Wednesday, August 08, 2007

24. ROGUE STATE

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
------------------------------------------------
புத்தகம் : Rogue State (A guide to the World's only Superpower)
ஆசிரியர் : William Blum
மொழி : ஆங்கிலம்
விலை : 475 INR
பக்கங்கள் : 394
சிறப்பு : பின் லேடன் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகம். Amazon தளத்தின் விற்பனையில் 2,09,000வது இடத்தில் இருந்து, ஒரே நாளில் 12வது இடத்திற்கு வந்த புத்தகம்.
-----------------------------------------------
ஆசிரியர், அமெரிக்க அரசின் வியட்நாம் போக்கைக் கண்டித்து, அரசின் பதவியை ஏற்க மறுத்தவர்; அரசுக்கு எதிரான ஒரு பத்திரிக்கையைத் தலைநகரில் தொடங்கிய முதல் நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு; இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்க ராணுவத்தின் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் போக்கைப் பற்றியது Killing Hope என்ற இவரது முதல் புத்தகம்.

ஞாநி என்ற ஒருவர் ஒரு அருமையான பத்தி எழுதி இருப்பதாக ஆனந்த விகடன் புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான் என் நண்பன். "இந்தியா என்ற ஜனநாயக நாடு தஸ்லிமா நஸ்ரின் எழுதிய Lajja என்ற புத்தகத்தைத் தடைவிதித்தது. தீவிரவாதி என்று அழைக்கப்படும் பின் லேடன் என்ற மனிதர், Rogue State என்ற புத்தகத்தைப் படிக்கச் சொல்கிறார். படிக்க வேண்டாம் என்கிறது ஜனநாயகம்". (Lajja தான் இத்தளத்தில் எனது முதல் புத்தக விமர்சனம். சைக்கிள் கேப்புல ரெண்டு புக்கையும் படிச்சாச்சு)

புத்தகத்தைப் பற்றி ஒரளவு அனுமானித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். US, CIA, NSA, Pentagon, etc போன்ற வார்த்தைகளின் இன்னொரு பக்கத்தைப் புரட்டிக் கண்பிப்பதே இப்புத்தகம்.

"பார்க்கும் குழந்தைகளை எல்லாம் கொல்பவர்களும், அவர்களின் காதலிகளும்" என இப்புத்தகத்தைப் பெயரிட்டுக் கொள்ளலாமென அதிரடியாக ஆரம்பிக்கிறது இப்புத்தகத்தின் முன்னுரை. அரசு செய்யும் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் Truth Commission என்ற அமைப்பு தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் உண்டு. அதுபோன்ற ஓரமைப்பு USல் இல்லாததால் இப்புத்தகம், என முடிகிறது புத்தகத்தின் முன்னுரை.

மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இப்புத்தகத்தின் முதல் பாகம், மனித உரிமைகளை மீறுபவர்களுடன் அமெரிக்க உறவு-பகைகளை விவாதிக்கிறது. Rogue State என்ற வார்த்தைக்கு 'அமெரிக்காவிற்கு எதிராக எல்லாவற்றிலும் நிற்பவர்கள்' என்கிறார் Condoleeza Rice. என்ன, உண்மையான அர்த்தம் பாத்தாச்சா? தீவிரவாதிகளின் குறிக்கோளாக அமெரிக்கா ஏன் இருக்கிறது என விவாதிக்கும் பகுதியில், "எங்கள் கொலைகள் அப்பாவிமக்கள் மீதென்றும், உங்கள் கொலைகள் தேவையில்லாதவர்கள் மீதென்றும் எந்த மதமும் சொல்லவில்லை" என்கிறார் பின் லேடன்.

வெளிநாட்டுப் பிரபலங்களின் மீதான கொலை முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கைப் பற்றிய ஒரு பட்டியல்; 50 தேறும், 1955ல் நேரு மீது உட்பட. இராக்கின் உளவுத்துறை கட்டிடத்தின்மீது குண்டெறிந்துவிட்டு, தன் தலைவர் ஒருவர்மீது சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சொன்னது. அப்படிப் பார்த்தால், பிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக CIA மீது குண்டுபோட கியூபாவிற்கு உரிமை உண்டு. இதுபோன்ற மனிதாபிமானமிக்க வாக்குவாதங்கள், இரும்புத்திரைக்குப் பின்னால் இருக்கும் அமெரிக்காவிடம் எடுபடாது என்கிறார் ஆசிரியர்.

அமெரிக்க ராணுவம் மற்றும் CIAன் பயிற்சி பாடத்திட்டங்களில் இருந்து சில பகுதிகளை ஆசிரியர் மேற்கோள் காட்டி இருந்தார். Edge weapons (இதயம் பயங்கரப் பாதுகாப்பாக நெஞ்சாங்கூட்டிற்குப் பின்னிருப்பதால், தண்டுவடத் தாக்குதல்), Conference room technique (கூட்டத்தினுள் புகுந்து ஒருவர் கவனத்தைச் சிதறடிக்க, மற்றவர் வேண்டப்பட்டவரைக் கொல்லல்), Contrived accidents (மூணாவது மாடியில் இருந்து கணமான பொருளைத் தலைமேல் போடுதல்).... இன்னும் பல. இவைதவிர, கழிவறைகளைப் பஞ்சை வைத்து அடைப்பது, அஞ்சல் பெட்டியில் தபால்களைத் திருடுவது, Morphine உபயோகப்படுத்துவது, தவறான பேர்களில் ஹோட்டல்களில் அறைகள் பதிவுசெய்வது, வதந்திகளைப் பரப்புவது இவை போன்ற பல எளிய முறைகளும் கற்பிக்கப்படுகின்றன.

அமெரிக்க ராணுவம் செய்யும் சித்ரவதை முறைகளையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை. ஆணின் விதைப்பையில் turpentine- ஆணுக்குப் பெண்களின் உள்ளாடை - ...மனித உடலில் 35 சிறந்த இடங்கள், மின்சார அதிர்ச்சி கொடுப்பதற்காக CIAவால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்க ஆயுதங்களைப் பற்றி இரண்டாம் பாகம். தனது சொந்த நாட்டிலும், மற்ற நாடுகளிலும் வேதியிய மற்றும் உயிரிய ஆயுதங்களை அமெரிக்கா உபயோகப்படுத்தியதைப் பற்றி முறையே இரண்டு கட்டுரைகள். அமெரிக்க நடிகர் Dick Gregory கிண்டலாக சொல்கிறார்: "சிவப்பு மனிதர்களிடம் இருந்து வெள்ளை மனிதர்கள் பிடுங்கிய நிலத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கருப்பு மனிதர்களை வைத்து மஞ்சள் மனிதர்களை வியட்நாமில் கொன்றுகொண்டு இருக்கிறோம்".

மற்ற நாடுகளுடன் அமெரிக்க உறவைப் பற்றியதே கடைசி மூன்றாம் பாகம். அடுத்த நாட்டின் பிரச்சினைகளில் அமெரிக்கத் தலையீடுகள், மற்ற நாடுகளின் தேர்தல்களில் அமெரிக்கத் தலையீடுகள், பற்றி கட்டுரைகள். இக்கட்டுரைகளில் நாடுவாரியாக விளக்கி இருக்கிறார். உலகில் பிரபலமாகாமல் எத்தனை நாடுகள் இருக்கின்றன? ஆச்சரியப்பட்டு போனேன். படிக்கவே சலித்துப் போகும் அளவிற்குப் பட்டியல் பெரிது. ஆப்கானிஸ்தானில் Kamid Harzai வென்ற பிறகு புஷ் சொல்கிறார்: "காஸ்ட்ரோ, முடிந்தால் இன்னும் ஒருமுறை உங்களுக்குத் தேர்தல்பற்றி பயம் கிடையாது என நிரூபித்துக் காட்டுங்கள்". சிரிப்புதான் வந்தது.

பல நல்ல திட்டங்களை எதிர்த்து அமெரிக்கா எத்தனைமுறை, UNOல் ஓட்டுப் போட்டு இருக்கிறது என்ற ஒரு பட்டியல். பக்கத்திற்குச் சுமார் 8வீதம், 19 பக்கங்களில் எதிர்க்கப்பட்ட திட்டங்கள். பாலஸ்தீன மக்களுக்கு உதவி - அணு ஆயுதம் இல்லாத நாடுகள்மீது அணு ஆயுதம் உபயோகிக்கத் தடை போன்றவை அமெரிக்கா UNOல் எதிர்த்தவைகளில் குறிப்பிடத்தக்கவை. 1981, 1982, 1983 ஆகிய மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா மட்டும் UNOல் ஒரு திட்டத்திற்கு எதிர்ப்பு வாக்கு அளித்தது. "கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை மனிதனின் அடிப்படை உரிமைகள்" என்ற அறிவிப்புக்குத்தான் அது.

இவைதவிர புத்தகம் முழுவதும் ஆங்காங்கே பல தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. "1. மைக்ரோசாப்டில் பல உளவு பார்க்கும் சாப்ட்வேர்கள் இருக்கலாம் 2. மைக்ரோசாப்டின் மிகப்பெரிய client பென்டகான் தான்", பிரான்ஸின் உளவுத்துறை சந்தேகிக்கிறது, என்கிறார் ஆசிரியர். மேலும், 1991ல் இராக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 18டன் எடையுள்ள அரசு ஆவணங்கள் கொலொரடொ பல்கலைகழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நெல்சன் மண்டேலாவின் 28 ஆண்டுகால சிறைவாசத்திற்கும் அமெரிக்க உளவுத்துறைதான் காரணம். நாம் 12ம் வகுப்பில் கட்டாயமாகப் படிக்கும் Oliver Twist, அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்ட புத்தகம்.

புத்தகம் முழுவதும் தகவல்கள் மட்டுமே. ஆசிரியரின் சொந்தக் கருத்துகளைவிட நடந்த நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகளே அதிகம். அந்த அளவுக்கு நிகழ்வுகள் ஏராளம். ஆசிரியர் அந்நிகழ்வுகளைக் குழப்பாமல் கோர்த்ததற்காகப் பாராட்டியே ஆகவேண்டும். மொத்தத்தில், பின் லேடன் சொன்னதுபோல், "பயனுள்ள புத்தகம்".

- ஞானசேகர்

Thursday, August 02, 2007

23. ANANDAMATH

விமர்சனம் செய்கிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------
புத்தகம் : Anandamath (ஆனந்தமடம்)
ஆசிரியர் : பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterji)
மொழி : பெங்காலியில் இருந்து ஆங்கிலம்
விலை : 140 INR
பக்கங்கள் : 135
சிறப்பு : தேசிய பாடலான "வந்தே மாதரம்", இப்புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது. அப்பாடல் பி.பி.சி.யின் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக ஆனதும், 'ராக்கம்மா கையத்தட்டு' முதலாவதாக வந்ததும் எல்லோருக்கும் பரிட்சயம்.
-----------------------------------------------------

126 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம். சென்ற வருடம், "வந்தே மாதரம்" பாடலின் 125வது ஆண்டை முன்னிட்டு, அப்பாடலைப் பள்ளிகளில் கட்டாயமாகப் பாடுவது பற்றிப் பிரச்சினைகள் எழுந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். முடிவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல், விருப்பப்பட்ட பள்ளிகள் மட்டும் பாடி, மரியாதை செய்தன. "ஜன கன மண" கீதத்தில் சிந்து என்ற வார்த்தை இருக்க வேண்டுமா என்ற பிரச்சனை எழுந்தபோது, பராசக்தியின் காக்கா பாடலுக்கு இன்றைய முதலமைச்சர் கருணாநிதி சொன்னதுபோல், 'எழுதியது எழுதியதுதான்; மாற்றமுடியாது' என்றது உச்சநீதிமன்றம். ஆனால், 'வந்தே மாதரம்' பிரச்சினையில் நீதியும், நிர்வாகமும் அமைதி காத்ததன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. அதனால், புத்தகத்தைப் பார்த்தவுடனேயே வாங்கிவிட்டேன்.

இரவீந்திரநாத் தாகூர், எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவருடன் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதே முன்னுரை. இது ஒரு புதினம்(நாவல்).

கதை நடந்த காலம் - இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹாஸ்டிங்ஸ் (Warren Hastings) இருந்த காலம் - வங்காளப் பஞ்சத்தின் (Great Bengal Femine) காலம். இந்தியாவைத் துர்கா அன்னையாக (Mother) உருவகித்து, அவளை ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்ற, ஒரு பகுதியினர் எல்லா சுகங்களையும் துறந்து சந்நியாசிகளாகக் காட்டுக்குள் வாழ்கின்றனர். அவர்கள் தங்களை இந்திய அன்னையின் குழந்தைகளாக (Children) நினைத்துக் கொள்கின்றனர். இவர்களின் தலைவருக்கு மகாத்மா என்று பெயர். இவர்கள் ஆங்கிலேயர்களை விரட்டியடித்து, வட வங்காளத்தில் காலூன்றுவதே கதைச்சுருக்கம்.

பஞ்சத்தில் தவிக்கும் வங்காளத்து மக்களுக்கு, ஆங்கிலேய அரசின் கருவூலத்தில் இருந்து கொள்ளையடித்து வழங்குவதும், பார்க்கும் ஆங்கிலேயர்களை எல்லாம் கொன்று தள்ளுவதும்தான் இவர்களின் பணி. 'ஆங்கிலேயர்கள் நல்லவர்கள், இந்தியாவில் இருப்பவர்களைத் தவிர' என்பதுதான் இவர்களின் கருத்து.

வங்கத்தின் பஞ்சத்தின் கொடுமை விளக்கி இருக்கும் புத்தகம், ஆங்காங்கே Children களின் குடும்ப உறவுகளைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. தன் சொந்த ஊரை Children களின் கோட்டையாக மாற்றும் ஒருவர்; கல்யாணம் செய்து இளமையை அனுபவிக்காத ஒருவர்; ஆண்வேடமிட்டு Children களுக்கு உதவிசெய்யும் ஒருத்தி என பலவிதங்களில் Children உணர்த்தப்படுகிறார்கள்.

ஆசிரியர் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையையும் கையாண்டிருக்கிறார். உதாரணமாக, ஆண்வேடமிட்டு தன் அண்ணியைக் கிண்டல் செய்யும் ஒருத்தி, திடீரென கட்டிப்பிடித்தவுடன் அண்ணி கேட்கிறாள்: "நீங்க பெண் என்று ஏன் முதலிலேயே சொல்லவில்லை?". அதே பெண் இன்னொரு ஆணிடம் சிக்கிகொள்ளும்போது, மார்பில் இருக்கும் புலித்தோலை உருவிவிட்டு, "நீ பெண்ணா?" என்கிறான்; அவள் "இக்கேள்விக்கு இனிமேல் நான் இல்லை என்று பதில்சொல்ல முடியாது" என்கிறாள்.

சரி 'வந்தே மாதரம்' பாடலுக்கு வருவோம். இப்பாடல்தான் Children களின் தாரக மந்திரம். சந்தோஷம் - துக்கம் - மரணத்தை நெருங்கும் நேரம் இப்படி எல்லா தருணங்களிலும் அவர்கள் பாடும் பாடல் இது. இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்பதால், பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருந்தன - "வந்தே மாதரம் என்று சொல்வது தடைவிதிக்கபட்டிருந்த காலத்தில் பெயர் தெரியாத ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது" என்ற குறிப்புடன்.

சரி 'வந்தே மாதரம்' பாடலில் என்னதான் பிரச்சினை? அப்பாடல் இப்புத்தகம் மூலமே பிரபலமானது. ஆனால், புத்தகத்தை விட, பாடல் பழையது. அப்பாடல் விடுதலைப் போராட்டக் காலத்தில் மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து இருந்தாலும், அது சித்தரிக்கப்பட்டவிதம் ஒரு மதத்தைச் சார்ந்தாகவே இருக்கிறது. கதாபாத்திரங்கள் எல்லாரும் நாட்டிற்குப் பணிசெய்வதை மதக்கடமையாகவே செய்கின்றனர். புத்தகத்தின் முடிவுகூட அப்படியே! திருமணச் சட்டங்களைக்கூட மதங்களுக்காகத் தனித்தனியாக வைத்திருக்கும் இந்தியா என்ற மதச்சார்பற்ற நாட்டில், இன்னொரு மதத்தின் பெண்தெய்வத்தை அன்னையாகப் பாடுவது சர்ச்சைக்குரிய விசயம். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் வகுத்தவர்கள், மூன்று ஆண்டுகள் நிதானமாக யோசித்து தலைமுறைகள் காக்கும் நல்வழிகளைத் தந்துள்ளார்கள்.

தலைமுறைகளுக்காக அரசியல் மேதைகள் மூன்றாண்டுகளில் வகுத்தவைகளைச் சிலமணித்துளிகள் படித்துவிட்டுக் குறைசொல்லுவதே தலைமுறைகள். அதுதான் காலம். எனது இப்புத்தக விமர்சனம்கூட அப்படி இருக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க 'Mr.காலம்'?

-ஞானசேகர்