Monday, February 16, 2009

31. FROM THE THIRD WORLD TO FIRST

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

I preferred to climb on the shoulders of others who had gone before us - Lee Kuan Yew

------------------------------------------------
புத்தகம்: From Third World To First (The Singapore Story : 1965 - 2000)
ஆசிரியர்: லீ குவான் யூ (சிங்கப்பூரின் முதல் பிரதமர்)
விலை: 35 USD
பக்கங்கள்: 700

------------------------------------------------

ஐந்து வருடங்களுக்கு முன், குமுதத்திலோ அல்லது ஆனந்த விகடனிலோ நடிகர் விவேக் அவர்களின் பேட்டி ஒன்றில், உழைப்பின் உன்னதம் உணர மேற்கோள் காட்டப்பட்டபோதுதான் எனக்கு இப்படி ஒரு புத்தகம் அறிமுகமானது. பல இடங்களில் விசாரித்தும் இப்புத்தகம் கிடைக்கவில்லை. ஒருமுறை Landmarkல் பார்த்தபோது விலை 1500 ரூபாய்க்கு மேல் இருந்ததால் வாங்கவில்லை. வெளியூரொன்றின் நூலகத்தில் பார்த்தபோது, அவசர அவசரமாக ஐந்து நாட்களில் படித்து முடித்த புத்தகமாகிவிட்டது. பதிப்பகத்தாரைக்கூட குறித்துக் கொள்ளவில்லை, அப்படி ஓர் அவசரம். விவிலியத்திற்குப் பிறகு நான் படித்த தடிமனான புத்தகம் இது!

எப்படி வீடு கட்டுவது, எப்படி எந்திரம் பழுது பார்ப்பது, எப்படி புத்தகம் எழுதுவது என்று உங்களுக்குச் சொல்ல பல புத்தகங்கள் உள்ளன. ஆனால், எப்படி ஒரு நாட்டை உருவாக்குவது என்றும், எப்படி நாட்டு மக்கள் வாழ வழி செய்வது என்றும் சொல்லித்தரும் புத்தகத்தை நான் பார்த்ததில்லை. இது எனது இப்பதிவின் ஆரம்பம் அல்ல. புத்தகத்தின் முதல் பத்தி! ஆம், 1965ல் மலேசியாவில் இருந்து எந்தவொரு இயற்கைவளமும் இல்லாமல் பிரிந்துவந்த 640 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு, ஆசியாவின் பணக்கார நாடான கதைதான் இப்புத்தகம்.

1966ல் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும்போது, ஓர் உயர் அதிகாரியின் தெளிவில்லாத பேச்சால், இனக்கலவரம் ஆரம்பிக்க ஆசிரியர் சமாதனப்படுத்தும்போது, "புறாவுக்கெல்லாம் போரா?" என்றுதான் தோன்றியது. இந்தியா மற்றும் எகிப்து நாடுகளிடம் இராணுவ உதவி கேட்கும்போது, நேரு மற்றும் நாசர் மறுத்து அனுப்பும் பதில்களை எதிர்பார்த்ததே என்று கூறும்போது, ஆசிரியரின் மனபலத்திற்குச் சபாஷ்.

சூரிச், பிராங்க்ஃபர்ட், நியூ யார்க், லண்டன், சான் ஃபிரான்ஸிஸ்கோ, சுவிஸ் நகரங்களுக்கு இடையே சிங்கப்பூரைத் திணித்து பணவர்த்தகத்தை 24 மணிநேர சேவையாக மாற்றும் யுக்தியை முக்கால் பக்கத்தில் வர்ணிக்கும்போது பிரமித்துப்போய் மீண்டும் மீண்டும் படித்தேன். சிங்கப்பூரைப் ஃபைனான்ஸியல் சென்டராக மாற்ற மேற்கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகள் அருமையான திட்டமிடுதலாக இருக்கும். தனக்கு மிக அருகில் இருக்கும் மிகப்பெரிய போட்டியான ஹாங்காங்கைப் பற்றி இப்படி கூறுகிறார் ஆசிரியர்: "In Hong Kong, what is not expressly forbidden is permitted. In Singapore, what is not expressly permitted is forbidden".

மலாய், மான்டரின், தமிழ் என பலமொழி பேசும் மக்களின் மொழிப்பிரச்சனையை, சிங்கப்பூர் எப்படி தீர்த்துக்கொண்டது என்று படித்தபோது, சிங்கப்பூர் ஆட்சியாளர்களின் தெளிவான அணுகுமுறை அருமை. 'தேசியமொழி' என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் தெரிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் இப்புத்தகத்தின் 'Many Tongues, One Language' என்ற பகுதியை ஒருமுறை படிப்பது நல்லது.

ஆசிரியர் பிரதமரானவுடனும் கூட, வீதிகளில் வந்து சுத்தம் செய்த விசயம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். யூனியன் தலைவரான சுப்பையா என்ற தமிழரைப் பற்றி சொல்லும்போது, அவரின் கண்ணைக் கிண்டல் செய்யாமல் ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். ஓர் ஆட்சியாளரை ஆர்க்கெஸ்ட்ரா குழுத்தலைவருடன் ஒப்பிடும்முறையை நான் பல புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்; இப்புத்தகத்திலும்.

புத்தகத்தின் இரண்டாம் பாதி, சிங்கப்பூர் உலக அங்கீகாரம் பெற பிற நாடுகளுடன் கொண்ட நட்புறவைப் பற்றியது. இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது, நேரு முதல் நரசிம்மராவ் வரை பெரும்பாலும் எல்லா பிரதமர்களைப் பற்றியும் கூறுகிறார். புத்தகம் எழுதப்பட்ட அந்தக் காலத்தில்கூட (1990) மன்மோகன்சிங், சிதம்பரம் அவர்களை ஆசிரியர் தனியே புகழ்ந்துள்ளார். ஆசிரியருக்கு நேரு கொடுத்த முதல் விருந்தும், இந்திராகாந்தி பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இப்புத்தகம் படிக்கும்போது, 'A view from the outside' புத்தகத்தில் சிதம்பரம் அவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது: "சிங்கப்பூர் போன்ற ஒரு சிறிய மாதிரியை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது".

-ஞானசேகர்