Monday, October 05, 2009

47. கன்னா பின்னா கதைகள்

பதிவிடுகிறவர் தம்பி Bee'morgan. நன்றி!

ஓசைப்படாமல் சாதனை படைத்த தமிழர்களில் ஒருவரான எனது இனிய நண்பர். ரா.கி. ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்..பி மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம், வெள்ளைச்சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்

- சுஜாதா

------------------------------------------------------------
புத்தகம்: கன்னா பின்னா கதைகள்
ஆசிரியர்: ரா.கி.ரங்கராஜன்
வெளியீடு: அல்லயன்ஸ்
ஆண்டு: 2007
விலை: ரூ. 60
பக்கங்கள்: 180
கிடைத்த இடம்: தஞ்சை ரயில் நிலையம்

-------------------------------------------------------------
இவை நிஜமாகவே கொஞ்சம் கன்னா பின்னாவான கதைகள்தான்.

நான் படிக்கும் ரா.கி.ரங்கராஜனின் முதல் படைப்பு இது. பெரிய அளவு எதிர்பார்ப்புகள் ஏதுமில்லாமல்தான் நேற்றிரவு ரயில் பயணத்தில் வாங்கினேன். தொடங்கிய பிறகு என்னால் கீழே வைக்கமுடியாத அளவுக்கு துள்ளலான நடை இந்த இளைஞருக்கு.

முழுக்க முழுக்க கடிதங்கள்தான். கடிதங்களினூடாக காதல் மொக்கவி்ழ்கிறது. படிக்கச் சலிக்காத நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது. காலத்தைப் பற்றிய வெளிப்படையான குறிப்புகள் ஏதுமில்லை. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் என்று கொண்டால் ஒத்துவருகிறது. பழைய கருப்பு வெள்ளை சினிமா படக்காதல் மாதிரி கற்பனை செய்து கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

இதனைச் சிறுகதைகள் என்று சொல்லலாமா? ம்ம். சரி.. சிறுகதைகள் என்றே வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு சிறுகதையும் பொதுவில் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஒரு யுவதி பழக்கமில்லாத ஒரு இளைஞனுக்கு எழுதும் கோபமான ஒரு கடிதத்துடன் தொடங்கி அதற்கு பதில், பதில் பதில் கடிதங்களால் சில சமயங்களில் ஒருசில அவசரத் தந்திகளோடு சுபம் போட்டு முடிவடைகிறது. படிக்கும் போது நம்மையுமறியாமல் ஒரு புன்னகை படர்வதை தவிர்க்கமுடியாது. நான் சில இடங்களில் வாய் விட்டு சிரித்து ரயிலில் வினோதப் பார்வை சம்பாதித்த சம்பவங்களும் நடந்தேறின.

சுவையான காதல், சுவாரஸ்யமான காதல், குறும்பான காதல் என்று விதவிதமாய் காதல் கடிதங்கள். உடனே இது காதல் புத்தகம் என்று முடிவுகட்டி மற்றவர்கள் ஓடிவிடத்தேவையில்லை. அத்தனை குறும்புடன், அங்கதச்சுவை மிளிர அனைவரும் ரசிக்கலாம் இந்தக் கடிதங்களை. காதல் அல்லாத குறும்புக் கடிதங்களும் தட்டுப்படுகின்றன.

மொத்தம் 18 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதைக்கும் இவர் பெயர் சூட்டும் அழகே அலாதியானது. 'காதல் பைனாகுலரில் தெரியும்', 'சிவகாமியின் சப்தம்', 'பூனை பிடித்தவள் பாக்கியம்', 'மீரா கே பிரபு' என்று நீளுகிறது இந்தப் பட்டியல். படித்து முடித்தபின் தலைப்பை மீண்டும் யோசிக்க வைக்கிறது.

ஒரு சில கடிதங்கள் ரொம்பவும் நாடகத்தனத்துடன் சலிப்பைத்தருபவை போலிருந்தாலும், மற்ற கடிதங்கள் அதனை ஈடு செய்துவிடுவதால் படிக்கச்சலிக்கவில்லை. ஒரு சில உத்திகள் திரும்பத்திரும்ப பல கடிதங்களில் பயன்படுத்தப்பட்டு கொஞ்சம் பழகிய தன்மையை தந்துவிடுவதால் எதிர்பார்த்த விளைவுகளைத் தரவில்லை. இத்தனை கடிதங்கள் எழுதுகையில் இதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

நீங்கள் எந்தவொரு மனநிலையில் இருந்தாலும், இந்த புத்தகத்தைப் படிக்கலாம் என்று தாராளமாய் சிபாரிசு செய்கிறேன் :) நிச்சயம் சில சந்தோஷ கணங்கள் உங்களுக்குண்டு.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து ஆசிரியரைப்பற்றி:

ரா.கி. ரங்கராஜன்: 05.10.1927 ல் கும்பகோணத்தில் பிறந்தார். தன் 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வாரஇதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறுது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புகள் சின்னத்திரையிலும் இடம்பெற்றுள்ளன.

ரங்கராஜன் 'சூர்யா', ' ஹம்சா', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்யெர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்- என பலதரப்பட்ட எழுத்துக்களைத் தந்தவர். ஒவ்வொரு புனைப்பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர் போல் எழுதிய மேதாவி. இந்த பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்
- கல்கி


-Bee'morgan
(http://beemorgan.blogspot.com/)

No comments: