Friday, April 27, 2007

21. கருவாச்சி காவியம்

புனையப்படாத நாவல்தான் வாழ்க்கை. புனையப்பட்ட வாழ்க்கைதான் நாவல்
- வைரமுத்து

------------------------------------------
புத்தகம் : கருவாச்சி காவியம்
ஆசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 2006
வெளியிட்டோர் : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ350

------------------------------------------












மேற்கண்ட பச்சை நிறத்திலான வார்த்தைகளை முன்னுரையில் கொண்டு தொடங்குகிறது இந்நூல். ஆனந்த விகடனில் தொடராக வந்த கதை இது. எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்குப் பிடித்த தொடர் எதையும், ஒவ்வொரு பகுதியாக காத்திருந்து படிக்காமல், முழு தொகுதியாகத்தான் படிப்பேன். இந்த முறை எனக்குப் பிடித்திருக்கிறது.

கருவாச்சி என்கிற கிராமத்துப் பெண்ணின் வாழ்க்கையின் சில வருட நிகழ்வுகள்தான் இந்தக் கதை. இந்தக் கருவாச்சி யாரோ ஒரு தனிப்பட்ட பெண் அல்லள். எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்குலத்தின் பிரதிநிதி இவள். வாழ்க்கையின் நீரோட்டத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு கடைசியில் சமுத்திரம் சேரும் ஒரு சாதாரண பெண்ணின் கதை.



















கருவாச்சியின் கணவன், திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து கஷ்டப்பட்டு முன்னேறி...மன்னிக்கவும், இந்த அதிசயம் மட்டும் இந்தக் கதையில் நிகழவில்லை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு, உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை. அனுபவம் ஒரு பெண்ணை(மனிதனை) எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் வைரமுத்து.

கதையின் களம் தேனி மாவட்டத்தில் ஏதோ ஓர் கிராமம். கதையின் காலம் இந்தியச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம். வார்த்தைகளைக் கிராமத்துப் புழுதியில் தோய்த்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் கவிஞர். இயல்பான எழுத்து, தெளிந்த நீரோடை போல ஓடுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளுமை கொண்டவர் என்பதை கவிஞர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்ல முடிகிறது வைரமுத்துவால். மருத்துவம் பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் குறிப்பிட்டேயாக வேண்டும். இந்தக் கதையில் மூலிகை மருத்துவம், கை மருத்துவம் பற்றிய குறிப்புகள் அங்கங்கே நிறைய சொல்லப்படுகின்றன. அந்த வகையிலும் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்தான்.

கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை நம் மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். இவர்களுக்கிடையேயான உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அழகு மட்டுமில்லை, அதில் உண்மையும் இருக்கிறது. ஒவ்வொரு கதபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு பெண், பேன் பார்ப்பதில் பெயர் பெற்றவள். யாருக்கும் பேன் பார்ப்பதென்றால் அவளைத்தான் கூப்பிடுகிறார்கள். கொஞ்சம் சிரிப்பாக இருந்தாலும், இது நிகழ்வதுதான்.

கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களை, புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி... கொஞ்ச நேரம் என்னை உறைய வைத்துவிட்டது. இப்படித்தானே என் பாட்டியோ, முப்பாட்டியோ செய்திருப்பாள் என்று நினைக்கும்போது, மனதைப் பிசைகிறது. முன்னுரையில் கவிஞர் நன்றி கூறும்போது சொல்லும் சில வார்த்தைகள் 'தனியொருத்தியாய் அவள் எப்படி பிள்ளை பெற்றாள் என்று மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - எனக்கு அழுகையே வந்து விட்டது'. கருவாச்சி தனியே பிள்ளை பெறும்போது, எனக்கும் இதே உணர்ச்சி மேலிட்டது. உண்மையிலேயே அழுதுவிட்டேன். மனிதன் உணர்ச்சிகளின் கலவைதானே?

'பண்படுத்துவது துறவறம் மட்டுமல்ல; சாதாரண வாழ்க்கையில் ஈடுபடுபவனும் பக்குவப்படுகிறான், அனுபவங்களால்' என்று புரிய வைக்கிறார் ஆசிரியர். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்குப் பிறகு மீண்டும் தன் ஊர்ப்புறங்களைப் பதிவு செய்திருக்கிறார். கருவாச்சி காவியத்துக்கான தூண்டுகோலாக இவர் எடுத்துக்கொண்டவை, இவர் குடும்பப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களும், இவர் கேள்விப்பட்ட கிராமத்துப் பெண்களின் கதைகளுமே!

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரின் பதிலும்:

உங்கள் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்’ இரண்டில் பெரிதும் வெற்றி பெற்ற படைப்பு எது?


படைப்பாக்கத்தில் வெற்றி பெற்றது எது என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும். விற்பனையில் வெற்றி பெற்றது கருவாச்சி காவியம்தான் என்று கணக்கு சொல்கிறது. 58 நாட்களில் மூன்றாம் பதிப்பு. எல்லாம் வாசகர் கொடுத்த வரம்.

தனக்குக் கிடைத்திருக்கும் புகழைக்கொண்டு, தன் மக்களின் வாழ்வைப் பதிவு செய்யவும், தமிழ் செய்யவும் முனைந்திருக்கும் வைரமுத்து கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவர். இவரைத்தவிர வேறு யாரேனும் எழுதி இருந்தால் இந்தப் புத்தகம் இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!

புத்தகத்தின் பின்னட்டையில் நான் கண்ட வைரமுத்துவின் வாசகம் "தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது".

கொஞ்சம் கர்வம் வெளிப்படும் வார்த்தைகள்தான் என்று நினைத்த நான், கர்வப்படத் தகுதியுள்ளவர்தான் இவர் என்பதைப் புத்தகத்தைப் படித்தபின் மீண்டும் ஒருமுறை புரிந்துகொண்டேன்.

- சேரல்

Tuesday, April 24, 2007

20. நிழல் வெளிக் கதைகள்

பேய்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இலக்கியங்களின் சில ஆயிரம் பக்கங்கள் காலியாகவே இருந்திருக்கும்
- யாரோ
----------------------------------------
புத்தகம் : நிழல் வெளிக் கதைகள்
ஆசிரியர் : ஜெயமோகன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2005
விலை : பின் அட்டையில் ரூ 60 என்றும், உள்ளே ரூ70 என்றும் அச்சிடப்பட்டிருந்த இப்புத்தகத்தை ரூ70க்கு வாங்கினேன்.
----------------------------------------





கடவுள், காதலைப் போலவே அதிக சர்ச்சைகளுக்குள்ளாகிற ஒரு விஷயம் பேய். இருக்கிறதா? இல்லையா? கொடூரமானதா? சாந்தமானதா? மனிதனுக்கு உதவி செய்கிற பேய்கள் கூட உண்டாமே? என்று எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டு இன்றும் நம்மிடையே உலாவி வருகின்றன பேய் பற்றிய பயங்களும், அவை குறித்தான கதைகளும்.

மன அழுத்தத்திற்கு ஆட்படுகிற மனிதர்களின் மனத்தில் உருவாகும் கற்பனைக் கதாப்பத்திரங்களே பேய்கள் என்கிறது அறிவியல். பேயைப் புகைப்படத்தில் பதித்து வருபவர்களுக்கு, அவை மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் கதிர்களால் உருவாகும் பிம்பங்கள் என்று மறுப்பு சொல்கிறது அறிவியல்.

பேய்கள் என்பன மனிதனின் வக்கிர எண்ணங்களும், மாசு படிந்த மனமும்தான் என்பதாக நீதி சொல்கின்றன சில பழந்தமிழ் இலக்கியங்கள். மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக, கடவுளைப் போன்றே படைக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம்தான் பேய் என்கின்றனர் நாத்திகவாதிகள்.

எது எப்படியோ! மனிதனின் அதீதக் கற்பனைக்கு ஒரு வடிகாலாக பேய்க் கதைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. சிறுவயதில் நான் கேட்டு வளர்ந்த கதைகளில் பெரும்பாலும் ஒரு பேயாவது வந்துவிடும். மனம் முழுக்க ஆக்கிரமித்து பயமுறுத்திக் கொண்டிருந்த பேய்கள் பற்றிய நினைவு இன்று வரை அகலவிலை. எல்லோருக்கும் பொதுவான அனுபவங்களைப் பட்டியலிட்டால் அதில் பேய்களோடான அனுபவம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

நம்மைப் போலவே பல பேய்க்கதைகளை மனதில் உள்வாங்கிக்கொண்டிருக்கிற ஜெயமோகன், தன் கற்பனையில் தோன்றிய சில பேய்க்கதைகளை வழங்கியிருக்கிறார். ஜெயமோகன், தமிழ் எழுத்துலகில் பரவலாகப் பேசப்படுகிற ஓர் எழுத்தாளர். நாஞ்சில் மண்ணில் பிறந்த இவரது எழுத்தில் மண்ணின் மணம் வீசுவது உண்மை. 'கஸ்தூரி மான்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் இவர்.

பத்து பேய்க்கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத்தொகுப்பு, இந்நூல். இக்கதைகளைப் படிக்கும்போது ஜெயமோகன் ஆழ்ந்த விஷய ஞானமும், லாவகமான வார்த்தைப் பிரயோகமும் கைவரப்பெற்றவர் என்பது தெரிகிறது. கொஞ்சம் அறிவியல் உண்மைகளையும் கையாண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு கதையும் பேய் இருப்பதை உறுதி செய்வதாகவே முடிகிறது.

உதாரணத்திற்கு, இப்புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை 'தம்பி'. சிறு வயதில் மங்கலாய்டு(மூளை வளர்ச்சி குறைந்த) நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன தன் அண்ணனின் ஆவி தன்னைப் பின் தொடர்வதாக மனவியல் மருத்துவரைக் காண வருகிறான் ஓர் இளைஞன். அவனுக்கு வந்திருப்பது SCHIZOPHRENIA என்னும் மனப்பிளவு நோய் என்று முடிவுசெய்கிறார் மருத்துவர். தன் அண்ணன் தன் மீது பிரியமாக இருந்தானென்றும், ஆனால் அவனைத் தனக்குப் பிடிக்காது எனவும், சிறுவயதில் தன்னைப்போலவே இருந்த அவன் மீது வீட்டில் இருப்பவர்கள் அதிக அக்கறையோடு நடந்து கொள்வது இவனுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஒருநாள் அவன் கிணற்றில் விழுந்து இறந்து போனதாகவும் தெரிவிக்கிறான்.

அண்ணனின் ஆவி இவனைத்தொடரும்போது ஒரு குரலும் கேட்கிறது, இவன் அண்ணன் பேசியது போலவே. அது இவன் உள்மனத்தில் பதிந்த இவன் அண்ணனது குரல் இவனை அறியாமல், இவன் குரல் நாணிலிருந்து வெளிப்படுவதாக(VENTRILOQUISM) விளக்குகிறார் மருத்துவர்.

இனி, அவன் அண்ணனின் ஆவி அவனைத் தொடரும்போது அதன் மீது பாசத்துடன் நடந்து கொள்ளும்படியும், அன்பாகப் பேசும்படியும் சொல்கிறார் மருத்துவர். முதலில் மறுக்கும் இளைஞன் கடைசியாக ஒத்துக் கொள்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலையில் முன்னேற்றம் காணும் இவன் ஒருநாள் மருத்துவரிடம் தன் அண்ணன் தானாக சாகவில்லை, தானே அவனைக் கிணற்றில் தள்ளிக் கொன்றதாகச் சொல்கிறான். மேலும் இனிமேல் தன்னால் அவன் மீது பாசம் உள்ளவனாக நடிக்க முடியாது என்று கத்துகிறான்.

அன்று இரவு, உயிருக்குப் போராடுகிறான் இவன். யாரோ அவன் கழுத்தை நெரிப்பதாக உணர்கிறான். யாராலும் காப்பாற்ற முடியாமல் இறந்து போகிறான். அவன் இறந்த பிறகு மருத்துவரின் காதில் விழுகிறது ' கெட்ட ம்பீ...நீ கெட்ட ம்பீ' என்ற அவன் அண்ணனின் குரல். என்பதாக முடிகிறது இந்தக் கதை. இங்கே இவனைக் கொன்றது குற்ற உணர்ச்சியா? இல்லை அண்ணனின் ஆவியா?

குதிரைப் பந்தயத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதையில், குதிரைகள் சம்மந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை விளக்குகிறார். மேன்ஷன்களில் வாழும் வயதான பிரம்மச்சாரிகளின் அந்தரங்கத்தை அலசி ஆராய்கிறது ஒரு கதை; ஒவ்வொரு ஊரிலும் நடமாடக்கூடாத இடமாக அறிவிக்கப்பட்ட ஓரிடம் இருக்கும். அங்கே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்று பல கதைகளும் பழக்கத்திலிருக்கும். அப்படிப்பட்ட இடத்திற்குப் போய் வந்தவனின் அனுபவத்தை விளக்குகிறது ஒரு கதை; இப்படி ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இயங்குகிறது.

இப்புத்தகத்தைப் படிக்கும்போது கொஞ்சம் பயம் உள்ளே இருந்தாலும், பேய்கள் நியாயமாகவே நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. ஜெயமோகன் எழுத்தின் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வத்தைத் தோற்றுவிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பல களங்களையும் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்கலாம்.

- சேரல்