Sunday, March 24, 2013

103. EHT DOG FO LLAMS SGNIHT

(குழந்தைப் பருவத்தில் அதைத் தொலைத்தவர்களுக்காக‌))))))))))
நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
‍- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)

You're not the Sinners. You're the Sinned against. You were only children. You had no control. You are the victims, not the perpetrators.
-------------------------------------------------------
புத்தகம்: The God of Small Things (புதினம்)
ஆசிரியர்: அருந்ததி ராய்
மொழி: ஆங்கிலம்
வெளியீடு: Penguin Books
முதற்பதிப்பு: 1997
விலை: தோராயமாக 300 ரூபாய்
பக்கங்கள்: 340 (தோராயமாக 34 வரிகள் / பக்கம்)
சிறப்பு: 1997ல் புக்கர் பரிசு
-------------------------------------------------------
இரட்டையர்களும் கட்டிடக்கலை ஆர்க்கிடெக்ட்களும் பாராட்டும் இப்புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கு முன், ஆசிரியரைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. அருந்ததி ராய். 1961ல் வங்காள‌ இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகாலயாவில் பிறந்து, குழந்தைப் பருவத்தைக் கேரளாவில் அய்மனம் கிராமத்தில் கழித்தவர். டெல்லியில் ஆர்க்கிடெக்ச்சர் படித்தவர். காஷ்மீர் பிரிவினையாளர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஆதரவாக இவர் சொன்ன கருத்துகள் மூலம் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு, வெறுக்கப்பட வேண்டிய நபர் என்று சமூகத்தின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டவர். சாகித்ய அகாதமி விருது மறுப்பு, பொக்ரான் இரண்டாம் அணுகுண்டுச் சோதனை (The End Of Imagination), நர்மதா சர்தார் சரோவர் அணை என்று அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர். பல பொறுப்புள்ளவர்கள் சொல்வதற்குப் பயப்படும் சில உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவதிலும், ஒவ்வொரு பிரச்சனையையும் பார்க்கும் கோணத்திலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

அருந்ததி ராய். நான் சென்னை வந்தபின் முதன்முதலாகக் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இவரைப் பார்க்கத்தான். சென்ற வருடம் ஜீலையில் காலச்சுவடு பதிப்பகத்தின் நான்கு புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்ச்சி அது. 'சின்ன விஷயங்களின் கடவுள்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட இவரின் புத்தகமும் அவற்றில் ஒன்று. அந்நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள், புதினம் மூலம் புக்கர் பரிசு வாங்கி பிரபலமாகும் முன்னரே இரண்டு விசயங்களில் அருந்ததி ராயின் பெயரைக் கவனத்தில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, பூலான் தேவியின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட‌ பாண்டிட் க்குயின் என்ற‌ திரைப்படத்துக்கு அருந்ததி ராய் எழுதிய விமர்சனம் (The Great Indian Rape Trick). வயதுக்கு வராத சிறுமிகளுக்குக் கதாநாயகி என்ற பெயரில் உதட்டு முத்தமும் படுக்கையறைக் காட்சிகளும் கலை என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தொலைக்காட்சிப் பெட்டியில் கொண்டு சேர்க்கும் அரும்பணி செய்யும் கலை வித்தக‌ர்களை ஊக்குவிக்கும் இச்சமூகத்தில், அவ்விமர்சனத்திற்குப் பின் இருக்கும் தைரியம் என்னை ஆச்சரியப் படுத்தியது; சிந்திக்கவும் வைத்தது. சுகுமாரன் அவர்களின் முழு உரை கொண்ட காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-153/page18.asp 
(http://en.wikipedia.org)



The God of Small Things. எஸ்தாவும் ராஹேலும் இரட்டையர்கள். எஸ்தா ஆண். ராஹேல் பெண். ஒரே நேரத்தில் தனித்தனியாகக் கருவுற்ற இரு கரு முட்டைகளில் இருந்து பிறந்தவர்கள். Dizygotic. ஆசிரியரைப் போலவே வங்காள இந்துத் தந்தைக்கும், கேரளக் கிறித்தவத் தாய்க்கும் மேகலயாவில் பிறந்தவர்கள். 18 நிமிட இடைவெளியில் பிறந்த இவ்விரட்டையர்களின் ஏழாம் வயதில், 23 வருடங்களுக்குப் பிரித்து வைப்பதற்காகக் காலம் செய்யும் சின்னச் சின்ன விசயங்களே கதைச்சுருக்கம்.

பெற்றோர்களை எதிர்த்து மதம்விட்டு மாநிலம்விட்டு திருமணம் செய்துபோய், கணவனைச் சகிக்க முடியாமல் தன் சொந்த ஊரான கேரளத்து அய்மனம் கிராமத்திற்கு இரட்டையர்களுடன் வந்து விடுகிறாள், அவர்களின் தாய் அம்மு. கணவன் அல்லது தகப்பன் என்று சமூகம் பெண்ணிற்குத் தந்திருக்கும் இரண்டே வாய்ப்புகளில் தனக்கான முதலெழுத்தைத் தேர்ந்தெடுக்கும் குழப்பத்திலேயே பிறந்த வீட்டில் வேண்டப்படாத ஆளாக தன் குழந்தைகளுடன் இருக்கிறாள் அம்மு. தன்னை அடக்கி ஆண்ட கணவன் இறந்த பின் தொலைக்காட்சிப் பெட்டியுடன் காலம் கழிக்கும் அம்முவின் தாய். ஒரு பாதிரியார் மேல் காதல் கொண்டு கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து, அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் வெளியேறி, கன்னியாகவே வாழ்ந்து வரும் அம்முவின் அத்தை. இந்த மூன்று பெண்களுக்கிடையே வாழ்ந்து வருகிறார்கள் இரட்டையர்கள்.

அம்முவின் ஓரே அண்ணனின் விவாகரத்தான வெளிநாட்டு மனைவிக்குச் சோஃபி மோல் என்ற மகள். இரட்டையர்களின் மாமன் மகளான‌ சோஃபி மோலின் மரணத்துடன் ஆரம்பமாகிறது புதினம். வெளிநாட்டில் இருந்து வரப்போகும் சோஃபி மோலை வரவேற்கத் தயாராவது முதல் அவள் இறப்பிற்குப் பின் இரட்டையர்கள் பிரிந்து போவது வரையிலான கிட்டதட்ட ஒருமாதச் சம்பவங்கள்தான் புதினம். ஒரே இரவில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக் காட்டும் கதை.

ஒரு போலீஸ்காரர் அம்முவின் முலைகளை லத்தியால் வருடிக் கொண்டே இரட்டையர்களை வேசியின் பிள்ளைகள் என திட்டும்போது, அழுது கொண்டிருக்கும் அம்முவிடம் வேசி என்றால் என்ன எனக் கேட்கத் தடுமாறுவது - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கையில் விந்துப் பிசுபிசுப்புடன் அதைச் சொல்வதா வேண்டாமா என எஸ்தா தடுமாறுவது - கடற்பயணத்தில் இறப்பவர்களைக் கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தள்ளுவார்கள் என்றால் கடற்பயணம் தொடங்கும் போது எத்தனை கற்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள் என கேட்பது - ராஹேல் மூக்குச் சிந்தி சளி எடுக்கும் போது, சிப்பியில் இருந்து முத்தெடுத்தது போல் சுற்றி இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்ப்பது - பெண்கள் இடையே வளர்ந்து வரும் எஸ்தா முதன்முதலில் ஒரு பொது இடத்தில் ஆண்களுக்கான கழிவறையை எதிர்கொள்வது என்று புத்தகம் பெரும்பாலும் குழந்தைகளில் பார்வையில், குறிப்பாக ராஹேலில் பார்வையில் பேசுகிறது.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் மூலம், உலகிலேயே முதன்முறையாக ஜனநாயக முறையில் கேரளாவில் ஆட்சியைப் பிடித்த கம்யூனிச‌மும் புதினத்தினூடே பயணிக்கிறது. கேரளாவில் கம்யூனிசம் எளிதாக மக்களை ஈர்த்ததற்கான காரணங்களையும், காலப்போக்கில் போலி கம்யூனிஸ்டுகள் உருவாகி, மக்களையும் தொழிற்சங்கங்களையும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் பதிவு செய்கிறது புதினம்.

'கடவுளின் சொந்த நாடு' என்று இன்று அழைக்கப்படும் கேரளாவைத் துறவி விவேகானந்தர் 'பைத்தியக்கார விடுதி' என்று அழைத்தார். அங்கு நிலவிய சாதீய கொடுமைகள் அப்படி. குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய கொடுமைகளின் தாக்கத்தை இன்றும் கூட தென்தமிழகத்தில் காணலாம். நான் முந்தைய புத்தகத்தில் சொன்னது போல, மதம் மாறி வந்தவர்களைக் கிறித்தவ மதத்தால் சாதியிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அரிசிக் கிறித்தவர்கள் என்று மற்றவர்களால் கிண்டல் செய்யப்பட்ட அவர்களின் நிலையைச் சுதந்திர இந்தியா இன்னும் கொடுமையாக்க, 'கொதிக்கும் கொப்பறையில் இருந்து தப்பிக்கப் போய் எரியும் கொள்ளிக்குள் விழுந்தது' போல் என்கிறார் ஆசிரியர். கம்யூனிசம் கிறித்தவம் சாதீயம், இவை தங்களுக்குள் செய்துகொண்ட சமரசங்களைத் தன் கதைமாந்தர்கள் மூலம் பேசுகிறது புதினம்.
(http://en.wikipedia.org)
கதை சொன்ன விதத்தில் நான் ரசித்த இரண்டு விசயங்கள் உண்டு. ஒரே சீராக செல்லாமல், முன்னும் பின்னும் மாறி மாறி செல்லும் கதையோட்டத்தில் (non-sequential), சில விசயங்களும் சில வாக்கியங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஒரு கட்டடத்தை வடிவமைக்கும் ஆர்க்கிடெக்ட், சில வடிவமைப்புகளைத் (patterns) திரும்பத் திரும்ப அமைத்து ஓர் அழகான வீட்டை வாழப் போகிறவனுக்கு ஏதுவாக வடிவமைத்துக் கொடுப்பது போல், தனது புதினத்தையும் அமைத்து இருப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர். திரும்பத் திரும்ப இடம் பெறும் இவ்விசயங்கள், வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதுடன், கதையின் அதிர்ச்சிகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் என்கிறார். இதே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படம் பார்த்து விட்டீர்களா? நான் ரசித்த இன்னொரு விசயம், ஆங்கிலம் என்ற மொழியை அதன் அழகியலுடன் கையாண்ட விதம். சில எழுத்துகளை மட்டும் பெரிய எழுத்துக்களில் (capital letters) சொல்வது, சில வார்த்தைகளைச் சேர்த்து சொல்வது, சில வார்த்தைகளைப் பிரித்து சொல்வது (Later = Lay Ter), திரும்பத் திரும்ப சொல்வது, சில வார்த்தைகளை அப்படியே திருப்பிப் படிப்பது (ECILOP), வார்த்தைகளின் அசைகளை அந்தாதியாகப் படிப்பது என்று பெரும்பாலும் இரட்டையர்களின் மனநிலையை விளக்கப் பயன்படுத்தி இருக்கிறார். உதாரணமாக‌ Cuff-link என்ற வார்த்தை. Cuff + link = Cuff - link. சேர்ப்பதற்குக் கணிதத்தில் +; ஆங்கிலத்தில் -. இந்த முரண்பாட்டைப் பார்த்து இரட்டையர்கள் ஆச்சரியப்படுவதும், ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கச் சொல்லி நச்சரிக்கும் கன்னி(யாஸ்திரி) பாட்டியைப் பற்றி பேசும் பகுதி ஒன்றில் Pronunciation என்பதை Prer NUN sea ayshun என்று சொல்வதும் சில உதாரணங்கள். மேலும் சில அழகான சொற்றொடர்கள்: Prepare to prepare to be prepared, In an unconscious gesture of television-enforced democracy, As permanent as a Government job, Room for the future breasts. இப்புதினம் இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என கேரளத்து நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது. 21 அத்தியாயங்களில் கதை சொல்லும் இப்புதினத்தின் கடைசி அத்தியாயத்தின் ஒன்பதேகால் பக்கங்களை மட்டும் நகலெடுத்து சாட்சியாக சமர்ப்பிக்கப்ப‌ட்டது. சமூகத்தின் குடைச்சல்களுக்கு ஆளாகாத பெண் எழுத்தாளர் இல்லை என்பதற்கு அருந்ததி ராயும் விதிவிலக்கல்ல. அவ்வழக்கையும் புக்கர் பரிசையும் இந்தியச் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தான் ஆசிரியர் எதிர்கொண்டார். எந்த ஒரு கலாச்சாரத்திற்கு ஆதரவாக வழக்கு தொடரப்பட்டதோ, அதே கலாச்சாரம் தான் நேற்று தர்மபுரியில் கலவரம் கொண்டுவந்தது. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, அப்சல் குரு தூக்கை எதிர்த்து ஆசிரியர் எழுதிய கட்டுரையின் தலைப்பு நினைவில் வந்து போனது - A perfect day for democracy. தமிழில்: சின்ன விஷயங்களின் கடவுள் ஆசிரியர்: ஜி. குப்புசாமி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் நான் ரசித்தவை: பாத்திரம் ‍-> எஸ்தா ப‌குதி ‍-> 12வது அத்தியாயத்தில் இரட்டையர்களின் 23 வருடப் பிரிவைப் பிரதிபலிக்கும் கதகளியாட்டம். மற்றும் 11வது அத்தியாயத்தில் அம்முவின் கனவு. காலச்சுவடு நிகழ்ச்சியில் இப்பகுதியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆசிரியர்கள் இருவரும் வாசித்துக் காட்டினார்கள். காலச்சுவடின் சுட்டி இது: http://www.kalachuvadu.com/issue-151/page52.asp தாய் என்ற பாசம் தேவைப்பட்ட வயதில் தூக்கி எறிந்துவிட்டு, மற்ற மகன்களின் உயிரைக் காப்பாற்ற, வஞ்சகமாக கர்ணனிடம் வரம் வாங்க, பாசம் என்ற புராதன விதிகளைச் சுமந்து கொண்டு வருகிறாள் குந்தி தேவி. கர்ணவதம் நடத்தும் கதகளியாட்டம் இப்புதினத்தில் வருகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இருந்தாலும் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல் மக்கள் கூட்டம் ஆர்வமாகப் பார்க்கிறது. முடிந்தவுடன் அவரவர் வேலைகளைப் பார்க்க கிளம்பி விடுகிறார்கள். பெண் வேடமிட்ட ஆண்கள் எல்லாம் முலைகளைக் கழட்டி வைத்துவிட்டு, தங்கள் வீடு திரும்பி வழக்கம்போல் தங்கள் மனைவிகளை அடித்துப் புரட்டி எடுத்து, உண்மை முலைகளைப் பிசைகிறார்கள். நாளைக்கும் கதகளியாட்டம் வரும்; அப்போதும் புதிதாகப் பார்க்கப் போவதுபோல் மக்கள் வருவார்கள். ஏதோவொரு வசீகரம் அக்கதைகளில் இருக்கிறது. இப்புதினத்தின் கதைக்கும் பொருந்தும் ஆசிரியர் சொல்லும் அவ்வசீகரம்: The secret of the Great Stories is that they have no secrets. The Great Stories are the ones that you have heard and want to hear again. The ones you can enter anywhere and inhabit confortably. They don't deceive you with thrills and trick endings. They don't surprise you with the unforeseen. They are as familiar as the house you live in. Or the smell of your lover's skin. You know how they end, yet you listen as though you don't. In the way that although you know that one day you will die, you live as though you won't. In the Great Stories you know who lives, who dies, who finds love, who doesn't. And yet you want to know again. That is their mystery and magic.  - ஞானசேகர் (http://jssekar.blogspot.in/)
 

No comments: