Saturday, February 16, 2013

101. CONFESSIONS of an ECONOMIC HIT MAN


மிகவும் வேண்டப்பட்ட விரோதியும், வேண்டப்படாத நண்பனுமாகிய பிரேம்குமார் இந்தப் பதிவு மூலம் எங்களுடன் இணைகிறார்.
- சேகரும் சேரலும்

You Control the Debt, you control everything.
- The International (movie)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Confession of an Economic Hit Man
ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ்
வெளியீடு : Plume (December 27, 2005)
பக்கங்கள் : 300
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30 வருடங்களாகச் செதுக்கப்பட்ட போராட்டங்கள் நம் கண்முன்னே துடைத்து எறியப்பட்ட அதே வேளையில் லிபியாவில் திடீரென்று தோன்றிய போராளிகள் ஆட்சியைப் பிடித்தனர். ஒரு திரைப்படத்தைப் போல் நாம் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் எண்ணெய் வயல்களைத் தனதாக்கிக் கொண்டது British Petroleum நிறுவனம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதாகச் சொல்லி எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைத் தனதாக்கிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவனங்கள். ஐநாவின் பொருளாதார தடையினால் இராக்கில் மருத்துவ உதவியின்றி பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இறந்தனர். இராக்கினால் இனி எந்த பேரழிவு ஆயுதங்களைப் பற்றியும் யோசித்து கூட பார்க்க முடியாது என்று ஆய்வு செய்து ஐநாவில் அறிக்கை சமர்பித்த ஆறு மாதத்தில் பேரழிவு ஆயுதம் இருப்பதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இராக்கின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவன‌ங்கள். இவற்றை எல்லாம் செய்திகளில் நீங்கள் எளிதாக பார்க்கமுடியாது. ஏனெனில் மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. NBC  - General Electric, ABC - Disney, CBS -Viacom, CNN - AOL & Time Warner.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள்  உலக நாடுகள் மீது மூன்று வகையான தாக்குதல்களைத் தொடுக்கின்றன.
1. பொருளாதாரத்தை ஆயுதமாகக் கொண்டு நாடுகளைக் கடனாளி ஆக்குவது - இந்தோனேசியா, சௌதி
2. புரட்சி வெடிப்பதாக அறிவித்து அல்லது விபத்தை ஏற்படுத்தி  ஆட்சியாளர்களைத் தீர்த்துக் கட்டுவது அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பது
ஜெய்மி ரோல்டோஸ்  (இகுவேடார் ஜனாதிபதி)
ஓமர் டொரிஜோஸ் (பனாமா ஜனாதிபதி)
அலெண்டே (சிலி ஜனாதிபதி)
முகமது மொசதே (ஈரான்)
3. போர் அறிவித்து நாட்டை ஆக்கிரமிப்பது - பனாமா, ஈராக்

இதில் முதல்வகை தாக்குதலைத் தொடுப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ்  போன்றவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். ஆலோசனை நிறுவனம் ஒன்றில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஜான் பெர்கின்ஸ் முதன்மை பொருளாதார வல்லுநர், பொருளாதாரம் மற்றும் பிராந்திய திட்டமிடல் மேலாளர் என பல பதவிகள் வகித்தாலும் இவருடைய பணி அமெரிக்க பெரும்  நிறுவனங்களின் இலாபத்திற்காக நாடுகளை மீள முடியாத கடனில் சிக்கவைப்பது. மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போவதாக நம்பவைத்தோ அல்லது லஞ்சமாக பெண்ணோ பணமோ பொருளோ கொடுத்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மிகப்பெரிய அளவில் கடன் பெறவைப்பது. கடனைத் திருப்பி செலுத்த முடியாத போது இந்நாடுகளின் இயற்கை வளங்களும் மக்களும் பெரும் நிறுவனங்களுக்கு இரையாகின்றன.
(http://www.ingoodbooks.com)
ஜான் பெர்கின்ஸ் இப்புத்தகத்தில்  அவர் பங்குபெற்ற திட்டங்களைப் பற்றியும் அதன் விளைவுகளையும் விவரிக்கிறார். இவரைப் போன்றோரின் வெற்றி, நாடுகளை வளர்ச்சியின் மாயையில்  சிக்கவைத்து அடிமைகளாக்கி விடுகிறது. இவர்களின் தோல்வி, பல நேரங்களில் மக்களை நேசிக்கும் தலைவர்களின் மரணத்தில் முடிகிறது. இகுவேடாரின் ஜனாதிபதி  ஜெய்மி ரோல்டோஸ், பனாமா ஜனாதிபதி ஓமர் டொரிஜோஸ் தனது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்ததற்காக விபத்தில் கொல்லப்பட்டனர். சிலியின் ஜனாதிபதி தனது இடதுசாரி கொள்கையின் மூலம் பெருநிறுவன‌ங்களை எதிர்த்துக் கொண்டதால் புரட்சியில் தன் உயிரை இழக்க நேர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த  Summer Institute of Linguistics என்ற கிறிஸ்துவ அமைப்பு அமேசான் காடுகளில்  எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் உணவுகளை வழங்கி பிற்பாடு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உடைகள் மற்றும் உணவு வழங்கி அவர்களை எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக இடம்பெயர வைத்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமக்கு ஆதரவளிக்க யாருமில்லாததால் இம்மக்கள் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலின் மூலம் வரும் பணத்தில் ஆயுதம் வாங்கி தம் காடுகளையும் தாம் நேசிக்கும் உயிரினங்களையும்  காப்பதற்காக போராடுகின்றனர். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு இவர்கள்   வெறும் போதை பொருள் வியாபாரிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முனைகின்றன ஊடகங்கள்.

வெனிசுவேலாவிலும் ஈரானிலும் ஏற்பட்ட தோல்விகளை உங்களின் வாசிப்பிற்கே விட்டு விடுகின்றேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் இந்நூலின் தமிழாக்கத்தை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

குடும்ப அட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டங்களையும் பெரும் முதலாளிகளின் நலனிற்காக தேசிய முதலீட்டு வாரியத்தை எல்லா சட்டத் திட்டங்களுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டதாகவும் உருவாக்கத் துடிக்கும் அரசு; உலகில் பட்டினியாய் இருப்பவர்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் இருக்கையில் பெரும் நிறுவன‌ங்கள் பண்ணையார்களாவதற்கு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேர அறிவுறுத்தும் அரசின் பிரதம மந்திரி. ஓர் இனத்தின் அழிவு அணு உலை வடிவத்தில் நம் வாயிலை நெருங்கிவிட்ட நிலையில் வால்மார்ட் நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் துடிக்கின்ற இந்நேரத்தில் செய்திகளுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மையைக் கண்டுணர்வது நம் கடமையாகிறது.

- பிரேம்குமார்
 (http://premkumarkrishnakumar.wordpress.com/)

Saturday, February 02, 2013

100. JERUSALEM - The Biography

(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்)

தொடர்ந்து படிப்பதற்கு முன் 'நிலமெல்லாம் ரத்தம்' புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள்.

FOREIGNER! DO NOT ENTER WITHIN THE GRILLE
AND PARTITION SURROUNDING THE TEMPLE
HE WHO IS CAUGHT
WILL HAVE ONLY HIMSELF TO BLAME
FOR HIS DEATH WHICH WILL FOLLOW
- சாலமன் தேவாலயச் சுவர் வாசகம் (c23BCE)

மதத்தின் பெயரால் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று இங்கே பாருங்கள்.
- Harriet Martineau

Everybody has two cities, his own and Jerusalem.
-Teddy Kollek (மேற்கு ஜெருசலேம் மேயராக இருந்தவர்)

எருசலேம் நகர மகளிரே எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
- இயேசு கிறித்து (விவிலியம்)

Jerusalem is an old nymphomaniac who squeezes lover after lover to death, before shrugging him off her with a yawn, a black widow who devours her mates while they are still penetrating her.
- Amos Oz (இஸ்ரேலிய எழுத்தாளர், A Tale of Love and Darkness)

Well, if either one side stops complaining, you will be dismissed.

இங்கிலாந்து பிரதமர் ஜெருசலேம் ஆளுநரிடம் சொன்னது

I am sitting where a god has stood.

- Mark Twain
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Jerusalem - The Biography
ஆசிரியர் : Simon Sebag Montefiore
மொழி : ஆங்கிலம்
வெளியீடு : Orion Books, London
முதற்பதிப்பு : 2011
விலை : 595 ரூபாய்
பக்கங்கள் : 640
------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வு தரும் நம்பிக்கையில் மக்களைத் தன்நோக்கி ஈர்க்கும் நகரங்களைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்து ஆண்டாண்டு காலமாய் மரணம் தேடி மக்கள் போகும் நகரம் அறிவீர்களா? கையளவு மண்ணில் கடலளவு கதை சொல்லும் ஜெருசலேம் நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

ஜெருசலேமிற்குள் நுழைவது அவ்வளவு சுலபம் அல்ல. 1950ல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் உயிரியல் பூங்காவில் உள்ள 1 சிங்கம், 1 புலி, 2 கரடிகளுக்கு உணவிடுவதில் வந்த பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இரு சமரசங்களைப் பரிந்துரை செய்தது. இஸ்ரேலிய பணத்தில் அரபு நாடுகளின் குரங்குகளை வாங்கலாம். அல்லது இஸ்ரேலிய நாட்டின் குரங்குகளை ஜோர்டான் நாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் வழியாகக் கொண்டு போகலாம்.

(http://wikimedia.org)
ஜெருசலேம். அதில் கிழக்கு ஜெருசலேம். அதில் பழைய ஜெருசலேம் நகரம். ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் சற்றுக் குறைவான பரப்பு. உலகப் பாரம்பரிய சின்னம். இஸ்ரேல் சொந்தம் கொண்டாடினாலும் நாடற்ற நிலம். இங்குதான் கிறித்தவ இஸ்லாமிய யூத ஆர்மேனியர்களுக்கு என தனித் தனியே புராதனக் குடியிருப்புகளும், முப்பெரும் மதங்களும் சொந்தமெனும் கோயில் மலையும் (Temple Mount) உள்ளன. கோயில் மலை என்பது ஈசாக்கைக் கடவுள் ஆணைப்படி ஆபிரகாம் பலி கொடுக்கப் போன இடம் மற்றும் சாலமோன் தேவாலயம் இருந்த இடம் என்பது யூத நம்பிக்கை. இன்று மேற்குச் சுவர் (Western Wall) மட்டும் எஞ்சி நிற்கிறது. முகம்மது நபி சொர்க்கம் சென்று மீண்டும் திரும்பிய இடமாக இஸ்லாமியர்களால் நம்பப்படும் Dome of Rock மற்றும் அதன் அருகில் உள்ள அல் அக்சா மசூதியும் கோவில் மலையில் உள்ளன. இயேசு கிறித்து கொல்லப்பட்ட இடம் (Holy Sepulchre) கிறித்தவக் குடியிருப்புப் பகுதியில் உள்ளது.
பழைய ஜெருசலேமைச் சுற்றி மதில். அதற்கு 8 வாயில்கள். அதில் கிழக்கே இருக்கும் தங்க வாயில் (Golden Gate) 400 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கே இருக்கும் இன்னொன்று வாயிலில் இரு சிங்கச் சிற்பங்கள் இருப்பதால் அதற்குச் சிங்க வாயில் (Lion's Gate) என்று பெயர். அச்சிங்கச் சிற்பங்கள் எப்படி வந்தன என்பதற்குப் பல கதைகள் உள்ளன.
1) 1516ல் ஜெருசலேமைக் கைப்பற்றிய ஒட்டாமன் பேரரசன் முதலாம் செலிமின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. மேடாய் இருக்கும் ஜெருசலேமை மட்டப்படுத்த நினைத்ததற்குத் தண்டனை என சொல்கின்றன. அப்படி செய்ய மாட்டேன், சுற்றி சுவர் கட்டுகிறேன் என்று சொன்னபின் விட்டுவிடுகின்றன. 2) முதலாம் செலிமுக்குப் பின் ஆண்ட சுலைமான் தான் ஒட்டாமன் வெற்றியைக் கொண்டாட சிங்கச் சிற்பங்களை வைத்தான். 3) சுலைமானின் கனவில் சிங்கங்கள் அவனைத் தின்ன வருகின்றன. கனவு விளக்கம் சொல்பவர்களிடம் கேட்கிறான். 'தூங்கப் போகும் முன் என்ன சிந்தனையில் இருந்தீர்கள்?'. 'வரி கட்டாதவர்களை எப்படி தண்டிப்பது என்ற யோசனை'. 'புனித பூமியின் குடிமக்களைத் தண்டிக்க நினைத்ததற்காக ஆண்டவனின் தண்டனை இத்துர்க்கனவு'.
இரண்டு சிங்கச் சிற்பங்களுக்கு இத்தனை கதைகளா? அதுமட்டுமல்ல, இன்றுதான் அதன் பெயர் சிங்கவாயில். ஒரு காலத்தில் அதன் பெயர் புனித ஸ்டீவன் வாயில். இதே போல் ஜெருசலேமின் ஒவ்வொரு வீதிக்கும் குறைந்தது 3 பெயர்கள். ஜெருசலேமிற்கே வரலாற்றில் 70 பெயர்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை. சரி, சிங்கவாயில் கதைகளில் எதுதான் உண்மை? ஜெருசலேமை வென்றவர்கள் தங்கள் தேசங்களில் இருந்து கொண்டு வந்த பொருட்களில் ஜெருசலேமைக் கட்டியதை விட, ஏற்கனவே இருந்தவற்றை இடம் மாற்றி வைத்ததைத் தான் பலமுறை செய்திருக்கிறார்கள். அப்படித்தான் இவ்விரு சிற்பங்களை நகரின் வடமேற்கில் இருந்து எடுத்து வந்து செலிம் கட்டிய மதிலில் ஒரு வாயிலில் வைத்து சிங்கவாயில் எனப் பெயர்வரச் செய்தான் சுலைமான். அவ்விரு சிற்பங்களும் ஒட்டாமனுக்கு முன் ஆட்சி செய்த எகிப்திய மம்லூக் சுல்தான்களில் ஒருவனான‌ பைபார்ஸ் தன் குருவிடம் இருந்து 300 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்டவை. எப்படி இருக்கிறது உண்மை? உண்மையின் கடைசித் துளியையும் சேர்த்து சீரணித்துக் கொள்ளுங்கள். அவ்விரு சிற்பங்களும் சிங்கங்க‌ள் அல்ல, சிறுத்தைகள்!
ஜெருசலேம் பற்றி இணையத்திலும் புத்தகங்களிலும் மதமும் அரசியலும் சாராத கற்பனைகளற்ற‌ உண்மையைத் தேடுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதற்குச் சிங்க வாயில் ஓர் உதாரணம். 1800 முதல் 1875 வரை ஆங்கிலத்தில் மட்டும் ஜெருசலேம் பற்றி 5000 புத்தகங்கள் வெளிவந்து இருக்கின்றன. பெரும்பாலும் இன அல்லது மதச்சார்பு உடையவை. அல்லது உலக அழிவைப் பற்றி பயம் காட்டுபவை. என் நேரத்தை வீணாக்காமல் நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடி புரியும்படி, பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இன்றைய பிரச்சனைகளை விதையில் இருந்து விளக்கும் ஒரு புத்தகம் தேடினேன். இப்போது ஜெருசலேமுடன் புத்தகத்திற்குள் போகலாம்.
(https://images.bookworld.com.au)
Simon Sebag Montefiore அவர்களின் Jerusalem - The Biography. பல இனங்கள் மொழிகள் மதங்கள் பேரரசுகள் என பின்னிப் பிணைந்து கிடக்கும் ஒரு நகரத்தின் கதையை அற்புதமாக புத்தகப்படுத்தி இருக்கிறார். ஜெருசலேம் சம்மந்தப்பட்டவர்களின் வம்சாவழியினரைப் பேட்டி கண்டு அவர்களின் இன்றைய நிலையை ஆங்காங்கே சொல்கிறார். இயேசு கிறித்துவின் சிலுவையைப் பாதுகாத்து வந்த குடும்பம் இன்று சுற்றுலா வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் என்று படிக்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 

53 தலைப்புகளில் கதை சொல்கிறது புத்தகம். ஜெருசலேம் நகரை உண்டாக்கிய இஸ்ரேலின் இரண்டாம் மன்னன் தாவீது முதல் எகிப்தின் இரண்டாம் அதிபர் கமால் அப்துல் நாசர் வரை. 1050BCE முதல் இன்றைய நிலைக்குக் காரணமான 1967 யுத்தம் வரை. முன்கதைச் சுருக்கமாக‌ ஆபிராம் முதல் சவுல் வரை. பின்கதைச் சுருக்கமாக 2010ல் பராக் ஒபாமா, பெஞ்சமின் நெடான்யாஹூ வரை. 32 பக்கங்களுக்குப் புகைப்படங்கள். சில குடும்ப மற்றும் ஆட்சியாளர்களின் 5 வம்சாவழிப் பட்டியல்கள். வெவ்வேறு காலக் கட்டங்களில் இஸ்ரேல் - பாலஸ்தீன் எல்லைகளைக் காட்டும் 11 வரைபடங்கள். எந்தவொரு தகவலையும் பின்னாளில் எளிமையாகக் கண்டுபிடிக்கும் அளவிற்கு அருமையாகப் பகுத்து இருக்கிறார்.

ஜெருசலேம் பற்றி ஆசிரியரின் முன்னுரை இது: ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறு. உலகத்தின் மையம் என்று நம்பப்படும் ஜெருசலேம் கண்டிப்பாக இன்றைக்கு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் மையமேதான். நாகரீகங்களின் போர்க்களம். தெய்வ நம்பிக்கைகளும் மறுப்புகளும் வெட்டிக் கொள்ளும் புள்ளி. தலைசுற்ற வைக்கும் சதிகளின் பிறப்பிடம். நம்பிக்கைகளால் கட்டப்பட்ட புனித நகரம். ஒரே கடவுளின் வீடு. இரு மக்களின் தலைநகரம். மூன்று கடவுளர்களின் கோவில். பூமி சொர்க்கம் என ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் ஒரே நகரம்.

335 கப்பல்கள் 35,000 வீரர்கள் மற்றும் 167 விஞ்ஞானிகளுடன் எகிப்திற்குப் படையெடுத்துச் சென்ற நெப்போலியன், பாரீசுக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: I would found a religion. I saw myself marching on the way to Asia, mounted on an elephant, a turban on my head, in one hand a new Koran I would have composed myself.... By the time you read this, it's possible I will be standing in the ruin's of Solomon's Temple.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் தன்னைக் கடற்பயணம் அனுப்பிய அரசிக்கு இப்படி கடிதம் அனுப்புகிறார்: Before the end of the world, all prophecies have to be fulfilled, and the Holy City has to be given back to the Christian Church.

(http://d.gr-assets.com)
தெரியாமல் அல்லது உண்மையென அல்லது உண்மைபோல் நான் நம்பிக் கொண்டிருந்த சில அடிப்படை விசயங்களை இப்புத்தகம் புரட்டிப் போட்டது.
1) யூதர்களின் கடவுள் ஜெஹோவா என்பது தவறு. ஹீப்ருவில் சுருங்கிய வடிவமான YHWH ஐ, ஆங்கிலத்தில் தவறாக உச்சரிக்கப் போய் வந்ததுதான் ஜெஹோவா என்ற சொல்லாடல். யூதர்கள் தங்கள் ஒரே கடவுளின் பெயரை உச்சரிப்பதில்லை. ஜெருசலேமில் சாலமோன் தேவாலயம் இருந்த காலத்தில் தலைமைக் குருவிற்கு மட்டும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உச்சரிக்க அனுமதி இருந்தது.
2) விவிலியம் தவிர வேறெங்கும் சான்று இல்லாத தாவீது மன்னனின் இருப்பை, 1993ல் இஸ்ரேலின் வட எல்லையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு (Tel Dan Stele) தான் நிரூபித்தது.
3) ஆப்ராம் குடியேறுவதற்கு முன், தாவீது ஜெருசலேமை உருவாக்குவதற்கு முன் அங்கிருந்த பூர்வகுடிகள் யார்? அவர்களின் தெய்வம்?

ஜெருசலேம் எக்காலத்தில் எதற்காக எவரிடம் இருந்தது என்று அறிய முயன்றாலே, ஆசிரியர் சொல்வது போல், உலக சரித்திரம் அடங்கிவிடும். கடவுளையே எதிர்த்து கோபுரமும் தொங்கும் தோட்டமும் அமைத்த பாபிலோனியர்கள். பேரரசன் சைரஸ், அவனுக்குப் பின் வந்து 3 கண்டங்களை முதன்முதலில் ஆட்சி செய்த டேரியஸ் என பெர்சியர்கள். பெர்சியர்களைத் தொடர்ந்தால் தாஜ்மகால் வரை வரலாம். அலெக்சாண்டர் தலாமி என்று மாசிடோனியர்கள். அலெக்சாண்டரைத் தொடர்ந்தால் இந்திய எல்லை தொடலாம். பிறகு இயேசு கிறித்து. ரோமானிய மன்னன் காலிகுலாவைத் தொடர்ந்தால் ஒரு XXX திரைப்படத்தை எதிர் கொள்ளலாம், நீரோவைத் தொடர்ந்தால் 666 என்ற எண்ணின் மேல் பயத்துடன் ஒலிம்பிக்கில் நிர்வாணமாக டுவதைப் பார்க்கலாம். 

ரோமானியர்கள் கிழக்கே கால் பதிக்கப் போய் கான்ஸ்டான்டிநோபிள் நகரை உருவாக்கிய மன்னன் கான்ஸ்டன்டைன் என பைசாந்தியர்கள். கிறித்தவ‌த் தலைமைப் பீடத்தில் குளறுபடிகள். பிறகு அரபு மக்களுக்குச் சரித்திரம் தந்த முகமது நபி. கலீபாக்களின் முப்பெரும் தலைமைப் பீடங்கள். அரபு கலீபாக்களின் சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களின் 4 வம்சங்கள். சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும், அலாவுதினும் அற்புத விளக்கும் போன்ற கதைகள். ஷியா இஸ்லாமியர்களின் 12வது இமாம். உலகின் மிக நீண்ட போரான சிலுவைப் போர்கள். தைமூர், செங்கிஸ்கான் என மங்கோலியர்கள். உலகின் கடைசிப் பேரரசான ஒட்டாமன் பேரரசு. நெப்போலியன். முதலில் புகைப்படம் எடுக்கப்பட்ட கிரீமியன் யுத்தம். புரட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரஷ்யா. உலகப் போர்கள்.

ஒட்டாமனுக்கு முன் மம்லுக் (Mamluk) என்ற அடிமை வம்சம். அவர்களின் வம்சாவழியைத் தொடர்ந்தால் குத்புதீன் ஐபக். அவரைத் தொடர்ந்தால் திருவரங்கம் ரங்கநாதர் கோவில் வழியாக மதுரை ஆயிரம் கால் மண்டபம் வரை வரலாம். முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் சிதறிய துண்டுகளைப் பார்த்தால் அரபு நாடுகள். முகமது நபியின் வம்சாவழிகளைத் தொடர்ந்தால் சவூதி ஜோர்டான் ஈராக் மொராக்கோ ஈரான் என்று நம் காலத்தவர்களையும் அறியலாம். லெபனான் மற்றும் எகிப்தின் வரலாற்றைப் படிக்கச் சொல்லி ஜெருசலேம் கட்டாயப்படுத்தும். சவூதியின் அமெரிக்கச் சார்பு, ஈரானின் அமெரிக்க எதிர்ப்பு, ஐரோப்பாவின் துயரம் (Sickman of Europe) என்று துருக்கி ஒதுக்கப்படும் வரலாற்றுப் பின்னணி அறியலாம். உண்மையிலேயே ஜெருசலேமின் வரலாறு என்பது உலகத்தின் வரலாறுதான்.

தன் ஆண் காதலன் நைல் நதியில் மூழ்கி இறந்து போக அவன் நினைவாக ஒரு நகரத்தை உண்டாக்கி அவனின் நிர்வாணச் சிலைகளைத் தேசமெங்கும் நிறுவிய பேரரசன். எதிரிகளுக்குப் பானத்தில் விசம் கலந்து வைத்துவிட்டு, மறுந்துபோய் அதைக் குடித்து இறந்து போன மன்னன். சாகின்ற மனிதனைப் பெட்டிக்குள் அடைத்து வைத்து உயிர் எப்படி வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்த மன்னன். செரிமானம் ஆராய்ச்சிக்கு உயிருள்ள மனிதனின் குடலை வெட்டிய மன்னன். குழந்தைகள் எப்படி மொழிகளைக் கற்கிறார்கள் என்று கண்டறிய அவர்களைத் தனியறைகளில் அடைத்து வைத்த மன்னன். தன் செல்லப் பிராணி குரங்குடன் எப்போதும் வலம் வரும் இளவரசன். இது போன்ற விசித்திரக் கதாப்பாத்திரங்களை ஜெருசலேமின் வாழ்க்கையில் சந்திக்கலாம்.

மனித வரலாற்றில் நீண்ட காலம் பேசப்பட்ட நகரங்கள் எதென்ஸ் மற்றும் ஜெருசலேம் மட்டும்தான். பிறந்தது முதல் இன்றுவரை ஜெருசலேமின் கவர்ச்சி மங்கவே இல்லை. ஜெருசலேமில் இல்லாதவர்கள் ஜெருசலேமையும் தத்தம் மதநூல்களில் சொல்லப்படும் காட்சிகளையும் தாம் வாழும் இடத்திலேயே கற்பனை செய்து கொண்டார்கள். அக்கற்பனைகளின் விளைவாக அமெரிக்காவில் மட்டும் 18 ஜோர்டான், 12 கானான், 66 சேலம், 18 ஹெப்ரான், 1 இஸ்ரேல், 4 ஜெருசலேம், 9 பாலஸ்தீன் என்ற நகரங்கள் உள்ளன. நசரேத் என்ற பெயரில் 2 நகரங்களைத் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருக்கிறேன். சரி, தமிழ்நாட்டுச் சேலம் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரியுமா?

அக்கற்பனைகள் தூரத்துத் தேசங்களின் அரசியலைக் கூட ஆக்கிரமித்து இருந்தன என்பதை அறிய, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு அதன் சின்னமாக (American Great Seal) தாமஸ் ஜெபர்ஸன் பரிந்துரை செய்த படத்தை இணையத்தில் பாருங்கள். யூதர்களின் சாலமோன் தேவாலய‌த்திற்குப் போட்டியாக கான்ஸ்டான்டிநோபிளில் ரோமானியர்களால் கிறித்தவர்களின் ஹேகியா சோபியா கட்டப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் இஸ்தான்புல் ஆனபின் மசூதியாகி இன்று அருங்காட்சியகமாக இருக்கிறது. அதற்குப் போட்டியாக ஜெருசலேமில் இஸ்லாமியர்களின் அல் அக்சா மசூதி கட்டப்பட்டது.

யூதர்களுடன் சமரசம் பேசியதற்காக‌ எகிப்தின் அதிபர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். அரபுகளுடன் சமரசம் பேசியதற்காக‌ இஸ்ரேலியப் பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார். ஜெருசலேமைப் பகிர்ந்து கொள்ள உருவான 40 திட்டங்கள் இதுவரை தோல்வி அடைந்துள்ளன. கோயில் மலையைப் பகிர்ந்து கொள்ள மட்டும் 13 மாதிரிகள் கிடப்பில் உள்ளன. 400 வருடங்கள் கிறித்தவ, 1300 இஸ்லாமிய, 1000 வருடங்கள் யூத சாயலுடன் இருந்த ஜெருசலேம், மதங்களின் அதிகாரம் அரசியல் சண்டைகள் இல்லாமல் மதநல்லிணக்கத்துடன் சில காலங்கள் இருந்திருக்கிறது. அவை பொற்காலங்கள்! புத்தகத்தின் கடைசியில் அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் பழைய ஜெருசலேம் எப்படி படிப்படியாக எழுந்து தனது மத ஆராதனைகளுடன் தினமும் தன் பணிகளைத் தொடங்குகிறது என அழகாக விளக்குகிறார் ஆசிரியர். யூதம் கிறித்தவம் இஸ்லாம் மதங்கள் தங்களுக்குள் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அந்த மதிலுக்குள் தங்கள் மத அடையாளங்களைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி அற்புதம்.
(http://www.dancutlermedicalart.com)
20‍/07/1951. அல் அக்சா மசூதிக்குள் ஜோர்டன் மன்னர்
முதலாம் அப்துல்லாவைக் கொன்றவனின் உடல்
ஜெருச‌லேம் வரலாறு பற்றிய எனது சொந்தக் கருத்துகள்: 
பிடித்த நபர்கள்:
1. முகம்மது நபி
2. சுல்தான் சலாவுதீன்
3. யாஸர் அராபத் (ஜெருச‌லேம் மீது யூத‌ர்க‌ளின் உரிமையை ஒட்டுமொத்த‌மாக‌ ம‌றுத்த‌து த‌விர‌)
4. தியோட‌ர் ஹெர்ஸ‌ல்
5. முத‌லாம் உம‌ர் 
6. முத‌லாம் முஆவியா (Muawiyah I)
7. ஒட்டாம‌ன் பேர‌ர‌ச‌ன் சுலைமான் (Suleiman the Magnificent)
8. பெஞ்ச‌மின் டிஸ்ரேலி (Benjamin Disraeli)
9. ரோமானியப் பேரரசன் இர‌ண்டாம் ஃப்ர‌டெரிக் (Frederick II)
10. ரோமானியப் பேரரசன் ஜீலிய‌ன் (Julian)

பிடிக்காத நபர்கள்:
1. போப் அர்பன் 2
2. அடால்ப் ஹிட்லர்
3. ப‌ல‌ ரோமானிய‌ ம‌ன்ன‌ர்க‌ள். குறிப்பாக காலிகுலா நீரோ ஹாட்ரியன்
4. மார்டின் லூதர்

திரிந்துபோன வரலாற்றிற்காக‌ பரிதாபப்பட்டேன்:
1. அப்சலோம் - தாவீதின் மகன்
2. மம்லுக் சுல்தான் பைபார்ஸ்
3. தொழுநோய் மன்னன் நான்காம் பால்ட்வின் (Baldwin IV)
4. ஒட்டாமன் பேரரசு
5. பரபாஸ் - இயேசு கிறித்துவிற்குப் பதிலாக விடுதலை செய்யபட்டதற்காக கெட்டவனாகி விட்டார்

(http://briannibbe.files.wordpress.com)
Dome of the Rockக்கும் 1,50,000 கல்லறைகளுக்கும் இடையில் தங்க வாயில்
கனவு கற்பனை நம்பிக்கை என்ற சக்திகளால் தான் இதுவரை ஜெருசலேம் வாழ்ந்து கொண்டிருக்கிறது; இனிமேலும் வாழும். நம்பிக்கை ஜெருசலேமின் அடையாளம். தனது மீட்பர்களைத் தவிர வேறு யாரையும் அது நம்புவதில்லை. உலக அழிவு பற்றிய புரளிகளை நம்புவதில்லை. பல போலிகளை நிராகரித்து விரட்டி இருக்கிறது ஜெருசலேம். உண்மையை நிரூபிக்க தீக்குளித்தவனைக் கூட நம்புவதில்லை ஜெருசலேம். எந்தவொரு கொடிய சம்பவத்திலும் அந்த நம்பிக்கைதான் ஜெருசலேமை முன்னோக்கி நகர்த்தி இருக்கிறது. இன்றைய ஜெருசலேமின் நிலைமையைப் பார்க்கும் நமக்கெல்லாம் பரிதாபமாக இருக்கலாம். ஆனால் பிரிட்டன் மறைமுகமாகத் துண்டாட நினைத்தபோது, பேரரசர்கள் தங்கள் மத அடையாளங்களை மீட்டெடுக்க ஜெருசலேமைச் சுற்றிச் சுற்றி வந்த‌போது, தங்கள் புனிதத்தலங்கள் சிதில‌மாகியபோது என்று பல கொடூர சம்பவங்களைச் சந்தித்த ஜெருசலேமிற்கு இன்றைய நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று வரலாற்றின் பக்கங்கள் நினைக்க‌ வைக்கும். எந்த நிலையும் மாறும் என்பதில்தான் ஜெருசலேமின் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் தங்கவாயிலின் வாசலில் 1,50,000 மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. எந்த நிலை மாறினாலும் தங்கவாயில் மட்டும் உலக அழிவு வரை திறக்கப்படாது!

- ஞானசேகர்