Wednesday, January 05, 2011

72. தாமரை பூத்த தடாகம்

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!

-----------------------------------------------------
புத்தகம் : தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர் : சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2008
விலை : ரூ.100

-----------------------------------------------------

'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூலிற்கு அடுத்தபடியாகச் சுற்றுச்சூழல் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம்.



காட்டுயிர்கள், வளர்ப்புப் பிராணிகள், இயற்கையியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுதி. இக்கட்டுரைகள் யாவும் உயிர்மை, இந்தியா டுடே, காலச்சுவடுகளில் 2006 முதல் 2008 வரையில் எழுதப்பட்டவை.

இக்கட்டுரைகளும் இயற்கையியல் சார்ந்த சொல்லாடல்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றன. அவசரகதியில் புதிய சொற்களை உண்டாக்கத் தெரியாமலும், சரியாக மொழிபெயர்க்கத் தெரியாமலும் தகவல் ஊடகங்கள் திணறுவதையும் சுட்டிக்காட்டுகிறார். நமக்கெல்லாம் மிகவும் பரிட்சயமான 'குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்', Depression என்ற நிலைக்குப் பயன்படுத்தப்படுவது ஓர் உதாரணம்.

ஒரு விஷமீன் தாக்கி இறந்ததாக ஸ்டீவ் இர்வின் (Steve Irwin) பற்றித் தமிழ்த் தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி, ம்மீனிற்குத் தமிழ்ப்பெயர் திருக்கைமீன் என்கிறார் (இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ).

ஆசிரியரின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த சில விசயங்கள்:

1) அவர் பயன்படுத்தும் அழகான தமிழ்வார்த்தைகள் - கூழைக்கடா(Pelican), இரலை (Antelope), அரையாப்புக் கட்டி (Plague).

2) நமக்கு நன்கு பரிட்சயப்பட்ட ஒன்றை வெளியுலகம் எப்படிப் புரிந்திருக்கிறது எனச் சொல்வது - கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிதான், கெட்ட வார்த்தை போலிருக்கிறது என்று தேசியப்பறவையாக்கப்படாத The Great Indian Bustard

3) உணர்வுப்பூர்வமான மேற்கோள்கள் - புண்கழுத்து இன்ஸ்பெக்டர், ICUNன் Red Data Book, Kyoto Protocol. இவையெல்லாம் இப்புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள்.

அமைதி, நன்னீர், மாசற்ற காற்று என்றிருக்கும் ஒருபகுதியைச் டூரிசம் என்ற பெயரில் மாசுபடுத்துவதைச் சுட்டிக்காட்டும் சுற்றுலா பற்றியக் கட்டுரைகள் கவனிக்கப்படவேண்டியவை. குட்டி ரயில், கோடை விழா, ஏரிப்படகு இதெல்லாம் தேவைதானா? மரபணுவகை முரண்பாட்டினால் தோன்றிய வெள்ளைப்புலிகளை உயிரியலாளர்கள் தடுத்தும் அரசே இனவிருத்தி செய்யலாமா? யோசிக்க வேண்டிய விசயங்கள்!

வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட ஓர் உயிரினம் உரியவர் இன்றி தன்னிச்சையாக தானே உணவுதேடி வாழ்ந்து மறுபடியும் ஏறக்குறைய காட்டுநிலைக்கே திரும்பும் Feral விலங்குகளைப் பற்றியுள்ள மூன்று கட்டுரைகளும் அருமை. இதிலடங்கும் குதிரை, ஒட்டகம், நாய், கழுதை, மாடு, பன்றி போன்ற விலங்குகளும், அவை மூலம் பரவும் தொற்றுநோய்களும், சாலை விபத்துகளும் என்று இவ்விலங்குகள் பற்றிய முக்கியத்துவத்தைப் பேசுகின்றன அக்கட்டுரைகள்.

ஒத்தகமந்து என்ற தொதுவ இனமக்களின் பாரம்பரிய நகருக்கு உதகமண்டலம் என்ற சம்மந்தமே இல்லாத பெயரைச் சூட்டியபோது எதிர்ப்பு தெரிவித்த இவாம் பில்ஜின் (Evam Pilgin), இயற்கை விவசாயி மசனொபு ஃபுகோக்கா (Masanobu Fukuoka), கிண்டிப் பாம்புப் பண்ணை நிறுவிய ராமுலஸ் விட்டக்கேர் போன்றவர்களின் அறிமுகம் இப்புத்தகம் மூலம்தான் எனக்குக் கிடைத்தது.

சென்ற புத்தகத்தில் அசைவ உணவுக்காரர்களுக்கு வாடகை வீடு தராதவர்களைச் சுட்டிக்காட்டியதைப் போல, இப்புத்தகத்திலும் ஒரே மாதிரி T-சர்ட் போட்டுக்கொண்டு மரத்தைக் காப்பாற்றுகிறேன் - புலியைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும், ஜல்லிக்கட்டு முதல் அசைவ உணவுவரை கலாச்சாரக் காவலர்கள்போல் காட்டிக்கொள்பவர்களையும் சுட்டிக்காட்டுகிறார். எதையுமே வணிக நோக்கத்திலேயே அணுகும் இன்றைய சூழலில், சுற்றுச்சூழலும் விதிவிலக்கில்லாமல் வணிகமயமாக்கபடுவதை எச்சரிக்கிறார்.



The Great Rift Valley என்ற பூகோள அற்புதம் இப்புத்தகம் மூலம்தான் எனக்கு அறிமுகம். 'தாமரை பூத்த தடாகம்' என்று ஆசிரியர் சொல்லும் காட்சி எப்படி இருக்கும் என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். உங்களின் பார்வைக்கும்:



அக்டோபர் 2008ல் உயிர்மை கட்டுரை ஒன்றில், இயற்கை விவசாயத்திற்கு இந்தியாவில் இன்னும் தரநிர்ணயம் செய்யும் முறை உருவாக்கப்படவில்லை என்ற கருத்து இருக்கிறது. ஆனால் 17-05-2007 முதல் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை (Tamil Nadu Organic Certification Department - TNOCD)செயல்பட்டு வருவதாக இணையத்தில் படித்தேன்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் இருக்கும் பொருளடக்கம் பகுதியில், கட்டுரைத் தலைப்புகளும் அதற்கான பக்க எண்களும் முரண்படுகின்றன.

சமீபத்தில் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த மூன்று கல்லறைகள் பார்த்தேன். முதல் கல்லறையில் நான் மறந்துபோன பெயருடைய ஒரு விலங்கின் படமிருந்தது; அதில் அவ்விலங்கு கடைசியாக உயிருடன் காணப்பட்ட ஆண்டு, இறந்த ஆண்டாகக் குறிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் அடுத்த கல்லறையில் டோடோ (Dodo) பறவையின் படம், அதன் இறந்த ஆண்டும் இருந்தது. மூன்றாவது கல்லறையின்
குழி மூடப்படாமல் இருந்தது. அதன் மேல் இந்திய தேசிய விலங்கான வங்காளப் புலியின் படமிருந்தது. அதன் கீழ் "நாளை இது இங்கு வருவதும், வராததும் நம் கையில்" என்று எழுதப்பட்டிருந்தது. கணத்த இதயத்துடன் புரிந்தவர்கள் மயான அமைதியுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

புரியாதவர்கள் வெள்ளைப் புலியைப் பார்க்க விரைந்தார்கள்!

மனிதன் என்ற இனமும் நாளை Feral பட்டியலில் வந்துவிடக் கூடாதெனில், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: