Saturday, February 16, 2013

101. CONFESSIONS of an ECONOMIC HIT MAN


மிகவும் வேண்டப்பட்ட விரோதியும், வேண்டப்படாத நண்பனுமாகிய பிரேம்குமார் இந்தப் பதிவு மூலம் எங்களுடன் இணைகிறார்.
- சேகரும் சேரலும்

You Control the Debt, you control everything.
- The International (movie)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: Confession of an Economic Hit Man
ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ்
வெளியீடு : Plume (December 27, 2005)
பக்கங்கள் : 300
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
30 வருடங்களாகச் செதுக்கப்பட்ட போராட்டங்கள் நம் கண்முன்னே துடைத்து எறியப்பட்ட அதே வேளையில் லிபியாவில் திடீரென்று தோன்றிய போராளிகள் ஆட்சியைப் பிடித்தனர். ஒரு திரைப்படத்தைப் போல் நாம் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் எண்ணெய் வயல்களைத் தனதாக்கிக் கொண்டது British Petroleum நிறுவனம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவதாகச் சொல்லி எண்ணெய்க் குழாய்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களைத் தனதாக்கிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவனங்கள். ஐநாவின் பொருளாதார தடையினால் இராக்கில் மருத்துவ உதவியின்றி பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இறந்தனர். இராக்கினால் இனி எந்த பேரழிவு ஆயுதங்களைப் பற்றியும் யோசித்து கூட பார்க்க முடியாது என்று ஆய்வு செய்து ஐநாவில் அறிக்கை சமர்பித்த ஆறு மாதத்தில் பேரழிவு ஆயுதம் இருப்பதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இராக்கின் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றிக் கொண்டன‌ அமெரிக்க நிறுவன‌ங்கள். இவற்றை எல்லாம் செய்திகளில் நீங்கள் எளிதாக பார்க்கமுடியாது. ஏனெனில் மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. NBC  - General Electric, ABC - Disney, CBS -Viacom, CNN - AOL & Time Warner.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள்  உலக நாடுகள் மீது மூன்று வகையான தாக்குதல்களைத் தொடுக்கின்றன.
1. பொருளாதாரத்தை ஆயுதமாகக் கொண்டு நாடுகளைக் கடனாளி ஆக்குவது - இந்தோனேசியா, சௌதி
2. புரட்சி வெடிப்பதாக அறிவித்து அல்லது விபத்தை ஏற்படுத்தி  ஆட்சியாளர்களைத் தீர்த்துக் கட்டுவது அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பது
ஜெய்மி ரோல்டோஸ்  (இகுவேடார் ஜனாதிபதி)
ஓமர் டொரிஜோஸ் (பனாமா ஜனாதிபதி)
அலெண்டே (சிலி ஜனாதிபதி)
முகமது மொசதே (ஈரான்)
3. போர் அறிவித்து நாட்டை ஆக்கிரமிப்பது - பனாமா, ஈராக்

இதில் முதல்வகை தாக்குதலைத் தொடுப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்கின்ஸ்  போன்றவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். ஆலோசனை நிறுவனம் ஒன்றில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஜான் பெர்கின்ஸ் முதன்மை பொருளாதார வல்லுநர், பொருளாதாரம் மற்றும் பிராந்திய திட்டமிடல் மேலாளர் என பல பதவிகள் வகித்தாலும் இவருடைய பணி அமெரிக்க பெரும்  நிறுவனங்களின் இலாபத்திற்காக நாடுகளை மீள முடியாத கடனில் சிக்கவைப்பது. மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட போவதாக நம்பவைத்தோ அல்லது லஞ்சமாக பெண்ணோ பணமோ பொருளோ கொடுத்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மிகப்பெரிய அளவில் கடன் பெறவைப்பது. கடனைத் திருப்பி செலுத்த முடியாத போது இந்நாடுகளின் இயற்கை வளங்களும் மக்களும் பெரும் நிறுவனங்களுக்கு இரையாகின்றன.
(http://www.ingoodbooks.com)
ஜான் பெர்கின்ஸ் இப்புத்தகத்தில்  அவர் பங்குபெற்ற திட்டங்களைப் பற்றியும் அதன் விளைவுகளையும் விவரிக்கிறார். இவரைப் போன்றோரின் வெற்றி, நாடுகளை வளர்ச்சியின் மாயையில்  சிக்கவைத்து அடிமைகளாக்கி விடுகிறது. இவர்களின் தோல்வி, பல நேரங்களில் மக்களை நேசிக்கும் தலைவர்களின் மரணத்தில் முடிகிறது. இகுவேடாரின் ஜனாதிபதி  ஜெய்மி ரோல்டோஸ், பனாமா ஜனாதிபதி ஓமர் டொரிஜோஸ் தனது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுத்ததற்காக விபத்தில் கொல்லப்பட்டனர். சிலியின் ஜனாதிபதி தனது இடதுசாரி கொள்கையின் மூலம் பெருநிறுவன‌ங்களை எதிர்த்துக் கொண்டதால் புரட்சியில் தன் உயிரை இழக்க நேர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த  Summer Institute of Linguistics என்ற கிறிஸ்துவ அமைப்பு அமேசான் காடுகளில்  எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் உணவுகளை வழங்கி பிற்பாடு அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உடைகள் மற்றும் உணவு வழங்கி அவர்களை எண்ணெய் நிறுவனங்களின் நலனுக்காக இடம்பெயர வைத்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தமக்கு ஆதரவளிக்க யாருமில்லாததால் இம்மக்கள் போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தலின் மூலம் வரும் பணத்தில் ஆயுதம் வாங்கி தம் காடுகளையும் தாம் நேசிக்கும் உயிரினங்களையும்  காப்பதற்காக போராடுகின்றனர். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு இவர்கள்   வெறும் போதை பொருள் வியாபாரிகள் என்ற பிம்பத்தை உருவாக்க முனைகின்றன ஊடகங்கள்.

வெனிசுவேலாவிலும் ஈரானிலும் ஏற்பட்ட தோல்விகளை உங்களின் வாசிப்பிற்கே விட்டு விடுகின்றேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் இந்நூலின் தமிழாக்கத்தை விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

குடும்ப அட்டைகளைப் பிடுங்கிக்கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டங்களையும் பெரும் முதலாளிகளின் நலனிற்காக தேசிய முதலீட்டு வாரியத்தை எல்லா சட்டத் திட்டங்களுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டதாகவும் உருவாக்கத் துடிக்கும் அரசு; உலகில் பட்டினியாய் இருப்பவர்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் இருக்கையில் பெரும் நிறுவன‌ங்கள் பண்ணையார்களாவதற்கு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேர அறிவுறுத்தும் அரசின் பிரதம மந்திரி. ஓர் இனத்தின் அழிவு அணு உலை வடிவத்தில் நம் வாயிலை நெருங்கிவிட்ட நிலையில் வால்மார்ட் நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் துடிக்கின்ற இந்நேரத்தில் செய்திகளுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மையைக் கண்டுணர்வது நம் கடமையாகிறது.

- பிரேம்குமார்
 (http://premkumarkrishnakumar.wordpress.com/)

No comments: