Sunday, December 01, 2013

116. THE PREGNANT KING

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம் தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு இங்கு தாய்வேஷம்
-‍ அவ்வை சண்முகி திரைப்படப் பாடல்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: The Pregnant King (புதினம்)
ஆசிரியர்: Devdutt Pattanaik (http://devdutt.com)
வெளியீடு : Penguin Books
முதற்பதிப்பு: 2008
பக்கங்கள் : 349
விலை: ரூபாய் 350 
வாங்கிய இடம் : Landmark
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தீபாவளி அன்று டிவியில் உலவிக்கொண்டு இருந்தபோது விஸ்வரூபம் திரைப்படத்தின் ஒரு காட்சியைச் சற்று நின்று பார்த்தேன். பெண் நளினத்துடன் வலம்வரும் கமலஹாசனை முழங்காலிட வைத்து சித்தரவதை செய்கிறார்கள். ஒருசமயத்தில் தன் ஆண்பலத்துடன் விஸ்வரூபமெடுத்து சண்டையிடுகிறார். காட்சி முடிந்தவுடன் விளம்பர இடைவேளையில் கமலஹாசன் தோன்றினார். இக்காட்சியின் வித்து நமது இதிகாசங்களில் இருந்து தனக்குக் கிடைத்தாகச் சொன்னார். பெண்ணாக வாழ சபிக்கப்பட்ட அர்ச்சுனன், தனது சாபம் முடிந்தவிட்ட காலம் தெரிந்தவுடன், தன்னைத் துரத்துபவர்களைத் தன் ஆண்பலத்துடன் திருப்பி அடித்த கதையைச் சொன்னார். பள்ளியில் படித்த பாஞ்சாலி சபதம், திரைப்படத்தில் பார்த்த கர்ணன், புத்தகங்களில் படித்த அரவான் என்று எனக்கு தெரிந்த இந்துமத இதிகாசக் கதைகள் மிகவும் குறைவுதான். இந்துமதத்தின் இதிகாசங்கள் பழமையானவை; கடினமான ஆழமான பொருளுடையவை. அதில் மகாபாரதம் மட்டும் எடுத்துக் கொள்வோம். அதிலும் பால்மாற்றக் கதைகளைக் கவனிப்போம். கமலஹாசன் சொன்னது போன்ற ஆண்-பெண் பாலின மாற்றங்களைப் பேசும் சில முக்கியமான கதைகளை, என்னைப் போல பரிட்சயமில்லாதவர்களின் புரிதலுக்காக கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

1. சிகண்டி. திரௌபதியின் அக்காள். துரோணரைக் கொல்ல ஓர் மகனையும், குருவம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும் எதிர்பார்த்திருந்த துருபதா மன்னனின் மகள். அவளை மகனாகவே அறிவித்து, பாவித்து, அரியணையில் அமர்த்துகிறார். யுத்தத்தர்மப்படி பெண்கள் போர்க்களம் புகக்கூடாதெனினும், கிருஷ்ணரின் ஆலோசனைப்படி துரோணரைக் கொல்ல மகாபாரதப் போரில் பங்கேற்கும் சிகண்டி, ஆணுடை தரித்த பெண்.

2. அர்ச்சுனன். ஊர்வசியால் சபிக்கப்பட்டு தன் ஆண் அடையாளங்களை இழந்து பெண்ணாக வலம்வருகிறான். விராடனின் மகள்மீது அர்ச்சுனன் காதல்வயப்பட, அர்ச்சுனன்மீது விராடனின் மகன் காதல்வயப்பட, ஒரே நேரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் வலம்வரும் அர்ச்சுனன், அந்நேரத்தில் இரண்டுமே இல்லை. பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து மாறுவேடத்தில் வலம்வந்த அந்தப் பதின்மூன்றாம் வருடத்தில் அர்ச்சுனன், திருநங்கை.
3. கிருஷ்ணர். பாண்டவர்கள் போரில் வெல்ல 36 புனித அம்சங்கள் கொண்ட ஓர் ஆணைக் காளிக்கு உயிர்ப்பலி கொடுக்க வேண்டும். வாழும் காலத்தில் தனக்காக வருத்தப்பட யாருமில்லை; இறந்தபின் தனக்காக அழும் ஓரு மனைவி வேண்டும் என பலியாகத் தயாராகிறான் அரவான்; அர்ச்சுனனின் மகன். எப்பெண்ணும் முன்வராத நிலையில், கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து மனைவியாகிறார். அரவான் பலியானபின், பெருங்குரலெடுத்து அழுகிறாள் மோகினி. அரவான் திரைப்படத்தின் பலிகொடுக்கும் கதைக்கும், அரவானிகள் என்ற பெயருக்கும், கூத்தாண்டவர் கோவிலின் சடங்குகளுக்கும் மூலமான இக்கதையில் கிருஷ்ணர் ஆண்; மோகினி பெண்.
(http://avirandom.files.wordpress.com/ கிருஷ்ணர் சிகண்டி அர்ச்சுனன்)
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று சில புரிதல்களைத் தனித்தனியாகவே இயற்கை வைத்திருக்கிறது. பிரசவவலியை ஓர் ஆணால் உணர முடியாது போல. பெண்ணாக இருந்து கொண்டு ஆணாக வலம் வருவதின் துயரம் கிகண்டிக்குத் தெரியும். பெண் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அர்ச்சுனன் என்ற ஆணுக்குத் தெரியும். மனைவி உணர்வுகள் எப்படி இருக்கும் என்று கிருஷ்ணர் என்ற ஆணுக்குத் தெரியும். தாயாக உணர்வுகள் எப்படி இருக்கும் என்று அறிந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் தாயாகவும் தந்தையாகவும் உணர்ந்த ஆண் யாரையாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? புத்தகத்திற்குள் போகலாம்.

The Pregnant King. கருவுற்ற அரசன். தனது மனைவிகள் கர்ப்பமடைய யாகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பானத்தைத் தவறுதலாகப் பருகி, ஓர் ஆண் மகவைப் பிரசவிக்கும் ஓர் அரசனின் கதை என்கிறது புத்தகத்தின் பின்னட்டை. 'நான் ஓர் ஆணா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆண்களைப் போல எனது உடலுக்கு வெளியே ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். ஆனால் பெண்களைப் போல எனது உடலுக்கு உள்ளேயும் ஓர் உயிரை உண்டாக்கி இருக்கிறேன். இதனால் எனக்கு ஆவதென்ன?' என்ற வரிகளுடன், கருவுற்ற வயிற்றுடனும் மீசையுடனும் அமர்ந்திருக்கும் ஓர் அரசனின் படமும் பின்னட்டையில் இருக்கிறது. மகாபாரதக் கதைகளையும், குஜராத் மற்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கில் இருக்கும் சில நாட்டுப்புறக் கதைகளையும் களமாகக் கொண்டு ஆசிரியர் செய்திருக்கும் புனைவுதான் இப்புதினம். உயிர்க்கருவைச் சுமக்கும் ஓர் அரசன் சுமக்கும் கதைதான் இப்புதினத்தின் கரு என்றாலும், இக்கருவை உண்டாக்கிய ஆசிரியரைப் பற்றி முதலில் கருத்து சொல்லிவிட்டு, இப்புதினத்தின் கருக்கலைப்பு இல்லாத எனது கருத்தைப் பிறகு பேசலாம்.


Dr. Devdutt Pattanaik. தேவ்தத் பட்டநாயக். மருத்துவம் படித்தவர். இந்துமதப் புராணங்களை ஆய்வு செய்வதில் ஆர்வமுடையவர். இந்துமதப் புராணங்களின் கதைகளையும், அவற்றில் சொல்லப்படும் சடங்குகளையும், அடையாளச் சின்னங்களையும் இன்றைய நவீன வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தும் நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இன்னும் அதிகம் அறிய, அவர் எழுதியிருக்கும் புத்தகங்களின் பட்டியலைப் பாருங்கள். தமிழில் விகடன் பிரசுரம் வெளியிட்ட எளியவடிவ‌ மகாபாரதப் புத்தகம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் படங்களும் இவர் வரைந்தவையே. அது சரி, கடவுளுக்குச் சம்மந்தமே இல்லாத நான் ஏன் இப்புத்தகத்தைப் பற்றி எழு
துகிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்புதினத்திற்கு வெளியே எதையும் படித்து அதிக தகவல்கள் சேகரிக்கவில்லை; உண்மையும் புனைவும் பிரித்தறிய முயலவில்லை. எனக்கு இதுவும் இன்னொரு புதினம்; மாய எதார்த்தம். ஆற்றுப்படை எனது பணி.

அவிழ்த்துவிட்ட கேசம், சிவப்பு சேலை, வளையல், மூக்குத்தி, சிறுபானை, கிளி, கரும்புத்தோகை, மஞ்சள் என்று பெண்ணுக்கான 14 அடையாளச் சின்னங்களுடன் அமாவாசையில் கோவிலுக்குள் வீற்றிருக்கிறாள் இளேஸ்வரி. அதன்பிறகு ஒவ்வொரு நாளாக, நிலவின் பிறை வளர வளர, பெண்ணுக்கான அடையாளச் சின்னங்க‌ள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு, ஆணுக்கான 14 அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்படுகின்றன. முதல்நாளில், அவிழ்த்துவிடப்பட்ட கேசத்திற்குப் பதில் மீசை. மறுநாள் சிவப்பு சேலைக்குப் பதில் வெள்ளை வேட்டி. மறுநாள் பானைக்குப் பதில் வில். மறுநாள் கிளிக்குப் பதில் மயில். மறுநாள் கரும்புத் தோகைக்குப் பதில் ஈட்டி. மறுநாள் மஞ்சளுக்குப் பதில் சாம்பல். இப்படியாக 14 நாட்கள் கழித்து பௌர்ணமியில் இளேஸ்வரன் ஆகிறாள் இளேஸ்வரி. அடுத்த 14 நாட்களில் படிப்படியாக இளேஸ்வரி ஆகிறார் இளேஸ்வரன். இளேஸ்வரியாக இருக்கும் போது ஆண்களும், இளேஸ்வரனாக இருக்கும் போது பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களைத் தந்தையாக்குபவர் இளேஸ்வரன். பெண்களைத் தாயாக்குபவள் இளேஸ்வரி.


அஸ்தினாபுரியைக் குரு வம்சமும், யாக்னசேனர்கள் பாஞ்சாலத்தையும், யாதவர்கள் மதுராவையும் ஆண்டுவந்த‌ மகாபாரதக் காலத்தில் வல்லபியைத் துருவாச வம்சம் ஆண்டுவந்தது. தனது தேசத்தின் பாதியைக் குரு வம்சம் அபகரித்துப் போனபின், ஆறு மகன்களையும் கொன்றுவிட்டு, எல்லா மனைவிகளையும் விரட்டிவிட்டு, குரு வம்சத்தைப் பிரிக்க ஓர் மகளையும், துரோணரைக் கொல்ல ஓர் மகனையும் வேண்டி, கன்னிகழியாத புது மனைவியுடன் இளேஸ்வரி+ரனைத் வேண்ட‌, குருசேத்திரப் போருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் வல்லபிக்கு வரும் பாஞ்சால மன்னன் துருபதாவுடன் ஆரம்பிக்கிறது புதினம். மனுதர்மத்திற்கு எதிராக ஒரு பிராமணனைக் கொல்ல வரம் கேட்கும் துருபதாவிற்கு, வார்த்தைகளில் விளையாடி வரமளிக்கிறார் சிவனின் சாந்தரூபமான‌ சங்கரனார். அன்றிரவே சூல் கொண்ட புது மனைவியின் குழந்தைதான் சிகண்டி (=ஆண்மயில்). இஃதில்லை யான் கேட்டதென்று, பிறகு சித்தர்கள் இருவரை வைத்து துருபதா யாகம் நடத்தி, அக்கினியில் இருந்து பிறக்கும் ஆண் பெண் இரட்டையர்களில் ஒருத்திதான் திரௌபதி. புதினத்தை ஆரம்பித்து வைக்கும் இக்கிளைக் கதையிலேயே மிரண்டு போனேன். 

(http://devdutt.com)
வல்லபியின் மன்னனுக்கு ஆட்சியைத் துறந்துவிட்டு, சன்னியாசம் போக விருப்பம். வாரிசான மகனுக்கோ வேட்டையில் விருப்பம். அவனோ பதினெட்டாம் வயதில், கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களுக்குப் பின், தந்தையாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் மடிந்து போவான் என்று காலம் கணிப்பவர்கள் எச்சரிக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும் ஒருத்தி மணக்கிறாள். அவன் இறந்தபின், ஒரு பெண் ரிஷியாவதையும் அரசாள்வதையும் தர்மசாத்திரம் தடுக்கும் மரபுகளை மீறி, ஆணுக்கான அரசச் சிம்மாசனத்தில் அமர்கிறாள். மகுடம் சூட்டும் விழாவில், நெற்றித் திலகத்தை அவள் தொப்புளுக்கு நேர் மேலே இடும்போது, கருவாக அறிமுகமாகிறார் இப்புதினத்தின் கரு. கருவிலிருக்கும் அந்த ஆண்மகவுதான் யுவனாஷ்வா. மொத்தம் 8 அத்தியாயங்களில் சிறு சிறு கதைகளாக அமையும் இப்புதினத்தில், முதல் 37 பக்கக் கதைச் சுருக்கம்தான் இதுவரை சொன்னேன். இதற்கு மேல் கதை சொன்னால் கரு கலைந்துவிடும்.

தகுதியான ஆண் வாரிசு இல்லாமல், தகுதி இருந்தும் பதவி துறந்து சன்னியாசம் போகும் தாத்தா. மரபுப்படி தகுதியற்று ஆட்சியில் இருக்கும் அம்மா. யுவனாஷ்வா அடுத்து ஆட்சியில் அமரவும், போர்க்களம் புகவும் அவனிடம் வல்லபி என்ன எதிர்பார்க்கும் என நீங்களே யூகித்து இருப்பீர்கள். ஆம், ஓர் ஆண்மகவிற்குத் தகப்பனாக வேண்டும். இந்த யுவனாஷ்வாதான் அத்தகுதி பெற அடுத்தடுத்து பல மனைவிகள் மணக்கப் போகிறார். தனது மனைவிகள் கர்ப்பம் தரிக்க, சோசியமும் மருத்துவமும் பலனளிக்காமல் போக‌, திரௌபதி பிறக்க உதவிய அதே இரண்டு சித்தர்களை வைத்து யாகம் நடத்தப் போகிறார். கல்லையும் கர்ப்பமாக்கும் அந்த யாகத்தின் பானத்தைத் தவறுதலாகக் குடிக்கப் போகிறார். புதினத்தின் பக்கங்களை இரண்டாகப் பிரித்தால், பானத்தைக் குடிப்பதுவரை முதல் பாதி. மசக்கை பிரசவம் வளர்ப்பு வாரிசுரிமை என இரண்டாம் பாகம்.


இப்புதினத்தின் காலத்தைச் சொல்லவும், சில சம்பவங்களுக்குச் சாட்சியாகவும் மகாபாரத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். பெண்ணாளும் வல்லபியைத் தர்மனின் பட்டாபிஷேகத்திற்கு அழைக்க மறுக்கிறார்கள். பீஷ்மரைப் போ
 பெண்களைக் கடத்தி வந்து மணமுடிக்கக் கூடாதென தாயிடம் அறிவுரை பெறுகிறார் யுவனாஷ்வா. வனவாசம் போன பாண்டவர்கள், அம்மைத்துனர்களைத் தேடிப் போன பாஞ்சாலர்கள், துவாரகாவில் துறைமுகத்தைப் பாதுகாக்கப் போன கிருஷ்ணர் என சுயம்வரத்திற்கு எல்லோரும் வராமல் போக, மிக எளிதாக முதல் மனைவியை அடைகிறார் யுவனாஷ்வா. வாரிசு இல்லாததால் குருசேத்திரப் போரைப் புறக்கணிக்கிறார் யுவனாஷ்வா. தர்மனைக் கொல்ல துரியோதனனும், பீமனைக் கொல்ல பீஷ்மரும், துரோணரைக் கொல்ல துருபதாவும், கர்ணனைக் கொல்ல அர்ச்சுனனும் படைகளுடன் நெடுஞ்சாலையை ஆக்கிரமிக்கும் முன், வல்லபியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக‌ குழந்தை இல்லாத ஏழைப் பிராமணத் தம்பதிகள் படையெடுக்கிறார்கள்.

யுவனாஷ்வாவின் மன‌நிலையுடன் வாசகனைக் கட்டிப் போடும் அளவிற்கு அற்புதமான எளியநடையில் கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். எந்தவொரு இடத்திலும் மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கவில்லை; புண்படுத்தவில்லை. நடந்த நிகழ்ச்சிகளைத் தனது கருவிற்கு உடலாக்கி இருக்கிறார். காம சாத்திர அறிவுரைப்படி அருந்ததி பார்த்தபடி நடக்கும் முதல் முதலிரவு சம்பவத்தில் விரசமும் இல்லை; கடைசியாக இயற்கைக்கு மாறாகப் புணருவதில் அருவருப்பும் இல்லை. யுவனாஷ்வாவை மட்டுமே வாசகனைத் தொடர வைத்திருப்பதில் ஆசிரியர் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கிறார்.


இப்புதினம் இக்கதை மூலம் என்ன சொல்ல வருகிறது? சிவனுக்கும் சக்திக்கும் பணிப்பெண்கள் 64 பேர். 
வ்வொருவரிடம் ஒரு புதிர் இருக்கும். பெரும்பாலான புதிர்களை விடுவிப்பவர்கள் அரசர் ஆகிறார்கள். எல்லாவற்றிற்கும் விடை தெரிந்தவர்கள் சக்கரவர்த்தி ஆகிறார்கள். மகாபாரதக் காலம் வரை, பரதன் மட்டும் தான் ஒரேயொரு சக்கரவர்த்தி. யுவனாஷ்வா தகப்பனா, தாயா என்பதுதான் 65வது புதிர். எமனின் வரவு செலவுக் கணக்கில் குளறுபடிகள் தவிர்க்க, பூமியில் ஒரு பாலில் பிறந்தவர்கள் அதே பாலில் மட்டுமே இறந்தபின் அனுமதிக்கப்படுவார்கள்; பாகுகாமி கோவில் பூசாரிகள் மட்டும் அதற்கு விலக்கு. ஆண் பெண் என்பது வெறும் அடையாளச் சின்னமா? வெறும் சதைப்பிண்டமா? மனித குலத்தில் ஆணின் விதி அவனது வம்சாவழியில்; பெண்ணின் விதி அவள் உடலில். ஆண்-பெண் கணவன்-மனைவி மகன்-மகள் தந்தை-தாய். எந்தப் பாத்திரத்தில் மனித இனம் அதிக மகிழ்ச்சி காண்கிறது என்பதைத் தனது கதைமாந்தர்கள் மூலம் பல பரிமாணங்களில் உணர்த்துகிறார் ஆசிரியர். மாதவிலக்கு நின்று வெகுநாள் ஆனபின்னும் கருவுறும் ஒரு பெண். பாலுறுப்புகள் வளரும் முன் பிறந்து, ஆணா பெண்ணா என்று தாய்க்கே தெரியாத ஒரு குழந்தை. ஆணுடம்பில் பெண்ணாக உணரும் திருநங்கை.  தன் ஆண்தன்மையை ஒரு பெண்ணுக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு, கடனைத் திரும்பிப் பெற முடியாமல் 30 வருடங்களாகப் பெண்ணாகத் தவிக்கும் ஓர் ஆண். இன்னொரு ஆண் மூலம் குழந்தை பெறும் ஓர் ஆண். தன் பிள்ளை தன்னை அம்மா என்றழைக்க ஏங்கும் ஓர் ஆண். ஓர் ஆணைத் தாயாகக் கொண்ட ஓர் ஆண். ஒரு பெண்ணைத் தந்தையாகக் கொண்ட ஒரு பெண். ஆண் பெண் என்ற இருநிலைகளைத் தவிர, இடைப்பட்ட நிலைகளை அங்கீகரிக்கும் விழிப்புணர்வு இக்காலத்தில் அதிகரித்து வரும் நற்சூழல் நிலவுகிறது. இப்புதினத்தின் முடிவும் அதுவே!

சில நேரங்களில் வார்த்தைகள் உதவுவதில்லை. இலக்கணப்படுத்தி வாக்கியங்கள் ஆக்குகிறோம். சில நேரங்களில் உரைநடை வாக்கியங்களும் உதவுவதில்லை. கவிதைப் பாடல்கள் ஆக்குகிறோம். எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடங்காத உணர்வுகளை என்ன செய்வது? தலைமுறைகளின் அறிவைப் பாடல்கள் மூலம் பாதுகாக்கும் பாணர்கள், புதினத்தின் சில மர்மங்களை யுவனாஷ்வாவிற்குப் புதினத்தின் கடைசியில் விளக்கும் போது, யுவனாஷ்வா கேட்கிறார்: 'இ
தை ஏன் எனக்கு முன்னரே சொல்லவில்லை'. பாணர்கள் சொல்கிறார்கள்: 'நாங்கள் சொல்வதைக் கேட்டு சிரிக்காத ஒரு மனிதன் இப்போதுதான் கிடைத்ததால்'. 

Culture cannot twist the truth of nature. Every civilization needs its delusion. நீண்ட நாட்களுக்குப் பின் என்னை ஆச்சரியப்படுத்திய இந்த ஆங்கிலப் புதினத்திற்கு, எனது விருப்பப் பட்டியலில் நான்காவது இடம் தந்திருக்கிறேன்.

நான் ரசித்த கதாபாத்திரங்கள்:

1. யுவனாஷ்வா
2. பாகுகாமி 
3. சோமவதி
4. ஷீலாவதி
5. சிமாந்தினி
6. அரவான் (Iravan)
7. நீலகண்ட பைரவி

நான் ரசித்த உரையாடல்கள்:

1. பெண்ணாக இருப்பது பற்றி விவாதிக்கும் யுவனாஷ்வா, அர்ச்சுனன்
2. பால் மாற்றம் செய்து கொள்ள, பெண்ணுடம்பின் நன்மைகளையும் தீமைகளையும் மாறி மாறி விவாதிக்கும் ஸ்துனகர்ணன், சோமவத்.

பால் பிறழ்வுகளில் இப்புதினம் திருநங்கைகள் பற்றியும் பேசுவதால், அவர்களோடு தொடர்புடைய எனது பிற பதிவுகள்:

1. திருநங்கைகள் உலகம் 
2. வாடாம‌ல்லி 
3. அக்காவின் அண்ணன் 

அனுபந்தம்:

‍‍‍----------------
1. இளேஸ்வரி/ரன் கதையில் ஒவ்வொரு சுழற்சியும் நிலவின் சுழற்சிக்கு ஆகும் 28 நாட்களுடன் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? நிலவின் சுழற்சியும் பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் ஒத்துப் போவதைக் கவனித்தீர்களா? இதையெல்லாம் ஏற்கனவே ஒரு புத்தகத்தில் சொன்னேனே, அதையாவது கவனித்தீர்களா?

- ஞானசேகர்

(http://jssekar.blogspot.in/)

Tuesday, November 26, 2013

115. THE DIARY OF A YOUNG GIRL

What an earth do I have to wear?
I've got no more knickers, my clothes are too tight,
My vest is a loincloth, I'm really a sight!
To put on my shoes I must cut off my toes,
Oh dear, I'm plagued with so many woes!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்  The Diary Of a Young Girl
டைரி எழுதியவர்: Anne Frank (http://www.annefrank.org/)
புத்தகமாக்கியவர்: Otto H.Frank and Mirjam Pressler
ஆங்கிலப்படுத்தியவர்: Susan Massotty
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 336
வாங்கிய இடம் : பரிசாகக் கிடைத்தது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர் சுத்தமான‌ சைவ உணவுப்பிரியர். மிருகவதை எதிர்ப்பாளர். மதுவைத் தொடாதவர். புகைக்க மாட்டார். தனக்கென ஒரு குடும்பம் இல்லாமல் பிரம்மச்சாரியாகவே தன்னைத் தன்னாட்டுக்கு அர்ப்பணிக்கும் தேசப்பக்தர். இப்படிப்பட்ட அடையாளங்களுடன் தான் அவர் ஆட்சிக்கு வந்தார். பாதாளத்தில் துவண்டு கிடந்த தனது தேசத்தைச் சில்லாண்டுகளில் அசுர வேகத்தில் வளர வைத்துக் காட்டினார். நவீன தொழில்நுட்பங்களை எல்லாத் துறைகளிலும் புகுத்தினார். எங்கு காணிணும் Development. வரலாறு காணாத வளர்ச்சி. அவரின் ஆட்சித் திறமையை உலகமே மெச்சியது. அவர் திக்கிப் பேசுவதுகூட செய்தியானது. அவர் நடை உடை சிகை ஒப்பனை பாவனைகள் அன்றாட விவாதப் பொருள்களாய் இருந்தன. காலப்போக்கில் நாடு என்ற பொதுச் சொத்தை இனம் என்ற தனிச் சொத்தாக ஆக்கினார். குடிமக்களில் ஒரு சாரார் அமிர்தம் அருந்த, மறு சாராருக்கு ஆலகாலம் கொடுத்தார். ஒரு சாரார் இரட்சகராகப் பார்த்தார்களோ இல்லையோ, மறு சாராருக்குச் சாத்தானாகிப் போனார். வழக்கம் போல் நீங்கள் தவறாக யூகிக்கிறீர்கள். நான் சொல்லும் அவர், அடால்ப் ஹிட்லர்.

இனப் படுகொலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. கொன்று செய்யலாம். நம்மூரில் நடப்பது போல், மறைத்து மறந்து செய்யலாம். அரவான் திரைப்படத்தில் வருவது போல, படுத்துச் செய்யலாம். வியட்நாம் போல, விதைத்துச் செய்யலாம். வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து 90 நாட்களில் தமிழ் பேசும்போது, நாம் இங்கிருந்து கொண்டே ஹிந்தி படிப்பது போல, கற்று செய்யலாம். Structural genocide செய்யலாம். மனிதகுல வரலாற்றின் கொடூர இனப் படுகொலைகளைத் தனது 'நிலமெல்லாம் ரத்தம்' புத்தகத்தில் பட்டியலிடும் பா.ராகவன் அவர்கள், இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை மூன்றாம் இடத்திலும், கருப்பினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை இரண்டாம் இடத்திலும், யூத இனத்திற்கு எதிரான ஹிட்லரின் கொடுமைகளை முதல் இடத்திலும் வைக்கிறார். அவரால் கொல்லப்பட்ட யூதர்கள் 55 இலட்சம் என்கிறது இணையம். எந்த வல்லரசு அதிபரும் நெருங்க முடியாத எண்ணிக்கை! அவரால் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, கண்டிப்பாக இந்தியப் பிரிவினைக்கு அடுத்த இடத்தில் இருக்கும்.

இரஷ்ய மன்னர்கள் தங்கள் யூதக் குடிமக்களை ஒட்டுண்ணிகள் என்றார்கள்; கொல்லக் கொல்ல இருக்கும் அவர்களைப் புற்றீசல் என்றார் ஹிட்லர். யூதர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை பெற வேண்டும். தனித்து வாழ வேண்டும். மதப் பள்ளிகள் கூடாது. வரி அதிகம். பட்டப்படிப்பு படிக்க உரிமையில்லை. அரசு வேலை இல்லை. தனித்து அடையாளம் காட்ட மஞ்சள் நிற இடைவார் அணிய வேண்டும். அரசுப் போக்குவர‌த்து வாகனங்கள் அவர்களுக்கானது அல்ல. புதைக்காமல் பிணங்கள் எரிக்கப்பட வேண்டும். இப்படி அரசு சட்டங்கள் மூலம் வெளிப்படையாகவே யூத இனவெறுப்பைக் காட்டியவர் ஹிட்லர். பத்து காசு ஊதிய உயர்வு பெறுவதற்காக பத்து யூதர்களைக் கொன்று கணக்கு காட்டிய அரசாங்க அதிகாரிகள் இருந்ததாக பா.ராகவன் சொல்கிறார். சட்டமாக இல்லாமல் இதுபோன்ற கொடுமைகள் நம்மூரிலும் உண்டென்றாலும், ஹிட்லர் என்ற தனிமனிதனுக்கு மொத்த யூதர்களின் மீதும் ஏன் இப்படி வெறுப்பு? ஒரு தனிப்பட்ட மூளையா இவ்வளவும் செய்தது? ஏன் யூதர்களுக்கு இப்படி ஒரு கொடூர வரலாறு? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், தற்போது இப்புத்தகத்தைக் கடந்திருக்கிறேன்.
(http://imshopping.rediff.com)
Anne Frank. ஆன்னி ஃப்ராங்க். 16 வயதைக் கூட தொடாத இச்சிறுமியைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் அல்லது திரைப்பட நட்சத்திரங்களின் நேற்று பிறந்த பிள்ளைகளைப் போல ஊடகங்கள் அடிக்கடி படமெடுத்து நினைவுபடுத்த, இவள் ஏதோ பிரபலத்தின் பிள்ளையும் இல்லை. சென்ற நூற்றாண்டின் கொடூர பக்கங்களை நினைவுபடுத்தும் இரண்டு சிறுமிகளில் ஒருத்தியாக இன்னும் இருக்கிறாள். (இன்னொருத்தி வியட்நாம் நாடு) ஆன்னியின் யூதக் குடும்பம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்து வந்தது. 12 ஜீன் 1942 வெள்ளி அன்று அவளுக்கு 13ம் பிறந்தநாள். அவளுக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களில் ஒன்றான டைரிக்கு கிட்டி (Kitty) என்று பெயரிட்டு, தினமும் கிட்டியுடன் பேசுவது போல் எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்கிறாள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி ஆக்கிரமிக்கும் நாடுகளில் இருந்த யூதர்கள் புலம் பெயர்கின்றனர். ஆன்னியின் தந்தை வேலை செய்துவந்த அலுவலகத்தின் இரகசிய அறை ஒன்றில், ஆன்னியின் குடும்பத்தின் நான்கு பேரும், இன்னொரு குடும்பமும் என மொத்தம் எட்டு பேர் பதுங்குகிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, ஜெர்மனியின் பிடியில் நெதர்லாந்து இருக்கும்வரை, வெளியே வரமுடியாத நிலை. 1 ஆகஸ்டு 1944 செவ்வாய் வரை, இந்த எட்டு பேரும் அந்த இரகசிய அறையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும், போர் நிலவரச் செய்திகளையும் கொடுத்து வெளியாட்கள் இருவர் உதவுகின்றனர். இக்காலத்தில் கிட்டிக்கு எழுதிய ஆன்னியின் டைரிக் குறிப்புகளே இப்புத்தகம். 'அன்புள்ள டைரிக்கு' என்று ஆளவந்தான் நந்து எழுதுவது போல், 'Dearest Kitty' என்று ஒவ்வொரு முறையும் எழுதுகிறாள் ஆன்னி. 5 admirers on every street corner, 20 or so friends, the favourite of most of the teachers, bags full of sweets and load of pocket money என்று சுற்றித் திரிந்த ஆன்னியின், முதல் டைரிக் குறிப்பு இது: 12 ஜீன் 1942 - I hope I will be able to confide everything to you, as I have never been able to confide in anyone, and I hope you will be a great source of comfort and support. தனது உணர்வுகளைப் பதிவு செய்யவும், இரகசியங்களைப் பகிரவும் ஒரு டைரியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக இப்படி சொல்கிறாள்: Paper is more patient than people. வெளியில் இருக்கும் யூதக் குழந்தைகளை விட பாதுகாப்பாகவும், அவர்களை விட பெருந்துயரத்திலும் இருப்பதை on the top of the world and in the depth of despair என்கிறாள். திருடர்களால் அல்லது நாசிகளால் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், எந்தெந்தப் பொருட்களை என்னவெல்லாம் செய்வார்கள் என மூத்தவர்கள் பேசிக் கொள்ளும் போது, Oh, not my diary; if my diary goes; I go too! என்று பதறுகிறாள். புதன் 5 ஏப்ரல் 1944 அன்று சொல்கிறாள்: if I don't have the talent to write books or newspaper articles, I can always write for myself. But I want to achieve more than that. I can't imagine living like Mother, .... and all the women who go about their work and are then forgotten. I need to have something besides a husband and children to devote myself to! I don't want to have lived in vain like most people, even those I've never met. I want to be useful or bring enjoyment to all people, even those I've never met. I want to go on living even after my death! And that's why I'm so grateful to God for having given me this gift, which I can use to develop myself and to express all that's inside me! இப்படியாக‌ ஆன்னி என்ற அந்தச் சிறுமிக்குக் கிட்டிதான் எல்லாமுமாக இருந்திருக்கிறது என்பதைப் புத்தகம் முழுவதும் உணர முடியும் என்றாலும், அவளுக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையையும், அவளின் மழலையையும் ஒருசேர உணர்த்தும் இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்தன‌: புதன் 3 மே 1944 - I hadn't had my period for more than two months, but it finally started last Sunday. Despite the mess and bother, I'm glad it hasn't deserted me.
(http://www.annefrank.org/ மேல் இரண்டு தளங்களும் உப்பரிகையும் தான் அந்த எட்டு பேர் பதுங்கியிருந்த இடங்கள். பின்புறத் தோற்றமிது)
விடுபட்டுப் போன பள்ளிப்படிப்பைப் பற்றி எழுதுகிறாள். பொழுதுபோக்குகள் சொல்கிறாள். அந்த மறைவிடத்திலும் தனது படிப்பையும் பொழுதுபோக்குகளையும் தொடர்கிறாள். இரகசிய அறையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியும் சொல்கிறாள். தனது பெற்றோருடன் இருக்கும் மனவருத்தங்களை எழுதுகிறாள். ஒரு A ஜோக் கூட சொல்கிறாள். இரண்டு வருடத்திற்குள் போர் முடிந்து மீண்டும் பள்ளியில் சேராவிடில், அதன்பிறகு பள்ளிக்குச் செல்வது வீண் என வருந்துகிறாள். உடன் இருக்கும் இன்னொரு குடும்பத்தின் பீட்டர் உடனான காதல் போன்ற ஒரு மயக்கத்தையும் சொல்கிறாள். நூலகத்தில் இருந்து கிடைக்கும் புத்தகங்கள் பற்றி எழுதுகிறாள். செத்தாலும் கெடுக்கக் கூடாதென, தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வெளியாட்கள் இருவரின் பெயர்களைத் தவிர எல்லாவற்றையும் எழுதுகிறாள். தலை சீவும் சீப்பின் பற்கள் 10 தான் மிஞ்சுகின்றன. போர் முடியவில்லை. Nothing worse than being caught என்று மறைந்தே வாழ்கிறார்கள். செவ்வாய் 1 ஆகஸ்டு 1944 அன்று டைரி முடிகிறது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இரகசிய அறையில் இருந்து அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பிறகு ஆன்னி என்னவானாள்? விக்கிபீடியா சொல்கிறது: With the other females not selected for immediate death, Frank was forced to strip naked to be disinfected, had her head shaved and was tattooed with an identifying number on her arm. அதன் பிறகு, 1945ம் வருட ஆரம்பத்தில் நாசிகளின் முகாமில் (concentration camp) கொள்ளை நோயில் தனது அக்காளுடன் ஆன்னி இறந்து போனாள். அந்த எட்டு பேரில், ஆன்னியின் தந்தை (
Otto H.Frank) மட்டுமே தப்பித்து பிழைக்கிறார். பிற்காலத்தில் தனது மகள் டச்சு மொழியில் எழுதிய டைரியைப் புத்தகமாக தொகுக்கிறார். பல பதிப்பகங்கள் நிராகரிக்கின்றன. போர்க் காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் புத்தகங்கள் டைரிகள் என எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் ஒரு சிறுமியால் சொல்லப்பட்டதால், 70 வருடங்களுக்கு மேலாகத் தனித்துத் தெரிகிறது இப்புத்தகம். அவள் நாசிகளின் யூதப் படுகொலைகளின் நினைவுச் சின்னமாக இன்றும் நினைவில் வைக்கப்படுகிறாள். சில தலைப்புகளில் சிறந்த 100 பேரின் பெயரை வெளியிடும் டைம் இதழ், சென்ற நூற்றாண்டு முழுவதற்குமான‌ பட்டியல் ஒன்றில் இவள் பெயரையும் எழுதியது. இன்னொரு பட்டியலில் ஹிட்லர்!
ஹிட்லரின் தனிப்பட்ட மூளையா இப்படி செய்தது என்ற எனது கேள்விக்கு, என்னைப் போலவே ஆன்னியிடம் ஒரு பதில் இருக்கிறது: I don't believe the war is simply the work of politicians and capitalists. Oh no, the common man is very bit as guilty; otherwise, people and nations would have rebelled long ago! There's a destructive urge in people, the urge to rage, murder and kill. And until all of humanity, without exception, undergoes a metamorphosis, wars will continue to be waged, and everything that has been carefully built up, cultivated and grown will be cut down and destroyed, only to start all over again!

திங்கள் 22 மே 1944 - What one Christian does is his own responsibility, what one Jew does reflects on all Jews என்றும், oppressed unfortunate pitiful என்றும் யூதர்களின் நிலையைச் சொல்கிறாள். மூன்று நாட்கள் கழித்து The most decent people are being sent to concentration camps, prisons and lonely cells, while the lowest of the low rule over young and old, rich and poor என எழுதுகிறாள். இது போன்ற சில கருத்துகள், உண்மையிலேயே இந்த டைரிக் குறிப்புகள் ஒரு சிறுமியால் எழுதப்பட்டவையா என்ற சந்தேகத்தை உண்டாக்கின. இதுபோல ஏராளமான உதாரணங்கள் உண்டு. தவிர தாயுடன் சரியான இணக்கம் இல்லாததால், தனது உடல் மாற்றங்களையும், இன்னொரு பெண் மற்றும் ஆண் உடல் மேல் ஏற்படும் ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் ஆன்னி அப்படியே எழுதிய சில குறிப்புகள் உள்ளன. இதுபோன்ற சில காரணங்களுக்காக பல காலக்கட்டங்க‌ளில் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்திருக்கிறது இப்புத்தகம். பெண்ணுறுப்பு பற்றி விவரணைகளையும், ஒருபால் கவர்ச்சி பற்றிய கருத்துகளையும் பாடப் புத்தகங்களில் இருந்து ஜெர்மன் அரசு நீக்கியதாகவும் படித்தேன். 

ஒரு வீட்டிற்குள் நடக்கும் டைரிக் குறிப்புகள் என்பதால் பரபரப்பு திருப்பங்கள், அப்போதைய அரசியல் மற்றும் போர் தகவல்களை எதிர்பார்க்க முடியாது எனினும், இனவெறுப்பின் சாட்சியமாய் இருக்கும் இப்புத்தகம் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டும்.

அனுபந்தம்:
-------------------
1. எனக்கென்று ஒரேயொரு உயிர்நண்பன் இருந்தான், இருக்கிறான். அவனைப் பிரிந்த ஒரு தருணத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் இப்புத்தகத்தை அவனுக்குப் பரிசளித்தேன். அப்போது நான் படித்திருக்கவில்லை. இப்போது அவன் படித்திருப்பானா என்றும் தெரியவில்லை. இன்னொரு நண்பன் பரிசளித்து நான் படிக்க வேண்டும் என இருந்திருக்கிறது. பாரீஸ் நகர‌ நவநாகரீக சாதனங்கள், வாசனை திரவியங்கள், கடிகாரங்கள், தைக்கப்பட்ட ஆடைகள் என ஏதோ ஒன்றைப் பரிசளித்து என்னைச் சங்கடப்படுத்தாமல், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து இதனை என்கண் விட்ட என் நண்பன் சதீஷ் குமாருக்கு நன்றிகள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Tuesday, October 22, 2013

114. மழைப் பேச்சு

ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது.
- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மழைப் பேச்சு
ஆசிரிய‌ர் : அறிவுமதி
வெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : ஞாபகமில்லை
------------------------------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் எனது 75வது பதிவு இது. பல கவிதைகள் படித்திருந்தாலும் இதுவரை இத்தளத்தில் எந்தவொரு நேரடித் தமிழ்க் கவிதைப் புத்தகம் பற்றியும் நான் எழுதியதில்லை என்பதைச் சமீபத்தில் தான் உணர்ந்தேன். இந்த வாரம் வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது புத்தகக் கிடங்கில் இருந்த கவிதைத் தொகுப்புகளைப் புரட்டிப் பார்த்து கடைசியாக கவிஞர் அறிவுமதியின் மழைப் பேச்சு தேர்ந்தெடுத்தேன். கவிஞர் அறிவுமதிக்கு அறிமுகம் தேவையில்லை. எனது தளத்தில் முகப்புப் பக்கத்திலேயே இருமுறை அவர் பெயரைக் காணலாம். நான் அதிக‌முறை வாங்கிப் படித்த / பரிசளித்த‌ பட்டியலில் அறிவுமதி அவர்களின் இரண்டு புத்தகங்களும் உண்டு; ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு சொல்லும் 'நட்புக்காலம்'; ஈழத்தமிழனின் வலி சொல்லும் 'வலி'.
(http://eraeravi.blogspot.in)
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'
என்ற‌ வள்ளுவரின் மூன்றாம் பால் சொல்லும், உடல்களின் உரையாடல்களே இந்த மழைப் பேச்சு. 'காடுகள் உடுத்தி, கடல்கள் உடுத்தி, ஆறுகள் உடுத்தி, அருவிகள் உடுத்தி, இயற்கையின் முழுக் குழந்தைகளாகிக் கேட்டுப் பாருங்கள். நிலாவிலிருந்து உதிர்கிற இலைகளாய் மழைப் பேச்சு உங்களை நனைத்துக் கொண்டே இருக்கும். இது உங்கள் மழைப் பேச்சு' என்று ஆசிரியர் த‌ன்னுரையில் சொல்லும் மழைப்பேச்சுக்குக் கருங்குடையாய் இடையூறு செய்யாமல், 10% கவிதைகளை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன்.

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை

உள்ளே கனக்கிற நீ
மேலே மிதக்கிறாய்

நாகரிகம் என்பது
காமமற்ற தழுவல்

தண்ணீர் விற்பவர்கள்தாம்
காமத்தையும் நகைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

இரண்டாவது சுற்றுக்கான இடைவெளியை
அழகு செய்வதில் இருக்கிறது
ஆண் பெண் உறவு

ஊறித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய‌
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத்துளி

மூடித் திற‌
திறந்து மூடு
இசைதரும் புல்லாங்குழல்

எல்லா மழைகளுக்கும் பிறகான‌
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

நுனி நாக்கில் முளைக்கின்றன
பறப்பதற்கான சிறகுகள்

இது இன்பத் தமிழ். மணமக்களுக்கான மகிழ்ச்சி நூல். முறையே இப்படி முன்னட்டையும் பின்னட்டையும் சொல்கின்றன. உண்மைதான். அதற்காக‌ எனது திருமணத்திற்குப் பரிசளிக்கக் குறித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! மூன்று வார்த்தைகளில் உள்ள‌ சில கவிதைகள் கூட‌ புரியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன்.

கவிதைகளுக்குப் பின்னிருக்கும், மனித உடல்களற்ற புகைப்படங்களும் கவி சொல்வதில் கொஞ்சம் நீங்களும் நனைந்து பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Friday, October 11, 2013

113. அத்தாணிக் கதைகள்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அத்தாணிக் கதைகள்
ஆசிரிய‌ர் : பொன்னீலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2004
விலை : 50 ரூபாய்
பக்கங்கள் : 144
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் தஞ்சை மாவட்டத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் சின்னஞ்சிறு கிராமம். பஸ், குழாய்த் தண்ணீர், மின்சாரம், சினிமாக் கொட்டகை, தொலைக்காட்சிப் பெட்டி என்னும் பஞ்ச பூதங்களைத் தவிர, மற்றபடி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கிராமம். விவசாயத்தையே எல்லாமுமாகக் கொண்ட மக்கள். இப்படித்தான் அத்தாணி என்ற கிராமத்தை முன்னுரையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். பொன்னீலன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 1983 முதல் 1988 வரை அத்தாணியில் பணியாற்றியபோது விவசாய மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்து, நாட்டுப்புற கதைகளைச் சேகரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரி பகுதியில் குடியேறிவிட்டாலும், அங்கும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோன்றிய சிந்தனையின் முதல் செயல்வடிவமே இப்புத்தகம். அத்தாணிக் கதைகள். 
(http://www.noolulagam.com)
மொத்தம் 51 கதைகள். 18 கதைசொல்லிகளின் விவரங்களைப் புகைப்படங்களுடன் இணைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. பிழைக்கத் தெரிந்தவன் என்ற கதையைச் சிறுவயதில் பாக்யா இதழில் படித்திருக்கிறேன். இரண்டு மடங்கு, எதிரும் புதிரும், எங்கே போகிறார் போன்ற கதைகள் இன்று நிறைய பேருக்குப் பரவலாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. வீரப் பெண் என்ற கதையை எனது அம்மாச்சி மிகப் பெரிய சரித்திர நிகழ்வு போல, சென்ற வாரம் கூட எனக்கு இருநூறாவது முறையாகச் சொன்னாள். அந்த வீரப் பெண் கதையை எனது சிறுகதை ஒன்றில் ஒரே வரியில் நான் மேற்கோளாக‌ எழுதி இருக்கிறேன். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும், மற்ற கதைகள் யாவும் எனக்கு புதியவை போலவே இருந்தன. எல்லாக் கதைகளும் நகைச்சுவை உணர்வுடனேயே எழுதப்பட்டு இருப்பதால், கண்டிப்பாக படிக்கலாம்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: 
1. பெண்ணுடம்பில் இயற்கையாக நடக்கும் ஒரு காரியத்தைத் தீட்டு என்று சொல்லும் பெண் சாமியான அம்மனையே ஒரு மானுடப் பெண் எதிர்க்கும் - தீட்டு
2. கணவன் கண்ணெதிரேயே கள்ளக் காதலனுடன் சரசம் செய்யும் - சாமர்த்தியசாலி
3. மற்ற நான்கு கால் விலங்குகளுக்கு எல்லாம் பின்னங்கால்களுக்கு இடையே பாதுகாப்பாகத் தொங்க, பன்றிக்கு மட்டும் பின்பாகத்தில் புடைத்துக் கொண்டிருக்கும் பிரம்மனின் படைப்பைச் சொல்லும் - அவசரம்
4. ஊரார் பார்க்க சல்லாபம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நாயினத்தின் கதை - தர்மர் சாபம்
5. முட்டாள் கணவனைச் சமாளிக்கும் புத்திசாலி பெண்ணின் கதை - பணியார மழை
6. இரண்டு பேர் சேர்ந்து செய்த தவறுக்கு ஒருத்தி மட்டும் ஏன் பிரசவ வலி தாங்க வேண்டும்? - பரமசிவன் வரம்
7. மலை நகர்ந்தது
8. சர்க்கார் முத்தம்

நான் மிகவும் ரசித்த கதைமாந்தர்: மொட்டைப் பெட்டிசன் முனியசாமி

தொடர்புடைய எங்களின் பிற பதிவு: மறைவாய் சொன்ன கதைகள்

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Saturday, October 05, 2013

112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்

God is dead. God remains dead. And we have killed him.
- Friedrich Nietzsche
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சாமிகளின் பிறப்பும் இறப்பும்
ஆசிரிய‌ர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2011
விலை :  30 ரூபாய்
பக்கங்கள் : 64
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரிலேயே ஞானம் உடைய நான் ஞானம் அடைய‌ எனக்கும் மதம் சொல்லிக் கொடுத்தார்கள். ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் ஆண் பெண். காயீன் ஆபேல் என்று இரண்டு மகன்கள். Both are boys. நில அபகரிப்புப் பிரச்சனையில் ஆபேலைக் காயீன் கொன்றுவிட‌, அதன் பிறகு... எனக்கொரு சந்தேகம். அதன் பிறகு அடுத்த தலைமுறை எப்படி உண்டாயிற்று? போர்த்துக்கீசிய மாலுமிகளுக்குக் காட்சி தந்த மேலைநாட்டு மாதாவிற்கு வேளாங்கண்ணி சேலை எப்படி கிடைத்தது? பூமியைக் கவர்ந்து போய் ஓர் அரக்கன் கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க, மீன் அவதாரம் எடுத்து சாமி பூமியைக் காக்கிறார். பூமிமேல் இருக்கும் கடலுக்குள்ளே பூமியை எப்படி ஒளித்து வைப்பது? 'கடவுளர் கதைகள்' என்றொரு சின்னப் புத்தகம். சாமி என்ற பெயரில் பெரியார் எழுதிய புத்தகம் என நினைக்கிறேன். கடவுளர்களின் புராணக் கதைகள் குறித்து எழும்பும் கேள்விகள்தான் அப்புத்தகம். குப்புறப் படுத்துத்தான் படிக்க வேண்டும். அவ்வளவும் கிளுகிளுப்பான கதைகள். மதமுடைய சாமிகள் எல்லாம் பணமுடைய சாமிகள் என்பதால், மதமற்ற ஏழைச்சாமிகள் பற்றி கொஞ்சம் படித்தறியலாம்.
(http://discoverybookpalace.com)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பேசாத பேச்செல்லாம், தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் போன்ற ஆசிரியரின் பிற புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன்.  'சாமிகளின் பிறப்பும் இறப்பும்'. நாட்டுப்புற ஏழைத் தெய்வங்கள் மூலம் கடவுள் என்ற சித்தாந்தத்தைக் கேள்வி கேட்கும் 16 கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். தமிழ்நாட்டில் முன்னர் கொற்றவை என்றொரு பெண்சாமி இருந்திருக்கிறது. ஊரெல்லாம் கோயில்கள் இருந்திருக்கின்றன. இப்போது அவளை யாரும் கும்பிடுவதில்லை. கோயில்களில் சரஸ்வதி இல்லை. சிவகாசியில் அச்சாகி வரும் படங்களில் மட்டுமே சரஸ்வதி வாழ்கிறாள். மூதேவி என்ற சாமியை வண்ணார் சமூகத்தைத் தவிர வேறு யாரும் வணங்குவதில்லை. இப்படி சாமிகளுக்கும் கூட‌ பிறப்பும் இறப்பும் இருப்பதையும், சாமிகளில் கூட சாதி இருப்பதையும் அறிமுகமாகச் சொல்லிவிட்டு, ஐகோர்ட் ராஜா - கவர்னர் பாடிகாட் போன்ற சில வித்தியாசமான சாமி பெயர்களைச் சொல்லிவிட்டு, ஏழைச்சாமிகளைப் பற்றி பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். ஏழைச்சாமிகள் எல்லாம் கற்பனைக‌ள் அல்ல; மனித அவதாரம் எடுத்த கடவுளர்கள் அல்ல; கொஞ்சம் காலத்திற்கு முன் நம்மோடு வாழ்ந்த சக மனிதர்கள்.

அருந்ததிய சாதியில் பிறந்து அரசன் மகள் பொம்மியைக் காதலித்ததால், அன்று இரயில் தண்டவாளம் போன்ற‌ வசதிகள் இல்லாததால், கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாகவே கொல்லப்பட்ட‌ மதுரை வீரன் சாமியைப் பற்றிப் பேசுகிறது ஒரு கட்டுரை. ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சாமியாக்கி ஆதிக்க வர்க்கத்திற்கு எதிர்ப்பு காட்டிய எளிய மக்களின் கதை அது. அதே போல் தாழ்த்தப்பட்ட காதலனை ஆதிக்க வெறியர்களுக்குப் பலி கொடுத்து, முத்தாலம்மன் என்ற பெயரில் கம்பம் பகுதியில் வணங்கப்படும் சாமியைப் பற்றி சொல்கிறது ஒரு கட்டுரை. தனக்காக உயிர்விட்ட கணவனின் சிதையில் வீழ்ந்து மாய்த்துக் கொண்ட மாலையம்மன் மற்றும் மலட்டம்மன், ஒரு பழிச்சொல்லால் செங்கல் சூளைக்குள் மாய்த்துக் கொண்ட சீலைக்காரி என பரிதவித்துச் செத்த சக மனிதர்களைச் சாமியாக்கி, பரிகாரம் என்று மந்திரம் ஓதி யாகங்கள் செய்ய வசதி இல்லாத எளிய மக்களின் கதைகள்.

திருமணம் ஆகாத இளம்பெண் ஒரு குடும்பத்தில் இறந்து போனால் சாமியாக்கி வழிபடும் வழக்கம் பொதுவாக உண்டு. எங்கள் வீட்டில் கூட, நான் பார்த்திராத அத்தை ஒருத்தியின் நினைவு நாளில் வருடாவருடம் சாமி கும்பிடும் வழக்கம் உண்டு. இப்படி குடும்பசாமி குலசாமிகள் பற்றி ஒரு கட்டுரை. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போகையில் கைப்பிடி மண்ணெடுத்துப் போய் புது ஊரில் அதே சாமியைப் புதிதாகக் கட்டும் பிடிமண் சாமிகள், மின்னல்வெட்டி செத்துப் போன இடத்தில் கல்நட்டு சாமியாக்கி விட்டு கும்பிடாமலேயே விடப்படும் 'கும்பிடாத சாமி'கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் சாமி, மனிதரிடம் அடிவாங்கும் சாமி, ஐஸ் வாங்க ஊர்விட்டு ஊர் போன ஐஸ் காளியம்மன், திருவில்லிப்புத்தூர் பகுதியில் கையில் பிடித்த குடையுடனேயே இறந்து போனதால் கொடைகாத்தான் சாமி என சில வித்தியாசமான சாமிகளையும் சொல்கிறார் ஆசிரியர். பெரியார் சொன்னது போல், மதத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் சாதியின் சாட்சியாக இருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் 'டவுசர் சர்ச்' பற்றிய கட்டுரையை மிகவும் ரசித்தேன்.

தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் இடம் ஒன்று, எனக்கு மிக அருகில் இருந்தும் நான் கேள்விப்படாதது ஆச்சரியமே. அந்த தர்காவில் இஸ்லாமிய பக்கீர் ஒருவருக்கு அசைவமும், அவரால் காப்பாற்றப்பட்ட பிராமணப் பெண்ணுக்குச் சைவமும் படைத்து வழிபடுவார்களாம்! கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது என் மதம், அது உன் மதம், உன் சாமி பேரை நான் வைக்க மாட்டேன் என்று வம்பு பண்ணாமல் சில‌ ஏழைச் சாமிகள் பெயரை மத வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் வைத்துக் கொள்வதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உமறுத்தேவர், உமறுக்கோனார், நாகூர்கனி நாடார், நாகூர்கனித் தேவர், பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ போன்ற பெயர்களைச் சில உதாரணங்களாகவும் மேற்கோள் காட்டுகிறார். எளிய மனிதர்களுக்கு மதவாதம் இல்லை!

சாமிகளை எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனிதன் படைத்துக் கொண்டான் என்று கற்பனைக் கதை சொல்கின்றன இரு கட்டுரைகள். ஆரம்பகால மதங்களில் இரத்தப் பலி கொடுப்பதும், அதையும் மலையுச்சியில் கொடுப்பதற்குமான காரணங்களாக ஆசிரியர் சொல்பவை அருமை. பணக்கார மற்றும் ஏழைச் சாமிகளுக்கு இடையே உள்ள 7 வேறுபாடுகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. மதம் + மடம் + நூல் உண்டு - கிடையாது. பணக்காரச் சாமிகள் மக்களின் சாதாரணச் சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை. சர்ச் / மசூதியில் ஆடு வெட்ட முடியாது - தர்காவில் வெட்டலாம். மதச்சாமிகளைக் கும்பிட இடையில் புரோகிதர் / பாதிரியார் / முல்லா தேவை. ஏழைச் சாமிகளுக்குப் பூசை நாளில் அந்த நேரத்திற்கு மட்டும் அய்யர் அல்லாத பூசாரி இருப்பார். ஏழைச்சாமிகள் அடிக்கடி மனித உடலில் இறங்கி வந்து சாமியாட்டம் ஆடுவதுண்டு. ஏழைச்சாமிகளுக்குக் கற்சிலைகள் கிடையாது. ஏழைச்சாமிகளை வணங்கும் ஏழை மக்கள், பணக்காரச் சாமிகளையும் வணங்குவதுண்டு. ஆனால் பணக்காரச் சாமியை வழிபடுபவர்கள் எவரும் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர், முனியப்ப ஆச்சாரியார் என்று பெயர் வைப்பதில்லை. ஒரு காலத்தில் ஏழையாய் இருந்து திடீர் பணக்காரர் ஆகிவிடும் ஆதிபராசக்தி போன்ற சாமிகளும் சரித்திரத்தில் உண்டு.

இப்படி மனிதனே கடவுளையும் படைத்துவிட்டு அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிப் போய், கருணை வடிவமாகவும், இதயமில்லா இவ்வுலகில் இதயமாகவும் கற்பனை செய்து கொண்டு வாழும் மனித சமூகத்தைப் பற்றி பேசும் கட்டுரைகளை 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை நம்பச்சொல்பவன் அயோக்கியன்' என  பெரியாரின் வார்த்தைகளுடன் முடிக்கிறார் ஆசிரியர். கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய புத்தகம்.

தொடர்புடைய எங்களின் பிற பதிவுகள்:
1. தம்பியின் குறுஞ்சாமிகளின் கதைகள்
2. அண்ணனின் ஆதிசேசன் படுக்கை
3. அண்ணனின் துருத்தி

'கடவுள் அல்லது கடவுள்கள் படைப்புகளில் சிறந்தது எது?
மனிதன்
யார் சொன்னது?
மனிதன்'
என்றார் ஓர் அறிஞர்.
'மனிதன் அல்லது மனிதர்கள் படைப்புகளில் சிறந்தது எது?
கடவுள்
யார் சொன்னது?
கடவுள்'
என முடிக்கிறேன் நான்.

அனுபந்தம்:
----------------
புத்தகத்திற்கு அப்பால்,

1. எனக்குப் பிடித்த ஏழைச்சாமி, வனத்துச் சின்னப்பர். விவசாய கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சாமி. பூச்சிப் பட்டைகளில் இருந்து காப்பவர் என்ற நம்பிக்கை. ஆடிமாத புதன் கிழமைகளில் விவசாய நிலங்களில் கோழி வெட்டிச் சமைத்துச் சாப்பிடுவார்கள். வருமானம் வராத சாமி என்பதால், எனக்குத் தெரிந்த வரையில் இன்னும் எந்தப் பாதிரியாரும் இவரை மதத்தில் சேர்க்கவில்லை. இப்போது அவருக்கு வெள்ளைத்தோல் உருவம் கொடுத்து கண்ணாடி போட்டு கடைகளில் விற்கிறார்கள். வீட்டிலேயே சமைக்கிறார்கள். இச்சாமியைத் திரும்பவும் விவசாய நிலங்களுக்குக் கொண்டு போய் காப்பாற்ற வேண்டும்.

2. ஒரிசாவில் பூரி ஜெகன்நாதர் என்ற பணக்கார சாமி இருக்கிறது. இருமுறை அங்கு சென்றிருக்கிறேன். கோயிலுக்குள் சென்றதில்லை. தேர் மிகப் பிரபலம். மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கும் அச்சாமிகளுக்கு, 'நான் கடவுள்' திரைப்படத்து மாங்காட்டுச் சாமி மாதிரி கைகால்கள் கிடையாது. ஏன் அப்படி என்று தேடிக் கதை படியுங்கள். தலையும் முண்டமும் சேர்த்து ஒரே உடலாய் இருக்கும் சாமிகளைக் கும்பிடும் மரபு பற்றியும் தேடிப் படியுங்கள்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Wednesday, October 02, 2013

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)

பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.
- டாக்டர் அம்பேத்கர் (காலத்தில் இருந்து இன்றும்...)
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்
ஆசிரிய‌ர் : அய்.இளங்கோவன் (ஆங்கிலத் துறைத் தலைவர், எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரி, வேலூர்)
வெளியீடு : கருப்புப் பிரதிகள், லாய்ட்ஸ் சாலை, சென்னை
முதற்பதிப்பு : சூன் 2009
விலை :  40 ரூபாய்
பக்கங்கள் : 72
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் காலந்தோறும் சில குறிப்பிட்ட சமூகங்கள் தீண்டத்தகாதவர்களாக கல்வி மறுக்கப்பட்ட கொடுமைகளைக் காணலாம். போனால் போகட்டும் என்று தர்ம சிந்தனையிலும் புண்ணிய நோக்கிலும் ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கல்வி கொடுத்திருக்கிறார்கள். 'தீண்டத்தகாதவர்களுக்குக் கல்வி அளிக்கலாம். ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுமானால் அதற்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை' என்றார்கள் ஆங்கிலேயர்கள். 1930ல் கல்லூரியில் படித்த மெட்ராஸ் மாகாண தாழ்த்தப்பட்டவர்கள் 47 பேர் மட்டுமே. அவையும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு, 'கேரளக் கல்விச் சட்டம் 1957' என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவைக் கொண‌ர்ந்தது. அது சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்தது. கேரள சிறுபான்மை மக்கள் எதிர்த்தனர். இதனால் சட்டப் பேரவையில் நிறைவேறிய சட்ட முன்வரைவு ஆளுநரின் ஓப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. 'இச்சட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு எதிரானதல்ல. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இப்பிரிவின் கீழ் செல்லத்தக்கதே' என்றது உச்ச நீதி மன்றம். இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டோம். மைய மாநில அரசுகள் ஏதாவது செய்தனவா? அத்தீர்ப்பின் நடைமுறை எதார்த்தம் என்ன? இப்புத்தகம் பதில் சொல்கிறது.
(http://udumalai.com)
அரசுக் கல்லூரிகளில் உள்ள மொத்த பணியிடங்களை விட அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு அதிகம். பொதுநலம் எனக் காரணம் காட்டி, மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் மானியம் என்ற பெயரில் அரசிடம் இருந்து இக்கல்லூரிகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோருக்கான ஊதியத்தை 100% பெறுகின்றன. பெரும்பான்மையான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தம்வசம் வைத்திருக்கும் இக்கல்லூரிகள் சமூக நீதிப்படி நடந்துகொள்கின்றனவா? அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கிறது. சிறுபான்மை மதங்கள் தத்தம் மதங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட நெடு நாளைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அரசை அடிக்கடி கண்டிக்கின்றன. ஆனால் அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்கின்றனவா? சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்பது மதச் சார்பின்மைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதில்லையா? 2000 முதல் 2008 வரையிலான புள்ளி விவரங்களை இப்புத்தகம் ஆதரமாகச் சொன்னாலும், அதன்பிறகு பெரிய மறும‌லர்ச்சி ஏதும் நம் நாட்டில் நடக்காத‌தாலும், அவ்வாதாரங்கள் இன்றும் கிட்டத்தட்ட பொருந்தும் எனக் கொள்ளலாம். பின்வரும் முப்பெரும் ஓரவஞ்சனைகளைச் சுட்டிக் காட்டுகிறது இப்புத்தகம்.
1. சிறுபான்மைக் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் மறுக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான வேலை வாய்ப்பு.
2. அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும் இட ஒதுக்கீடு.
3. இக்கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு மறுக்கப்படும் கல்வி.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 160. இதில் மத மற்றும் மொழி சிறுபான்மையினரால் 62 கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. சிறுபான்மைக் கல்லூரிகள் இட ஒதுக்கீட்டின் படி 751 தாழ்த்தப்பட்ட, 49 பழங்குடியின விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் 160ல் 14ல் மட்டுமே 61 தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர். மொத்தமுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 15192 பணியிடங்களில் 82 பேர் இயலாதோர், 67 பேர் ஆதரவற்ற கைம்பெண்கள், பழங்குடியினர் ஒரே ஒருவர் மட்டுமே. அதுவும் கூட, வள்ளி என்ற பழங்குடியினப் பெண்ணைக் கட்டிய முருகனின் பழனியில், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் பெருக்கும் பணியில் இருப்பவர்.

அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்லூரிகள் இப்படி என்றால், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 1124 தாழ்த்தப்பட்ட, 62 பழங்குடியின விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட விரிவுரையாளர்கள் 49.5% இருக்கின்றனர்; மீதமுள்ள இடங்கள் மற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன. பழங்குடியினர் யாரும் இக்கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக இல்லை. இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தும் பாராட்டத் தகுந்த மூன்று கல்லூரிகளை ஆசிரியர் அடையாளம் காட்டுகிறார்.
1. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி
2. பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி
3. சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரி

160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5326. இட ஒதுக்கீட்டின் படி தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் முறையே சிறுபான்மைக் கல்லூரிகளில் 187 - 14 எனவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 236 - 32 எனவும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதாவது எழுத்தர் மேலாளர் காசாளர் என்ற நிதி மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட பணியிடங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடியினரும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களாகவும் அலுவலக உதவியாளர்களாகவும் அமர்த்தப்படும் வர்ணாசிரம தர்மத்தின் நவீனவடிவம். அரசு உதவி பெறும் 160 தனியார் கல்லூரிகளில் இன்றைக்கும் கூட ஒரு கல்லூரியிலும் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக இல்லை.
(http://www.keetru.com)
சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றால், அங்கும் சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகம். பின், அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகள் செய்யும் அதே வேலையைச் செய்ய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்பு எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரம் செய்யவும் தானோ? அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பெயர்கள், பெறும் மானியம், அங்கு நிரப்பப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பணியிடங்களின் எண்ணிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை என ஆங்காங்கே அட்டவணைகளுடன் ஆதாரங்கள் தரும் இப்புத்தகம், காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமாகிப் போன நம் கல்வி நிறுவனங்களின் முகத்திரை காட்டும் கண்ணாடி! இது போல் பள்ளிக் கூடங்களுக்கு ஒரு புத்தகம் வந்தால் இன்னும் நலமாய் இருக்கும்!

நன்கு படித்த ஓர் அம்பேத்காரால் 6 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெற்றனர். இன்னும் 25 கோடி பேர் அதன் பயனை அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று படித்த தாழ்த்தப்பட்டவர்கள் பலகோடி பேர் இருந்தும் அதனால் எந்தப் பலனும் வந்துவிடவில்லை, பாமரனுக்கு! திருவிவிலியத்தில் இயேசு கிறித்து ஒரு கதை சொல்கிறார். ஓர் ஏழை பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்திற்கும் பணக்காரன் நரகத்திற்கும் போகிறார்கள். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். உலகத்தில் இருக்கும்வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள்; எல்லாவற்றையும் மேலே போய் கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பணக்காரர்கள். அவர்களுக்குத் தெரியும் அக்கதை வெறுங்கதைதான் என்று. தாழ்த்தப்பட்டவர்களாகவும் பழங்குடியினராகவும் ஒதுக்கப்படும் ஏழைகளுக்குத் தான் அது இன்னும் புரியவில்லை. அக்கதைப்படி அவர்கள் இறுதித்தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இறுதித்தீர்ப்பு என்று ஒன்று உண்டெனில், காலங்கடந்து வரும் அதுவும் ஒரு மறுக்கப்பட்ட நீதியே!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Monday, September 16, 2013

110. மாதொருபாகன்

--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)
ஆசிரிய‌ர் : பெருமாள்முருகன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2010
விலை : 140 ரூபாய்
பக்கங்கள் : 190
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
இச்சமூகம் ஒரு காட்டமான கணக்கு வாத்தியார். நம்மை மறைமுகமாகக் கணித்துக் கொண்டே இருக்கும். நம் இருப்பை உறுதிசெய்ய எதையாவது நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக, நிர்ணயித்த வயதில் திருமணம் செய்யாத‌ ஆண்களைப் பாதாளத்தில் இருந்து மீட்க வந்த மகான் எனவும், அடுத்த‌ மகாத்மா எனவும், வருங்காலப் பிரதமர் எனவும் புகழ்ந்து தள்ளும்; பெண் என்றால் அம்மா தாயே என்று காலில் விழுந்து கும்பிடாது; மிருகம் போடும் ஓலங்களை நல்ல சகுனம் என்று சொல்லி, துணை இல்லாத அல்லது துணை இழந்த பெண்ணை வெகுதூரம் நிற்க வைக்கும். அப்படியொரு நிலைக்கு வாய்ப்புத் தராமல் காளியைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் பொன்னா. சமூகம் அவர்களைப் போல் கொஞ்சம் மேலேறி அடுத்த விசயத்தை நிரூபிக்கச் சொல்கிறது. கல்யாணம் ஆன முதல்மாதம் விலக்கானதும் மாமியார் 'ம்க்கும்' என்று முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அன்றிலிருந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்தும் ஒவ்வொரு மாதமும் அந்த 'ம்க்கும்' தொடர்கிறது.

கல்யாணம் ஆன புதிதில் மாமனார் வீட்டில் காளி நட்டு வைத்து போன பூவரச மரத்தின்  பூக்கள் கூட, வாய் விரிந்த மஞ்சள் பூக்களாலும், சிவந்து குவிந்த வாடல் பூக்களாலும் சிரித்துச் சிரித்து, வாட வாட அழகேறிக் கொண்டே இருக்கின்றன. பொன்னா நட்ட செடி பூத்து குலுங்குகிறது; நட்ட மரம் காய்த்துக் கிடக்கிறது; கொண்டு வந்த கன்றுக்குட்டி பெருகிக் கிடக்கிறது; அடை வைத்த மொட்டு பொறித்துச் சிரிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு புழு பூச்சி கூட தரிக்கவில்லை. 50 வயதிலும் மாமியார்களையும் கர்ப்பமாக்கிக் காட்டுவதாகச் சவால்விடும் மருத்துவ வசதிகள் உள்ள காலம் இது. இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில், மாடு நாற்பது ரூபாய்க்கு விற்ற காலத்தில், சுதந்திரம் கிடைப்பத‌ற்கு முன் திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பொன்னாவும் காளியும். தக்க நேரத்தில் நிரூபிக்காத அவர்களைச் சமூகம் சாடை பேசுகிறது. காளியை மறுமணம் செய்யச் சொல்கிறது; பொன்னாவை அவனோடு ஒட்டி வாழவோ, ஒட்டுமொத்தமாக வெட்டிக் கொண்டு பிறந்தவீடு புகவோ பயமுறுத்துகிறது.

ஒருவன் வேலையைக் காளி குறை சொன்னால், 'வேலன்னா வேல உடறது' என்று சொல்லி இடக்கையின் இரண்டு விரல்களை நிமிர்த்தி வலக்கையின் ஆட்காட்டி விரலை அதற்குள் நுழைத்துக் காட்டுகிறான் ஒருவன். 'குடிக்கிற தண்ணி அருமையா இருந்து என்னடா? உடற தண்ணியும் அருமையா இருக்கோணும்டா' என்கிறான் இன்னொருவன். 'வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடிஓடிக் குடுக்கறா. அவ கையால தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?' என்று பொன்னாவை விரட்டுகிறாள் ஒருத்தி. 'பிள்ளயில்லாதவ பீச்சீலய மோந்து பாத்தாளாம்' என்று சாடுகிறாள் இன்னொருத்தி. 'முட்டுச் சந்துல நிக்கிற கல்லுன்னு நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மண்டுட்டுப் போலாம்னு நெனைக்குதுவ' என்று காளியிடம் அழுகிறாள் பொன்னா.

குழந்தையின்மைக்குக் காளியின் பரம்பரையில் முன்னோர்கள் செய்த சில குற்றங்களே காரணம் என குடும்பத்திற்குள் சில கதைகள் சொல்கிறார்கள். சில சமீபத்திய தலைமுறைகளில் நடந்த சம்பவங்களைச் சான்றாகக் காட்டி, சாபம் தொடர்வதை நிரூபிக்கிறார்கள். எத்தனை வைத்தியங்கள்! எத்தனை பத்தியங்கள்! எத்தனை பாவப் பரிகாரங்கள்! எத்தனை சாமிகளுக்கு வேண்டுதல்கள்! வேண்டாம் வேண்டாம் என்பவனுக்கு இந்தா இந்தா என்று கொடுக்கும் சாமி, வேண்டும் வேண்டும் என்பவனுக்குப் போடா மயிரே என்கிறது.

திருச்செங்கோட்டில் மலை உச்சியில், வறடிக்கல் என்று சொல்லப்படும் ஆளுயர ஒற்றைக்கல்லைச் சுற்றி இருக்கும் ஒற்றையடி அரைவட்டத் தடம். வறடிக்கல்லைப் பெண்கள் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில், அவ்வளவு உயரத்தில் உயிரைப் பணயம் வைத்தும் சுற்றிவிடுகிறாள் பொன்னா. ம்க்கும். இவர்களின் கடைசி நம்பிக்கையான‌ இன்னுமொரு சாமிதான் மாதொருபாகன்! மாது ஒரு பாகன். புதினத்தின் கருவான‌ மாதொருபாகனைப் பற்றி எழுதி, நீங்கள் புதினம் வாசிக்கும் போது வளரப்போகும் சுவாரசியக் கரு கலைக்க நான் விரும்பவில்லை.
(http://www.panuval.com)
பெருமாள்முருகன். சமீபத்தில் நான் அதிகம் படித்தவை இவருடைய புத்தகங்கள்தான். இத்தளத்தில் நான் அதிகம் எழுதிய தமிழ்ப் புத்தகங்களும் இவருடையவையே. நிகழ்காலத்தின் ஒப்பனைகள் இல்லாமல், ஏதோவொரு காலத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களைப் பற்றி பேசுபவை இவரது கதைகள். 'இறக்கையைப் பாதி விரித்த பறவையைப் போல் ஓலைக்கொட்டகை' என்றும், 'கோட்டானைப் போலத் தன் இருப்பிடமே கதி' என்றும் மிக எளிய விசயங்களை அற்புதமான உவமைகளாகக் கையாளும் இவரது எழுத்துக்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். எத்தனை நாடகங்களில் வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகச் சிரிக்க வைக்கும் எஸ்.வி.சேகரின் ஆள்மாறாட்டக் கதைகள் போல, சந்துபொந்து எல்லாம் நுழைய வைத்து ஆழத்தின் கடைசிவரை அதே குளிர்ச்சியோடு வாசகனையும் கூட்டிப் போகும் 'கிணறு' பற்றிய விவரணைகள் இவர் கதைகளில் சலிப்பதே இல்லை. இப்புதினத்தில் வரும் 'கரிக்குருவிகள்' போல இயற்கையோடு இணைந்தும் புரிந்தும் வாழ்ந்த எளிய மனிதர்கள்தான் பெரும்பாலும் இவரின் கதைமாந்தர்கள்.

சரி, அதென்ன மாதொருபாகன்? திருச்செங்கோட்டு மலைமேல் இருக்கும் கோவில் அய்யரிடம் இருபது ரூபாய் கொடுத்து காளி கேட்டபோது, கிடைத்த பதில் இது: 'நூத்துக்கணக்கான வருசமா அர்த்தநாரீஸ்வரன்னு நாங்க பரம்பரையாப் பூச பண்ணிண்டு வர்றோம்.அம்மையப்பன், மாதொருபாகன்னு பலபேரு சொல்லி இந்த ஈஸ்வரனப் பாடி வெச்சிருக்கறா. ஆணும் பெண்ணும் சேந்தாத்தான் லோகம். அத நமக்கெல்லாம் காட்ட ஈஸ்வரன் அம்பாளோட சேந்து அர்த்தநாரீஸ்வரனா நிக்கறார். எல்லாக் கோயில்லயும் பாத்தேள்னா ஈஸ்வரனுக்குத் தனிச் சந்நதியும் அம்பாளுக்குத் தனிச் சந்ததியும் இருக்கும். இங்க அம்மையும் அப்பனும் சேந்து ஒண்ணா இருக்கறா. அதான் அம்மையப்பன்னு பேர் வெச்சிருக்கறா. தன்னோட ஒடம்புல எடது பக்கத்த அம்பாளுக்குக் கொடுத்த கோலம் இது. பெண்ணுக்கு நாம நம்ம ஒடம்புலயும் மனசுலயும் பாதியக் கொடுத்தாத்தான் நல்ல கிருஹஸ்தனா இருக்கலாம். நாம் ஆணாப் பொறந்திருந்தாலும் நமக்குள்ள பெண் தன்மையும் நெறஞ்சிருக்கு. இதை எல்லாம் சேத்து மாதொருபாகன்னு பெரியவா சொல்லியிருக்கறா. ஆணில்லாம பெண்ணில்ல. பெண்ணில்லாம ஆணில்ல. ரெண்டு பேரும் சேந்துதான் லோகம் நடக்குது. அதான் மாதொருபாகன். உள்ள பாத்தேளா? வலப்பக்கம் ஈஸ்வரன். எடப்பக்கம் அம்பாள். ஈஸ்வரன் இப்படிக் காட்சி கொடுக்கறது இங்க மட்டுந்தான். ஒரு சிலபேரு இது கண்ணகிங்கிறா,அறியாமைல சொல்றவாளுக்கு என்ன பதில் சொல்றது? எல்லாமே ஈஸ்வரந்தான்னு சிவனேன்னு இருக்க வேண்டியதுதான்'.

குழந்தையற்ற தம்பதிகளுக்குள் நடக்கும் பல்வேறு விதமான அக மற்றும் புற விசயங்களும், ஆதிசிவன் பாதிசிவன் ஆன‌ மாதொருபாகன் கோவில் சார்ந்து நிலவும் நம்பிக்கைகளும் தான் இப்புதினம். ஓவ்வொரு சாமிக்கும் இருக்கும் கோவிலைச் சுற்றி ஒரு புதினம் எழுதும் அளவிற்குக் கதைகள் இருக்கின்றன. கிழக்கே போகும் ரயில் கொடுத்த பாரதிராஜாவிற்கு இக்கதை தெரிந்திருந்தால் கண்டிப்பாக திரையில் எடுத்திருப்பார்!

நான் ரசித்தவை:
பிடித்துப் போன கதைமாந்தர்: நல்லுப்பையன் சித்தப்பா.
பிடித்துப் போன நிகழ்ச்சிகள்: 1. வெள்ளைக்காரத் துரை நடத்தும் குளத்தில் கல்லெறியும் போட்டி 2. பதினான்காம் நாள் திருவிழாவில் திருச்செங்கோட்டின் ஒவ்வொரு வீதியையும் பொன்னா சுற்றி வரும்போது சுற்றி நடக்கும் சம்பவங்கள்.

அனுபந்தம்:
----------------
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍உலகில் பல்வேறு சமூகங்கள் எப்படி பெண் தெய்வங்களைக் கையாண்டிருக்கின்றன என ஆராயும் Merlin Stone அவர்களின் When God Was a Woman புத்தகம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்தால் சொல்லுங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Wednesday, September 11, 2013

109. A WORLD WITHOUT ISLAM

(மகாகவிக்குச் சமர்ப்பணம்)

இன்று செப்டம்பர் 11. பயங்கரவாதத்திற்கு எதிரான நிரந்தரப் போர் என்று பிரகடனப்படுத்தி, தனது அடாவடிகளை நியாயப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும் அமெரிக்கா சுட்டிக் காட்டும் நாள். ஆப்கான் ஈராக், இன்று சிரியா என்று யுத்தக்குடையின் நிழல் நீண்டு கொண்டே போகிறது. ஆப்கான் யுத்தம் தொடங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின் அப்போதைய‌ அமெரிக்க ஜனாதிபதி கையாண்ட வார்த்தைகளும், இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரையும் தெளிவாகச் சொல்லின; இப்போர்கள் எண்ணெய் வளத்திற்காக மட்டுமல்ல; நாடுபிடிக்க மட்டுமல்ல; இவை பூர்வகுடி இஸ்லாமியர்களுக்கு எதிரான போர்க‌ள்.

ஈழப் போருக்குப் பின், இனப்போர்களின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் புத்தகங்கள் தேடினேன். உலகின் மிக நீண்ட இனப்பிரச்சனை நடக்கும் இடமான இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு நாடுகளில் தான் என் கவனம் இருந்தது. இத்தளத்தில் 100வது புத்தகமாக நான் எழுதிய ஜெருசலேம் புத்தகம் தான், என் பல கேள்விகளுக்குப் பதில் சொன்னது. ஒரு தனிப்பட்ட யூதன் மேல் இருந்த வெறுப்பால் ஒட்டு மொத்த யூத இனத்தையும் அழிக்கத் துணிந்த ஹிட்லரைவிட அதிக வெறுப்பை இன்றைய மத மற்றும் சாதித் தலைவர்கள் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறும் இறைச்சித் துண்டுகளை வழிபாட்டுத் தளங்களில் வீசிவிட்டு வகுப்புக் கலவரங்கள் மிக எளிதாக‌ உண்டாக்கி விடுகிறார்கள். போன வாரம் நம்மூரில் ஒருவன், பிரபலமாக வேண்டும் என்பதற்காக தன் சொந்த வீட்டிலேயே வெடிகுண்டை வீசிவிட்டு இன்னொரு மதத்தவர்கள் மேல் சந்தேக வதந்தி பரப்பிய கதையும் கண்டோம். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? எங்குமே போகவில்லை. ஜெருசலேம் சுற்றும் அதே வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

அறியாமை வட்டத்தை விட்டு வெளியேறச் சொல்லித் தரும் பகுத்தறிவுப் புத்தகங்களில் இதோ இன்னுமொன்று. தொடர்ந்து படிப்பதற்கு முன்
1. நிலமெல்லாம் ரத்தம்
2. Jerusalem
புத்தகங்கள் பற்றிய எனது பதிவுகளை ஒருமுறை படித்துவிடுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : A WORLD WITHOUT ISLAM
ஆசிரிய‌ர் : Graham E. Fuller
வெளியீடு : Hachette Book Group, New York
முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010
விலை : 350 ரூபாய்
பக்கங்கள் : 350
வாங்கிய இடம் : Landmark
--------------------------------------------------------------------------------------------------------------------------
கிரகாம் இ. ஃபுல்லர். அமெரிக்க சி.ஐ.ஏ.வின் மேற்பார்வை பொறுப்பில் அமெரிக்க உளவுத்துறை கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவர் (former Vice Chairman of the National Intelligence Council at the CIA). பணி நிமித்தம் இஸ்லாமிய நாடுகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அமெரிக்க அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், திடீரென ஞானம் பெற்று அமெரிக்காவிற்கு எதிராக‌ எழுதும், தற்காலிகப் புரட்சிகரமான புத்தகங்களை நான் படிப்பதில்லை. இத்தளத்தில் எனது முந்தைய புத்தகமான‌, சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும் தான், இப்புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. அப்புத்தகம் இப்புத்தகத்தில் இருந்து சில பக்கங்களுக்கு மேற்கோள் காட்டிய சில விசயங்கள் தான் என்னைப் படிக்கத் தூண்டின. இது தற்காலிகப் புரட்சிகரப் புத்தகம் இல்லை. மதப் புத்தகமும் அல்ல. இஸ்லாமிய மண்ணில் வாழ்ந்த அனுபவசாலி ஒருவரின், இன்றைய பிரச்சனைகளுக்கான‌ மாற்றுச் சிந்தனைகள் தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஆசிரியரும், இப்பதிவை எழுதும் நானும் இஸ்லாம் மதத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால், எங்களின் நடுநிலைமையைச் சந்தேகிக்காமல் தொடர்ந்து படிக்கலாம்.

இஸ்லாம். இன்றைய உலகின் மிகப் பெரிய மதங்களில் சமீபத்தில் தோன்றிய இளமையான மதம். வரலாறு என்ற புதிய துறை நன்கு வளர்ந்திருந்த காலத்தில் தோன்றியதால், இதற்கு முந்தைய மதங்களைப் போல் அல்லாமல், இதன் மதநூலில் சொல்லப்படும் சம்பவங்கள், இஸ்லாமிற்குச் சம்மந்தமே இல்லாத பல சமகால அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டமையால், நம்பகத்தன்மையும் அதிகம். வரலாற்றில் மிக மகத்தான மிக சக்திவாய்ந்த தொடர்ச்சியான நாகரிகங்களில் ஒன்றான இஸ்லாம் உலகின் மீது ஏற்படுத்திய தாக்கம் அதிகம். வேறு எந்த நாகரிகமும் இஸ்லாமைப் போல உலகின் பரந்த நிலப்பரப்பில் இவ்வளவு நீண்ட காலம் இருந்ததில்லை. இஸ்லாமிய கலாச்சாரம் கலை விஞ்ஞானம் தத்துவம் மற்றும் நாகரிகம் என இன்றைய உலகிற்குக் கிடைத்த செல்வங்கள் ஏராளம். இப்படி சொல்வதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்க, இஸ்லாம் மற்றும் வரலாற்று அரசியல் அறியாமைகள் காரணமாக பெரும்பான்மை மக்களின் பொதுப் புத்தியில் இஸ்லாம் பற்றிய எதிர்மறைச் சிந்தனைகள் பரவியிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வட்டத்திற்குள் இருக்கும் வரை, அது வட்டம் என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை; அது எவ்வளவு பெரிய வட்டம் என்பதும் புரிவதில்லை. வட்டத்தை விட்டு எவ்வளவு வெளியே போய் பார்க்கிறோமோ, அவ்வளவு தெளிவாய்ப் புரியும் வட்டம். பூமியுடன் இருந்தாலும், பூமிக்கு வெளியே போய் ஒரு புகைப்படம் எடுத்து வ‌ந்த பின் தானே எல்லோரும் பூமிக்கோளம் என நம்பினோம்? நமக்குப் பூதாகரமாய்க் காட்டப்படும் சித்தாந்தங்களைக் கொஞ்சம் சிறிதாக்கி விட்டு, அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற விசயங்களைக் கொஞ்சம் பெரிதுபடுத்தி பகுத்தறியும் போது புரியாத பல விசயங்கள் புரியும். வரலாற்றின் பழைய பக்கங்களில், முதன்மைக் காரணமாக இஸ்லாம் சொல்லப்படும் சம்பவங்களை எல்லாம் மீள்பார்வை செய்து, இஸ்லாம் தவிர வேறேதும் காரணிகள் அதே சம்பவங்களை நிகழ்த்தி இருக்கக் கூடிய சாத்தியங்களை ஆராய்வதே இப்புத்தகம். குழப்புகிறேனா?

நிகழ்கால உதாரணம் ஒன்று. இலங்கை ஆட்சியாளர்கள் கடைசியாக புத்த‌மதத் துறவிகளையும் ஈழத்திற்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கும் புத்தமதத்திற்கும் / புத்தருக்கும் சுத்தமாகச் சம்மந்தம் இல்லை என்று நமக்குத் தெரியும். ஈழத்தில் இருந்து சிங்களவர்களை இனம் மொழி தவிர இன்னும் நன்கு பிரிக்க அந்த ஆட்சியாளர்கள் எடுத்த ஆயுதம் தான் மதம். புத்தத்தின் இடத்தில் வேறு எந்த மதம் இருந்தாலும் அதுவும் ஆயுதமாகி இருக்கும். அங்கு இப்போது புத்தம் என்பது வெறும் பதாகை என்பது நமக்குத் தெரியும். இந்நிலை தொடருமாயின் ஈழப் பிரச்சனையை ஒரு மதப் பிரச்சனையாக மட்டுமே எதிர்காலம் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். குழப்பம் தீர்ந்ததா? பின்னோக்கிச் சிந்திக்கத் தயாராகுங்கள். புத்தகத்திற்குள் போகலாம்.
(http://img6a.flixcart.com/)
அரேபியப் பாலைவனத்தில் இருந்து முகமது நபி தோன்றாமல் போயிருந்தால் - இஸ்லாம் என்ற ஒரு மதமே மத்திய கிழக்கில் தோன்றாமல் இருந்திருந்தால் - மத்திய கிழக்கில் மிக விரைவாகப் பரவிய இஸ்லாமிய சகாப்தம் இல்லாமல் போயிருந்தால் - இஸ்லாமியர்களின் படையெடுப்பு இந்தியத் துணைக்கண்டத்தில் நடக்காமல் இருந்திருந்தால் - ஜிகாத் முஜாஹிதீன் அல்-கெய்தா போன்ற வார்த்தைகள் கேள்விப்படாமலேயே இருந்திருந்தால் - இன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? கண்டிப்பாக இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது - மத்திய கிழக்கு நாடுகள் கொஞ்சம் அமைதியாக இருக்கும் - இந்தியத் துணைக்கண்டம் 3 துண்டுகளாகி இருக்காது - காஷ்மீர் பிரச்சனை இருக்காது - 3 யுத்தங்களை இந்தியா சந்தித்திருக்காது - விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகி படுதோல்வி அடைந்திருக்கும் - என பெரும்பான்மை பதில்கள் கிடைக்கும்.

இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தாலும், இன்று நாம் காணும் உலகம் கிட்டத்தட்ட அதே பிரச்சனைகளுடன் தான் இருந்திருக்கும் என வாதிடுகிறது இப்புத்தகம். அதாவது, ஒசாமா பின் லேடன், ஜிகாத் போன்ற வார்த்தைகளுக்குப் பதில் வேறு வார்த்தைகள் இடம்பெற்று விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாக முடியாமல் தாமதமாகி பின் வெற்றிப்படம் ஆகியிருக்கும் சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் இன்னும் ஒருபடி மேலே போய், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். இதே கருத்தைத் தான், ஜெருசலேம் புத்தக அறிமுகத்தில் நானும் சொன்னேன். மேலும், இஸ்லாமிய நாகரிகம் இல்லாதிருந்தால் இவ்வுலகம் இன்று நாகரிக ஏழ்மை நிறைந்ததாக இருந்திருக்கும் என்கிறார். The world would be a much more impoverished place in the absence of Islamic civilization. வரலாறு தெரியாதவர்களுக்கு, நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், ஆதாரங்கள் சொல்ல வரலாற்றின் பழைய பக்கங்களை 3 பாகங்களாக‌ப் புரட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

Religion may in most of its forms be defined as the belief that the gods are on the side of the Government.
- Bertrand Russell

இஸ்லாம் மத்திய கிழக்கில் தோன்றி, மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவுவதற்கு முன்பு வரை மத்திய கிழக்கின் மதம் மற்றும் அரசியல் நிலைகளை விளக்குவதே முதல் பாகம். யூதம் கிறித்தவம் இஸ்லாம் என்ற முப்பெரும் மதங்களும் தோன்றிய மண் மத்திய கிழக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கடவுள் கொள்கை பேசிய மண்! மேசேயில் (Moses) இருந்து கணக்குப் பார்த்தால் யூதமத வயது 4500க்கு மேல். புனித பவுலில் (St.Paul) இருந்து கணக்குப் பார்த்தால் கிறித்தவமத வயது 1900. முதல் முஸ்லீமும் கடைசி இறைத்தூதருமான முகமது நபியில் இருந்து கணக்குப் பார்த்தால் இஸ்லாமியமத வயது 1400. ஆபிரகாமின் மதங்கள் (Abrahamic religions) என்று இம்மும்மதங்களும் அழைக்கப்படுகின்றன. 610CEல் அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய காலத்தில் கிறித்தவமும், நகரங்களில் மட்டும் யூதமும், பார்சிகளின் மதமான சரத்துஸ்திரமும் (Zoroastrianism) என மத்திய கிழக்கில் இருந்திருக்கின்றன. அதே காலத்தில் பௌத்தமும் இந்துவும் இந்தியாவிலும், கிறித்தவமும், பல கடவுள்களும் ஐரோப்பாவிலும் இருந்திருக்கின்றன; அரேபியாவில் மெக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 360 உருவ வழிபாடுகள் இருந்திருக்கின்ற‌ன.

ஆபிரகாமின் மதங்கள் மூன்றையும் தனித்தனியாக ஒன்றோடொன்று நம்பிக்கைகளில் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இம்மதக் குடும்பத்தில், மூத்த மதங்கள் இளையவர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றன. இயேசுவையும் முகமது நபியையும் யூதம் ஏற்பதில்லை. முகமது நபியைக் கிறித்தவம் ஏற்பதில்லை. யூதர்களின் இறைத்தூதர்களைக் கிறித்தவமும் இஸ்லாமும் ஏற்கின்றன. இயேசுவிற்கும் மரியாளிற்கும் இஸ்லாமில் தனியிடம் உண்டு. மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றி பேசுவது போல் தெரிந்தாலும், மனிதப் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்ட மதங்களாக தெரிந்தாலும், ஆபிரகாமின் மதங்கள் என்று ஒரே சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவர முயன்றாலும், உண்மையிலேயே மூன்று மதங்களும் ஒரே கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றனவா என்று சந்தேகப்படும் அளவிற்கு வேறுபாடுகள் அதிகம். கிறித்தவம் இஸ்லாமுடன் கொண்ட வேறுபாடுகளை விட யூதத்துடன் கொண்ட வேறுபாடுகள் அதிகம்; மிகவும் அதிகம். இயேசுவைக் கொன்றவர்கள் என்ற பழிச்சொல்லுடன் யூதர்கள் வெறுக்கப்பட்டது போன்ற, கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட சில‌ வேறுபாடுகளும் உண்டு. மத்திய கிழக்கு பற்றி எந்தப் புத்தகம் படித்தாலும், இதுவரை சொன்ன விசயங்கள் ஆரம்பக் கட்டுரைகளாக வந்துவிடும். அதாவது, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மற்ற இரு மதங்களுக்குள் அடிப்படையான பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பாவிலும், சார் மன்னர்களின் ஆட்சியில் இரஷ்யாவிலும், ஹிட்லரால் ஜெர்மனியிலும் யூதர்கள் வதைக்கப்பட்டதை வரலாற்றின் கொடூரப் பக்கங்கள் சொல்லும்.

570CEல் முகம்மது நபி தோன்றாது போய் இருந்தால் அரபு மக்களுக்கு என்று ஒரு தனி வரலாறு இருந்திருக்குமா என்று தெரியவில்லை,என்பது வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் உண்மை. நாகரிகம் தெரியாதவர்களாக அருகில் இருப்பவர்களால் கருதப்பட்ட அரபுகளுக்கு, இஸ்லாம் புதிய அடையாளத்தையும் சிந்தனையும் உத்வேகத்தையும் தர, அசுர பலத்துடன் தங்கள் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். முகமது நபி இறந்து 30 வருடங்களுக்குள் மேற்கே துனிசியா, வடக்கே கௌகாஸஸ், கிழக்கே பாகிஸ்தான் எல்லை வரை பரவுகிறார்கள். 800CEல் மத்திய கிழக்கும் கிழக்கு ஐரோப்பாவும் ஏறத்தாழ சமமான மக்களைக் கொண்டிருந்தன; ஒவ்வொன்றும் 3 கோடி பேர். ஆனால் மத்திய கிழக்கில் ஏறத்தாழ 50000 பேர் கொண்ட 13 நகரங்கள் இருந்தன; கிழக்கு ஐரோப்பாவில் ரோம் மட்டுமே நகரமாக இருந்தது. இஸ்லாமின் உடனடித் தாக்கத்தைப் புரிந்து கொள்ள இப்புள்ளி விவரங்கள் போதுமென நினைக்கிறேன்.

பெரும்பான்மை மக்கள் நினைப்பது போல, ஆரம்ப கால இஸ்லாம் வாள் முனையில் பரவவில்லை. எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமே அரபுகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆரம்பகால ஆட்சியாளர்கள் மதநல்லிணக்கம் பேணுபவர்களாக இருந்ததாலும், ரோமானியப் பேரரசின் கிழக்குச் சாம்ராச்சியத்தை அவர்கள் கைப்பற்றும் போது அதன் குடிமக்கள் வரவேற்றார்கள்; இஸ்லாம் என்ற இறை நம்பிக்கைக்காக அல்ல; அவர்கள் தரப்போகும் அரசியல் உரிமைகளுக்கும், அவர்கள் தரப்போகும் ஆட்சிக்கும். காலப்போக்கில் ஒரு பரந்து விரிந்த ஒரு சிறந்த நாகரிகத்தின் அங்கமாக மதம் மாறுகிறார்கள். அரபுகளை மற்ற இனங்களுடன் இஸ்லாம் இணைக்கிறது. அரபுகள் இஸ்லாம் மேல் இருந்த தங்களின் ஏகபோக உரிமையை இழக்கிறார்கள். அங்கே உடைகிறது இஸ்லாமின் முதல் கலீபாக்கள் ஆட்சி. முதன் முறையாக இஸ்லாமிய ஆட்சி உமையாது (Umayyad) அரபுகளிடம் இருந்து, அப்பாசிய  (Abbasid) பாரசீக‌ர்களுக்குப் போகிறது. இப்படி இஸ்லாமியர்களின் ஆட்சி இன்னொரு இஸ்லாமியரிடம் இழக்க‌, பிராந்திய அரசியல் காரணங்கள் இருந்திருக்கின்றன; இஸ்லாம் இல்லை. மத்திய கிழக்கில் இஸ்லாம் சந்தித்த இஸ்லாம் அல்லாத இன்னொரு அச்சுறுத்தல் மேற்கில் இருந்துதான் வந்தது; இன்றும் வந்து கொண்டிருக்கிறது.

The curse of the human race is not that we are so different from one another, but that we are so alike.
- Salman Rushdie

மத்திய கிழக்கு, மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகள் என்று அடிக்கடி பேசுகிறோமே, எந்தப் புள்ளியில் இருந்து இத்திசைகளைக் குறிக்கிறோம்? இவையெல்லாம் ரோமானிய மக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்; இன்றும் தொடர்கின்றன. ரோமைத் தலைநகரமாகக் கொண்ட ரோமானியப் பேரரசின் மன்னன் முதலாம் கான்ஸ்டன்டைன் (325CE), கிறித்தவ மதத்தைத் தழுவுகிறான். அதுவரை ரகசியமாகத் தூரத்துத் தேசங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கிறித்தவ மதம், மன்னன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என ரோமானிய தேசமெங்கும் பரவுகிறது. பைசாந்திய நாடுகளைக் கைப்பற்றி கிழக்கே கான்ஸ்டான்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) என்ற புதிய நகரையும் உருவாக்குகிறான். ரோமின் மொழி இலத்தின். இரண்டாம் ரோம் என அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிளின் மொழி கிரேக்கம்.

ரோம் மேற்கு; கான்ஸ்டான்டிநோபிள் கிழக்கு. அதாவது ரோமானியப் பேரரசின் மேற்கு மற்றும் கிழக்குச் சாம்ராச்சியங்கள் மொழியாலும் கலாச்சாரத்தாலும் இருவேறு இனங்கள். ரோமானியப் பேரரசிற்குக் கிழக்கே இருந்த நம்மைப் போன்றவர்களுக்கு, மொத்த ரோமானியப் பேரரசும் மேற்கு. அடுத்து வந்த பேரரசர்கள் எல்லாம் கிழக்கே கவனம் செலுத்த, ஆரம்பகால விவிலியங்கள் கிரேக்கத்தில் எழுதப்பட, ரோம் கான்ஸ்டான்டிநோபிள் என இரு கிறித்தவ மதத் தலைமைப் பீடங்கள் உருவாக, 476CEல் ரோம் வீழ்ச்சியுற, அதிகாரம் முழுவதும் கிழக்கே குவிய, அதிகாரச் சண்டை அரசியலிலும் மதத்திலும் தலைதூக்க, ஐரோப்பாவின் நோயாளி என துருக்கி ஒதுக்கப்பட‌, இன்றும் தொடர்கிறது கிழக்கு மேற்கு பிரிவினை! ரோமைத் தலைமையகமாகக் கொண்டு கத்தோலிக்க கிறித்தவம் (Roman Catholic) இன்றும் தொடர்கிறது. எங்கே போனது கான்ஸ்டான்டிநோபிள் கிறித்தவத் தலைமைப் பீடம்?

நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் நீங்கள் படித்திருந்தால், உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன். மொத்த புத்தகத்திலும், கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டுவது போல் வரும் அந்த ஒரே சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலுவைப் போரில், ரோம் போப்பால் அனுப்பப்பட்ட வீரர்கள் விரக்தியில் ஜெருசலேமைத் தாக்காமல் கான்ஸ்டான்டிநோபிளைத் தாக்கும் சம்பவம் நினைவிருக்கிறதா? மேற்கு கிழக்கின் புராதன பகையின் வெளிப்பாடே அது! இதுதான் இப்புத்தகத்தின் கரு. அதாவது இஸ்லாம் மத்திய கிழக்கில் காட்சிக்கு வருவதற்கு முன்பே மிச்சமிருக்கும் ரோமானியப் பேரரசின் அதிகார வேட்கை, திருச்சபையில் இருந்த நீயா நானா குளறுபடிகள் என எரிந்து கொண்டிருந்த பிரச்சனைகள் நிறைய இருந்தன.

மேற்குலகிடம் தோற்பதை விட இஸ்லாமிடம் தோற்பதே மேல் என பின்னாளில் கான்ஸ்டான்டிநோபிள், இஸ்தான்புல் ஆன பின்னும் அங்கேயே தங்கள் தலைமைப் பீடத்தைத் தொடர்கிறார்கள். இதனால் தான் ஆசிரியர், இஸ்லாம் இல்லாமல் போயிருந்தால் மத்திய கிழக்கின் நிலைமை இன்றைவிட இன்னும் கொடுமையாக இருந்திருக்கும் என்கிறார். ஏற்கனவே சண்டை போட்டுக் கொண்டிருந்த கிழக்கும் மேற்கும் கொஞ்சம் நின்று, புதிதாகப் பரவும் இஸ்லாமைப் புரியாத புதிராக நோக்க ஆரம்பித்தார்கள். போப் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II) 800 ஆண்டுகள் கழித்து, கிழக்குத் தலைமைப் பீடத்திடம் மன்னிப்பு கேட்கிறார்; 3 வருடங்கள் கழித்து ஏற்றுக் கொள்கிறார்கள்; அந்த அளவிற்குப் புரையோடிய பகை. இஸ்லாம் போன்ற திசை திருப்பிய சக்தி (distracting factor) ஒன்று, அக்காலத்தில் தோன்றாமல் போயிருந்தால் சண்டை படு உத்வேகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கும். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், சரத்துஸ்திர ஈரானைத் தவிர‌ கிழக்குத் திருச்சபை அவ்விடங்களை நிரப்பி இருக்கும் என்று சிந்திக்கச் சொல்கிறார் ஆசிரியர். அப்புரியாத சக்தியின் மேல் பரப்பப்பட்ட‌ பயமும், வன்முறை மாயமும் இன்றைய நவீன காலத்திலும் தொடர்வது துரதிஷ்டமே!

தொழுகை திசையை ஜெருசலேமில் இருந்து மெக்காவை நோக்கி முகமது நபி மாற்றியதே மிகப் பெரிய நல்லெண்ண முயற்சியே! அவர் மட்டும் திசையை மாற்றி இருக்காவிட்டால், ஜெருசலேம் இன்று என்னவாகி இருக்கும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியாது. சொட்டு இரத்தம் சிந்தாமல் ஜெருசலேமைக் கைப்பற்றி தனது மதச் சின்னங்களைப் புதிதாகக் கட்டாமல் மத ஒற்றுமை காக்கிறார் முதலாம் உமர். சுல்தான் சலாவுதீன் தோற்றுப்போன எதிரிகளுக்கும் கப்பம் கட்டுகிறார்; மருத்துவ உதவி செய்கிறார். இஸ்லாமியர்களின் காலம் ஜெருசலேமின் பொற்காலம், என எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒத்துக் கொள்வதை எனது முந்தைய பதிவுகளில் பதிவு செய்திருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், இஸ்லாமியர்கள் காலத்தில் பெரும்பாலும் ஜெருசலேம் மதமற்று இருந்திருக்கிறது; மத்திய கிழக்கும்.

I want to see an India where everyone is literate. Only then can we erase the difference between India and Bharat.
- U.R.Ananthamurthy (ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்)

ஒரே கடவுள் கொள்கை கொண்ட மத்திய கிழக்கின் ஒரு பாரம்பரியத் தொடர்ச்சிதான் இஸ்லாம். மத்திய கிழக்கில் இருந்த ஒரே நாகரிகத்தின் பல்வேறு தளங்களை இஸ்லாமால் மிக எளிதாக இணைக்க முடிந்திருக்கிறது. இஸ்லாமின் அரசியல் எல்லைகள் காலப்போக்கில் பல சமயங்களில் மாற்றி எழுதப்பட்டு இருந்தாலும், இஸ்லாம் உண்டாக்கிய அவ்விணைப்பு இன்று வரை நீடிப்பது மறுக்க முடியாத உண்மை. மதம் என்ற அடையாளத்தைத் தவிர ஏற்கனவே அங்கிருந்த பிரச்சனைகளுக்கு அதிகாரம் தேசியம் அரசியல் இனம் என்ற பல காரணங்கள் இருந்ததையும், மதம் ஓர் பதாகை போல் தான் செயல்பட்டிருக்கிறது எனப் பேசுகிறது முதல் பாகம். மத்திய கிழக்கை விட்டு வெளியே பரவ ஆரம்பித்த இஸ்லாம் எதிர்கொண்ட பல்வேறு நாகரிகங்கள் பற்றிப் பேசுகிறது இரண்டாம் பாகம். மூன்றாம் ரோம் என‌ உருவெடுத்த இரஷ்யாவின் மாஸ்கோ, சீனா, மேற்கத்திய நாடுகள் போன்றவற்றை விடுத்து, இஸ்லாம் எதிர்கொண்ட கிறித்தவம் அல்லாத முதல் நாகரிகம் பற்றி விரிவாகப் பேசுவோம். ஆம், இந்தியாவைத் தான் சொல்கிறேன்.

மதம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத எனது 20வது வயதில் படித்த குஷ்வந்த் சிங் கட்டுரை ஒன்று இன்னும் நினைவில் இருக்கிறது. இந்து இஸ்லாம் மதங்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளைப் பட்டியலிடுவார். மெய்சிலிர்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்! முரண்தொடை என்ற இலக்கண அழகியல் இயற்கையாக அமைந்த இயற்கையின் இரு படைப்புகள்! அப்துல் ரகுமானின் ஆலாபனை பித்தன் என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை அடுத்தடுத்து படிப்பது போன்ற அருமையான அனுபவம். 12ம் நூற்றாண்டில் இஸ்லாம் வட இந்தியாவில் நுழைந்தவுடன் இம்முரண்தொடையை ரசிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து புதுப்புது பக்தி மார்க்கங்கள் பிறப்பெடுத்தன. சுஃபியிஸம் தோன்றியது. கபிர் துக்காராம் துளசிதாஸ் குருநானக் என அடித்தள மக்களிடம் இருந்து மதத் சிந்தனைவாதிகள் தோன்றினர். கார்ல் மார்க்ஸ் சொன்னது போல தனிப்பட்ட வரலாறு இருந்திராத இந்தியத் துணைக்கண்டம் பற்றிய புத்தகங்கள், 'மதங்கள்' என்ற அலமாரியில் பிரிட்டிஷ் நூலகங்களில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில், மொகலாயர்கள் என்ற வேற்று எதிரியால் அதிர்ந்த மக்கள், அதே பெயரால் ஒன்றுபட்டனர். இன்று இந்தியத் துணைக்கண்டம் என்று சொல்லப்படும் அடிப்படை எல்லைகள் மொகலாயர்கள் நிர்ணயித்தவை, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மத நல்லிணக்கத்தின் உச்சக்கட்டமாக, எல்லா மத நம்பிக்கைகளின் நல்ல கருத்துகளைக் கொண்டு கடவுளற்ற இறைத்தூதரற்ற தீன்‍இ‍லாஹி என்ற புது மதத்தையே உருவாக்கினார் அக்பர். ஜவஹர்லால் நேரு அக்பரை இந்தியாவின் தந்தை என வர்ணிப்பதில் ஆச்சரியமில்லை. இம்முரண்தொடையை வரலாறு எதிர்மறையாக எழுதியதும், புரிந்து கொள்ளப்பட்டதும் நமக்கான சாபமே அன்றி வேறேன்ன சொல்ல? அரபு மற்றும் மொகலாயப் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு எனப் பதிவு செய்தனர் வரலாற்று ஆசிரியர்கள். ஐரோப்பியர்கள் காலனி பிடித்த போது, கிறித்தவ ஆக்கிரமிப்பு என்று அவர்கள் எழுதவில்லை. காந்தி கொல்லப்பட்ட நாளில் கொலைகாரனின் மதத்தைத் தான் கேட்டது ஒட்டுமொத்த நாடும்! முரண்தொடையை ரசிக்க வைக்க அப்படியொரு தலைவன் மீண்டும் கிடைக்காது போனதும் சாபமே!

இந்தியாவின் இன்றைய நிலைக்கும், எதையுமே சாதித்திராத இந்தியப் பிரிவினைக்கும் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே அன்றி இஸ்லாம் காரணமே அல்ல என்கிறார் ஆசிரியர். இஸ்லாம் இல்லாமல் இருந்திருந்தால், பாபர் வராமல் போயிருந்தால், பெர்ஷியாவில் இருந்து யாரோவொரு குட்டி அரசன் ஏதோவொரு மத அடையாளத்துடன் கொஞ்சங் கொஞ்சமாக நாடுகள் பிடித்து, கடைசியில் இந்தியாவைப் பேரரசாக மாற்றினாலும், பிரிட்டிஷ்காரன் இஸ்லாம் இல்லாமலே பிரித்திருக்க மாட்டானா என்ன? வாய்ப்புகள் நிறைய உண்டு.

உன் ஆயுதத்தை உன் எதிரியே தீர்மானிக்கிறான்.
- மா சே துங்

Terrorism is the weapon of the weak.
- ஷேக் அகமது யாசின் (ஹமாஸ் தலைவர்)

நவீன காலத்தில் இஸ்லாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது கடைசி பாகம். எல்ஜா முகமது, மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் ஏற்கனவே இன ரீதியில் திரண்டிருக்கும் தங்கள் போராட்டங்களை இஸ்லாமுக்கு மதம் மாறி, இன்னும் தீவிரப்படுத்தியதை பேசுகிறது ஒரு கட்டுரை. நாசர், பாலஸ்தீனம், தற்கொலைப் படைத் தாக்குதல், தீவிரவாதம் என பேசுகின்றன அடுத்தடுத்த கட்டுரைகள். எகிப்தில் நாசரை அடக்க இஸ்லாமிய மதவாதிகளுக்கு மறைமுகமாக உதவியது அமெரிக்கா. யாசர் அராபத்திற்கு எதிராகச் செயல்பட ஹமாஸ் தலைவர் ஷேக் அகமது யாசினை விடுதலை செய்து உதவியது இஸ்ரேல். இவற்றில் எங்கு மதம் வந்தது? குஜராத் இனக்கலவரம் முன்பு இந்திய முஜாஹிதீன் கிடையாது என்கிறது அரசு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் கிடையாது. காலிஸ்தான் பிரச்சனையில் பக்கத்து பஞ்சாப் பற்றி எரிந்த போதும் காஷ்மீர் அமைதியாகப் போராடி இருக்கிறது. ஆப்கானிஸ்தானைச் சோவியத் ஆக்கிரமிக்கும் வரை உலகில் இஸ்லாமிய மதவாதம் கிடையாது. 1967ல் பாலஸ்தீனம் முழுவதும் அரபுகளிடம் இருந்து பிடுங்கப்பட்ட போதும் தீவிரவாதம் இல்லை. பின் எந்தச் சூழ்நிலையில் மதம் ஆயுதமாக எடுக்கப்படுகிறது? உங்களின் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றாலே பிரச்சனை என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. மதச்சார்பற்ற பிரெஞ்சு நாடு மத அடையாளங்களைத் தடை செய்கிறது. நாத்திக சோவியத் யூதர்களை விரட்டிய கதையும் உண்டு; அதே சோவியத் மதத்தைக் கையில் எடுத்த கதையும் உண்டு. Pogrom என்ற வார்த்தையை அகராதியில் சேர்த்ததே சோவியத்தான். மதச்சார்பற்ற வன்முறை என்று தனிப்பெயர் தரலாம். மதம் இருக்கட்டும். மதம் நல்லது. மதம் இல்லாத உலகம் இன்னும் அதிகமாக மதம் பிடித்திருக்கும். மதம் இல்லாதவனுக்கு இல்லாள் கிடைப்பதில்லை, என்பது என் பட்டறிவு.

ஆசிரியர் சொல்லும் தீர்வுகளில் உங்களுக்குப் புரியும் சில கருத்துகள் இதோ:
1. அரபு மண்ணில் இருந்து அந்நியப் படைகள் வெளியேறினால் போதும்; பல தீவிரவாத இயக்கங்கள் முடிவுக்கு வரும்.
2. பாலஸ்தீன அகதிகளுக்கு நீதி.
3. இஸ்லாமிய மதவாதம் மற்றும் பயங்கரவாதங்களுக்குத் தீர்வு காண உள்ளூர் இஸ்லாமியர்களால் மட்டுமே முடியும். அவர்களிடம் விட்டுவிடுங்கள்.

சுருக்கமாகச் சொன்னால், புத்தகத்தின் தலைப்பைப் போல், எந்தவொரு பிரச்சனைக்கும் இஸ்லாமியச் சாயம் பூசாமல், வெறும் உலகலாவிய மனிதயினத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனையாக மட்டும் பாருங்கள். நடக்கும்? ஆயுதத் தயாரிப்பாளர்களும் வல்லரசுகளும் நடக்கவிடுவார்களா?

உங்கள் சிந்தனைக்கு:
1. திலக் என்ற இந்துத் தளபதியின் கீழ் ஓர் இந்துப் படையை வைத்திருந்தார் கஜினி முகமது. வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்ட கஜினியுடன் இஸ்லாம் எப்படிக் காரணமாகும்?
2. வாள் முனையில் இஸ்லாம் பர‌வியது என்ற கூற்று, தென்னிந்தியாவிற்கும் சீனாவிற்கும் முற்றிலும் தவறு. இவ்விரண்டு இடங்களுக்கும் இஸ்லாம் வணிகம் மூலம் வந்தது. உலகின் இரண்டாம் பள்ளிவாசலான சேரமான் ஜீம்மா பள்ளிவாசல், சேரப் பேரரசின் தலைநகரான கொடுங்களூரில், இன்றைய கேரளாவில் உள்ளது! முகமது நபியின் வாழ்நாளிலேயே கட்டப்பட்டது அது!  'அறியப்படாத தமிழகம்' புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள், பிரியாணியும் தென்னாட்டிற்கு வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார்.
3. அடிமைமுறையை இஸ்லாம் ஊக்குவிப்பதாகக் கூறினார் அம்பேத்கார். அடிமைகள் அரசாண்டிருக்கிறார்கள். குதுப்மினார் கட்டி இருக்கிறார்கள்.
4. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருடன் இந்து என்ற வார்த்தையையும் பல வெளிநாட்டு ஊடகங்கள் சேர்த்துக் கொள்ளும். அவர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் பயிற்சி பெற்றது லெபனானில், பல இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து என்று பலருக்குத் தெரியும். விடுதலைப் போராட்டக் குழுக்களில் மதம் உண்டா என்ன?
5. பிரிவினைக்குப் பின் இலாகூரைத் தவிர மொகலாயர்கள் நிர்மாணித்த அனைத்து பெரிய நகரங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன, தாஜ்மகால் உட்பட.
6. ஷியா ஈரானைத் தவிர, இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஆட்சித் தலைவர்களை நியமித்ததாக‌ அல்லது கட்டுப்படுத்தியதாக எங்குமே வரலாறு கிடையாது! அதே போல் எந்தவொரு சுல்தானோ ஷாவோ பாதுஷாவோ முஃப்திக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக இஸ்லாமிய வரலாறு கிடையாது! அதாவது இஸ்லாமிய வரலாற்றில் மத மற்றும் அரசியல் தலைமைகள் ஒன்றோடொன்று குறுக்கிட்டதில்லை. இது நல்லதா கெட்டதா என்று உங்களுக்குச் சட்டெனப் புரியாது. மதம் ஆதிக்கம் செய்தால் / அரசியல் ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே சேர்ந்து ஆதிக்கம் செய்தால் / இரண்டுமே தனித்தனியாக இருந்தால் / என ஒவ்வொரு நிலையிலும் வரலாற்றில் மற்ற மதங்களில் எப்படி நடந்திருக்கிறது எனப் புரட்டிப் பாருங்கள். இரண்டின் வல்லமையும் புரியும்.

காந்தி கொலைவழக்கில் அவர் மேல் சுமத்தப்பட்ட பல குற்றங்களில் ஒன்று: 'ஓர் இந்துவைத் திருக்குரானைப் படிக்கச் சொன்னார்'. பெரியார் கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டார்கள்: 'நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்திலேயே குறை கண்டு பிடிக்கிறீர்கள்?'. அவர் சொன்னார்: 'அது என்னுடைய மதம் என்று சொல்லப் படுவதால்'. இதே பதில்தான் காந்தியும் சொல்லியிருப்பார். காந்தி அம்பேத்கர் பெரியார் என்று எல்லா சீர்திருத்தவாதிகளும் தங்கள் மதங்களைச் சீர்திருத்தியவர்களே. கடவுள் என்னைக் கைவிட்டு, நான் கடவுள்களைக் கைவிட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், நான் உங்களுக்குக் கொடுக்க முடிந்தது இது போன்ற மத நல்லிணக்கம் சொல்லும் புத்தகங்களே! 'ஏன் இஸ்லாம்?' எனக் கேட்டால், சுற்றி அமர்ந்திருக்கும் குழந்தைகளில் பசித்திருக்கும் சிறு குழந்தைக்கு முதல் தோசையைக் கொடுக்கும் ஒரு சாதாரண தாயின் மனநிலையே என்னுடையதும்!

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Sunday, August 25, 2013

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள்.
- புத்தர் (என நினைக்கிறேன்)

It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce.
- Michael Moore

When there was a country, I searched for freedom. Now I am free, but I have to search for a country.
- Papiya Ghosh
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
ஆங்கிலத்தில்: Terrorism Sources and Solutions
ஆசிரிய‌ர் : டி.ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 260 ரூபாய்
பக்கங்கள் : 413
வாங்கிய இடம் : இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சி
--------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதம். இந்நூற்றாண்டின் அன்றாடச் செய்திகளில் வழக்கமாகிவிட்ட இச்சொல்லின் விளக்கம்,கடவுள் கற்பு போல காலந்தோறும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 'அரசியல் அல்லது மதம் அல்லது சித்தாந்தம் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஓர் அரசாங்கத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பயமுண்டாக்கும் அல்லது பணியச் செய்யும் நோக்கத்தில் சூழ்ச்சி செய்து, சட்ட விரோதமான வன்முறையை நிகழ்த்துவது அல்லது சட்ட விரோதமான வன்முறை நிகழ்த்தப் போவதாகப் பயங்காட்டுவது' என்று பயங்கரவாதம் என்ற பதத்திற்கு, உலக அகராதி நிர்ணயிக்கும் அமெரிக்கா விளக்கம் தருகிறது. ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தாலும், எதுவெல்லாம் 'சட்ட விரோதமான'?

தூக்குமேடையில் சாகப் போவதற்கு முதல்நாள் இரவு ஏதோ ஒரு புத்தகத்தைப் பாதி படித்துவிட்டு, ஒரு தாளின் நுனியை மடக்கிவிட்டு, 'நான் விட்ட இடத்தில் இருந்து நாளை இன்னொருவன் தொடருவான்' என்று சாதாரணமாகத் தூங்கப் போன பகத் சிங், இன்றும் இந்திய இளைஞர்களின் புரட்சிச் சின்னம். ஆங்கிலேயர்களுக்குச் சட்ட விரோதமான பயங்கரவாதி. பயங்கரவாதி, அமைதிக்கான நோபல் பரிசு என்ற இரு முரண்பட்ட பெயர்களையும் வாழ்ந்தபோதே வாங்கிய யாசர் அராபத் இன்னொரு சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, எதிர்த்த முஜாஹிதீன் அமைப்பினரை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களுக்கு இணையாக ஒப்பிட்டது இன்னொரு உதாரணம். சுருக்கமாக, அப்பாவி குடிமக்களைக் கொல்லும் எந்தவொரு வன்முறை செயலையும் பயங்கரவாதம் எனக் கொள்வோம். நமக்கான செய்திகளில் பயங்கரவாதம் என்று சித்தரிக்கப்படும் சித்தாந்தங்களின், ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகம் இதோ!
(www.nhm.in)
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும். 91 வயதைக் கடந்த ஆசிரியர் டி.ஞானையா, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்; கம்யூனிஸ்ட் பிரமுகர். இன்றைய சிக்கல் நிறைந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் என்ற பொருள் மீதான ஆசிரியரின் மாறுபட்ட கருத்துகளே இப்புத்தகம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணன் நான்கு பக்கங்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் பற்றி 11 கட்டுரைகளும், இந்தியப் பயங்கரவாதம் பற்றி 5 கட்டுரைகளும், கடைசியாக 2 பின்னுரைகளும் என அமைகிறது இப்புத்தகம்.

சர்வதேச பயங்கரவாதம். 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் சர்வதேச பய‌ங்கரவாதத்திற்கு எதிராக நிரந்தரப் போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு இன்றுவரை அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் எல்லாம், ஏற்கனவே செய்து கொண்டிருந்த காரியங்களின் வீரிய வடிவமே என்பது தெளிவாகத் தெரியும். சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாய் என்று அது சுட்டிக் காட்டும் இடங்கள் எல்லாம், இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு அரபு நாடுகள். பொது மக்களும் தங்களின் அன்றாட உரையாடல்களில் சர்வதேச பயங்கரவாதம் என்பதை இஸ்லாமிய பயங்கரவாதம் என அடையாளப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஆயுதம் இருப்பதாகச் சொல்லி ஆயில் எடுக்கும் அமெரிக்க கதைகள்தான் இந்த 11 கட்டுரைகளும்.

சுமார் 2 கோடி பூர்வகுடி செவ்விந்தியர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் திட்டமிட்டு அழித்து அமெரிக்கா பிறந்த கதை ஒரு கட்டுரை. இந்திய ஆண் 40 பவுண்டு, பெண் 12, சிறுவர் 20 எனக் கொன்று தலை கொண்டுவந்தால் பரிசு. கறுப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்த‌ ஆபிரகாம் லிங்கன் செவ்விந்தியர்களைக் கொல்லும் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மனைவியை விவாகரத்து செய்த போது 150 அடிமைகளை வாழ்க்கைப்படியாகக் கொடுத்திருக்கிறார். கறுப்பின மக்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நாட் டர்னர் (Nat Turner), தோலை உரித்து பணப்பை செய்து ஒரு பெருமைமிகு நினைவுப் பரிசாக வைத்திருந்திருக்கிறார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர். மால்கம் எக்ஸ் (Malcolm X), மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr.) முடிவுகள் உங்களுக்கே தெரியும். இப்படி கொடுஞ்செயல் சித்திரவதை வன்கொடுமை என்ற பாவங்களுடனேயே பிறந்து, போர்வெறி உளவியலுடன் தொடர்ந்து வலம் வருவதை விளக்குகின்றன ஆரம்பக் கட்டுரைகள். எந்தவொரு அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போதும், ஒரு முடிக்கப்படாத போர் இருக்கும், அதை முடித்து வைக்க இரண்டாம் முறை அவரே தேர்ந்தெடுக்கப்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா?

அர்ஜென்டினா, நிகரகுவா, ஜப்பான், ரியூக்யூ மற்றும் பானின் தீவுகள், உருகுவே, சீனா, அங்கோலா, ஹவாய் என மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கதைகளையும், பியூடோ ரிகோ, ஹவாய், வேக் தீவுகள், குவாம் பகுதிகள், பிலிப்பைன்ஸ் என நாடு பிடிக்க போர் தொடுத்த‌ கதைகளையும் பேசுகிறது ஒரு கட்டுரை. Confession of an Economic Hit Man புத்தகத்தில் சொன்னது போல, கியூபா, காங்கோ, சிலி, தெற்கு வியட்நாம், டொமினிக் குடியரசு, பனாமா, நேற்றைய லிபியா என வெளிநாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, பொதுத் தேர்தல்களில் தலையிடுவது என அமெரிக்க உளவு நிறுவனம் CIA செய்து வரும் அடாவடிகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. Plan A, B, C, D, ... என்று அமெரிக்க உதவியுடன் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காட்டும் வன்முறைகள் பற்றி ஒரு கட்டுரை.

ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளில் 152ல் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ளன. அடுத்த 10 நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவை விட அமெரிக்காவினது அதிகம். சதாம் உசேனுக்கு எதிரான போரில் ஈராக்கிய மக்கள் தொகையில் 5% பேர் இழப்பு. ஹிட்லரின் நாசிகளுக்கு இணையாக, வியட்நாம் மீது ஏஜென்ட் ஆரஞ்ச் இரசாயன குண்டுகளை வானில் இருந்து கொட்டிவிட்ட கொடுர இனவழிப்புக் கதைகள்.,,,,,

இந்தியப் பயங்கரவாதம். இந்தியாவிற்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பேசுகின்றன 6 கட்டுரைகளும். விவசாயிகளின் பேரெழுச்சியாக ஆரம்பித்த நக்சல்பாரியின் கதையை, இன்றைய சல்வா ஜுடும் (Salwa Judum) வரை பேசுகிறது ஒரு கட்டுரை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை. இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம் பற்றி இரண்டு தனித்தனி கட்டுரைகள். அசோகர் காலம் முதல் 2008 நவம்பர் 26 மும்பை தாக்குதல் வரை பல விசயங்களைப் பேசுகின்றன இவ்விரண்டு கட்டுரைகளும். இப்புத்தகம் சொல்லும் தகவல்களில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களில் ஒன்றிரண்டாவது உதாரணமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வாசிப்பவர்கள் ஒருசமயம் ஒருசார்புடைய கருத்துடையவராக இருப்பின், அத்தகவல்களை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதால், இப்படியே விட்டுவிடுகிறேன். அவை உங்களின் வாசிப்பிற்கும், தேடலுக்கும், சிந்தனைக்கும், .....

இப்புத்தகம் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்புத்தகம் மேற்கொள் காட்டிய இன்னோர் அற்புதமான புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தப் புத்தகம் பற்றி நிறைய பேசுவோம். இப்புத்தகம் படியுங்கள். பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னுள்ள உளவியல் அறியுங்கள். அவை தோன்றுவதற்கான காரணங்கள் உணருங்கள். பின்னர் நீங்களும் சொல்வீர்கள்; பயங்கரவாதம் மதமற்றது - பயங்கரவாதம் மொழியற்றது. இதுவரை மொழியின் அடிப்படையில் நசுக்கப்பட்ட ஈழத்தில், அங்கு இன்று தமிழர்களிடையே மதம் என்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு ஒருபடி மேலே போய் சாதிகளால் பிரித்துக் கொ(ல்)ள்கிறோம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியின் நவீன வடிவங்கள்! அன்றைக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேட்டார்:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

அனுபந்தம்:
----------------
1. Mausam, Delhi Belly. இந்த இரண்டு படங்களில் எதைப் பார்ப்பது என்று திரையரங்கின் முன் பயங்கர வாக்குவாதம். கடைசியாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். காசு சுண்டிவிடவில்லை. விமர்சனங்களை வைத்து முடிவு செய்யவில்லை. சுவரொட்டி பார்த்து ஈர்க்கப்படவில்லை. கதாநாயகனின் மதம்தான் தீர்மானித்தது!

2. ஓர் இந்தித் திரைப்படத்தில், அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதிக் காட்சியில் அமெரிக்க அதிபரைச் சந்தித்து, 'My name is Khan; but I am not terrorist' என்பார் ஷாருக் கான். இதே மாதிரி ஓரிஸா அல்லது கர்நாடகா அல்லது குஜராத் என்று ஏதாவது ஒரு மாநிலத்தைச் சுற்றி வந்து, ஓர் உள்ளூர் கவுன்சிலரிடமாவது சொல்ல முடியுமா? என் மதத்தைச் சொல்ல மறுத்ததற்காக பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்ட ஆட்டோக்காரனை நான் இத்தேசத்தில் சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் போய்க் கொண்டிருந்த இடம் DRDO!

- ஞானசேகர்