Wednesday, May 17, 2006

9. THE COMPANY OF WOMEN

மொழி : ஆங்கிலம்
வெளியான ஆண்டு : 1999
வெளியிட்டோர் : Penguin Books India (P) Ltd, New Delhi
புத்தகத்தின் விலை : 395 ரூபாய்கள்
--------------------------------------------------------------

















நண்பர் ஞானசேகர் பாணியில் இப்புத்தகத்தின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. படிப்பவர்களின் தேடல் முயற்சி தொடரட்டும்(ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பவர்களுக்கு இவரைப்பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருக்கும்)

எனவே நேரடியாகப் புத்தகத்திற்கு வரலாம். குஷ்வந்த் சிங்கின் புத்தகங்கள், பெரும்பாலும் அரசியல், மதங்கள் போன்ற விஷயங்களை விமர்சனம் செய்வதாக அமைந்திருக்கும் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்புத்தகம் அரசியலை மட்டும் விட்டு விட்டு, காதல், காமம், மதங்கள், நம் கலாச்சாரம் என பலவற்றைத் தாக்கி இருக்கின்றது.

இது ஒரு நாவல். மோகன் குமார் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை மூன்று பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகி 12 வருடங்களுக்குப்பிறகு, மனைவியையும் 2 குழந்தைகளையும் விவாகரத்து மூலமாகப் பிரியும், டெல்லியில் வாழும் சுமார் 40 வயதான ஒரு தொழிலதிபர் மோகன்குமார் என்பதாகத் தொடங்குகிறது கதை. மனைவியின் பிரிவுக்குப் பிறகு கிடைக்கும் தற்காலிகத் துணைகளின் மூலமாக, எப்படி தன் தனிமைக்கும், பாலுணர்வுகளுக்கும் மருந்து தேடிக் கொள்கிறார் என்பதாகக் கதை தொடர்கிறது.

இடையில், தன் இளமைப்பருவத்தைப் பற்றி மோகன் குமாரே சொலவது போல் அமைத்திருக்கிறார் ஆசிரியர். 20 வயது வரையில் இந்தியாவில் தன் ஒரே உறவான தந்தையுடன் வாழும் மோகன், தன் திறமையால் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்து செல்கிறார். அங்கே அவருக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக நிகழும் மாற்றங்கள் என்று பல விஷயங்களை அடுக்கிச்செல்கிறது கதை.

அங்கே அவர் முதன்முதலில் உடலுறவு கொண்ட கருப்பினப்பெண், பாகிஸ்தான் நாட்டுப் பெண் என்று பலருடனான தன் அனுபவங்களை வெட்டவெளிச்சமாக விளக்கி நாடு திரும்புகிறார் மோகன். பிறகு திருமண வாழ்க்கை, முதலிரவு, தேன் நிலவு, குழந்தைகள் என்று சரளமாக ஓடுகிறது கதை.

மீன்டும் மணமுறிவுக்குப் பிறகான நிகழ்காலத்தில் வரும் பெண்கள், அவர்களுடனான உறவு, மும்பையில் உறவு கொள்ளும் ஒரு விலைமாது, கடைசியாக எய்ட்ஸ், மரணம் என்பதாக முடிகிறது கதை.

சரி! இனி கதையைக் கொஞ்சம் வெளியிலிருந்து அலசுவோம். பாலுணர்வைத் தூண்டக்கூடிய பகுதிகள் புத்தகம் முழுதுமே உண்டு! இந்தப் புத்தகத்தை எழுதும் போது குஷ்வந்த் சிங்கிற்கு 80 வயதுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இப்புத்தகத்தின் முகவுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

"As a man gets older, his sex instincts travel from his middle to his head. What he wanted to do in his younger days, but did not because of nervousness, lack of response of oppurtunity, he does in his mind"

உன்மைதான்!

சரளமான ஆங்கிலம். நான் படித்தப் புத்தகங்களில் மிக எளிமையான ஆங்கிலத்தைக் கண்டது இதில்தான்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக, எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகின்றன என்று சொல்லி இருக்கிறார். 20 வயது வரை படிப்பது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்த ஒருவன், சில மாதங்களிலேயே தன்னை விட ஒரு வயது மூத்த கருப்பினப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என்பது முகத்திலடிக்கும் உண்மையாக இருந்தது.

யாஸ்மீன் என்னும் பாகிஸ்தான் பெண்ணுடனான் அவன் உறவு கொஞ்சம் வித்தியாசமானது. இவன் வயது இருபதுகளின் ஆரம்பம்! அவள் வயது முப்பதுகளின் முடிவு! கல்லூரி வகுப்பில் மதங்களைப் பற்றிய விவாதத்தில், இந்துத்துவத்தைத் திட்டிப் பேசும் இந்தப் பெண்ணுடன் மோதலில் தொடங்கும் இவன் அனுபவம், காதலில் அல்ல, காமத்தில் முடிகிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைக்கு மோகன் தரும் தீர்வு மிகவும் வித்தியாசமானதுதான்!

விவாகரத்திற்குப் பிறகு, தனக்குத் தற்காலிகத் துணை வேண்டும் என விளம்பரம் கொடுக்க, வரிசையாக வந்து சேர்கிறார்கள் சரோஜினி என்கிற ஒரு பேராசிரியரும், மோலி என்கிற ஒரு பெண்ணும்!

பெண்களுடனேயே வாழ்ந்து முடிக்கும் மோகனின் இன்னொரு புறமும் வித்தியாசமாகவே இருக்கிறது! குழந்தைகளிடம் அன்பு, வியாபாரத்தில் வெற்றி, தோட்டத்தில் சிறு நீர் கழிப்பது, தகப்பனார் மீதான மாறாத அன்பு, தினம் செய்யும் சூரிய நமஸ்காரம், காயத்ரி மந்திரம், அடக்க முடியாத உடல் இச்சை என்று மோகன் என்ற தனி மனிதனின் பன்முகத்தன்மையைக் காட்டி இருக்கிறார் குஷ்வந்த் சிங்.

படிப்பது கொஞ்சமாவது பயன்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் புத்தகத்தைத் தவிர்க்கலாம். Just for Fun என்று நினைப்பவர்களும், எந்தப் புத்தகத்திலும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்ற(என் போல்) நம்பிக்கை இருப்பவர்களும் இதைப் படிக்கலாம்.

-சேரல்

5 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Sekar!
Waiting for ur comment......

J S Gnanasekar said...

இதோ வந்துட்டேன்.

"இது செக்ஸ் புத்தகம் இல்லை. ஏனெனில், இதை எழுதியவர் குஷ்வந்த் சிங்" என்ற என் நணபனின் கருத்துப்படிதான், இப்புத்தகத்தைப் படித்தேன்.

1) ஒரு மாதத்திற்கு முந்தைய ஒரு தமிழ் வார இதழில், ஒரு பொது அறிவுச் சிந்தனை உடைய வாசகர், பெண்களின் ஆடைகளைப் பற்றி, ஒரு கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பதில் சொன்னவர், குஷ்வந்த் சிங் சொன்னதைப் பாதிவரை சொன்னார். "சேலைதான் ரொம்ப சவுகரியமானது. ஏனெனில், எல்லா ...." என ஆரம்பிக்கும் இவ்வரிகள், குஷ்வந்த் சிங் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பான, We Indians என்ற புத்தகத்தில் வரும் Sex in Indian life என்ற கட்டுரையில் இடம்பெற்று உள்ளது. இதே கட்டுரை, "மது மங்கை மேதை" என்ற தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, குஷ்வந்த் சிங்கின் புத்தகத்திலும் காணலாம். சேரல் சொன்னதுபோல, சமுதாயத்தின் பல அலங்கோலங்களை, ஒரு தனிமனிதன் மனதிற்குள் நினைப்பதை, எழுத்தினால் சொல்லும் பாணி கொண்டவர் குஷ்வந்த் சிங். துளியும் அரசியல் இல்லாமல் இவர் எழுதிய புத்தகம், எனக்குத் தெரிந்து இதுதான்.

2) மூன்று பகுதிகளாகக் கதை சொன்ன விதமும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒரு மனிதன், தனது நண்பனுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய உணர்வுகளை எல்லாம், ஆசிரியரே சொல்வார். மீதி உள்ள ஒரு தனி மனிதனின் உணர்வுகளை, மோகன் குமாரே சொல்வதுபோல், எழுதி இருப்பார். சூரிய நமஸ்காரம் செய்வதிலும், தோட்டத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்திலும் மனநிலைகள் மாறுவதை உன்னிப்பாகக் கவனித்தால் அருமையாக இருக்கும்.

3) பல பெண்களை அவர் கை வைத்திருந்தாலும், பல பெண்களால் அவர் கைவைக்கப்பட்டு இருந்தாலும் 9 பெண்களுடனான மோகனின் உறவை மட்டும் விளக்கி இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் மூலமும், ஒவ்வொரு மதத்தையோ, ஒரு கலாச்சாரத்தையோ, ஏதோ ஒன்றைக் கிண்டல் செய்வதே அவரின் நோக்கமாக இருந்திருக்கக் கூடும்.

ஒரு யூதப்பெண். சேரல் சொன்னதுபோல், அவள் நீக்ரோ இனப்பெண் கிடையாது. நீக்ரோ+அமெரிக்கன்=ஜாம்போ இனத்தைச் சேர்ந்தவள்.

ஒரு பாகிஸ்தனியப் பெண். இவளை மட்டும் நான் இரண்டு முறை படித்தேன். பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஆசிரியர் சொல்லும் தீர்வு, தேசப்பற்றையும் தாண்டி, நம்மை முகத்தில் அறைந்துபோவது உறுதி. இருவரின் மதங்கள் பற்றி நடக்கும் வாக்குவாதங்கள் சும்மா தூள் பறக்கும்.

குழந்தை கவனிக்க வந்த நர்ஸ். கிறிஸ்தவத் தமிழ்ப்பெண். நான் விமர்சிக்க விரும்பவில்லை. கொஞ்சம் டேமேஜ் ஆக்கிட்டார்.

வேலைக்காரி. "Those who has been called as untouchables are the most touchables" என்ற பகிரங்க கருத்தை இங்கே சொல்லி இருக்கிறார்.

"செக்ஸ் என்பது புது உடலில், புதிதாய் வைத்துக் கொள்ளும்போது மட்டுமே பிரமிப்பைத்தரும். மற்றபடி, பழக்கப்பழக அதுவும் புளிக்கும், பாலைப் போலவும், குழந்தைகளைப் போலவும்" என்ற உண்மை உணர்ந்த மோகன் குமார், மணமுறிவுக்குப் பின், தனது காம இச்சைக்குத் துணைவேண்டி, பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வார். இவ்விடத்தில், கல்யாண வரன் தேடுபவர்களை மொத்தமாக டேமேஜ் ஆக்கி இருப்பார். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பெண் விருப்பம் தெரிவிப்பாள். தூரம் கருதி, நிராகரித்துவிடுவார். இவ்விடத்தில், ஒரு மனிதன் செக்ஸில் காட்டும் பரபரப்பு, அருமையாக விளக்கப்பட்டு இருக்கும்.

4) செக்ஸ் தவிர பல சூப்பர் விஷயங்கள் உண்டு. சரண் படம் போல, நன்கு உற்றுப் பார்த்தால் புரியும். கிருஷ்ண பகவான் உதாரணம், கங்கையின் புனிதம், ஆற்றில் அஸ்தி கலப்பவனின் மனநிலை, ஆசிரம வாழ்க்கை, ஒரே கடவுள் கொள்கை - சிலை வழிபாடு என ஊரை ஏமாற்றும் மதங்கள், இலங்கைத் தமிழர் பிரச்சனை, கோவாவைப் பற்றிய குறிப்புகள், அமெரிக்க நாகரீகம், ஆணுறை பற்றிய தகவல்கள், தற்கொலை செய்து கொள்ளூம் முன் குழப்பமான மனநிலை, ஆணின் மேல் மாமனார்-மாமியார் கொடுமைகள், ஆணின் மேல் மருமகள் கொடுமைகள். இவற்றை எல்லாம் மீறி தனது ஒரே சொந்தமான தந்தையின் மரணம், ஒரு கேவலாமான காரணத்தால் தனக்குத் தெரிவிக்கப்படாமல் போக, அதில் இருந்து விவாகரத்து ஆகும்வரை உள்ள சம்பவங்கள் அருமை. குடும்பம் என்ற ஒன்று தேவையா இல்லையா என்ற இரு துருவங்களை, தந்தை-மகன் என்ற இரு கதாபாத்திரங்கள் அலசி புரட்டி எடுத்திருப்பார்கள்.

5) சேரலின் கடைசிபத்தி விமர்சனத்தில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. பாக்கியராஜ் படத்தில் வரும் கதாநாயகன் போன்ற நானே, செக்ஸ் தவிர இவ்வளவு விஷயங்களைக் கவனித்து இருக்கும்போது, நான் உடன்படாமல் போவதில் ஆச்சரியமில்லை. மொத்தத்தில் குஷ்வந்த் சிங் போல நச்சுன்னு ஒண்ணு நானும் சொல்ல முயற்சி செய்றேன்: "அரிச்சந்திர மகாராஜான்னு ஒரு ராஜா இருந்தாரு என்று ஒரு எழுத்தாளனால் கதை மட்டும்தான் சொல்ல முடியும். அதில் இருந்து உண்மையின் மகத்துவத்தைக் கற்றுக் கொள்கிறோமா, மனைவியை அடகுவைக்கக் கற்றுக் கொள்கிறோமா என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது".

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி சேகர்!
சில புத்தகங்களைப் படித்தவுடன் "அதைப் படிக்கலாம்" என்று நண்பர்களுக்குச் சொல்வதுண்டு! என்னுடைய ரசனை அவர்களுக்குத் தெரியும். படிப்பதும், விடுவதும் அவரவர் விருப்பம்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று நான் யாருக்கும் சொல்லமாட்டேன். காரணம், என் ரசனைக்கு இது ஒத்துவரவில்லை!

ஒரு வேளை. குஷ்வந்த் சிங்கின் மற்ற புத்தகங்களைப் படித்தால் என் மனநிலை மாறலாம்.(உனக்குத் தெரியும் இது நான் படித்த முதல் குஷ்வந்த் சிங் புத்தகம்)

J S Gnanasekar said...

பிரபலங்கள் கிளப் நடத்துவதை YAC, YMC என்று டேமேஜ் பண்ணி இருப்பார். இந்தியா - இலங்கை சமாதான ஒப்பந்தத்தை சூப்பராகக் கிண்டலடித்து இருப்பார். அப்புறம், கோயில்களின் domeகளையும், மொக்க விஷயத்தைப் பெரிதுபடுத்தி சாதித்துக் கொள்ளும் சிலரின் போக்கையும் டேமேஜ்.

-ஞானசேகர்

Raj Chandra said...

It is good to see a blog which discusses about only books(Just came across your blog through Gilli).

If you're interested in reading other Khushwant Singh's books, his "Delhi" should not be missed at all. His narration will make you fall in love with that city.

The story moves around the history of Delhi(past and present) and if you had read Madan's "Vandhargal Venrargal" you will notice references in "Delhi" too.

Should not be missed.