Monday, March 26, 2007

19. காமக்கடும்புனல்

உலகின் ஒவ்வொரு உயிரின் அடிப்படை நோக்கமும் இனப்பெருக்கம்தான்
- சிக்மண்ட் ஃப்ராய்ட்
------------------------------------------------------
புத்தகம் : காமக்கடும்புனல்
ஆசிரியர் : மகுடேசுவரன்
வெளியிட்டோர் : யுனைடெட் ரைட்டர்ஸ்
வெளியான ஆண்டு : 2004
விலை : 100ரூ
------------------------------------------------------
காமக்கடும்புனல், பாலியல் பற்றிய 400 கவிதைகள் கொண்ட ஒரு கவிதைத்தொகுப்பு.

மகுடேசுவரன் திருப்பூரில் பின்னலாடைத்தொழிலில் ஏற்றுமதி ஆலோசகராகப் பணிபுரியும் ஓர் இளைஞர். 'பூக்கள் சொல்லும் தகவல்கள்', 'அண்மை', 'யாரோ ஒருத்தியின் நடனம்' ஆகியவற்றிற்குப் பிறகு இவர் வெளியிட்டிருக்கும் மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது.

பாலியலைப் பல்வேறு கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். எந்தவொரு கவிதையும் எண்ணிக்கைக்காகத் திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஓர் ஆணின் பார்வையிலிருந்து மட்டுமில்லாமல் ஒரு பெண்ணின் பார்வையிலும் பாலியலையும், காமத்தையும் அணுகியிருக்கிறார்.

இன்னும் முறையல்லாத உணர்ச்சியாக நிருபிக்கப்படும் காமத்தையும், அதன் புனைப்பெயரான, சினிமாக்களில் புனிதமாகக் காட்டப்படும் காதலையும் பற்றிய கவிதைகள், பெண்ணின் உணர்வுகள் மற்றும் இயற்கை பெண்ணுக்கு அளித்த அசவுகரியங்கள் பற்றிய கவிதைகள், சுய இன்பத்தைப் பற்றிய சில கவிதைகள், நிதர்சனம் சொல்லும் சில கவிதைகள் கொண்டு இப்புத்தகத்தை நிரப்பியிருக்கிறார் ஆசிரியர்.

என்ன எழுதி என்ன? சில உண்மைகள் எப்போதும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

எனக்கு இந்தக் களத்தில் 95% நேரடி அனுபவம் இல்லை என்பது 100% உண்மையாதலால், இப்புத்தகத்தை விமர்சிக்காமல் இதில் எனக்குப்பிடித்திருக்கிற சில கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.
-----------------------------
சொற்கள் பிறழ்ந்தன
கலைந்தன
மருவின
திரிபுற்றன

பிறந்தது புது மொழி
-----------------------------
முதுமை மீது
அனைவர்க்கும் உண்டு
ரகசிய பயம்

பழைய ஆட்டத்தை ஆட
ஆளற்ற தனிமை
தொய்ந்த நரம்புகள்
சுண்டிய ரத்தம்
போகத்திற்கு ஒத்துழைக்காத வெற்றுடல்
-----------------------------
உலகத்தை அழகுபடுத்த
மிச்சமிருப்பவை
இன்னும் பிறவாக் குழந்தைகள்

இன்பமாக
மிச்சமிருப்பவை
அவை
ஜனிப்பதற்கு நிகழா உறவுகள்
-----------------------------
பெண்களுக்கு
ஆண்களிடமிருந்து
என்னென்னவோ உரிமைகள்
கிடைத்தென்ன?

அழைத்தால் வருகிறார்களா
மறுத்தால் விடுகிறார்களா
கணவர்கள்
-----------------------------
ஆணின் வாழ்வோட்டத்தில்
நிச்சயம் ஒளிந்திருக்கிறாள்
இன்னொருத்தி

தாயல்லாத
தாரமல்லாத
சகோதரியல்லா
தமகளல்லாத
பர ஸ்திரீ
-----------------------------
ஓடிப்போவோர்
முதலில் செய்கிற காரியம்

உள்ளம் திகட்ட
உயிர் அதிரப் புணர்வதுதான்
-----------------------------
'உன்னைப்புணர விரும்புகிறேன்' என்று
நேரடியாகக் கூற இயலவில்லை
நூதனமாக ஆரம்பிக்கிறேன்
'உன்னை விரும்புகிறேன்'
-----------------------------
சிறிது காலமே நீடிக்கும் இன்பம்
என்பதால் அல்ல
சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல
அந்த இன்பத்தை அடைய

எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்
அது சிற்றின்பம்
-----------------------------
ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது
-----------------------------
நம் காதலும்
உன்னதமாகத்தான் இருந்தது
நாம் புணரும் வரை
-----------------------------
வீடு துறந்து செல்பவர்கள்
திரும்புவதில்லை
வெளியில் ஒருத்தி
அமைந்துவிட்டால்
-----------------------------
சாதுவாகத் திரிந்தவனின்
குரூர முகத்தைச்
சந்திக்க விருப்பமா?

படுக்கையில் அவன் முகம்
ஓநாயின் வேட்டை முகம்
-----------------------------
என்னை நீங்கள் எங்கும் காணலாம்

பாங்காக்கில் புகையூதியபடி
சோனாகஞ்சில் நகம் பூசியபடி
உடைந்த ரஷ்யாவில் நெட்டைக்கால் தெரியும்படி
கென்யாவில் கிருமி தாங்கியபடி
லாஸ்வேகாஸில் காரோட்டியபடி

உன் வீட்டில்
சுமங்கலி பூஜையில் பாடியபடி
-----------------------------
கணவனால் கைவிடப்பட்டவள்
ஓர் இளைஞனை
வைத்துக்கொள்கிறாள்
புறம்பேசித் திரிகிறது
அவளால் கதவடைபட்டக் கூட்டம்
-----------------------------
அடங்காத காமத்துடன்
தவித்துக்கொண்டிருக்கிறேன்

உனக்கோ
ஆழ்ந்த அயர்ந்த உறக்கம்

விடிந்ததும்
எப்படியாவது உன் வாயைப் பிடுங்கி
ரெண்டு அறை விடுவேன்
-----------------------------
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-----------------------------
'முறையல்லாதன செய்கிறாய்
சொன்னால் கேள் அண்ணா'
கண்ணீர் மல்கப் பேசு தோழி

உன்னை வன்புணர வந்தவன்
திகைத்து நிற்கட்டும்
-----------------------------
தாய்மையை மதிப்பார்
பெண்மைக்குக் குரல் கொடுப்பார்

மங்கையராய்ப் பிறந்திட
மாதவம் செய்திட வேண்டுமென்பார்

வீட்டம்மா
நிறைமாத கர்ப்பிணி என்பதற்காக
ஒருநாள் விட்டுவைக்க மாட்டார்
-----------------------------
உன் இசைவில்லாமல்
ஏதாவது செய்திருக்கிறேனா?
புணர்ந்தது தவிர
-----------------------------
வேற்றூரில்
யுவதியும் ஓர் இளைஞனும்
அறை எடுத்து
ஒன்றாகத் தங்கினர்
அவர்கள் மொழியாராய்ச்சி செய்துகொண்டிருந்தனர்

என்கிறேன்

நம்பவே மாட்டேன் என்கிறீர்கள்
-----------------------------
மரணப்படுக்கையில் இருப்பவரின்
ஞாபகத்திலாடும்
கடைசி முகங்களில் ஒன்று
ஒரு வேசியினுடையதாகவும்
இருக்கலாம்
-----------------------------

- சேரல்

13 comments:

கோவி.கண்ணன் said...

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சொல்லும் பொருள் பரவலாக நடைபெறுவதுதான். நல்ல தொகுப்பு !

நந்தா said...

அருமையான கவிதைகள். பாடு பொருள் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு விஷயத்தை உணர்த்தியுள்ளார். பெண்ணியத்தையும் சொல்லியுள்ளார்..அருமையான தொகுப்பு.

புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்?

J S Gnanasekar said...

இப்'புணர்ச்சி நானூறு' புத்தகத்தை நான் திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். திருச்சி நியூ சென்சுரியில் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். மற்றபடி மற்ற ஊர்களைப் பற்றி ஒரு ஐடியாவும் இல்லை.

-ஞானசேகர்

J S Gnanasekar said...

கடந்த இரு பதிவுகளில் ஒரு நல்ல விசயம் கவனித்தேன். போன பதிவில் வைரமுத்து, இதில் ஃப்ராய்டு என இன்னொருவரை முன்வைத்து, உங்களைப் பின்வைப்பது.

நல்ல முயற்சி; நல்ல பழக்கம். தொடருங்கள்.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி சேகர்!

இது உன்னிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கோவி.கண்ணன், நந்தா

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மின்னஞ்சல் மூலம் நண்பன் சுரேஷ் அளித்த கருத்து,


kavidhaigal padiththEn.. hummmmmm... "kaamamum dhiyaanamum"-ngra puththakaththilE vara oru visayam adikkadi gnyabagathukku varuthu.
29 vayasu ezhuthaaLar avarukkutpatta samooga anubavathila ezhuthiyirukkiraara? alladhu appaarpattu konjam karpanai irukkiratha? (e.g: vayOthiga suya imbam patriya kavidhai)
P.S: Andha puththakathirukku yaaraavathu urai ezhuthi irukkaangala endru therinthukoLLa aasai :-)

:-) Subi

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வழங்கியிருப்பவர் நாஞ்சில் நாடன் (தலைகீழ் விகிதங்கள் ஞாபகத்திற்கு வரலாம்). முன்னுரையில் காதலையும், காமத்தையும் நன்றாக அலசித் துவைத்திருக்கிறார். அவர் சொன்னதில் எனக்குப் பிடித்திருந்தது.
'நான் காதல் வயப்பட்டதில்லை. காம வயப்பட்டிருக்கிறேன்'

Anonymous said...

Anbukku iniya thambi Cheral !
Naan Magudeswaran.
Kaamak kadumpunal aasiriyan.
Umathu Vimarsanamum inthap paguthiyil nanbargaludan neengal
nadaththum uraiyaadalaiyum padiththen. Magizhchchi.
vaazhga umathu vaasaga manam.
padaippin adinaathaththai ilaignargal neengal purinthukondeergal. Athuve en thoguppin vetriyaagum.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

JAGANNATHAN CS said...

அன்புள்ள தோழருக்கு..
உங்கள் கல்லூரீ இளையவர் ஜெகன்நாதன் சுசி(2003 - 2007) எழுதுவது...
காமக்கடும்புனல் கவிதைகள் படித்தேன் வாழ்க்கையின் மற்றொரு உறவை பற்றி சிறிது தெரிந்து கொண்டேன் நான் கவிதை எழுத மற்றொரு அத்தியாயம் கிடைத்தது. நன்றி......
இந்த புத்தகத்தின் இணையநகல் இருந்தால் அனுப்பவும்.....
என் முகவரி..
rcjagan@yahoo.co.in
என்றும் அன்புடன்,
ஜெகன்நாதன் சுசி

J S Gnanasekar said...

எதிர்க்காற்று வீசும்
மேட்டுச் சாலையில்
பழைய மிதிவண்டியின்
பின்னிருக்கையில்
கைப்பிள்ளையோடு
தனது வற்றிய மனைவியை அமரவைத்து
மூச்சிறைக்க
மிதித்துச் செல்பவனிடம்
கேட்டறிய வேண்டும்
இல்லறத்தின் பொருளை.

- மகுடேசுவரன் (இன்னும் தொலையாத தனிமை, தமிழினி பதிப்பகம்)

ny said...

spellbound!!

fan'taste'ic!