Monday, November 21, 2011

79. INDIGO

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!
---------------------------------------------------------
புத்தகம் : Indigo
வங்காள மூலம் : சத்யசித் ரே (Satyajit Ray)
ஆங்கில மொழியாக்கம்: சத்யசித் ரே, கோபா மஜூம்தர் (Gopa Majumdar)
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு : 2001
விலை : 299 ரூபாய்
பக்கங்கள் : 264 (தோராயமாக 35 வரிகள் / பக்கம்)

---------------------------------------------------------

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் 'ப‌தேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்' புத்தகத்தில் எனது பெயரை வங்காள மொழியில் எழுதித்தந்த நண்பன் சொல்லித்தான் தெரியும், சத்யசித் ரே ஒரு நல்ல‌ எழுத்தாளர் என்று. ஆச்சரியப்பட்ட விசயம் என்னவென்றால், பெரும்பாலான வங்காள மக்களின் மத்தியில் திரைத்துறையைவிட எழுத்துத்துறையில்தான் பிரபலமாக அறியப்படுகிறார். தனது தாய் சத்யசித் ரே கதைகளின் பரம ரசிகை என்றும் தான் ஒருகதை கூட படித்ததில்லை என்றும் தாய் சொல்ல சில கதைகள் கேட்டிருப்பதாகவும் வங்காளத் தோழி ஒருத்தி சொன்னாள். இரு தேசங்களின் நாட்டுப்பண் எழுதப்பட்ட பெருமைக்குரிய தனது தாய்மொழியில் எழுத்தறிவு இல்லாத அத்தோழியைப் பார்த்து வருத்தப்படுவது தவிர வேறென்ன முடியும்?

Feluda, Professor Shonku என்ற புத்தகங்களைச் சிலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். அவையிரண்டும் துப்பறியும் கதைகள் என்பதாலும் அளவில் பெரியவை என்பதாலும், நான் தேர்ந்தெடுத்த புத்தகம் இன்டிகோ (Indigo). வங்காள மொழியில் சத்யசித் ரே எழுதிய கதைகளில் வாசகர்கள் மத்தியில் சிறந்ததாகக் கருதப்படும் 21 கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்திருப்பதே இப்புத்தகம்.



சத்யசித் ரேயின் முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி (Pather Panchali - சாலையின் பாடல்) வெளியான ஆண்டு 1955; கடைசி திரைப்படம் அஹன்டுக் (Agantuk - அந்நியன்) வெளியான ஆண்டு 1991. வறுமையின் பிடி தாங்க முடியாமல் புலம்பெயரும் ஓர் ஏழைக்குடும்பத்தின் கதைதான் முதல் திரைப்படம்; கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத படம். பல வருடங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு ஓடிப்போன மாமா என்று சொல்லிக்கொண்டு வீட்டினுள் நுழையும் ஓர் ஆசாமியை ஒரு நடுத்தரக் குடும்பம் சந்தேகிப்பதுதான் கடைசி திரைப்படம்; தான் பார்த்த வித்தியாசமான பூமியின் அனுபவங்களாக அந்த ஆசாமி பேசிக்கொண்டே இருக்கும் படம். இவ்விரு படங்கள் மட்டும் நான் பார்த்திருக்கிறேன். இன்டிகோ புத்தகம் இரண்டாம் வகை.

21 கதைகளின் களமும் மிகவும் எளிமையானவை. சொற்பக் கதாபத்திரங்கள். வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டே வரும் எளிய நகைச்சுவை. எங்கும் பரவிக்கிடக்கும் புத்திசாலித்தனம். ஆபாசம் என்பதே கிடையாது. பாதிக்கதைகள் காட்டுக்குள்தான் நடக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம், நமக்கெல்லாம் தகவலாகத் தெரிந்த விசயங்களை சில நேரங்களில் கதாப்பாத்திரமாகவே ஆக்கியிருப்பது; நம்ம சுஜாதா சார் மாதிரி.

மாமிசமுண்ணும் தாவரத்தை வீட்டில் வளர்க்கும் ஒருவன், சிரிக்கும் நாய், எல்லோரும் மற‌ந்துபோன ஓர் ஆங்கிலேயனின் நூறாவது நினைவுதினத்தில் அவன் ஆவியைப் பார்க்கும் ஒருவன், காட்டில் கிடைத்த‌ அசைவப் பறவையொன்றின் முட்டையை வீட்டுற்குக் கொண்டுவந்து அடைகாத்து குஞ்சுபொறித்து அதுசெய்யும் ராட்சச தொல்லைகள், பாம்பாகும் மனிதன். இப்படி பல வித்தியாசமான கதைக்களங்கள். முழுக்கற்பனைக் கதைகள், எல்லைதாண்டாமல் இருப்பது அருமை.

மேசை எறும்பு முதல் பறக்கும் தட்டு வரை பெரிய பெரிய விசயங்கள் 20 கதைகளில் பேசும் ஆசிரியர், கடைசி ஒரு கதையில் தன்னை நன்கு வித்தியாசப்படுத்திக் காட்டி ஆச்சரியப்படுத்திவிட்டார். பிக்கோவின் நாட்குறிப்பு (Pikoo's diary) என்ற அச்சிறுகதை ஒரு சிறுகுழந்தையின் நாட்குறிப்புகள் மட்டுமே. 'வெள்ளை மலரைக் கருப்பு மையில் வரையலாமா?' என்று கேட்கும் அப்பாவித்தனமான மழலைநடை. இக்கதையின் சிறப்பு என்னவென்றால் இதை அப்படியே மொழிப்பெயர்க்க முடியாது. மொத்தத் தொகுப்பில் இந்த ஒரு கதைமட்டும்தான் கொஞ்சம் A சர்டிபிகேட் என்று இணையத்தில் படித்தேன். நான் ரசித்த விமர்சனம் என்பதால் சுட்டிக்காட்டுகிறேன். இக்கதை குறும்படமாக எடுக்கப்பட்டு பலத்த வரவேற்பு பெற்றதாம்.

எனக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட ஒரு கதை இப்புத்தகத்தில் உண்டு. 'ரட்டன் பாபுவும் அந்த மனிதனும்' என்ற அக்கதையைப் பின்புலமாக வைத்து நானும் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். தெரிந்திராதவர்களுக்கு இப்பதிவு ஒரு நல்ல கதைசொல்லியை அறிமுகப்படுத்தியிருக்கும் என்ற நம்பிக்கையில்...


- ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

No comments: