்தகத்தின் விலை - 200 ரூபாய்
வெளியான ஆண்டு - 2003
---------------------------------------------
என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் உடன் இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன். எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாக சொல்வதால் சிலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில், நல்ல எழுத்துக்களை படிக்க விரும்புபவர்கள் இவரைப் படிக்க வேண்டும் என்றே நான் சொல்வேன்.
----------------------------------------------
முதலில் சுஜாதாவைப் பற்றிச் சில வரிகள்....












தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், தமிழ்த்திரைப்படங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கும், இவரைப் பற்றிய அதிகமான அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
ரங்கராஜன் என்பது இவரின் பெயர். தன் மனைவி சுஜாதாவின் பெயரையே புனைப்பெயராகக் கொண்டு பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தவர். கல்வித்தகுதி M.Tech. கடைசியாக பெங்களூரில் BEL நிறுவனத்தில் பணி புரிந்தார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

இவரது நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த நடை எனக்கு மிகவும் பிடித்ததொரு அம்சம்

திரைத்துறையில் புகழ்பெற்ற வசனகர்த்தாவாகத் திகழ்கிறார். இவர் வசனம் எழுதிய சில திரைப்படங்கள்.....ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளம் கேட்குமே, அந்நியன், ஆயுத எழுத்து..இன்னும் சில திரைப்படங்கள்.
(சே! Public Exam ல ஆசிரியர் பற்றிச் சிறு குறிப்பு வரைஞ்ச மாதிரி ஆயிடுச்சு!)
------------------------------------------------
இனி புத்தகத்தைப் பற்றி...



















கொஞ்சமும் யதார்த்தத்தை மீறாத தன்மை சுஜாதாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் அதையே தொடர்கிறார். சிறு வயதில் அவர் வாழ்ந்த ஸ்ரீரங்கமே கதைகளுக்கான களம். அவர் பார்த்துப் பழகிய மனிதர்களே கதாப்பாத்திரங்கள். அவரும் கூட....

கதைகளின் உண்மைத்தன்மையைப் பற்றிக் கூறுகிறார்.."இந்தக் கதைகள் முழுக்க உண்மை இல்லை. உண்மையோடு கொஞ்சம் கற்பனை சேர்க்கப்பட்டு உருவானவை இவை.." என்று.

1971 லிருந்து, 2003 வரை பல்வேறு வருடங்களில், சிலவேறு பத்திரிகைகளில் வெளியான சிறு கதைகளின் தொகுப்பு இந்த "ஸ்ரீரங்கத்துக் கதைகள்". இதிலிருந்து சில சிறுகதைகள் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" என்ற பெயரில் தூர்தர்ஷனில் நாடகங்களாகவும் வெளிவந்தன.

இந்த 32 வருட கால இடைவெளியில் எழுத்தாளரின் பரிணாமம் வெகுவாகவே நிகழ்ந்திருக்கிறது. அவருடைய எழுத்துக்களிலேயே அந்த வித்தியாசத்தை உணர முடிகிறது. அவரே முன்னுரையில் "எழுத்து மீதான காலத்தின் ஆதிக்கத்தை உணர்த்தவே கதைகள் வெளியான வருடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன" என்று சொல்கிறார்.

சின்ன வயது குறும்புகள், வயதுக்கு மீறிய ஆசைகள், தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள், வாழ்ந்து கெட்ட மனிதர்கள், காலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழுந்தவர்கள் என்று பலதரப்பட்ட உணர்வுகளும், மனிதர்களும் எல்லா இடங்களிலும் தெரிகிறார்கள்.

பல கதைகளில் வரும் "ரங்கு" என்ற கதாப்பாத்திரம்.... கடலை மிட்டாயும், பொறி உருண்டையும் விற்கும் தன் கடையைத் தவிர வேறேதும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல், வருவோர் போவோரைக் கிண்டல் செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் ஒரு மனிதன்........நாம் எல்லோருமே பார்த்திருக்கக்கூடிய ஒரு பாத்திரம். இது போன்ற பல பாத்திரங்கள்...

Ten Annas ஐயங்கார் எனப்படும் பத்மநாப ஐயங்கார், நாடகம் நடத்தும் வரதராஜன், கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, உபன்யாசம் செய்து பின் cinema production manager ஆன திண்ணா, full suit மாப்பிள்ளை துரைசாமி, கோபமே வராத வைத்தி மாமா, என்று பல பாத்திரங்கள்...நம் பார்த்திருக்கக் கூடிய மனிதர்கள்....!

சுஜாதாவின் அந்த Climax Punch எல்லா சிறுகதைகளிலேயுமே மிளிர்கிறது. "மறு" என்றொரு சிறுகதையில் வேலைக்காரியின் "மூன்று" ரூபாய் மாதச் சம்பளத்தை எதேச்சயாய் எடுக்க நேரிடும் ஆசிரியர், அதை செலவு செய்வதோடு தனக்கு அந்தப் பணத்தைப் பற்றி தெரியாது என்றும் சொல்கிறார். தன் பாட்டியிடம் அந்த உண்மையைச் சொல்ல விரும்பியும் தைரியம் வராமல் விட்டு விடுகிறார். இந்தக் கதையின் முடிவு இப்படி வருகிறது....

அதைச் சொல்லும் தைரியம் என் பாட்டி சாகும் நேரத்தில் தான் வந்தது. "பாட்டி நம்ம வீட்டில செவளானு ஒரு வேலைக்காரி இருந்தாளே!நினைவிருக்கா?
"ஏன் இல்லாம? அவ கூட உன் புஸ்தகத்துல பணத்தை வச்சு தொலைச்சுட்டாளே?"
"அது தொலயலை பாட்டி. நாந்தான் எடுத்து செலவு பண்ணிட்டேன்."
"எனக்குத் தெரியும்" என்றாள் பாட்டி.

என்பதாக முடிகிறது கதை.

தன் கதாப் பாத்திரங்களின் மூலம் மெல்லிய உணர்வுகளையும் வெளியிடத் தவரவில்லை சுஜாதா.
"குடுமி" என்னும் சிறுகதையின் நாயகன் ராகவன், நன்றாகப் படித்தும், அமெரிக்கா சென்று படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், "குடுமி" வைத்திருந்த ஒரே காரணத்தால் VISA மறுக்கப்பட்டு இங்கேயே ஏதோவொரு அலுவலகத்தில் வேலைக்குச் சேருகிறான்.
அவன் பேசுவதாய் வரும் வசனம் ஒன்று...

"ஒரு மனுஷனுக்கு அவன் புறத்தோற்றத்தை முடிவு செய்யக்கூட உரிமை கிடையாதா? மத்தவா கிண்டல் பண்றாங்கிறதுக்காக எல்லாத்தையும் மாத்திக்கணுமா?"

என்ன ஒரு சத்தியமான வசனம்.

"ரெண்டணா" என்றொரு சிறுகதை இப்படிப் போகிறது.சின்ன வயதில் பாட்டி எண்ணெய் வாங்கி வரச்சொன்ன ரெண்டணாவை மோடி மஸ்தானுக்கு பயந்து அவன் தட்டில் போட்டு விட்டு, பின் "பாட்டி அடிப்பாளே" என்று அவனிடம் காசைக் கேட்க, அவன் தன்னோடு வந்து விடுமாறு ஆசை காட்டுகிறான்.
பயந்து ஓடிப்போய் தன் உண்டியலை உடைத்து எண்ணெய் வாங்கி வருகிறார்.இந்தக் கதை இப்படி முடிகிறது...
"நான் மட்டும் பாட்டிக்குப் பயந்து அவன் பின்னால் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தெருத் தெருவாகச் சுற்றிக் கொண்டு...எது எப்படியோ? இந்தக் கதையைக் கண்டிப்பாக எழுதியிருக்க மாட்டேன்".

இவர் பயன்படுத்தியிருக்கும் களம் திருச்சி என்பதால், நானும் திருச்சியில் சில வருடங்களைக் கழித்தவன் என்பதால், இந்தக் கதைகளைப் படிக்கும்போது கொஞ்சம் Nostalgic Feeling.

முக்கியமாக அவர் திருவெள்ளறையைப் பற்றிக் குறிப்பிடும்போது என்னைப் பழைய நினைவுகள் மிகவுமே தொல்லை செய்தன. திருவெள்ளறை திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயில் ஒன்று இருக்கிறது என்பது பல திருச்சி வாசிகளுக்கே தெரிந்திருக்காது. இன்றைய இந்துக் கோயில்களின் கட்டிட அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இக்கோயில் கண்டிப்பாய்ப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்!நண்பர்களோடு ஒருமுறை சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம்.

சரி..புத்தகத்துக்கு வரலாம்.நடிகையை அட்டைப்படத்தில் கொண்ட ஒரு புத்தகத்தில் சுஜாதாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்...
"ஒரு சிறுகதை எப்போது தொடங்குகிறது?"

"முடிவதற்குச் சற்று முன்னால்..."

இந்த இலக்கணத்திலேயே பெரும்பாலும் இவரது சிறுகதைகள் அமைந்திருந்தன. சிறுகதைகள் எழுத விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

கொஞ்ச நாட்கள், ஸ்ரீரங்கத்திலும் அந்த மக்களோடும் வாழ்ந்துவிட்ட வந்ததைப் போன்ற அனுபவம்!

இதோ காதுகளில் ஒலிக்கிறது

"ஸ்ரீரங்கத்து தேவதைகள்! நான் சந்தித்த ஜீவிதங்கள்!"

-சேரல்

Friday, February 24, 2006

முன்னுரை

என்னை அறியாமல் என்னைத் தொற்றிக்கொண்ட ஒரு நல்ல பழக்கம், புத்தகம் படிப்பது. கொஞ்சம் வறட்சியாய்ப் போன வாழ்க்கையை நடதிக்கொண்டிருக்கும்போது நல்ல துணையாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகங்கள். சின்ன வயதில் உருவான இந்தப் பழக்கத்திற்கு இப்போது நன்றி சொல்கிறேன்.

இந்த வலைப்பூ, நான் படித்த புத்தகங்களையும், அவற்றுடனான என் அனுபவங்களையும், அவற்றைப் படிக்கும்போது, படித்தபின் நேர்ந்த அனுபவங்களையும் பற்றிச் சொல்லக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருக்கட்டும்.