Thursday, December 29, 2011

84. கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை

 பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------------------------------------
புத்தகம் : கலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளியின் கதை
எழுத்து வடிவம் : ஜோதி நரசிம்மன்
விலை : ரூ.115
பக்கங்கள் : 168 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
-----------------------------------------------------------------------------------


சிங்கம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலைவாணி அவர்களின் கதையை, அடியாள் புத்தகத்தின் ஆசிரியர் ஜோதி நரசிம்மன் எழுத்து வடிவமாக்கி இருப்பதுதான் இப்புத்தகம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், சில நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் தேவையில்லை; அறிமுகமே போதும். புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் இருந்து சில வரிகள் உங்களின் வாசிப்பிற்கு:


"இன்றைய சமூகத்தில் பெண் ஒரு நுகர்வு பொருள். ஒரு பெண் பாலியல் தொழிலில் ஈடுபடக் காரணம், 'இவளை எந்த விலை கொடுத்தாவது அடைய வேண்டும்' என்கிற ஆணாதிக்க ம‌னோபாவம். பெரும்பாலும் பெண்கள் விபச்சாரத்தை விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பாலியல் தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒன்றில் ஏமாந்து அல்லது ஏமாற்றப்பட்டுதான் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

விபச்சாரத்தில் வயிற்றுப்பசி உடல்பசி என்று இரண்டு வகைகள் உள்ளன. வயிற்றுப்பசிக்காக இந்தத் தொழிலில் தள்ளப்படுகிறவர்கள்தான் வெளியில் தெரிகிறார்கள். உடல்பசிக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறவர்கள் கௌரவமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்."

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Wednesday, December 28, 2011

83. ONE HUNDRED YEARS OF SOLITUDE

பதிவிடுகிறவர்  நண்பர் ஞானசேகர். நன்றி!

The first in line is tied to a tree and the last is being eaten by ants.

-------------------------------------------------------------------------------------------
புத்தகம் : One Hundred Years of Solitude (புதினம்)
ஆசிரியர் : Gabriel Garcia Marquez
மொழி : ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 1967
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 422 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)
-------------------------------------------------------------------------------------------

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆவலில் நான் தேர்ந்தெடுத்த சில புத்தகங்களில் ஒன்று - நூறாண்டுத் தனிமை. 1982ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் அவர்கள்தான் ஆசிரியர். கொலம்பியா என்ற ஒரு நாடே விவிலியத்திற்கு அடுத்தபடியாக இப்புதினத்தைத்தான் அதிகமாகப் படிக்கிறது. 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. அதிகாரப்பூர்வமற்ற கள்ளப் பிரதிகளாக ஒரு கோடிக்கும் மேல் விற்றிருக்கும் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன், தனது 'விழித்திருப்ப‌வனின் இரவு' புத்தகத்தில்! கொலம்பியா நாட்டில் ப்யூன்டியா (Buendia) குடும்பத்தின் ஏழு த‌லைமுறைகளின் கதையை 20 அத்தியாயங்களில் சொல்கிறது இப்புதினம். இரண்டாம் அத்தியாயத்தின் கதை கொஞ்சம் சொல்கிறேன். இல்லையேல் நான் சொல்லப் போவது எதுவுமே புரியாது.


அந்த இரண்டு மனித இனங்களுக்குள் மண‌ம் முடித்தால் பன்றி வாலுடன் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையையும் மீறி தன் காதலியைக் கைப்பிடிக்கிறான் கதாநாயகன். அதே நம்பிக்கையைப் பல கடந்தகால உதாரணங்களுடன் உறுதிப்படுத்தி, கதாநாயகியைப் பயமுறுத்தி, கசாமுசா எதுவும் நடந்துவிடாமல் இருக்க, பாய்மரத்துணியில் தோல்நாருடன் ஒரு பெட்டி செய்து, இரும்பால் பூட்டி, தினமும் படுக்கைக்கு அனுப்புகிறாள் கதாநாயகியின் தாய். பகல்வேளைகளில் சேவற்சண்டையில் கதாநாயகனும் கூடைபின்னி கதாநாயகியும், இரவு வேளைகளில் வாய்ச்சண்டையிலும் ஒரு வருடத்தை ஓட்டிவிடுகிறார்கள்.

இன்னமும் கதைநாயகி கன்னியாகவே இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், ஊர்வாய் கதாநாயகனின் ஆண்மையைக் கிசுகிசுக்கிறது. கதாநாயகனிடம் சேவற்சண்டையில் தோற்றுப்போன ஒருவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், கதாநாயகனின் சேவலைக் குழந்தைவரம் கொடுக்க கதாநாயகியிடம் அனுப்பச் சொல்கிறான். கடுப்பான கதாநாயகனின் ஈட்டி அவன் தொண்டை கிழிக்கிறது. செத்தும் கெடுத்த கதையாய் அவன் கதாநாயகிக்குப் பிரம்மையாக அடிக்கடி தோன்றி, தொண்டைக் காயத்தைப் புல்லால் அடைப்பது போல் பாசாங்கு செய்கிறான். பிடுங்கல் தாங்கமாட்டாத‌ கதாநாயகன் இன்னும் சிலருடன் சேர்ந்து, கண்காணாத தேசத்திற்குச் செல்லும் நோக்கில் ஆண்டிஸ் மலைகளைத் தாண்டி கடல் தேடித்தேடி 26 மாதங்கள் கழித்து ஒரு சதுப்புநிலத்தில் மகன்டோ (Macondo) என்ற நகரத்தை உருவாக்குகிறான். 300 பேர்களுடன் ஆரம்பமாகும் அச்சிற்றூர் 30 ஆண்டுகளாகியும் இறப்பென்பது இல்லாமல் கல்லறைகூட இல்லாமல் வெளியுலகத் தொடர்பில்லாமல் மர்மமாக‌ வாழ்ந்து வருகிறது. அதன் கதையை, அக்குடும்பத்தின் அடுத்த அறுதலைமுறைக் கதையைக் கொஞ்சம் கொலம்பிய உள்நாட்டுப் புரட்சி சேர்த்து சொல்வதுதான் இப்புதினம்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மட்டும் அவ்வூருக்கு வந்துபோகும், ஜிப்ஸி (Gypsy) என்ற வித்தைக்காரர்கள்தான் அவ்வூர் வைத்திருக்கும் ஒரே வெளியுலகத் தொடர்பு. மகன்டோ நகரத்தையும் அதன் மனிதர்களையும் ஜிப்ஸிகளையும் மாயமாகவே சித்தரிக்கிறார் ஆசிரியர். வெளியுலகத் தொடர்பற்று இருக்கும் அந்நகரின் மக்கள் மிகவும் புதிராகவே பின்னப்படுகிறார்கள். தூங்கினால் நினைவுகள் அழிந்துவிடுமென நம்பி நாட்கணக்கில் தூங்காமல் தவிப்பது முதல், உள்நாட்டுப் புரட்சி, பிரளயம், சூறைக்காற்று என்று பல்வேறு இன்னல்களைத் தன்னந்தனியே எதிர்கொள்கிறது அவ்வூர். அஃறிணைப் பொருட்களையும் உயிர்கொண்டு நகரவைக்கும் எட்டாவது உலக அதிசயமென்று காந்தத்தை அறிமுகப்படுத்துவது முதல் பனிக்கட்டி, மின்சாரம், சினிமா, இரயில்வண்டி என்று வெளியுலகக் கண்டுபிடிப்புகளை ஒவ்வொன்றாக ஜிப்ஸிகள்தான் மகன்டோ நகரத்திற்கு அறிமுகப் படுத்துகிறார்கள்.‌ ஜிப்ஸிகளிடம் ஈர்ப்பு கொண்ட ஒரே ஜீவனாக வலம்வரும் கதாநாயகன் சொந்தமாக ஆய்வுக்கூடமெல்லாம் அமைக்கிறான். ஆரஞ்சு பழத்தைப் போல பூமியும் உருண்டையானதென கதாநாயகன் கண்டுபிடிக்கும் நாளில், ஜிப்ஸிகளுடன் சேர்ந்தால் இப்படித்தான் பைத்தியம் மாதிரி பேசத்தோன்றுமென நகைக்கிறாள் கதாநாயகி.

நீண்ட வரலாறுடைய குடும்பம் என்பதால் முன்னோர்களின் பெயர்களையே வாரிசுகளுக்கும் வைத்துவிடுவதால் பல பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் சுமை வாசகனுக்கு இல்லை. ஒத்த பெயர் உடையவர்கள் ஒரே மாதிரியான குணம் கொண்டிருப்பதைப் புத்தகம் முடித்தவுடன்தான் கவனித்தேன். புரட்சிக்காரர்களின் படுக்கைக்குத் தன் கன்னிமகள்களை அனுப்புவதைத் தேசபக்தியாகக் கருதிய காலத்தில், ஒருவன் 17 பெண்கள் மூலம் 17 ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். 17 பெயருக்கும் ஒரே பெயராக அப்பனின் பெயர். வித்தியாசம் காண தாயின் பெயரையும் கடைசியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதுபோல பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டிய முறையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர்; ரசிக்கவும் வைக்கிறார்.

காலம் ஒரே வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி, ஒரு தலைமுறை செய்த தவறுகளை இன்னொரு தலைமுறையையும் செய்ய வைக்கிறது; ஒன்று செய்யாமல் விட்டதை இன்னொன்றையும் செய்யவிடாமல் செய்து விடுகிறது; ஒன்று செய்ய முடிந்ததை இன்னொன்றால் செய்ய முடியாமல் செய்கிறது. ஜிப்ஸிகளின் மூலம் தன்னிறைவு பெற்ற ஊரை ஒருகால கட்டத்தில் அவர்கள் கைவிடுகிறார்கள். போப்பாக, அரசியாக, புதையலைக்கவர என புதினம் முழுவதும் பற்பல ஆசைகளைச் சுமக்கிறார்கள். 65 முறைகள் ஒருவன் உலகைச் சுற்றி வருகிறான். வீட்டுச் சுவர்களைப் பணத்தால் மறைக்கிறான் ஒருவன். கண்ணுக்குத் தெரியாத மருத்துவர்களுடன் பேசி சிகிச்சை பெறுகிறாள் ஒருத்தி. உலகப் புத்தகங்களை எல்லாம், படிப்பதற்கு அல்லாமல், தனது அறிவைச் சரிபார்த்துக் கொள்ள உபயோகிக்கிறான் ஒருவன். சொந்தக் குடும்பத்திற்குள்ளே கூடாக்க‌ல‌வியில் சிலர். ஊருக்கே தெரிந்த 7214 தங்கக்காசுகள் குடும்பப் புதையலின் மறைவிடத்தை வாரிசுகளுக்குச் சொல்ல மறுக்கிறார்கள். மர்மங்கள் நிறைந்த‌ த‌ன‌து சொந்த‌ ஊரின் வர‌லாற்றையே ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள். எந்த‌க் க‌தாப்பாத்திர‌த்திற்கும் உண்மை அன்பே இல்லாம‌ல் போவ‌து அந்ந‌க‌ரின் சாப‌மாகிப் போகிற‌து.

கொலம்பியாவின் உள்நாட்டு அரசியலையும் புரட்சியையும் பற்றிப் புத்தகம் மேலோட்டமாகச் சொல்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தபின் மலை மற்றும் கடல்வாழ் மக்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தனியார் தொழில்மயம் என்ற பெயரில் பறித்துக் கொள்ளும் நாம் கண்ட அரசுகள் போல், ஸ்பெயினிடமிருந்து விடுதலை கிடைத்தபின் வீடுகளுக்கு எல்லாம் நீலநிற வண்ணம் பூசச் சொல்கிறது சுதந்திர அரசு. வெள்ளைநிற வண்ணத்தை நீக்க மறுக்கும் கதாநாயகனின் முதல் எதிர்ப்பு தான் மகன்டோ நகரத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கிறது. நம்நாட்டு ஜாலியன் வாலா பாக் போல, 3408 பேரைத் துச்சமாகச் சுட்டுக் கொன்று 200 தொடர்வண்டிகளில் பிணங்களைக் கடல்பக்கம் கொண்டுபோன கொடூரங்களையும் புதினம் பதிவுசெய்கிறது.

சுதந்திரக் கொலம்பியா பற்றி ஆசிரியர் சொல்லும் பின்வரும் வரிகளை மிகவும் ரசித்தேன்: The only difference today between Liberals and Conservatives is that the Liberals go to mass at five o' clock and the Conservatives at eight.

இப்புதினம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படும் ஒரு விசயம் - மாய எதார்த்தம் (Magical Realism); மாய நிகழ்வுகளை உண்மை நிகழ்வுகளுடன் கைகோர்த்து நடக்கவிடும் கதையாடல். உதாரணமாக, ஜிப்ஸிகளில் ஒருவன் சிங்கப்பூரில் இறந்த பின்னும் கூட மகன்டோ நகரத்தில் சிலருக்கு மட்டும் தோன்றுகிறான்; உயிருடனேயே ஒருத்தி வானத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறாள்; 4 வருடங்கள் 11 மாதங்கள் 2 நாட்கள் தொடர்மழை. இவை முறையே இயேசு, மேரிமாதா, நோவா என்று விவிலியத்தில் சாத்தியம் எனும்போது இப்புதினத்திலும் சாத்தியமே. இப்புதினத்தின் ஒரு கதாப்பாத்திரம் கர்ணன் போல பேழையில்தான் தண்ணீரிலேயே மிதந்து வருகிறான். மாய எதார்த்தம் என்ற ஒரு சித்தாந்தம் இருப்பது தெரியாமலேயே Midnight's Children படித்திருக்கிறேன். One Hundred Years of Solitude விட‌ Midnight's Children இல் மாய எதார்த்தம் அதிகம்.

இப்புதினத்தில் தனித்துக் கவனிக்கப்பட வேண்டிய இன்னொன்று தனிமை (Solitude) என்ற நிலை. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் கடைசியில் தனிமையை வேண்டி விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அந்நிலைக்குப் போகாதவர்கள் கொடூரமாகவோ அல்லது மர்மமாகவோ மரணிக்கிறார்கள். தனிமை என்ற இந்நிலையே கதாப்பாத்திரங்களின் உச்சக்கட்ட சுயநலத்தைக் காட்டினாலும், தனிமை என்பதே கொலம்பிய பொருளாதாரத்தைச் சொல்லும் ஒரு குறியீடே என்கிறார்கள் சில படித்தவர்கள். ஜிப்ஸிகள் கூட இந்தியர்களுக்கான குறியீடோ என்று என் சிற்றறிவு சந்தேகிக்கிறது. யாராவது படித்தால் கவனித்துச் சொல்லுங்கள்.

இனிவரும் புதினங்களில் நான் ரசித்த சில விசயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடிவு செய்திருக்கிறேன்.

பாத்திரம் : நீண்ட நாட்கள் உயிருடன் இருந்து, தலைமுறைகளின் மாற்றத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு, புதையல் ரகசியத்துடனேயே வலம்வரும் கதாநாயகி Ursula Iguaran.
பகுதி : ஐந்தாம் தலைமுறையில் வரும் இரட்டையர்களின் பிறப்பும், குறுநகைதரும் மழலைப் பருவமும், சோகம்தரும் இறப்பும், இவருக்கும் வைப்பாட்டியாக‌ இருப்பவளின் உறவும்.
குறியீடு : நான்காம் தலைமுறையில் வரும் 17 குழந்தைகளின் நெற்றிகளில் ஒரு பாதிரியார்  இட்டுப்போகும் நிரந்தர சிலுவைக்குறி.
வரி : கருணை காட்ட மறுக்கும் காலத்தின் சார‌மாக வரும் புத்தகத்தின் கடைசி இருவரிகள்.

ஒரு சராசரி வாசகனால் உட்கிரகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இப்புதினம் ஒவ்வொரு பக்கத்திலும் உயிரோட்டமுள்ள கதை கொண்டிருப்பதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. ஒவ்வொரு வரியிலும் கதையின் மெல்லிழை பின்னப்பட்டிருக்கிறது என்பது உண்மையே! நான் மிகக் குறுகிய காலத்தில் படித்து முடித்த ஆங்கிலப் புதினம் இதுதான். எனது விருப்ப ஆங்கிலப் புதினங்களில் மூன்றாவது இடம் தந்துள்ளேன்.

காலம் ஒரு வித்தியாசமான ஆசான்; பரீட்சைக்குப் பின் பாடங்கள் போதிக்கிறது!

அனுபந்தம்:

ஜிப்ஸிகளில் ஒருவன் மரணப்படுக்கையில் முனகும் ஒருபெயர், புதினத்தில் ஒரேயொரு இடத்தில் வந்துபோகும் ஒருபெயர், நான் படித்துக் கொண்டிருந்த‌ இன்னொரு புத்தகத்தில் மிகப்பெரிய திருப்புமுனை. அவர் அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் (Alexander von Humboldt); உயிர்ப் புவியியலின் தந்தை. அட்லாண்டிக் பெருங்கடல் உருவாவதற்கு முன் தென்னமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்ததாக முதலில் சொன்னவர்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Sunday, December 25, 2011

82. புலிநகக்கொன்றை

-------------------------------------------------------------
புத்தகம் : புலிநகக்கொன்றை
ஆசிரியர் : பி.ஏ.கிருஷ்ணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2002
விலை : 175 ரூபாய்
பக்கங்கள் : 334
-------------------------------------------------------------


கதைகள் அவை நிகழும் காலத்தை உணர்த்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லும் ஒரு நண்பர் எனக்கிருக்கிறார். அதிலும் குறிப்பால் உணர்த்தப்படுவது ஓர் அழகு. ஆனால் அத்தனை எளிதாகக் கதைகளில் இது சாத்தியப்படுவதில்லை. படிக்கும் கதைகளில் மிகச்சிலவே இதனை அழகியலோடு வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றன. காட்சி ஊடகத்தில் காலத்தைச் சொல்வது வேறுவிதமான சவால். ஆனால் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களால் அது வெகு எளிதாகவே அரங்கேற்றப்பட்டு விடுகிறது. அத்தகைய காட்சி ஊடகங்களிலும் உரையாடல்களால் காலத்தைத் தெரிவிக்கும் உத்தி எப்பொழுதாவது காணக்கிடைக்கிறது. தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் தன் மகனைக் காணாமல் தவிக்கும் தாய், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நாள் என்று அந்நாளை அடையாளப்படுத்தும் வசனம் ஒரு நல்ல உதாரணம்.

கதையின் போக்கோடு கால மாற்றங்களைப் பதிவு செய்யும் பணியையும் சில படைப்புகள் செய்கின்றன. அவ்வகையில் அமைந்த 'வெட்டுப்புலி' புதினத்தைப் பற்றி முன்பே பேசியிருக்கிறேன். அந்த வரிசையில் இன்னுமொரு புதினம், இப்புலிநகக்கொன்றை. ஆங்கிலத்தில் 'TIGER CLAW TREE' என்ற பெயரில் இப்புதினத்தை எழுதியவர் திரு.அனந்த கிருஷ்ணன். அவரே தமிழிலும் மொழி பெயர்த்து இந்நூலை வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் வாழ்ந்த ஒரு தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளின் கதையே இப்புதினம். பல தலைமுறைகளுக்கு முன்னால் ஒரு அரசனுக்குச் செய்த துரோகம் சாபமாகத் தொடர்வது குறித்த பயம் இக்குடும்பத்தின் பின்னணி.

இலக்கிய வடிவங்களின் அடிப்படை விதிகளில் புதினத்திற்கானது அதற்குள்ள காலச்சுதந்திரம். ஒரு நாளில் தொடங்கி ஓராயிரம் ஆண்டுகாலம் வரை உள்ளடக்கம் கொள்ளத்தக்கது புதினம். எந்தப் புத்தகத்திலும் நம்மைக் கவரக்கூடிய மிக முக்கியமான அம்சம் ஒன்று இருக்கும். இப்புத்தகத்தில் என்னை முதலில் மிகக் கவர்ந்த அம்சம், ஆரம்பப் பக்கமொன்றில் இடம்பெற்றிருக்கும் பாத்திரங்களின் தலைமுறை வரைபடம். இத்தனை தலைமுறைகளின் கதை என்கிற உண்மையே வாசகனை முற்றிலுமாய்க் கவர்ந்து விடுவதற்குப் போதுமானதாக இருக்கக் கூடும்.



படுக்கையில் கிடந்தபடி தன் அந்திமக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொன்னா பாட்டியிடமிருந்து தொடங்குகிறது கதை. அவளின் இளமைக் காலத்தைத் தொட்டு, அதற்கான பின்புலங்களைச் சொல்லி, பின் அவளது மகன்கள், பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் வரையிலான காலத்தின் பதிப்பாக நகர்கிறது கதை. கட்டபொம்மன் தூக்கிலடப்படுவது, ஊமைத்துரை சிறை செய்யப்படுவது, வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்குவது போன்ற சில வரலாற்று உண்மைச் சம்பவங்கள் கதையின் சக நிகழ்வுகளாகப் புகுத்தப்பட்டிருப்பது சுவை. அதிலும் குறிப்பாக கதையின் சில பாத்திரங்கள் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் வியாபாரத்தில் முதலீடு செய்வதும் உண்டு.

புதினத்தின் பெரும்பலமாக நான் கருதுவது இதிலிருக்கும் பெண் பாத்திரங்கள். எப்படி பாலச்சந்தரின் பெண் பாத்திரங்கள் திரை ரசிகர்களிடம் ஒருவித பாதிப்பை ஏற்படுத்த வல்லவர்களாக இருக்கிறார்களோ, அத்தகையதொரு பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இப்புதினப் பாத்திரங்களுக்கும் உண்டு. உடனே பாலச்சந்தரின் பெண் பாத்திரங்களை மனதில் கொள்ள வேண்டாம். இவர்கள் வேறு பெண்கள். இள வயதில் பேரழகியாக இருந்து, பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகள் பிறந்த பிறகு கணவனை இழந்து பின் அவர்களுக்காகவே வாழும் ஒரு பெண், சிறுகுழந்தை வயதில் திருமணமான புதிதிலேயே கணவனை இழந்து பருவ வயதில் காமம் மேலிட்டு, பின் மன நிலை பிறழ்ந்து மருத்துவமனையிலேயே கரைந்து போகும் ஒரு பெண், கணவனின் கனவுக்காக அவன் இறந்த பிறகும் போராடும் ஒரு பெண், மனம் நிறைய காதலுடன், ஆனால் அறிவு நிலை மாறாத யதார்த்தவுருவாக ஒரு பெண், என்று எங்கும் நீக்கமற நிறைகிறாள் பெண்.

உப்புச்சப்பற்ற காரணத்துக்காக ஜீயர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவருக்காக, சம்மந்தப்பட்டவர்கள் இறந்தும் பல ஆண்டுகள் போராடி வெற்றி பெறும் ஒரு வழக்கறிஞர், யாராவது ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்க்க வேண்டி மலம் அள்ளும் ஒரு பெண்ணை அணுகி, பின் விளைவுகளால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு இளைஞன், தாயற்ற கைக்குழந்தையையும் தாய், சகோதரர்களையும் விட்டு விலகி நெடுங்காலம் காணாமல் போய் என்றாவது திரும்பி வருவான் என்று நம்புபவர்களின் நம்பிக்கையில் வாழ்ந்து வரும் ஒருவன், போன்ற வினோதமான பாத்திரங்கள் நிறைய கதையோடு வருகிறார்கள்.

உரையாடல்களிலும், விவரணையிலும் கலந்திருக்கும் மெல்லிய அரசியல் நகைச்சுவைகள் ரசிக்கத்தக்கவை. திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மீதான தாக்குதல் நகைச்சுவையாகவே அரங்கேறிவிடுகின்றது. அதிலும் தி.மு.க.வை அதிகமாகவே தாக்கியிருக்கிறார். அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற தி.மு.க கள் கதை நிகழும் காலத்தில் வெறும் தி.மு.க.விற்குள்ளேயே அடக்கம் என்பது இங்கு கவனத்திற்கொள்ளத்தக்கது. தி.மு.க.வும் அலங்கார அடுக்கு மொழியும் இரண்டாகப் பிரிக்க இயலாதவை. அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்கு சிறந்த உதாரணமாக ஒரு இளைஞன் வருவான். ஆரம்பத்தில் தீவிர தி.மு.க. அனுதாபியாக வரும் இவன் ஒரு கட்டத்தில் யதேச்சையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே காவல்துறையினரிடம் அடிவாங்கி பெரிய தியாகியாகிவிடுவதாக கதை நகரும். அப்பொழுது அண்ணா எழுதியதாக வரும் ஒரு கடிதம் நான் நினைத்து நினைத்துச் சிரித்த நகைச்சுவைகளில் ஒன்று. 'தம்பி, தலைவணங்குகிறேன். இந்திப் பலிபீடத்தில் இன்னுயிரை மதிக்காமல் நீ இதயத்தைப் பிளந்து வைத்த செயலை இந்த நாடும் வீடும் போற்றும். புகழும். இரும்பு நெஞ்சத்தவர் இகழலாம். ஆனால் ரத்தத்தால் எழுதப்படும் எங்கள் தியாக வலாற்றில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு'. ஒரு தலைமுறையே இந்த அடுக்கு மொழிக்கு அடிமையாகிக் கிடந்திருக்கிறது என்பது எவ்வளவு மோசமான நிலை! தானாகக் கிடைத்த தியாகிப் பட்டத்தை நன்றாகவே பயன்படுத்தி பிரபலமாகிவிடுவான் இந்த இளைஞன். அது போல் நிஜத்திலும் கூட எத்தனையோ பேரைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் அந்த இளைஞனே பின்னாளில் கம்யூனிஸ்ட் ஆகிவிடுவான் என்பது வேறு கதை.

கதையில் திருநெல்வேலியில் இருக்கும் த.தி.தா.கல்லூரி (உண்மையில் இப்படி ஒரு கல்லூரி இருப்பதாகத் தெரியவில்லை. இருக்கும் ஏதோ ஒரு கல்லூரிக்கான புனைப்பெயராக இருக்கக்கூடும்.) ஒரு பாத்திரம் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கதைக்காலத்து மாணவர்களின், இளைஞர்களின் மனநிலை இக்கல்லூரியை வைத்து தெளிவாகிறது. ஒரு ஆங்கிலேயரை முதல்வராகக் கொண்டிருக்கும் இக்கல்லூரியில் நிகழும் சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகவே உணரமுடிகிறது.

ஒரு சீரான காலவரிசையில் அமையாமல் ஒரு காலயந்திரத்தின் வீச்சு போல நம்மை வெவ்வேறு காலங்களுக்கு அலைவுறுத்தும் உத்தி, வாசிப்பு முழுவதும் நம்மை விழிப்புடனே வைத்திருப்பதற்காகத்தான் எனத் தோன்றுகிறது. சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களிலேயே மிகச் சுவாரஸ்யமானது இது தான். கதைகளே இல்லாமல் வெளிவரும் திரைப்படங்களையும், அபத்தமான கதைகளுடனும் வசனங்களுடனும் வெளிவரும் நெடுந்தொடர்களையும் பார்க்கும்பொழுது எழுத்துலகில் இருந்து இக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு விலகியிருக்கின்றன என்பது புலனாகும். நான்கு தலைமுறைகளின் கதை என்பதோடு, ஏராளமான கிளைக்கதைகளோடு வடிக்கப்பட்டிருக்கும் இப்புதினம் எத்தனையோ காட்சி ஊடகப் படைப்புகளுக்கு விதையாகலாம்.

அனுபந்தம் :

1. 1960 - 70 களில் கம்யூனிஸ்டுகளின் மீது இருந்த பார்வை மற்றும் அவர்களின் நிலை குறித்தான தேடுதலை இந்தப் புதினம் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான ஒரு நல்ல புத்தகத்தை வாசித்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

2. இதில் வரும் கண்ணன் என்கிற பாத்திரம் ஆசிரியரே தானோ என்ற எண்ணம் மேலிடுகிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

3. சில வசனங்களை அவற்றின் சாரம் குறையக் கூடாது என்று ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறார். ஆனாலும், இன்னும் பல விஷயங்களை ஆங்கிலத்தில் எப்படிப் படைத்திருக்கிறார் என்ற ஆர்வம் இதன் ஆங்கில மூலத்தையும் வாசிக்கத் தூண்டுவதாகயிருக்கிறது.

-பா.சேரலாதன்

(http://www.seralathan.blogspot.com)

Thursday, December 22, 2011

81. தமிழகத்தின் மரபுக் கலைகள்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வார்
- மகாகவி

போலச்செய்யும் மனித மனப்பாங்குதான் கலைகள் தோன்றக் காரணம்.
- அரிஸ்டாடில்
-------------------------------------------------------
புத்தகம் : தமிழகத்தின் மரபுக் கலைகள் - களப்பணியும் ஆவணமும் கைகோர்க்கும் பதிவுகள்
ஆசிரிய‌ர் : எழிலவன் (வையம் கவிதைக் காலாண்டிதழ் ஆசிரியர்)
வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா (http://blackholemedia.in/)
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 160 ரூபாய்
பக்கங்கள் : 204 (32 தோராயமாக வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------
சில புத்தகங்களின் அட்டைப்படத்தை மட்டுமே பார்த்துவிட்டு வாங்கிவிடத் தோன்றும். அப்படிப்பட்ட நல்ல கருசுமக்கும் புத்தகங்களில் ஒன்று, எழிலவன் அவர்களின் 'தமிழகத்தின் மரபுக்கலைகள்'. தமிழகத்தில் இத்தனைக் கைவினைக் கலைகளும் நிகழ்த்துக் கலைகளும் இருக்கின்றனவா என வியக்க வைக்கும் வகையில் அந்தந்தக் கலைஞர்களைச் சந்தித்து விரிவாகப் பதிவு செய்யப்பட்ட அரிய நூல் என்கிறது முன்னட்டை.

நிகழ்த்துக் கலைகள், கைவினைக் கலைகள் என இருபெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளே இப்புத்தகம். இக்கட்டுரைகள் யாவும் மே 2008 முதல் தமிழ் இசை நாளேட்டில் 50 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. இரட்டை இலக்கத்தில் சில சொந்த ஆயிரம் ரூபாய்களைச் செலவுசெய்து, 50 ஊர்களுக்கு 50 வாரங்களில் பயணம்செய்து, தகவலாளர்களைச் சந்தித்து, தொகுத்து இக்கட்டுரைகளை வரைந்திருக்கிறார்.

முதலில் நிகழ்த்துக் கலைகள். கும்மி வில்லுப்பாட்டு பொம்மலாட்டம் சிலம்பம் மயிலாட்டம் காவடி கரகம் தோற்பாவைக்கூத்து என்று நமக்கெல்லாம் நன்கு பரிட்சயப்பட்ட கலைகள், குடமுழவமிசைப்பு பாகவதர்மேளா இலாவணி என்று அதிகம் பரிட்சயமில்லாத கலைகள் என மொத்தம் 24 நிகழ்த்துக் கலைகள் பற்றிய கட்டுரைகள். அடுத்ததாகக் கைவினைக் கலைகள். மட்பாண்டம் பாய் நாதசுவரம் தஞ்சையோவியம் வீணை சிற்பம் என மொத்தம் 14 கைவினைக் கலைகள் பற்றிய கட்டுரைகள்.

ஒவ்வொரு கட்டுரையிலும் அக்கலையின் பூர்வீகத்தையும், தொன்மையையும், காலம் செய்யும் மாற்றங்களையும், புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவற்றின் உபயோகங்களையும் முடிந்தவரை ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ஓவ்வொரு கலை குறித்துச் சந்தித்த நபர்களின் பெயர்கள் இடம் வயது படிப்பு பற்றிய தகவல்களும், சந்தித்த தேதிகளையும், சேகரித்த சேதிகளையும், எடுத்த புகைப்படங்களையும் தந்திருக்கிறார். பெரும்பாலான கலைகள் திருவாரூர் தஞ்சை நாகை பகுதிகளையே சுற்றி அமைந்திருந்தாலும், எங்களூர் புதுக்கோட்டை புத்தகத்தின் ஒரு கலையில் வந்ததும் மகிழ்ச்சி.

ஒரே கலையின் பல்வேறு பெயர்களையும், அவற்றுள் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் மரபுகளையும், ஆண்-பெண் பாலினத் தாக்கங்களையும், சாதீய மதத் தாக்கங்களையும், இயந்திரப் பயன்பாட்டின் ஆதிக்கத்தையும், குறிப்பிட்ட விசேச கால‌ங்களில் மட்டுமே நிகழ்த்தப்படும் கலைகளை நம்பிவாழும் கலைஞர்களின் மற்ற தொழில்களையும் ஆவணப்படுத்தியிருப்பது அருமை. உதாரணமாக, பெண்களையும் காலணிகளையும் பயன்படுத்தாத பக‌ல்வேடக்கலை, பாடல்களே இல்லாத புலியாட்டம், வலங்கைமான் பகுதியில் சங்கூதி இறந்தவர்களைத் தூக்கிச் செல்வதுபோல் நடத்தப்படும் பாடைக்காவடி, மண்ணையுருட்டி பொம்மைகள் செய்த மண்ணுருட்டி என்ற ஊர் மரூவி பண்ருட்டியானது.

நம்மால் தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்ட சில கலைகள் பற்றிய தகவல்களையும் சுட்டிக்காட்டுவதில் ஆசிரியர் தவறவில்லை. உதாரணமாக, பெண்களையே காளியாட்டத்தில் திரைப்படங்களில் பார்த்திருந்த நமக்கெல்லாம், நடைமுறையில் ஆடவர் மட்டுமே காளியாடுவதாகக் கூறுகிறார். சில கலைகளின் நுட்பங்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. மண்பொம்மைகள் செய்பவர்கள் தூசுதுடைப்பதற்குப் பயன்படுத்தும் தூரிகைகள், பன்றி முடியொன்றினை நான்காகக் கிழித்துச் செய்யப்படுபவையாம். ஒரே மாதிரி தோன்றும் சிலகலைகளை ஒப்பிட்டு, அவற்றிக்கிடையேயான நுட்பமான வித்தியாசங்களைச் சொல்லியிருப்பதும் அருமை.

கட்டுரைச் சிமிழுக்குள் அடங்க மறுக்கும் கலைகளின் அறிமுக நிலையில் அடியெடுத்து வைத்து ஆழமான ஆய்விற்குத் திசைகாட்டும் முயற்சியே இக்கட்டுரைகள் என்கிறார் ஆசிரியர். பெரும்பாலான கலைகள், கலைஞனைப் பின்வைத்து கலையினை முன்னிலைப் படுத்துவதாகத்தான் அமைந்திருக்கின்றன. கலைஞனே யாரென்று தெரியாமல் நடக்கும் மாடாட்டம் போன்ற கலைகள், அறிவுத்திருட்டுவரை வந்துவிட்ட இன்றைய மனிதனுக்குச் சொல்லித்தரும் பாடங்கள் ஏராளம். இக்கலைகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு இச்சமூகம் தரும் வருவாயும், சமூகமதிப்பும் மிகக்குறைவாய்ப் போனதால் பெரும்பாலான கலைகள் குற்றுயிருடன் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் காப்பாற்றும் நோக்குடன் அழகுதமிழில் இருக்கும் இந்நூல் பலரைச் சென்றடைய வேண்டும். வெ.நீலகண்டன் அவர்களின் ஊர்க்கதைகள், யுகபாரதியின் தெருவாசகம் வரிசையில் வீதிமனிதர்களின் புழுதியைப் புத்தகத்தில் ஒட்டவைக்கும் இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும்.

கலையும் மொழியும் இனத்தின் அடையாளங்கள். அவற்றைத் தொலைத்துவிட்டு தானும் தொலைந்துபோன இனங்கள், பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைத்த அன்றுமுதல், எண்ணெய்க்காக பாபிலோனே எரிக்கப்படும் இன்றுவரை வரலாற்றில் ஏராளம். கலையையும் மொழியையும் மீட்டெடுப்பதும் காப்பதும் இனக்கடமை!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

80. A TALE OF TWO CITIES

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
-----------------------------------------------------
புத்தகம் : A Tale of Two Cities (புதினம்)
ஆசிரிய‌ர் : Charles Dickens (சார்லஸ் டிக்கின்ஸ்)
மொழி: ஆங்கிலம்
வெளியீடு : Vintage
முதற்பதிப்பு : 1859ம் ஆண்டு
விலை : 225 ரூபாய்
பக்கங்கள் : 404 (தோராயமாக 38 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------------

முடியாட்சி, நிலப்பிரபுத்துவம், கிறித்தவ திருச்சபை என்ற மும்முனைக் கொடூரங்களை எதிர்த்து, சிலுவைப்போருக்குப் பின் இங்கிலாந்திடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பாரீஸில் கட்டப்பட்ட பாஸ்டைல் சிறையை 1789ம் ஆண்டு ஜூலை 4ம் நாள் தகர்க்கின்றனர் பிரெஞ்சு மக்கள். இதைப் பிரெஞ்சுப் புரட்சி என்றும் ஜூலைப் புரட்சி என்றும் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருப்போம். அதேவருடம் மேமாதம் போடப்பட்ட அப்புரட்சிக்கான வித்து, மேலும் பத்து வருடங்கள் நீடித்து, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் தாண்டி உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. அக்காலக்கட்டத்தில் அரசரையும் அரசியையும் நிலப்பிரபுக்களையும் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும் கொன்றுகுவித்து இரத்தபூமியாய் இருந்திருக்கிறது பிரான்ஸ். இயல்புநிலை திரும்பியபின் நெப்போலியன் ஆட்சியமைத்தது வரலாறு.

பத்து மைல்களுக்கு அப்பால் பாஸ்டைல் தகர்க்கப்பட்டது தெரியாமல், பாரீஸில் பதினாறாம் லூயி தனது நாட்குறிப்பில் 'Nothing' என்று எழுதிவிட்டு அப்பாவியாகத் தூங்கிப்போனதாக எங்கோ படித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. அவரின் தாயோ அல்லது மனைவியோ, யாரோ ஒருவர் பிரசவ சமயத்தில் இருக்கும்போது, பிரசவிக்கும் நேரம்பற்றி அரசர் கேட்கும்போது, வைத்தியர் சொன்னாராம்: 'அரசர் உத்தரவிடும்போது'. அந்த அளவிற்கு ஆளும்வர்க்கத்தின் கொடுங்கோல் பிரான்ஸில் மேலோங்கி இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி படிக்க வேண்டும், கிலாசிக் நூலொன்று படிக்க வேண்டும் என்ற எனது இரட்டை ஆசைகளை ஒருசேர நிவர்த்திசெய்ய நான் தேர்ந்தெடுத்த புத்தகம் - இரு நகரங்களின் கதை. மேனிலை வகுப்பில் ஆங்கிலத் துணைப்பாடத்தில் ஆலிவர் ட்விஸ்ட் மூலம் கிட்டத்தட்ட 30 மதிப்பெண்களை ஆக்கிரமித்துக்கொண்ட ஆசிரியர் பற்றி அறிமுகம் தேவையில்லை.

சுமார் 150 அடி தொலைவில் ஊர்வலம் போகும் கிறித்தவ பாதிரியார்களைக் கண்டும், மழையால் மண்டியிட்டு வணங்காமல் இருக்கிறான் ஒருவன். கடவுளிடம் பேசி மனித பாவங்களை மன்னிக்கும் அப்பாதிரியார்கள், அப்பாவத்திற்காக அவன் கைகளையும் நாக்கையும் வெட்டி உயிருடன் எரிக்கிறார்கள். இதுதான் அன்றைய பிரான்ஸில் மதத்தின் ஆதிக்கம். நிலப்பிரபுக்கள் தூக்கம் கெடாமல் இருக்க, தவளைகளின் சத்தத்தை அமைதிப்படுத்த விவசாயிகளை இரவு முழுதும் பனியில் காவலுக்கு அமர்த்துகிறார்கள். தனது குதிரைவண்டியின் கீழ் மாட்டி நசுங்கி இறந்துபோன ஒரு விவசாயியின் மகனின் இழப்பிற்காக, ஒரேயொரு காசை விட்டெறிகிறான் ஒரு நிலப்பிரபு. இதுதான் அன்றைய இங்கிலாந்தில் பணம்படைத்தவர்களின் ஆதிக்கம். கொடுங்கோல் அவ்வாறு தலைவிரித்தாடிய அக்காலத்தில், தனது சகோதரியை மானபங்கப்படுத்திக் கொன்ற நிலப்பிரபு ஒருவனின் மொத்த வம்சத்தையே அழிக்கத் துணியுமொரு தனியாளின் போராட்டத்தைப் பிரெஞ்சுப் புரட்சியினூடே இலண்டன் பாரீஸ் நகரங்களில் சொல்லியிருப்பதே கதைச்சுருக்கம். கதைபற்றி புத்தகத்தின் முடிவில்தான் ஒருமுடிவுக்கே வரமுடியும்!

1757 முதல் 1792 வரை. கிட்டத்தட்ட இக்காலத்தில்தான் மொத்தக்கதையும் நக‌ர்கிறது. 3 அத்தியாயங்களில் 45 தலைப்புகளின்கீழ் கதை சொல்கிறார். லூசி (Lucie) என்ற இங்கிலாந்து அழகு யுவதிதான் மொத்தக்கதையின் மையமாகவும், எல்லாரையும் எங்கோ இணைக்கும் மெல்லிய இழையாகவும் இருக்கிறாள். சங்கர் படங்களின் அப்பாவி பெற்றோர் போல், 18 வருடங்கள் பாஸ்டைல் சிறையில் தனிமையில்வாடி பித்தாகிப் போகிறார் லூசியின் தந்தை. பிரான்ஸ் போய் தந்தையை மீட்கிறாள். அவள்மேல் காதல் கொள்ளும் இருவர். அவளின் காதல் - திருமணம் - குழந்தை. இயல்பான குடும்பக்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் லூசியின் குடும்பம், பாஸ்டைல் தகர்க்கப்பட்டபின், பழிவாங்கத் துடிக்கும் புரட்சியாளர்களின் பிடியில் மாட்டிக்கொள்கிறது. பாரீஸிற்கும் இலண்டனுக்கும் மாறிமாறிப் பயணிக்கும் இவள் குடும்பம், பிரெஞ்சுப் புரட்சியில் தத்தளிப்பதே கடைசி அத்தியாயம்.

பதினைந்தாம் லூயியைக் கொல்ல முயலும் ஒருவனைக் கொதிக்கும் எண்ணெய் - ஈயம் - மெழுகு ஆகியவற்றில் குளிப்பாட்டி, 4 குதிரைகளை வைத்து மூட்டுமூட்டாகப் பிய்த்துக் கொல்லும் ஒரு குறிப்பைத்தவிர வேறெந்த இடத்திலும் உண்மையான மனிதர்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்பட்டதாக நினைவில்லை. பிரெஞ்சுப் புரட்சி என்றாலே நினைவில்வரும் வால்டேரும் ரூசோவும் எங்குமே இல்லை. புரட்சிக்கு 60 வருடங்களுக்குப்பின் இப்புத்தகம் வெளியிடப்பட்டு இருப்பதால், பரிட்சய‌மான விசயங்கள் என்று ஆசிரியர் தவிர்த்திருக்கலாம்.

முன்பின் தாவாமல் ஒரே நேர்க்கோட்டில் போகும் கதை. சில உளவாளிகளைத் தவிர மற்ற மாந்தர்கள் அதிகம் குழப்புவதில்லை. கதையின் பெரும்பான்மையை நீதிமன்ற வாதங்களும், ஒயின் ஷாப்பும் ஆக்கிரமிக்கின்றன‌. பிரான்ஸ் இங்கிலாந்து என்ற இரு எதிரிநாடுகளுக்கும் மாறிமாறி உளவு செய்யும் சிலர். கதையின் போக்கையே இரண்டு இடங்களில் புரட்டிப் போடும் இருவரின் உருவ ஒற்றுமை. அடையாளங்களை மறைப்பதற்காக ஒரே பெயரிலேயே நான்கு புரட்சியாளர்கள். 'அன்பே சிவம்' திரைப்படம் போல் பெயர்களும் கதை சொல்கின்றன. உதாரணமாக, புரட்சிக்குக் காரணமான காபேல் என்ற உப்புவரியைக் குறிக்கும் வகையில் காபேல் (Gabelle) என்று ஒரு தபால்காரன் உண்டு.

200 ஆண்டுகள் மற்றும் ஐந்தரை மணிநேரத் தொலைவில் இருக்கும் எனக்கு, ஆசிரியர் குறிப்பால் உணர்த்தும் சிலவிசயங்களும் அக்கால நடைமுறைகளும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 70 வயது மதிக்கத்தக்க ஒரு வங்கி ஊழியன் தனது வாடிக்கையாளர் ஒருவரின் குடும்ப விவகாரங்களில் அலுவல் நிமித்தம் இந்த அளவுக்குத் தலையிட அன்றைய இங்கிலாந்து அனுமதித்திருக்கிறது என்பதை இன்னும் என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை. பெரும்பாலான முக்கிய நிகழ்வுகளில் ஒருத்தி எண்ணிக்கொண்டே ஏதோ பின்னுவதைக் (knit) குறிப்பாகச் சொல்கிறார். அவள் பின்னுவது கூடையா துணியா வேறெதுமா என்று படமொன்று இருந்தும்கூட யூகிக்க முடியவில்லை.

பிரெஞ்சுப் புரட்சியென்றால் மனிதத்தலைகளைக் கொய்யும் கில்லட்டின் (Guillotine) என்ற பிரம்மாண்ட கருவிபற்றி கேள்விப்பட்டிருப்போம். இப்புத்தகத்தின் முக்கிய நபர் ஒருவர் அதில் கொல்லப்படும் நாளொன்றில், 52 (வருடத்தின் வாரங்கள்) பேர் தலையிழந்ததாக ஒரு செய்தியுண்டு. இன்று கொல்லப்படுபவனின் இரத்தம், நேற்று கொல்லப்பட்டவனின் இரத்தத்துடன் கலப்பதற்குள், நாளை கொல்லப்படுபவர்கள் தயாராக இருப்பார்களாம்! இந்த வீதத்தில் இயக்கப்பட்ட கில்லட்டின் பற்றி ஆசிரியர் சொல்கிறார்:
"தலைவலிக்கு மிகச்சிறந்த மருந்து. தலைமுடி உதிர்வதையும் நிறமாறுவதையும் முழுதும் தடுக்கிறது. மனிதயினத்தைப் புதுப்பிக்கப் போகும் அடையாளமிது. மனித மார்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இயேசுவின் சிலுவைக்கு மாற்றுச்சின்னமிது. சிலுவைகள் மறுக்கப்பட்ட இடங்களிலும் தன்னைத் தலைவணங்கச் செய்கிறது. ஒரு குட்டிப்பிசாசின் புதிரான‌ பொம்மைபோல், பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்டு அரங்கேற்றத்தின்போது மீண்டும் உண்டாக்கப்படுகிறது. வலிமையை வீழ்த்துகிறது. அழகையும் நன்மையையும் அழிக்கிறது".

இப்புத்தகம் படித்த அனைவரும் கண்டிப்பாக மேற்கோள்படுத்தும் ஒருபத்தி உண்டு. நான் இப்புத்தகத்தைப் படிக்க தேர்ந்தெடுத்தத‌ற்கு, மேலோட்டமாக வாசித்துப் பார்த்த அப்பத்தியும் ஒருகாரணம். 1775ம் ஆண்டை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் புத்தகத்தின் ஆரம்பவரிகள் இவை:
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only. There were a king with a large jaw and a queen with a plain face, on the throne of England; there were a king with a large jaw and a queen with a fair face, on the throne of France. In both countries it was clearer than crystal to the lords of the State preserves of loaves and fishes, that things in general were settled for ever.

நிலப்பிரபுக்களின் கொடுமை தாங்காமல் தன்குலப்பெண்களை மலடாகச் சொல்லிப் புலம்பும் ஒரு பிரெஞ்சு விவசாயியின் வார்த்தைகள் என்னைப் பாதித்த வரிகள்:
We were so robbed by that man who stands there, as an we common dogs are by those superior Beings taxed by him without mercy, obliged to work for him without pay, obliged to grind our corn at his mill, obliged to feed scores of his tame birds on our wretched crops, and forbidden for our lives to keep a single tame bird of our own, pillaged and plundered to that degree that when we chanced to have a bit of meat, we ate it in fear, with the door barred and the shutters closed, that his people should not see it and take it from us I say, we were so robbed, and hunted, and were made so poor, that our father told us it was a dreadful thing to bring a child into the world, and that what we should most pray for, was, that our women might be barren and our miserable race die out!

நமக்கும் இவ்விரு நகரங்களுக்கும் இடையேயுள்ள கலாச்சார இடைவெளி; கதைநடக்கும் காலத்தைய உலக அறிவு; பிரெஞ்சு வசனங்களை நேரடியாக ஆங்கிலப்படுத்தி இருப்பதால் சில இடங்களில் புரியாமல்போகும் வசனங்கள். இச்சிறு தடைகளைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், சார்லஸ் டிக்கின்ஸின் உலகப்புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம் உங்களுக்கும் பிடிக்கும்!

அனுபந்தம்:

புத்தகத்திற்கு அப்பால்,

1. BBC தேர்வு செய்த சிறந்த 100 ஆங்கில நாவல்களில் ஒன்று.

2. A tale of two cities, War and Peace, The god of small things - தனிப்பட்ட முறையில் இம்மூன்று புத்தகங்களிலும் எனக்கு ஒரு வித்தியாசமான‌ அனுபவம் உண்டு. இம்மூன்று புத்தகங்களையும் முதன்முதலில் படிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் தாண்டியபிறகு கதாப்பாத்திரங்களில் குழம்பிப்போய் அப்படியே படிக்காமல் கைவிட்டிருக்கிறேன். மற்ற இரண்டு புத்தகங்களையும் மறுபடியும் தொடவேயில்லை. விரைவில் படிக்கவேண்டும்.

3. மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் படித்த சில புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி ப‌ற்றியது. அதுதானா இதுவென்று எனக்குச் சரியாக நினைவில்லை.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Monday, November 21, 2011

79. INDIGO

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------------
புத்தகம் : Indigo
வங்காள மூலம் : சத்யசித் ரே (Satyajit Ray)
ஆங்கில மொழியாக்கம்: சத்யசித் ரே, கோபா மஜூம்தர் (Gopa Majumdar)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 2001
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 264 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'ப‌தேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்' புத்தகத்தில் எனது பெயரை வங்காள மொழியில் எழுதித்தந்த நண்பன் சொல்லித்தான் தெரியும், சத்யசித் ரே ஒரு நல்ல‌ எழுத்தாளர் என்று. ஆச்சரியப்பட்ட விசயம் என்னவென்றால், பெரும்பாலான வங்காள மக்களின் மத்தியில் திரைத்துறையைவிட எழுத்துத்துறையில்தான் பிரபலமாக அறியப்படுகிறார். தனது தாய் சத்யசித் ரே கதைகளின் பரம ரசிகை என்றும் தான் ஒருகதை கூட படித்ததில்லை என்றும் தாய் சொல்ல சில கதைகள் கேட்டிருப்பதாகவும் வங்காளத் தோழி ஒருத்தி சொன்னாள். இரு தேசங்களின் நாட்டுப்பண் எழுதப்பட்ட பெருமைக்குரிய தனது தாய்மொழியில் எழுத்தறிவு இல்லாத அத்தோழியைப் பார்த்து வருத்தப்படுவது தவிர வேறென்ன முடியும்?

Feluda, Professor Shonku என்ற புத்தகங்களைச் சிலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். அவையிரண்டும் துப்பறியும் கதைகள் என்பதாலும் அளவில் பெரியவை என்பதாலும், நான் தேர்ந்தெடுத்த புத்தகம் இன்டிகோ (Indigo). வங்காள மொழியில் சத்யசித் ரே எழுதிய கதைகளில் வாசகர்கள் மத்தியில் சிறந்ததாகக் கருதப்படும் 21 கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பதே இப்புத்தகம்.



சத்யசித் ரேயின் முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali - சாலையின் பாடல்) வெளியான ஆண்டு 1955; கடைசி திரைப்படம் அஹன்டுக் (Agantuk - அந்நியன்) வெளியான ஆண்டு 1991. வறுமையின் பிடி தாங்க முடியாமல் புலம்பெயரும் ஓர் ஏழைக்குடும்பத்தின் கதைதான் முதல் திரைப்படம்; கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத படம். பல வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு ஓடிப்போன மாமா என்று சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழையும் ஓர் ஆசாமியை ஒரு நடுத்தரக் குடும்பம் சந்தேகிப்பதுதான் கடைசி திரைப்படம்; தான் பார்த்த வித்தியாசமான பூமியின் அனுபவங்களாக அந்த ஆசாமி பேசிக்கொண்டே இருக்கும் படம். இவ்விரு படங்கள் மட்டும் நான் பார்த்திருக்கிறேன். இன்டிகோ புத்தகம் இரண்டாம் வகை.

21 கதைகளின் களமும் மிகவும் எளிமையானவை. சொற்பக் கதாபத்திரங்கள். வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டே வரும் எளிய நகைச்சுவை. எங்கும் பரவிக்கிடக்கும் புத்திசாலித்தனம். ஆபாசம் என்பதே கிடையாது. பாதிக்கதைகள் காட்டுக்குள்தான் நடக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம், நமக்கெல்லாம் தகவலாகத் தெரிந்த விசயங்களை சில நேரங்களில் கதாப்பாத்திரமாகவே ஆக்கியிருப்பது; நம்ம சுஜாதா சார் மாதிரி.

மாமிசமுண்ணும் தாவரத்தை வீட்டில் வளர்க்கும் ஒருவன், சிரிக்கும் நாய், எல்லோரும் மற‌ந்துபோன ஓர் ஆங்கிலேயனின் நூறாவது நினைவுதினத்தில் அவன் ஆவியைப் பார்க்கும் ஒருவன், காட்டில் கிடைத்த‌ அசைவப் பறவையொன்றின் முட்டையை வீட்டுற்குக் கொண்டுவந்து அடைகாத்து குஞ்சுபொறித்து அதுசெய்யும் ராட்சச தொல்லைகள், பாம்பாகும் மனிதன். இப்படி பல வித்தியாசமான கதைக்களங்கள். முழுக்கற்பனைக் கதைகள், எல்லைதாண்டாமல் இருப்பது அருமை.

மேசை எறும்பு முதல் பறக்கும் தட்டு வரை பெரிய பெரிய விசயங்கள் 20 கதைகளில் பேசும் ஆசிரியர், கடைசி ஒரு கதையில் தன்னை நன்கு வித்தியாசப்படுத்திக் காட்டி ஆச்சரியப்படுத்திவிட்டார். பிக்கோவின் நாட்குறிப்பு (Pikoo's diary) என்ற அச்சிறுகதை ஒரு சிறுகுழந்தையின் நாட்குறிப்புகள் மட்டுமே. 'வெள்ளை மலரைக் கருப்பு மையில் வரையலாமா?' என்று கேட்கும் அப்பாவித்தனமான மழலைநடை. இக்கதையின் சிறப்பு என்னவென்றால் இதை அப்படியே மொழிப்பெயர்க்க முடியாது. மொத்தத் தொகுப்பில் இந்த ஒரு கதைமட்டும்தான் கொஞ்சம் A சர்டிபிகேட் என்று இணையத்தில் படித்தேன். நான் ரசித்த விமர்சனம் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். இக்கதை குறும்படமாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பு பெற்றதாம்.

எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட ஒரு கதை இப்புத்தகத்தில் உண்டு. 'ரட்டன் பாபுவும் அந்த மனிதனும்' என்ற அக்கதையைப் பின்புலமாக வைத்து நானும் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். தெரிந்திராதவர்களுக்கு இப்பதிவு ஒரு நல்ல கதைசொல்லியை அறிமுகப்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையில்...


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, November 17, 2011

78. பண்பாட்டு அசைவுகள்

-----------------------------------------------
புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரிய‌ர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2001
விலை : 100 ரூபாய்
பக்கங்கள் : 197

-----------------------------------------------

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாகத்தை மட்டுமே தணிக்கும் அளவுக்கான தண்ணீர் உங்களிடம் இருக்கிறது. இரவு நேர வெக்கை தாகத்தை அதிகப் படுத்திக் கொண்டே போகிறது. அருகிலிருக்கும் அறிமுகமற்ற வயோதிகர் நீங்கள் வைத்திருக்கும் தண்ணீரை அருந்தக் கேட்கிறார். கொடுக்கவும் தோன்றாமல் மறுக்கவும் முடியாமல் நீங்கள தவிக்கிறீர்கள். வேண்டா வெறுப்பாகவே பின் கொடுத்த நீரைப் பருகும் அந்நபரை ஜென்ம விரோதியாக சில நொடிகள் பாவிக்கிறீர்கள். உங்கள் மீதும் பிழையில்லை. அந்நீருக்காக நீங்கள் செலவு செய்த பதினேழு ரூபாய் உங்களை அப்படி எண்ணச்செய்யலாம். அதைவிட அதிகமாக எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்படவும் கூடும். உணவு வேளையில் பேருந்து நிற்கும் சில நிமிடங்களில் அதே வயோதிகர் ஒரு தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கி வந்து உங்கள் கையில் திணிக்கும் பொழுது வருந்தமாட்டீர்களா என்ன? அதையும் மீறி ஒரு அவமான உணர்வும் உங்கள் மனத்தில் எழக்கூடும். இது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் அச்சூழ்நிலையில் ஏற்படக்கூடிய, ஏற்படவேண்டிய ஓர் உணர்வுதான். 'சோறும் நீரும் விற்பனைக்குரியதல்ல' என்ற பண்பாடு கொண்டிருந்த ஒரு சமூகத்தின் தொடர்ச்சி தான் நாமெல்லாம். நீரை விற்றும் வாங்கியும் பிழைக்க வேண்டி வந்த நிலைக்கு வருந்தாமல் இருப்பதெப்படி?

அன்னச்சத்திரம் என்ற பெயரில் வறியவருக்கும், வழிசெல்வோருக்கும் உணவு கொடுப்பதைப் பழங்காலத்தில் அரசுகள் ஒரு அடிப்படை சேவையாகச் செய்து வந்திருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் உணவை விற்கும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உணவை விற்பது பாவமென்றிருந்த அதே சமூகத்தின் எச்சமாக இன்றிருக்கும் நமக்கு உணவை விற்பதொன்றும் அத்தனை பெரிய இழிசெயலாகத் தெரிவதில்லை. அதுவும் ஒரு வியாபாரம் என்று ஏற்றுக்கொண்டதோடு வாங்கும் பணத்துக்கு தரமான உணவைத் தரும் உணவகங்களைப் பாராட்டவும் பழகிவிட்டோம். அடிப்படையில் அது அவர்களின் கடமை என்பதை அவர்கள் உணரவில்லை; நாமும்தான்.

இப்படியே பேரெண்னிக்கையிலான நம் மூதாதையரின் பண்பாட்டுக் கூறுகளை விட்டு வெகுதூரம் கடந்து வந்துவிட்டோம். அதிலும் குறிப்பாகக் கடந்த ஐம்பதாண்டுகளில் நம் வாழ்முறையில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் நாம் கடந்து வந்த தொலைவைக் கண் கூடாக்குகின்றன. 'அரிசி எங்கிருந்து வருகிறது?' என்கிற கேள்விக்கு, 'கடையிலிருந்து' என்று பதிலளிக்கிற அடுத்த தலைமுறைக்கு நம்மிடம் மீதமிருக்கும் சிற்சில பண்பாட்டு எச்சங்களைக் கடத்துவதும் எளிதன்று.

பல தலைமுறைகளில் செவி வழியாகவும், அனுபவ வழியாகவும் பயின்று வந்த பழக்க வழக்கங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகி இருக்கின்றன. இல்லையெனில் இன்னும் சில வருடங்களில் நாம் கடந்து போகப்போகிற தூரம், கடந்து வந்த பாதையின் சுவடுகளை வாழ்வின் வேகத்திலேயே மறக்கச் செய்து விடும் அபாயம் நிச்சயம். தொ.பரமசிவனின் இந்நூல் நான் மேற்சொன்ன ஒரு சிறந்த ஆவணம்.

ஒரு பழங்கதையுண்டு. ஒரு காலத்தில் ஒரு குரு இருந்தாராம். தன் சீடர்களுடன் ஊர் ஊராகப் போய் பூசைகள், சடங்குகள், செய்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் அவர். அப்படி ஓரூரில் தங்கியிருந்து பூசைகள் செய்த போது பூனையொன்று வந்து பூசையினிடையே இடைஞ்சல் செய்தபடியே இருந்தது. பொறுத்துப் பார்த்த குரு, பூனையின் அட்டகாசம் தாங்காமல், அதைப் பிடித்துக் கட்டிவைக்கச் சொன்னார். பூனையின் அட்டகாசமும் ஓய்ந்தது; பூசையும் தொடர்ந்தது. அவ்வூரிலிருந்த பிற வீடுகளிலும் பூசையின்போது பூனையின் தொந்தரவு தொடரவே, பூனையைக் கட்டிவைத்த பின்னரே பூசை செய்யவேண்டிய நிலையாகிப்போனது. ஒரு நாள் குரு இறந்து போனார். குருவின் பணியைத் தொடர்ந்து செய்ய வந்த சீடர்கள் பூசைக்கு முன் முதல் வேலையாக பூனையைக் கட்டி வைப்பதைக் கொண்டனர். பூனையே இல்லாவிட்டாலும், அதைத் தேடிப்பிடித்துக் கட்டிவைக்கவும் செய்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் பூனையைக் கட்டிவைப்பது முக்கியமான சடங்கானது என முடிகிறது அக்கதை.

நாமும் எத்தனையோ பூனைகளைப் பிடித்து இன்னும் கட்டிவைத்துக் கொண்டுதானிருக்கிறோம். ஏன் கட்டி வைக்கிறோம் என்பதற்கான சில காரணங்களைப் பேசுகிறது இந்நூல். மூட நம்பிக்கைகளை விட்டு விலகிய நாம், அவற்றோடு சேர்த்து பல நல்ல வழக்கங்களையும் தொலைக்க நேர்ந்தது துரதிர்ஷ்டமே! பொருளற்ற வெறும் சடங்குகளாக அவை மாறிய நிலையே அதற்கான பெருங்காரணமும் கூட. அது போலான சடங்குகளைப் பற்றியும் இந்நூல் ஆராய்கிறது.



வழக்கிலிருக்கும் பல சொல்லாடல்கள், மற்றும் பழமொழிகளின் மூலங்களை சில இடங்களில் ஆதாரத்துடனும், சில இடங்களில் அனுமானத்துடனும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இவற்றின் மீதான நம் புரிதல்களைத் தகர்த்தெறியும் வேறொரு பரிமாணத்தை அறியச்செய்து திகைக்க வைக்கிறார். இந்நூலைப் பற்றி என் நண்பர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் தவறாமல் பகிர்ந்து கொண்ட செய்தி குளித்தல் பற்றியது. வெப்பப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டில், உடல் மேல் நீரூற்றிக் குளிர்விக்கும் பழக்கம் ஆதி முதலே இருந்திருக்கிறது. இக்குளிர்த்தலே இப்பொழுது நாம் செய்யும் குளித்தலாகிப் போனது எனும் ஆசிரியரின் கூற்றை மறுப்பதற்கில்லை.

பதினைந்தாம் நூற்றாண்டில் சிலி நாட்டில் இருந்து இறக்குமதியான மிளகாய் தமிழரின் உணவுக்கு காரம் கொடுத்துக் கொண்டிருந்த மிளகை இடம் பெயர்த்தது. உப்பு என்ற சொல்லுக்கு 'சுவை' என்பதே முதற்பொருள். இசுலாமிய சமூகத்தில் தந்தையைக் குறிக்கும் 'அத்தா' எனும் சொல்லுக்கு மூலம் 'அத்தன்' என்கிற தமிழ்ச்சொல். பிறப்பு, இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே இந்துத் திருவிழா 'தைப்பூசம்'. போதிமரம் என்பது அரசமரத்தைக் குறிக்கும். என்பன போன்ற செய்திகள் எனக்கு மிகவும் புதியனவாகவிருந்தன.

இந்நூலின் பெயரிலேயே உள்ள ஒரு கட்டுரையில், கிராமமொன்றில் தனக்கேற்பட்ட அனுபவத்தை ஆசிரியர் பகிர்ந்துகொள்கிறார். ஓர் ஆண் இறந்த வீட்டில் குவிந்திருக்கும் மனிதர்களிடையே, வீட்டுனுள்ளிருந்து அமைதியாக வெளிவரும் கிழவியொருத்தி, நீர் நிறைந்த செம்பினுள் மூன்று முல்லைப் பூக்களைப் போடுகிறார். புரியாமல் இருந்த ஆசிரியருக்கு, 'இறந்து போனவரின் மனைவி மூன்று மாதங்கள் கருவுற்றிருப்பதாகவும், அக்கருவுக்குக் காரணகர்த்தா இறந்தவர்தான் என்பதை ஊரறியச் செய்வதற்காக இச்சடங்கு என்பதாகவும்' தெரிவிக்கிறார்கள். ஆச்சரியத்தில் ஆழ்ந்து போன ஆசிரியரின் வார்த்தைகள் அவர் மொழியிலேயே... 'ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சின்ன அசைவின் மூலம் எவ்வளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது!'.

பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் உணவு, உடை, கலை, வாழ்முறை, மொழி, நம்பிக்கை, வாழிடம், விழா, விளையாட்டு, இலக்கியம், சடங்கு எனும் பல கூறுகளின் தொகுப்பு என்ற அடிப்படையில், தமிழரின் வாழ்வில் இவை அனைத்தும் இருந்த நிலை மற்றும் சமகால நடைமுறைகளை இந்நூல் முன்வைக்கிறது. நிறைய தகவல்களின் தொகுப்பாக இருப்பதால் வாசிப்பவரைக் கொஞ்சம் ஆயாசப்படுத்தலாம். ஆயினும், நல்ல தகவல்களைத் தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு அது பெரிய தடையில்லை.

பின்குறிப்பு :


1. இந்நூல், ஆசிரியரின் 'அறியப்படாத தமிழகம்', 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' எனும் இரு நூல்களின் தொகுப்பு. (இந்த உண்மை தெரியாமலேயே 'அறியப்படாத தமிழகம்' நூலையும், இந்நூலையும் ஒரே நாளில் வாங்கி வைத்த புத்திசாலி நான். அதை விட பெரிய வருத்தம் என்னவென்றால் ஒரே பதிப்பகத்திலிருந்து வெளிவந்த இவ்விரு புத்தகங்களின் விலையும் கூட ஒன்று என்பதே!)

2. இப்புத்தகத்தின் முகப்பு அட்டையில் இருக்கும் ஓவியம்தான் என்னை இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது.

3. என் இன்னொரு வலைப்பூவான 'கருப்பு வெள்ளையை' 'கறுப்பு வெள்ளை'யாக மாற்றியது இந்நூல்தான்.

-பா.சேரலாதன்
(http://seralathan.blogspot.com/)

Wednesday, November 02, 2011

77. ஏழாம் உலகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

இம்மைக்குச் செய்வது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வாணிகன் ஆய் அல்லன்
- மோசிகீரனார்


No tips taken here; just because a man has to make his living waiting on table is no reason to insult him by offering him a tip.
- ஓர் உணவக வாயில் செய்திப்பலகை (Ten days that shook the world - John Reed)

-------------------------------------------------------------
புத்தகம் : ஏழாம் உலகம் (புதினம்)
ஆசிரிய‌ர் : ஜெயமோகன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
முதற்பதிப்பு : ஏப்ரல் 2010
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 274 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------------------

'இப்பத்தான் ஏழாம் உலகமே படிக்கிறியா?' என்று உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எங்கள் தலைமுறைக்கு இலக்கியம் என்று படிப்பிக்கப்படுபவை அப்படி. நான் கடவுள் என்று பாலா சார் படம் எடுத்திராவிட்டால் இப்படியொரு புதினம் எனக்கு அறிமுகமாகியிருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் புதினத்தைத் தழுவித்தான் இயக்குனர் பாலாவின் நான் கடவுள் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்குப் பரிச்சயம் என்றாலும் புத்தகத்தைப் பற்றி முதலில் பேசிவிட்டு பிறகு திரைப்படத்திற்கும் போவோம்.



பிச்சைக்காரர்களை வாங்கும் - விற்கும் - உற்பத்தியாக்கும் தொழில் நடத்தும் ஒருவனின் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நடக்கும் சம்பவங்களே இப்புதினம். மலையாளம் கலந்த தமிழ்பேசும் கதைமாந்தர்கள். நமது கருணை - இரக்க குணங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவும், சுகமான மறுபிறப்பிற்குச் சேர்த்துவைக்கும் புண்ணியமாகவும், சபிக்கப்பட்ட பிறப்புகளாகவும் மட்டுமே நமக்குத் தெரியும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை மிக அருகில்போய் புதினப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். பிறவியிலேயே ஊனமாகவும் விகாரமாகவும் பிறந்தவர்கள் அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்தான் கதையின் முக்கிய மாந்தர்கள். அவர்களை வைத்துக் காசுபண்ணும் முதலாளியைச் சுற்றித்தான் மொத்த புதினமும் பின்னப்பட்டிருக்கிறது. முதலாளியின் குடும்பமும் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் சிலரும்கூட கதைமாந்தர்கள்.

தொழிலாளி என்று நம்பவைத்து ஓர் அடிமையைக் கட்டுப்படுத்தலாம் என்றார் கார்ல் மார்க்ஸ். ஆனால் பிச்சைக்காரர்களுக்கு அவர்களின் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர்கூட‌ உருப்படி. உருப்படிகளைத் தன் விருப்பப்படி வாங்கி விற்று ஊனப்படுத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளையும் தரகர்களையும் அறிமுகப்படுத்தி மனத்தைக் கனப்படுத்துகிறது புத்தகம். திக்கற்ற உருப்படிகள் தங்கள் இயலாமையைத் தங்களுக்குள் நக்கலாகப் பேசிக்கொள்ளும் உரையாடல்களில் மறைத்துக் கொள்வதும், உருப்படிகள் தங்களுக்குள் ஒருகுடும்ப உறுப்பினர்கள் போல் வாழ்வதும், சிலர் விற்கப்படும்போது மற்றவர்கள் கலங்குவதும், இலைச்சோறு சாப்பிட முதலாளியின் வீட்டு விசேசத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் உருப்படிகளும், முதலாளி தன் தொழிலைக் கடவுளிடம் நியாயப்படுத்துவதும், தன் தொழில் மறைத்து வாழும் முதலாளியின் சொந்தக் குடும்ப வாழ்க்கையும் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்திராத எதார்த்தங்கள்.

ஆட்சியாளர்களை உருப்படிகள் நேரடியாகவே கெட்டவார்த்தைகளில் திட்டுவதும், ஹாலிவுட் அர்னால்ட் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல நல்ல உதாரணங்கள் உருப்படிகளின் உரையாடல்களில் இயல்பாக‌ வருவதும், கம்யூனிசம் முதல் சாதிச்சங்கங்கள்வரை உருப்படிகள் பேசும் அரசியலும், கருவறைக்குள்ளேயே மூத்திரம்போகும் பூசாரிகள் அதை நியாயப்படுத்துவதும் போன்று பல இடங்களில் தனது உரையாடல் நடையில் தனித்து நிற்கிறார் ஆசிரியர். அங்காடித் தெரு திரைப்படத்தில் அவரின் பெயர் போடப்படும்போது வரும் அதே நக்கல்.

கதை நடக்கும் காலம் எங்குமே வெளிப்படையாகச் சொல்லப்படாமல், மறைமுகமாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை. பாதிப்புத்தகம் தாண்டிய பிறகுதான் என்னால் காலம் கண்டுபிடிக்க முடிந்தது. ஒன்பது வருடங்களாக கோயில் வாசலில் பிச்சையெடுத்துவரும் ஒருத்தியை, அக்கோயில் பூசாரி வெற்றுடம்பாக பார்க்க கோரிக்கை விடுப்பதற்குச் சற்றுமுன் தனது புத்தகத்தின் பெயர்க்காரணத்தைப் பூசாரி மூலமே சொல்லியிருப்பது ஜெயமோகன் அவர்களுக்கு நானே சொல்லிக்கொண்ட பல 'சூப்பர்'களில் ஒன்று. போத்திவேலுப் பண்டாரமும், பெற்ற பிள்ளைகளின் கணக்கு தெரியாத முத்தம்மையும், கைகால்கள் இல்லாத மாங்காண்டி சாமியும், அகமதுகுட்டியும் மறக்கமுடியாத கதாப்பாத்திரங்கள்.

சில நச் வசனங்கள் உங்களின் ரசிப்பிற்கும்:

"அவனுக்கு அண்ணன், பெண்ணு கெட்டல்ல இல்லியா? ஒரு ஆறுமாசம் அவன் சோலி பாக்கட்டுன்னு இங்க வந்திருப்பான். இங்க பிடிச்சு சாமியாக்கிபிட்டானுக..."

"ஓட்டு உள்ளவன் செத்தாத்தான் அது கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிப்பாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்"

"மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?"

புத்தகத்தின் கடைசி மூன்று பக்கங்களுக்கு இருக்கும் வட்டார வழக்கு அகரமுதலி இல்லாவிட்டால், எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. வெப்ராளம் எரப்பாளி கச்சவடம் என்று பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் படித்து புத்தியில் ஏறிவிட்டன. தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களின் ஒருபுதினம் உட்பட பல புத்தகங்களுக்கு இந்த அகரமுதலி பயனுள்ளதாக உள்ளது.

பாலாவின் திரைப்படம் புதினத்தைவிட வீரியம் குறைவென்று பெரும்பாலான இணையப்பதிவுகள் சொல்வதால் அதை நான் மறுப்பதற்கான காரணங்கள்:
1. பாலாவின் படத்தின் பெயர் 'நான் கடவுள்'. ஓர் அகோரிதான் கதைநாயகன். ஏழாம் உலகப் பாத்திரங்கள் பாலாவின் க‌தைக்க‌ள‌ம் ம‌ட்டுமே.
2. இந்த வீரியத்திற்கே பலபேர் இப்படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
3. காகிதமும் திரையும் வெவ்வேறு தளங்கள். அகமதுகுட்டி மீனாட்சியம்மை போன்ற பாத்திரங்கள் திரையில் காட்ட அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே!
4. முத்தம்மை முடிவில்லாமல் ஏழாம் உலகம் முழுமையடைவதில்லை என்பது படித்தவர்களுக்குத் தெரியும். அக்காட்சியை நம்மூர் திரையில் வைக்கமுடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும்.

சமகாலத்தையும் ஒதுக்கப்படும் சக மனிதனையும் ஆவணப்படுத்துவதுதான் புதினங்களின் மிகப்பெரிய பணி என்று நம்புபவன் நான். 'நுனியளவு செல்' என்ற மகாகவியின் வார்த்தைகளை இப்புத்தகத்தில் செயலாகப் பார்த்தேன். அரசியல் ஆன்மீகம் கருணை இரக்கம் என்ற நமது சித்தாந்தங்களுக்குள் அடைபடாம‌ல் ஆசிரியர் சொல்வதுபோல் Being and nothingness என்றொரு சமூகம் நம்முடனேயே இருந்து பாதாளலோக‌க் கொடுமைகளில் அமுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களையும் கவனிப்போம்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, September 08, 2011

76. TEA - THE DRINK THAT CHANGED THE WORLD

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

The greatest service which can be rendered to any country is to add a useful plant to its custom.
- Thomas Jefferson

------------------------------------------------
புத்தகம் : Tea - The drink that changed the world
ஆசிரியர் : John Griffiths
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : André Deutsch
முதற்பதிப்பு : 2007
விலை : 395 ரூபாய்
பக்கங்கள் : 373 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-----------------------------------------------

டீ என்றால் நமக்கு என்னென்ன நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும்? சாதிக் கொடுமைகளுக்கு அடையாளமாக பள்ளிப்பாடங்களில் வரும் இரட்டைத் தம்ளர் முறை. பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party). தேநீர் வாங்கித்தந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுவதாகச் சிலர் சொல்லும் வீரவசனங்கள். தேயிலை அறிமுகமான காலத்தில் வடிகட்டியபின் சக்கையைச் சாப்பிட்ட ஏதோவொரு நாட்டுமக்கள், என்று சிறுவயதில் எங்கோபடித்த விசயம். வாழ்நாளில் டீயே குடிக்காமல் இருந்த‌ ஒரு பிரதமர். இன்னும் கொஞ்சநேரம் யோசித்தால் அதிகபட்சமாக என்னால் இன்னும் இரண்டு விச‌யங்கள்தான் சொல்லியிருக்க முடியும். ஆனால் உலகத்தையே மாற்றியமைத்த பானமென்று கம்பீரமாக தேநீரை அடையாளப்படுத்தி நின்றுகொண்டிருந்தது இப்புத்தகம். உப்பைப்பற்றிய ஒரு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோதுதான் இப்புத்தகத்தைக் கண்டெடுத்தேன். 19 கட்டுரைகளின் தொகுப்பு. அட்டைப்படத்தின் பாதியை ஆக்கிரமித்திருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து.

தேயிலை என்ற கண்டுபிடிப்பிற்குச் சொந்தமானவர்கள் யார் எனவும் அதைத் தனது காலனிகளில் விளைவிக்க பிரிட்டிஷார்கள் மேற்கொண்ட முயற்சிகளும்தான் முதலிரண்டு கட்டுரைக‌ள். தேயிலையை இங்கிலாந்தில் பயிர்செய்ய வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 20 முறை முயற்சித்து தோற்றுப்போகிறார். மின்சார பல்புக்குள் வைப்பதற்குத் தகுந்த இழையைத் தேடி உலகின் பல இடங்களுக்கு ஆட்களை அனுப்பிய ஆல்வா தாமஸ் எடிசன் போல், தேயிலைச் செடியை உயிருடன் கொண்டுவர தனது ஆட்களை அனுப்புகிறார் கார்ல் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஒருகரையில் சேகரிக்கப்பட்ட தேயிலை மறுகரை சேரவில்லை. கப்பல் புறப்பட்டபோது வழியனுப்புதலுக்காக வெடிக்கப்பட்ட குண்டில் தேயிலை பொசுங்கிப்போகிறது. இல்லை, வழியில் கப்பலில் எலி தின்றுவிடுகிறது. நம்பிக்கையுடன் அவ்வளவுதூரம் வந்துவிட்டு, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) கடந்தவுடன் எதிர்பாராத புய‌ற்காற்றில் பறந்துபோகிறது. தனது தோட்டத்தில் பயிரிடும் ஆசை நிறைவேறாமலேயே இறந்துபோகிறார் கார்ல் லின்னேயஸ்.



தப்பித்தவறி தனக்குக் கிடைத்த செடிகளில் எது உண்மையான‌ தேயிலை எனத் தெரியாமல் குழம்பிப்போகிறார் கார்ல் லின்னேயஸ். தேயிலை என்பது ஒரு தனிப்பட்ட தாவரம்தானா என்ற கேள்விக்கு விடை 180 ஆண்டுகள் கழித்துத்தான் தாவரவியலாளர்களுக்குக் கிடைக்கிறது. 19ம் நூற்றாண்டின் பிற்பாதிவரை அயல்மண்ணில் விளைவிக்கப்பட முடியாமல் சீனாவிலேயே தங்கிவிடுகிறது தேயிலை. நமெக்கெல்லாம் மிகவும் பரிச்சயப்பட்ட டீ (tea), சாயா / சாய் / சா (cha) என்ற வார்த்தைகளின் பெயர்க்காரணமும், கிரீன் டீ (green tea) மற்றும் பிளாக் டீ (black tea)க்களுக்கான வித்தியாசங்களையும் அருமையான தகவல்களாகத் தந்துபோகின்றன இவ்விரண்டு கட்டுரைகள்.

மூன்றாம் கட்டுரையில் இருந்து சீரியஸாகிறது புத்தகம். தேநீரின் தீமைகளாகவும் அக்காலத்தில் அதைப்பற்றிய நிலவிய அறியாமையையும் அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது அக்கட்டுரை. ஒருகாலக்கட்டத்தில் தேநீரின் மருத்துவக் குணங்களை ஆய்வுசெய்ய பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி (Louis XIV) உத்தரவிடும் அளவிற்குத் தேயிலை பயங்காட்டியிருக்கிறது. காஃபிக்கும் தேநீருக்கும் இடையில் இருக்கும் நன்மை தீமைகளை அறிவியல் ரீதியாகப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்.

அடுத்த இரண்டு கட்டுரைகளும் எனக்கும் மிகவும் பிடித்த வரலாற்றுச் சம்பவங்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தையே அமெரிக்காவில் அழித்து, அமெரிக்கர்களின் தேநீர் பழக்கத்தையே கிட்டத்தட்ட மறக்கடித்துப்போன பாஸ்டன் தேநீர் விருந்தை இருமுறை படித்தேன். உலகின் தலைசிறந்த போராட்டங்களாக டைம் (Time) இதழ் தேர்ந்தெடுத்திருந்த நிகழ்வுகளில் 10வது இடம் பாஸ்டன் தேநீர் விருந்து. தண்டியில் உப்புக்காய்ச்சியபின் தனது உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தை மோகன்தாஸ் காந்தி இந்நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டதாக வரலாற்றுச் செய்திகள் உண்டு. தண்டிப்போராட்டம் அதே டைம் பட்டியலில் பத்துக்குள் இருக்கிறது.

வீட்டைக் குத்தகைக்குவிடலாம், காட்டைக் குத்தகைக்கு விடலாம், ஒரு நாட்டையே குத்தகைக்கு விடலாமா? விடலாம் என்கிறது விநோத வரலாறு. அபினிப்போரில் (Opium war) பிரிட்டிஷாரிடம் தோற்றுப்போன சீனா, தனது நாட்டின் ஒருபகுதியான ஹாங்காங்கை 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுகிறது. இந்த விநோதத்தின் மூலத்தைத் தேடினால், அபினி வெள்ளி என்று இதுவும் தேயிலையில்தான் போய்முடிகிறது. அபினிக்கென்று தனித்துறை இந்திய ஆட்சிப்பணியில் 1930ல் இருந்திருக்கிறது.

தேயிலைத் தோட்ட முதலாளிகள், கூலிகள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். முதலாளிகள் கூலிகளை நாடுவிட்டுநாடு கொண்டுவருவதில் பட்ட இன்னல்கள், கூலிகளை நிர்வகிக்கும் கங்கானிகள், கூலிகள் தங்கள் உரிமைகளுக்காகத் தோற்றுவித்த தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பற்றிப் பேசுகின்றன நான்கு கட்டுரைகள். 1920களில் தமிழகத் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுத்து, சுதந்திரத்திற்குப்பின் வாழ்வுரிமையையும் மறுத்த இலங்கையின் மாபெரும் வரலாற்றுக் குற்றங்களையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.

1600ன் கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகாதிபத்தியத்தின் பின்னாலும், இரண்டு வருடங்களுக்குப் பின் போட்டிக்காக‌ தோன்றிய டச்சு கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பின்னாலும் தேயிலை இருந்திருக்கிறது. தேயிலையைப் பானமாக உபயோகிக்காமல் ஊறுகாயாக உபயோகித்திருக்கிறார்கள் பர்மியர்க‌ளும் சில தென்கிழக்கு ஆசியர்களும். மற்றபடி தேயிலைத்தூள் தயாரிப்பு முறைகள் பற்றியும், நிறம் சுவை திடம் பற்றியும், அதன்மேல் வரலாறு விதித்திருந்த வரிகள் பற்றியும் சில கட்டுரைகள் பேசுகின்றன. லிப்டன், டைபோ (Typhoo), புரூக் பான்ட் (Brooke Bond) என்ற‌ பிரபல டீ பிராண்டுகளின் ஆரம்பகாலத்தைக் கொஞ்சம் தொட்டுச் செல்கிறது புத்தகம். தனது முதல் டீக்கடையின் விளம்பரத்திற்காக பன்றி ஒன்றுடன் வீதியில் ஊர்வலம் போயிருக்கிறார் டாம்மி லிப்டன் (Tommy Lipton). குரங்கைவிட்டு அறுவடை செய்ததென்று கவர்ச்சி விளம்பரமெல்லாம் சிலபேர் செய்திருக்கிறார்கள்.

ஆசிரியரின் தந்தை பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்தாக யூகிக்கமுடிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் பணிபுரிந்த‌ ஆங்கில அதிகாரிகளாலும், தேயிலை சம்மந்த‌ப்பட்ட பிரிட்டிஷ்-சீன-டச்சுக்காரர்களாலும் எழுதப்பட்ட நேரடிக் குறிப்புகளே பெரும்பாலான இடங்களில் மேற்கோளாகப் புத்தகத்தில் வருகின்றன. இவை செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகக்கூடச் சொல்லலாம்.

டீயைப் பற்றி எல்லா விசயங்களையும் இங்கேயே சொல்லிவிட முடியாது. புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பல நூற்றாண்டுகளை ஒரே நிமிடத்தில் உறிஞ்சிவிட்டதாக ஒருதிருப்தி. 'கொஞ்சம் தேநீர் நிறைய‌ வானம்' புத்தகத்தில் 'ஆளுக்கொரு கோப்பை' கவிதையில் வைரமுத்து சொல்வதுபோல், கூப்பிட்டபோது வரம்தந்தோடிப்போகும் மலிவு தெய்வமான இத்தேநீரின் வரலாற்றிலும்கூட நிறம் சுவை திடமுண்டு!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, August 25, 2011

75. வாடாம‌ல்லி

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ - என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய்
செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன்
கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன்
நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே சேர்ந்திருப்பேன்
இரண்டாய்ப் பிறந்ததாலே துண்டுபட்டு நிக்கேனே!
- கூவாகத் திருவிழா ஒப்பாரிப்பாடல்

-------------------------------------------------
புத்தகம் : வாடாம‌ல்லி
ஆசிரிய‌ர் : சு.ச‌முத்திர‌ம்
வெளியீடு : அருவி
முதற்பதிப்பு : ஆக‌ஸ்ட் 2009
விலை : 150 ரூபாய்
பக்கங்கள் : 304 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

-------------------------------------------------
இராமநாதபுர மாவட்டம் பேரையூரில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பிறந்த நூர் முகம்மது, தன் ஆணுடம்பில் இருக்கும் பெண்தன்மையைச் சமுதாயம் ஏற்க மறுத்தபோது முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையின் இறுதி ஊர்வலத்திற்குச் செல்பவர்களுடன் கும்பலோடு கும்பலாக இரயிலேறி சென்னைபோய் பம்பாய்போய் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து நூரி என்ற பெண்ணாகி திருமணம் செய்து கணவனை இழந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மூன்றாவது எய்ட்ஸ் நோயாளியாகக் கண்டறியப்பட்டு தற்போது சென்னையில் SIP memorial home நடத்தி சுமார் 32 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். பால் சுயம்பு அவர்களின் 'திருநங்கைகள் உலகம்' புத்தகத்தில் மனதை மிகவும் பாதித்தவர் நூரி. அப்புத்தகத்தில்தான் நூரி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'வாடாமல்லி' என்ற தொடரை மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதியிருப்பதாகப் படித்தேன். புத்தகமாகவே கிடைத்துவிட்டது!

'அரவாணிகள் பற்றிய தமிழின் முதல் நாவல்' என்று முன்னட்டை சொல்கிறது. சுயம்பு என்ற ஆண், தனது கல்லூரிப் பருவத்தில் பெண்தன்மையை உணரும்போது பெண்களாலேயே அவமானப்படுத்தப்படுவதுடன் ஆரம்பமாகிறது புதினம். கல்லூரி குடும்பம் சமூகம் என்று பல இன்னல்களுக்கு ஆளாகி ஒருசமயத்தில் எல்லாராலும் வெறுக்கப்படும் ஒரு ஜீவனாக வீட்டைவிட்டு வெளியேறி அவன் சந்திக்கும் திருநங்கைகள் மூலமாக அவர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள்மேல் சமூகம் திணிக்கும் கொடுமைகளையும் எதிர்கொள்வதுதான் கதைச்சுருக்கம்.

தமிழகத்தின் ஒரு கிராமம், ஒரு பொறியியல் கல்லூரி, சென்னையின் சேரிப்பகுதி, டெல்லி, சில காவல் நிலையங்கள், கூவாகம் என்ற பயணிக்கிறது கதைக்களம். சமையற்காரர்களாகவும் ஒப்பாரிக்கலைஞர்களாகவும் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கில் அதிர்ஷ்டக்காரர்களாக வீட்டு விசேசங்களில் சிறப்பிக்கப்படுவதும், நம்மூரில் பேய்ப்பிடித்திருப்பதாக அடிவாங்குவதுமாக பால்பிறழ்வுகளின் சமூகநிலையை அழகாக விவரிக்கிறது புத்தகம்.

முர்கேவாலி மாதா கதையையும் அரவான் கதையையும் கதை மாந்தர்களே சொல்கிறார்கள். அரவான் கதை பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' புத்த‌க‌த்திலும் உண்டு. ஆசிரியர்கூட ஆசிரியராகவே கதையின் போக்கில் ஒரு வரியில் வந்துபோகிறார். திருநங்கைகளைத் தாசிகள்போலவும் ஆண்களுக்கு அலைவதுபோலவும் சித்தரிக்கும் சில பத்திரிக்கைகள் பற்றியும், அவர்களை அதற்காகவே பயன்படுத்த நினைக்கும் சில காவல்துறை அதிகாரிகள் பற்றியும் தொட்டுச்செல்கிறது புத்தகம்.

தவிர்க்க முடியாதபடி கூவாகம் இப்புத்தகத்திலும் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் 'தேசாந்திரி' கூவாகத்திருவிழா பற்றி பேசுகிறது. பிரியாபாபு அவர்களின் 'மூன்றாம் பாலின் முகம்' கூவாக லாட்ஜ்களைப் பற்றியும் பேசியது. பிள்ளையார்குப்பம் மஞ்சக்குப்பம் என்று அருகிலுள்ள அரவான்கோவில்களை ஓரங்கட்டிவிட்டு கூவாகம் அகில இந்திய அளவில் பிரபலமாகியிருந்தாலும் சில திருநங்கைகளுக்கே பிடிக்காத கூவாகம் பற்றி வாடாமல்லி சொல்கிறது.

புத்தகத்தில் இரண்டு இடங்களில் நான் மிகவும் ரசித்த உரையாடல்கள் உங்களின் வாசிப்பிற்கும்.

அரவான் கதையின் முடிவில் வருகிறது முதல் உரையாடல்.
"கிருஷ்ணன் கிடைக்கான் விடு. அவனுக்கென்ன பழையபடியும் ஆணாய் மாறிட்டான்"

ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் உரையாடல்.
"அந்த சின்னப் பொட்டையோட டிரஸை எடுத்துட்டு ஜட்டியோட விடுங்க... பக்கத்துல எதையும் வைக்காதீங்க... தூக்குப் போட்டு சாகப் போறவன்மாதிரி முழிக்கான் பாருங்க... அப்புறம்... சொல்றதைக் கேட்காமல் கஸ்டடி டெத், கற்பழிப்புன்னு வம்ப வெலைக்கு வாங்காதீங்க..."
ஒரு போலீஸ்காரர் ஜோக்கடித்தார்.
"கற்பழிப்புக்குப் பிறகுதான் சார் கஸ்டடி டெத்து... மாத்திச் சொல்றீங்க..."
"ஒன்னமாதிரி ஆளுங்க பிணத்தைக்கூட கற்பழிப்பீங்க..."

சமீபத்திய ஆனந்த விகடன் இதழொன்றில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு, நூரி இவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் செய்திக்கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்தபிறகுதான் பால்பிறழ்வுகளில் இருவகையென்று எனக்குத் தெரியும். பெண்மை குறைந்து ஆண்தன்மை மிக்கதைத் திருநம்பி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்மை மிக்கதைத் திருந‌ங்கை என்ற சொல்லாலும் குறிப்பதாகப் படித்தேன். இவர்களை முறையே பேடி அலி என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதாக‌ இப்புத்தகத்தின் தொடக்கத்தில் வரும் ஆய்வுரையில் பேராசிரியர் இராம. குருநாதன் குறிப்பிடுகிறார். இதுவரை நான் படித்திருந்த புத்தகங்களில் திருநம்பிகள் பற்றி பார்த்ததாக நினைவில்லை. திருநம்பிகளின் சமுகநிலை திருந‌ங்கைகளைவிட பரிதாபமென அக்கட்டுரை சொன்னதாக நினைவிருக்கிறது.

மேகலை மாதாஜியிடம் சொல்லும் ஒரு வாக்கியம் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டமிடவும்.
"பூப்பு நீராட சவுக்குக் கம்புல உட்கார்ந்த‌துகூட உங்க மனச நோகடிக்கக்கூடாது என்கிறதாலதான்".

நூரியாக மாறியபிறகு வாழ்க்கை எப்படி அமைந்தது என்று தெரிந்துகொள்ள எதிர்பார்த்துத்தான் புத்தகம் வாங்கினேன். ஆனால் அதற்கு முந்தைய பகுதிதான் பெரும்பாலும் புதினப்படுத்தப்பட்டிருக்கிறது. சுபமான முடிவை மட்டுமே விரும்பும் தொடர்கதை அல்லது திரைப்பட ரசிகர்களுக்காக எழுதப்பட்டதுபோல் ஒரு சின்ன ஏமாற்றம். நண்பர் கிருஷ்ண பிரபு அவர்கள் பாலபாரதியின் 'அவன்-அது=அவள்' புத்தக விமர்சனத்தில் சொன்னதுபோல வாடாமல்லியின் இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருப்பதும் உண்மையே.

சுயம்புவிற்குப் பேய்விரட்டும் பகுதியும், வீட்டைவிட்டு வெளியேறுவதற்குக் காரணமான நிகழ்ச்சியும், சென்னையின் சேரி அனுபவமும், கூவாக நிகழ்வுகளும் கதையின் பலம். வாசிக்கும் வேகத்திற்குத் தடைபோடும் எழுத்துப் பிழைகளும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் தலைகாட்டும் ஹீரோயிஸமும், காட்சிகளின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்படி வந்துபோகும் சில செயற்கைத்தனமான வசனங்களும் புத்தகத்தின் சில குறைகள். அச்சிறுகுறைகளையும் தாண்டி, திருநங்கைக‌ளுக்கான முன்னோடி படைப்பு என்று தனித்து நிற்கிறது வாடாமல்லி.

தமிழில் பால்பிறழ்வுகள் பற்றி நீங்கள் படிக்கவேண்டுமெனில் உங்களின் முதலடியை வாடாமல்லியில் ஆரம்பிக்கலாம்!

அனுபந்தம்:

புதினம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக ஏழாண்டுகளுக்குமுன் நூலகமொன்றில் நான் தேர்ந்தெடுத்து படித்த புத்தகம் - பாலைப்புறா. எய்ட்ஸ் நோய் கதைக்களம். ஆசிரியர் சு.சமுத்திரம்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

Thursday, February 03, 2011

74. ஆழத்தை அறியும் பயணம்

-----------------------------------------------------------------------
புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர் : பாவண்ணன்
வெளியிட்டோர் : காலச்சுவடு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2004
விலை : 140ரூ
பக்கங்கள் : 254

----------------------------------------------------------------------

ஒரு கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். அது ஒரு சிறுகதை, புதினம், குறுங்கதை எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். வாசிப்பினூடே அதில் வரும் பாத்திரங்களுடன் பயணிக்கத் தொடங்குகிறீர்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உங்கள் மனதில் ஓர் உருவம் உண்டாகிறது. நீங்கள் பார்த்துப் பழகிய, கேள்வி ஞானத்தில் அறிந்த, வேறெங்கோ வாசித்த யாரோ ஒருவர் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவராக உங்களுக்குப் படுகிறார். ஏன்? உங்களையே கூட பாத்திரங்களில் ஒன்றாக பாவித்துக் கொள்கிறீர்கள். அப்பாத்திரத்தின் சூழ்நிலையோ, உடலமைப்போ, மனோநிலையோ ஏதோவொன்று உங்களுடன் அதிகமாக ஒத்துப்போகிறது. அது போலவே மற்றப் பாத்திரங்களுக்கும் நீங்கள் அறிந்திருந்த மனிதர்களின் உருவத்தையே பொருத்திப் பார்க்கிறீர்கள். இது கதையுடனான உங்கள் நெருக்கத்தைக் கூட்டி உங்களை மேலானதொரு அனுபவத்துக்கு ஆட்படுத்துகிறது.

வாழ்வின் ஒரு நாளில் நடக்கும் பலப்பல நிகழ்வுகள் உங்கள் நினைவுச் சங்கிலியை எப்போதோ நீங்கள் வாசித்திருக்கக்கூடிய ஒரு கதையுடன் பிணைக்க வல்லனவாகவிருக்கின்றன. வியாபார நிமித்தமாக நீங்கள் சந்திக்கும் நபர் தெனாலி ராமனை நினைவுறுத்துகிறார். முகவரி கேட்கும் யாரோ ஒரு பெண், குந்தி தேவிக்கு நீங்கள் கற்பனை செய்திருந்த உருவத்துக்குள் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறாள். பெரும்பாலான வாழ்வியல் சிக்கல்களுக்கு வாசித்த ஏதோ கதையின் யாரோ ஒரு பாத்திரம் உங்களுக்குத் தீர்வளிக்கிறது. விதவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புனைவுச் சூழ்நிலைகள் உங்களைப் பயிற்றுவிக்கின்றன.

வாசிப்பின் பெரும்பாலான தருணங்களில் நிஜ வாழ்வில் எங்கோ சந்தித்த, பார்த்த, கேட்ட, உணர்ந்த, அனுபவித்த எதுவோ ஒன்று பற்றிய நினைவு எழுவது தடுக்க இயலாததாகி விடுகிறது. அது போலவே வாழ்வின் பல கட்டங்களில், எங்கோ எப்போதோ வாசித்த ஏதோவொன்று நினைவுக்கு வருவதும் இயல்பானதே! வாசிப்பும் வாழ்க்கையும் இணையும் இந்த இரு புள்ளிகள் வாழ்க்கை, வாசிப்பு இரண்டையுமே அர்த்தமுள்ளதாக்குகின்றன. இரண்டு விதமான அனுபவங்களில் நாம் முன்னேறிச் செல்கிறோம் என்பதும் உண்மைதான்.



இது மாதிரியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நூல்தான் இந்த ஆழத்தை அறியும் பயணம். ஆற்றுப்படை என்றொரு சிற்றிலக்கிய வகை தமிழில் உண்டு. புரவலனிடம் பரிசில் பெற்று வரும் புலவன், பாணன், கூத்தன் போன்றோர் தன் போன்ற மற்றவருக்கு புரவலனின் பெருமைகளைக் கூறி, செல்லும் வழி சொல்லி அனுப்புவதே ஆற்றுப்படை. இந்த நூலும் ஒரு வகையில் ஆற்றுப்படைதான். எழுத்தாளர் பாவண்ணன் தான் வாசித்த சிறுகதைகளையும், எழுத்தாளர்களையும் பற்றிய மதிப்பீடுகளை முன்வைத்து மற்ற வாசகர்களை அவர்களிடம் அனுப்பி வைக்கிறார். இப்புத்தகத்தில் 25 தமிழகச் சிறுகதைகளும், 8 அயல் தமிழ்ச் சிறுகதைகளும், 10 பிற மொழிச் சிறுகதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இப்புத்தகத்தைப் பற்றி எழுதும்போது எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' புத்தகத்துடனான இதன் ஒப்பீட்டையும் பதியும் கட்டாயம் நேர்கிறது. கதாவிலாசமும் இதேபோன்றதொரு முயற்சிதான் என்றாலும், இரு முக்கியமான அம்சங்களில் இது கதாவிலாசத்தினிடமிருந்து மாறுபடுகிறது. ஒன்று. கதாவிலாசம் சொல்லும் அனுபவங்கள் ஒரு முழுமையான புனைவாகி விடக்கூடிய நிறைய வாய்ப்புகளுடன் இருக்கின்றன. ஆனால் ஆழத்தை அறியும் பயணம் வெறும் அனுபவமாக மட்டுமே அனுபவத்தை முன்வைக்கிறது. எந்தக் கணத்தில், குறிப்பிட்ட சிறுகதை ஆசிரியரின் நினைவடுக்கில் வந்து போனதோ அந்தக் கணத்தில் அனுபவக் குறிப்பு நின்று விடுகிறது. இதை பலம், பலவீனம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். கதையுடன் வாழ்க்கை சந்திக்கும் புள்ளியில் அனுபவம் நின்றுபோய், கதை மீதான இடம்பெயர்தல் நிகழ்கிறது. இரண்டு. கதாவிலாசத்தில் தொகுக்கப்பட்டிருக்கிற சிறுகதைகளும், எழுத்தாளர்களும் முந்திய மூன்று தலைமுறைகளுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இப்புத்தகம் 1930களில் எழுதப்பட்ட கதைகளைக் குறித்தும் கூடப் பேசுகிறது. இன்றைய பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகமற்ற எழுத்தாளர்களைப் பரிட்சயப்படுத்துகிறது. இரு நூல்களுமே தீவிர வாசகத் தன்மையுடன் அமைந்திருப்பது பொதுவான அம்சம்!

ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் எழுத்தாளர் குறித்த குறிப்பும், இச்சிறுகதை எந்தத் தொகுப்பிலிருக்கிறது என்ற தகவலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்களை அடுத்து, எல்லாக் கட்டுரைகளும் ஓர் அனுபவத்தை விளக்கி, ஒரு புள்ளியில் நிறுத்தி, 'இந்தப் புள்ளியில் இன்ன கதை நினைவுக்கு வருகிறது' என்றபடி கதையைச் சொல்லி, பின் கதையின் மீதான மதிப்பீட்டைச் சொல்லி நிறைவு பெறுகின்றன. பின்பற்றப்பட்டிருக்கிற இந்த ஒரே மாதிரியான கட்டமைப்பு கொஞ்சம் சலிப்பேற்படுத்தத்தான் செய்கிறது.

என்றாலும் கடந்தகாலத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களிடம், நல்ல இலக்கியத்தைத் தேடும் இன்றைய வாசகர்களை ஆற்றுப்படுத்தும் பாவண்ணனின் இந்நூல் கவனிக்கத்தக்க, வாசிக்கப்பட வேண்டிய ஒன்று!

இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்களும், சிறுகதைகளும்:

தமிழகச் சிறுகதைகள்

அ.மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்'
பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'
த.நா.குமாரசாமியின் 'சீமைப்பூ'
கல்கியின் 'கேதாரியின் தாயார்'
ந.சிதம்பர சுப்பிரமணியனின் 'சசாங்கனின் ஆவி'
து.ராமமூர்த்தியின் 'அஞ்ஞானம்'
கிருஷ்ணன் நம்பியின் 'மருமகள் வாக்கு'
நா.பார்த்தசாரதியின் 'வேப்பம்பழம்'
ஆர்.சூடாமணியின் 'ரயில்'
விந்தனின் 'மாடும் மனிதனும்'
தி.சா.ராஜுவின் 'பட்டாளக்காரன்'
ந.முத்துசாமியின் 'இழப்பு'
கரிச்சான் குஞ்சுவின் 'நூறுகள்'
பிரபஞ்சனின் 'பிரும்மம்'
இந்திரா பார்த்தசாரதியின் 'நாசகாரக் கும்பல்'
ஜே.வி.நாதனின் 'விருந்து'
ஆர்.ராஜேந்திரசோழனின் 'கோணல் வடிவங்கள்'
நாஞ்சில் நாடனின் 'ஒரு இந்நாட்டு மன்னர்'
திலீப்குமாரின் 'மூங்கில் குருத்து'
மா.அரங்கநாதனின் 'சித்தி'
சிவசங்கரியின் 'வைராக்கியம்'
சி.ஆர்.ரவீந்திரனின் 'சராசரிகள்'
மலர்மன்னனின் 'அற்பஜீவிகள்'
ஜெயந்தனின் 'அவள்'
சுரேஷ்குமார் இந்திரஜித்தின் 'அலையும் சிறகுகள்'

அயல் தமிழ்ச் சிறுகதைகள்

என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக் கொழுந்து'
என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்'
வ.அ.இராசரத்தினத்தின் 'தோணி'
அ.முத்துலிங்கத்தின் 'அக்கா'
எஸ்.பொன்னுத்துரையின் 'அணி'
சாந்தனின் 'முளைகள்'
மாத்தளை சோமுவின் 'தேனீக்கள்'
தெளிவத்தை ஜோசப்பின் 'மீன்கள்'

பிறமொழிச் சிறுகதைகள்

தாகூரின் 'காபூல்காரன்'
ஜயதேவனின் 'தில்லி'
கே.ஏ.அப்பாஸின் 'அதிசயம்'
சரத்சந்திரரின் 'ஞானதா'
காளிந்திசரண் பாணிக்கிரஹியின் 'நாய்தான் என்றாலும்'
தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'
எட்கர் ஆலன் போவின் 'இதயக்குரல்'
துர்கனேவின் 'முமூ'
வில்லியம் பாக்னரின் 'இரு சிப்பாய்கள்'
ஐல்ஸ் ஐக்கிங்கரின் 'ரகசியக் கடிதம்'

பின்குறிப்பு:

இப்புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக அளித்த நண்பர் கிருஷ்ணபிரபுவுக்கு நன்றி!

-சேரல்
(http://seralathan.blogspot.com/)

Monday, January 31, 2011

73. IN THE COUNTRY OF GOLD DIGGING ANTS

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

----------------------------------------------------------------
புத்தகம் : In the Country of Gold-digging Ants (2000 years travel in India)
ஆசிரியர் : அனு குமார்
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Puffin Books
முதற்பதிப்பு : 2009
விலை : 225 ரூபாய்
பக்கங்கள் : 191 (தோராயமாக 24 வரிகள் / பக்கம்)

----------------------------------------------------------------

இந்தியாவிற்கு வருகை புரிந்த அயல்நாட்டுப் பயணிகள் யார்? இதுபோன்றதொரு கேள்வி ஆறாம்வகுப்பு முதலிடைத் தேர்வில் சமூகவியலில் ஐந்து மதிப்பெண்ணுக்குக் கேட்கப்பட்டபோது மார்கோ போலோ, யுவான் சுவாங், பாஹியான் என்றுமட்டும் எழுதிவிட்டு அரை மதிப்பெண் வாங்கியவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. வினாத்தாளில் பகுதிமாற்றி கேட்கப்பட்டுவிட்ட கேள்வி என்றும் குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு ஏதாவது எழுதியிருந்தால் மட்டுமே அரைக்கும் அதிகம் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார். மிஞ்சிமிஞ்சிப் போனால் அவர்களின் சொந்த நாடு எதுவென்பதும் எவரின் ஆட்சிக்காலத்தில் வந்தார்கள் என்பதும் தவிர அவர்களைப் பற்றிய குறிப்புகளேதும் எங்கள் பாடப்புத்தகங்கள் சொல்லியிருக்கவில்லை. அடுத்தடுத்த வகுப்புகளிலும் இந்நிலைகளில் மாற்றமில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எல்லாரும் வெறும் பெயர்களாக மட்டுமே நினைவில் தங்கிவிட்டது, நமது கல்விமுறையின் தோல்வியன்றி வேறில்லை.

யாத்ரீகர் பயணி தூதர் என்ற பதங்களால் பெரும்பாலும் அறியப்படும் இவர்களைப் பற்றி நிதானமாக மறுபரிசீலனை செய்ய சென்ற ஆண்டு நான் படித்த மூன்று புத்தகங்கள் உதவின. முதலாவது புத்தகம் - கோடுகள் இல்லாத வரைபடம் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை பதிப்பகம். யாத்ரீகனுக்கும் அவன் சொந்த நாட்டில் அவனை எதிர்பார்த்து அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் என்றும், உலக எல்லைகளே வரையறுக்கப்படாத அக்காலத்தில் மதம் - வியாபாரம் - தூது - தேடல் - அறிவியல் என்று ஏதோவொன்று அவர்களின் பயணத்திற்குப் பின்புலமாக இருந்திருக்கிறது என்றும், மொழி - கலாச்சாரம் - பூகோளம் என்று அவர்கள் எதிர்கொள்ள தடைகள் பல இருந்தன என்றும் யோசிக்க வைத்த புத்தகம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய ஊர்சுற்றிகளுக்கெல்லாம் முன்னோடிகளை ஆவணப்படுத்தியிருக்கும் நல்ல புத்தகம்.

இரண்டாவது புத்தகம் - The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி. யாத்ரீகர்களைப் பற்றிய எனது அறிவை அடுத்த நிலைக்குக் கொண்டுபோன அற்புதமான புதினம். அமெரிக்கா போன்ற அறியப்படாத பிரதேசங்களைக் கண்டுபிடித்ததும் இந்தியா போன்ற தேசங்களுக்கு மாற்றுவழி கண்டுபிடித்ததும் அவர்கள்தான் என்றாலும், சிபிலிஸ் ஸ்கர்வி பிளேக் போன்ற நோய்களைக் கண்டம்விட்டுக் கண்டம் கடத்தியதும் அவர்களே. கடலில் இருக்கும் அரக்கன் படகைக் கடித்துவிடுவான் எனவும், பூமத்திய ரேகையில் கடலில் நெருப்பெரியும் எனவும், மேற்குக் கடைசியில் கடலில் சகதி இருக்கும் எனவும், தட்டையான பூமியின் விளிம்பில் கப்பல் கவிழ்ந்துவிடும் எனவும் இருந்த மனிதகுல நம்பிக்கைகளைப் பொய்யாக்கியதும் அவர்களே.

இந்த இரண்டு புத்தகங்களின் துண்டுதலினால்தான் சென்ற வருடம் வாஸ்கோடா காமா (கோவாவில் ஒரு நகரம்) முதல் கப்பாடு (வாஸ்கோடா காமா முதலில் கால்பதித்த இந்திய மண்)வரை, வாஸ்கோடா காமாவின் எதிர்த்திசையில் பயணித்துப் பார்த்தேன்.

23ம் புலிகேசி திரைப்படம் பார்த்தவன் என்பதாலும், தற்போதைய இந்திய அரசியலை உற்றுக் கவனித்துவரும் ஒரு சாமானியத் தமிழன் என்ற வகையிலும் இவ்விரு புத்தகங்கள் முலம் நாம் தெரிந்து கொண்டது - சமகாலத்தில் வாழ்ந்த உள்நாட்டுக்காரனால் சொல்லப்படும் கல்வெட்டுகளைவிட யாத்ரீகன் என்ற அந்நியனால் சொல்லப்பட்டவை நம்பத்தகுந்தவை. வரலாற்றுப் பாடங்கள் பெரும்பாலும் அப்படிப்பட்ட யாத்ரீகர்களின் குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதைச் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கிறித்தவ பாதிரியாருக்கான படிப்பில் Theologyல் இப்படியொரு பாடம் உண்டென்றும், சீடர்கள் எழுதிய விவிலியத்தையும் அதே காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் சொன்ன இயேசுகிறித்து பற்றிய குறிப்புகளையும் அது ஒப்பிடுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மூன்றாவது புத்தகம் - In the Country of Gold-digging Ants - அனுகுமார் என்ற வரலாறு படித்த ஆசிரியர் எழுதியது. 11 யாத்ரீகர்களைக் காலவரிசையில் அவர்களைப் பற்றி அனைத்துத் தகவல்களையும் தருகிறது இப்புத்தகம். பிறந்த இடம் - வருடம், எழுதிய குறிப்புகளின் தொகுப்பின் பெயர், பயணத்திற்கான காரணம், நிதியுதவியவர்கள், உடன்வந்தவர்கள், சென்ற இடங்கள், கவனித்த விசயங்கள், இறந்த இடம் - வருடம் எல்லாம்.

வெறும் குறிப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டு மற்றொரு வரலாற்றுப் புத்தகம் என்று ஒதுக்கப்படாமல் இருக்க, தனக்கென்று ஒரு பாணியைக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பின்னட்டையில் 'இந்திய வரலாறு சலிப்புட்டுவதாக நினைக்கிறீர்களா?' என சவால் விடுகிறார். பாடப்புத்தகங்களில் சொல்லித்தர முடியாத யாத்ரீகர்களால் குறிப்பிடப்பட்ட அன்றைய இந்தியாவைப் பற்றி அதிகம் பேசுகிறது புத்தகம். பின்னட்டையில் சில உதாரணங்களும் உண்டு.

இந்தியாவில் மாமிசம் உண்ணும் சில எறும்புகள் தங்கமிருக்கும் இடங்களில் குழிதோண்டுவதாக ஒரு யாத்ரீகர் குறிப்பு. காஷ்மீரத்து மக்கள் மந்திரங்கள் மூலம் காலநிலைகளையும் இரவுபகலையும் மாற்றும் சக்தி படைத்தவர்களாகவும் ஒரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஒரு குறிப்பு - நினைத்தாலே சிரிக்கவைக்கும் குறிப்பது. பீதரின் (Bidar - இன்றைய கர்நாடகாவின் ஒரு வடகிழக்கு மாவட்டம்) அரசன் ஒருவன் 10000 குதிரைப்படை வீரர்களுடன் 50000 காலாட்படை வீரர்களுடன் 200 யானைகளுடன் 300 குதிரைகளுடன் 100 குரங்குகளுடன் 100 அந்தப்புரத்து மகளிருடன் வேட்டைக்குப் போயிருக்கிறான். இன்றும் இதேபோல நடக்கத்தான் செய்கிறது! ஆனால் சிரிக்கத்தான் முடியவில்லை!

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல்கள்தான். மதுரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டதென்கிறார் மெகஸ்தனிஸ். வழக்கம்போல் வரலாற்றாசிரியர்கள் இதை மறுக்கிறார்கள். இன்றைய இந்தியாவில் பாரம்பரியக் கலைப்படைப்புகளாக அடையாளப்படுத்தப்படும் அஜந்தா குகைகளும், காளிதாசனின் சகுந்தலை போன்ற படைப்புகளும் உயர்குடிமக்களின் பெருமைக்காகப் படைக்கப்பட்டவை எனவும் மற்றவர்கள் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் பாஹியான். ஆதாமின் கல்லறை சிலோனில் இருக்கிறதென்கிறார் அதானாசியஸ் நிகிதின். காஷ்மீரத்து மக்கள் எந்த விலங்கினத்தையும் துன்புறுத்துவதில்லை என்றும், இரத்தம் சிந்தாத வாழ்க்கைமுறையை மேற்கண்டார்கள் என்றும் மார்கோ போலோவே சொல்லியிருக்கிறார்!

ஓர் அரசனை எவனோ கொல்ல முயல, இந்தக் காலத்தைப் போலவே அப்போதும், சந்தேகத்தின் பெயரில் 5000 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒற்றைக் கொம்புக் குதிரைகளும், கருப்புநிறச் சிங்கங்களும் இருந்திருக்கின்றன. ஒரு காலத்தில் அந்த இடம் கடலாக இருந்திருக்க வேண்டும். மலரிதழ்கள் 3 -4 -5 -6 -18 என்ற எண்ணிக்கையில் மட்டும்தான் இருக்கின்றன; 7 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இல்லவே இல்லை. இவையெல்லாம் இந்தியாவைப் பற்றித் தாம் கண்ட காட்சிகளாக யாத்ரீகர்கள் குறித்துக் கொண்டவை. இந்தியாவில் போர்முடித்து நாடுதிரும்பிய அலெக்சாண்டரின் படைவீரர்கள், இந்தியர்களின் விந்து கருப்புநிறமானதென்று செய்தி பரப்பியதாக சல்மான் ருஷ்டி தனது Salimar the clown புத்தகத்தில் சொல்கிறார்.

யாத்ரீகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடக்கும்போது விசா மாதிரி அனுமதி வாங்க, மாதக்கணக்கில் காத்திருந்திருக்கிறார்கள். அவர்களும் வழிதவறி பாலைவனங்களிலும் கடல் நடுவிலும் உயிருக்காகப் போராடி இருக்கிறார்கள். நம்மூர் சத்திமுத்திப் புலவர் பாணியில் வாழும் காலம்கூடத் தெரியாமல் புலம்பிய குறிப்புகளும் உண்டு. யாத்ரீகர்கள் சிலரை நாடு திரும்பியவுடன் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். நிலவில் ஓரிடம், பீர், புகைவண்டி என்று அவர்களின் பெயர்சூட்டி கவுரவித்திருக்கிறார்கள். இவர்களின் சில குறிப்புகளைச் சொந்த நாட்டவர்கள் கதைக்கட்டும் பேர்வழி என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். தேங்காய், முதலை போன்ற ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத விசயங்களை இந்தியாவில் பார்த்ததாக மார்கோ போலோ சொன்னபோது, நம்பமுடியாத கதைகட்டிவிடுபவர்களைக் குறிக்கும் 'Its a Marco Polo' என்ற சொல்லாடலையே உருவாக்கிவிட்டார்கள்!

ஒரு யாத்ரீகரின் இந்தியா பற்றிய குறிப்பிது: 'பூமியின் சுற்றளவை 100% துல்லியமாக கணித்த அதே மக்கள்தான், அதே பூமி ஒரு மீனின்மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்'.

கிமு 321 முதல் கிபி 1997 வரை பயணிக்கிறது புத்தகம். இரண்டு பெண் யாத்ரீகர்களும் உண்டு. கால்நடை, கப்பல், புகைவண்டி என்று காலம் மாறமாற பயண முறைகளும் மாறியிருக்கின்றன. நமெக்கெல்லாம் மிகவும் பரிட்சயப்பட்ட வாஸ்கோடா காமா இப்புத்தகத்தில் இல்லை.

30 நாட்களில் மொழி சொல்லித்தரும் புத்தகங்கள், நோய்த்தடுப்பு மருந்துகள், அட்வான்ஸ் புக்கிங், கூகிள் மேப், GPS, திட்டமிட்ட பாதை எதுவும் தெரியாத சிலர் நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்துவிட்டு உலகை எப்படிச் சுருக்கிப்போனார்கள் என்று படித்துப் பாருங்கள். கூச்சப்படாமல் எவருக்கும் பரிசளிக்கத்தகுந்த தரமான புத்தகம்.


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)