Sunday, August 25, 2013

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள்.
- புத்தர் (என நினைக்கிறேன்)

It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce.
- Michael Moore

When there was a country, I searched for freedom. Now I am free, but I have to search for a country.
- Papiya Ghosh
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்
ஆங்கிலத்தில்: Terrorism Sources and Solutions
ஆசிரிய‌ர் : டி.ஞானையா
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 260 ரூபாய்
பக்கங்கள் : 413
வாங்கிய இடம் : இந்த வருட சென்னைப் புத்தகக் கண்காட்சி
--------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதம். இந்நூற்றாண்டின் அன்றாடச் செய்திகளில் வழக்கமாகிவிட்ட இச்சொல்லின் விளக்கம்,கடவுள் கற்பு போல காலந்தோறும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. 'அரசியல் அல்லது மதம் அல்லது சித்தாந்தம் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஓர் அரசாங்கத்தையோ அல்லது ஓர் சமூகத்தையோ பயமுண்டாக்கும் அல்லது பணியச் செய்யும் நோக்கத்தில் சூழ்ச்சி செய்து, சட்ட விரோதமான வன்முறையை நிகழ்த்துவது அல்லது சட்ட விரோதமான வன்முறை நிகழ்த்தப் போவதாகப் பயங்காட்டுவது' என்று பயங்கரவாதம் என்ற பதத்திற்கு, உலக அகராதி நிர்ணயிக்கும் அமெரிக்கா விளக்கம் தருகிறது. ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தாலும், எதுவெல்லாம் 'சட்ட விரோதமான'?

தூக்குமேடையில் சாகப் போவதற்கு முதல்நாள் இரவு ஏதோ ஒரு புத்தகத்தைப் பாதி படித்துவிட்டு, ஒரு தாளின் நுனியை மடக்கிவிட்டு, 'நான் விட்ட இடத்தில் இருந்து நாளை இன்னொருவன் தொடருவான்' என்று சாதாரணமாகத் தூங்கப் போன பகத் சிங், இன்றும் இந்திய இளைஞர்களின் புரட்சிச் சின்னம். ஆங்கிலேயர்களுக்குச் சட்ட விரோதமான பயங்கரவாதி. பயங்கரவாதி, அமைதிக்கான நோபல் பரிசு என்ற இரு முரண்பட்ட பெயர்களையும் வாழ்ந்தபோதே வாங்கிய யாசர் அராபத் இன்னொரு சிறந்த உதாரணம். சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, எதிர்த்த முஜாஹிதீன் அமைப்பினரை அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களுக்கு இணையாக ஒப்பிட்டது இன்னொரு உதாரணம். சுருக்கமாக, அப்பாவி குடிமக்களைக் கொல்லும் எந்தவொரு வன்முறை செயலையும் பயங்கரவாதம் எனக் கொள்வோம். நமக்கான செய்திகளில் பயங்கரவாதம் என்று சித்தரிக்கப்படும் சித்தாந்தங்களின், ஏறத்தாழ அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய புத்தகம் இதோ!
(www.nhm.in)
சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும். 91 வயதைக் கடந்த ஆசிரியர் டி.ஞானையா, அகில இந்திய தொழிற்சங்க தலைவர்; கம்யூனிஸ்ட் பிரமுகர். இன்றைய சிக்கல் நிறைந்த சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் என்ற பொருள் மீதான ஆசிரியரின் மாறுபட்ட கருத்துகளே இப்புத்தகம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணன் நான்கு பக்கங்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் பற்றி 11 கட்டுரைகளும், இந்தியப் பயங்கரவாதம் பற்றி 5 கட்டுரைகளும், கடைசியாக 2 பின்னுரைகளும் என அமைகிறது இப்புத்தகம்.

சர்வதேச பயங்கரவாதம். 2001 செப்டம்பர் 11 அன்று இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் சர்வதேச பய‌ங்கரவாதத்திற்கு எதிராக நிரந்தரப் போர்ப் பிரகடனம் செய்தது அமெரிக்கா. ஆனால் அதன் பிறகு இன்றுவரை அமெரிக்கா செய்து வரும் நடவடிக்கைகள் எல்லாம், ஏற்கனவே செய்து கொண்டிருந்த காரியங்களின் வீரிய வடிவமே என்பது தெளிவாகத் தெரியும். சர்வதேச பயங்கரவாதத்தின் தோற்றுவாய் என்று அது சுட்டிக் காட்டும் இடங்கள் எல்லாம், இஸ்ரேலைச் சுற்றிய மத்திய கிழக்கு அரபு நாடுகள். பொது மக்களும் தங்களின் அன்றாட உரையாடல்களில் சர்வதேச பயங்கரவாதம் என்பதை இஸ்லாமிய பயங்கரவாதம் என அடையாளப்படுத்த நிர்பந்திக்கப்பட்டு உள்ளனர். இப்படி ஆயுதம் இருப்பதாகச் சொல்லி ஆயில் எடுக்கும் அமெரிக்க கதைகள்தான் இந்த 11 கட்டுரைகளும்.

சுமார் 2 கோடி பூர்வகுடி செவ்விந்தியர்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் திட்டமிட்டு அழித்து அமெரிக்கா பிறந்த கதை ஒரு கட்டுரை. இந்திய ஆண் 40 பவுண்டு, பெண் 12, சிறுவர் 20 எனக் கொன்று தலை கொண்டுவந்தால் பரிசு. கறுப்பின மக்களின் அடிமை முறையை ஒழித்த‌ ஆபிரகாம் லிங்கன் செவ்விந்தியர்களைக் கொல்லும் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். முதல் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன், மனைவியை விவாகரத்து செய்த போது 150 அடிமைகளை வாழ்க்கைப்படியாகக் கொடுத்திருக்கிறார். கறுப்பின மக்களின் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நாட் டர்னர் (Nat Turner), தோலை உரித்து பணப்பை செய்து ஒரு பெருமைமிகு நினைவுப் பரிசாக வைத்திருந்திருக்கிறார் அரசு தலைமை மருத்துவ அதிகாரி ஒருவர். மால்கம் எக்ஸ் (Malcolm X), மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King, Jr.) முடிவுகள் உங்களுக்கே தெரியும். இப்படி கொடுஞ்செயல் சித்திரவதை வன்கொடுமை என்ற பாவங்களுடனேயே பிறந்து, போர்வெறி உளவியலுடன் தொடர்ந்து வலம் வருவதை விளக்குகின்றன ஆரம்பக் கட்டுரைகள். எந்தவொரு அமெரிக்க அதிபர் இரண்டாம் முறை தேர்தலில் நிற்கும் போதும், ஒரு முடிக்கப்படாத போர் இருக்கும், அதை முடித்து வைக்க இரண்டாம் முறை அவரே தேர்ந்தெடுக்கப்படுவதைக் கவனித்து இருக்கிறீர்களா?

அர்ஜென்டினா, நிகரகுவா, ஜப்பான், ரியூக்யூ மற்றும் பானின் தீவுகள், உருகுவே, சீனா, அங்கோலா, ஹவாய் என மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்த கதைகளையும், பியூடோ ரிகோ, ஹவாய், வேக் தீவுகள், குவாம் பகுதிகள், பிலிப்பைன்ஸ் என நாடு பிடிக்க போர் தொடுத்த‌ கதைகளையும் பேசுகிறது ஒரு கட்டுரை. Confession of an Economic Hit Man புத்தகத்தில் சொன்னது போல, கியூபா, காங்கோ, சிலி, தெற்கு வியட்நாம், டொமினிக் குடியரசு, பனாமா, நேற்றைய லிபியா என வெளிநாட்டு அரசுகளைக் கவிழ்ப்பது, அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, பொதுத் தேர்தல்களில் தலையிடுவது என அமெரிக்க உளவு நிறுவனம் CIA செய்து வரும் அடாவடிகளைப் பட்டியலிடுகிறது ஒரு கட்டுரை. Plan A, B, C, D, ... என்று அமெரிக்க உதவியுடன் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காட்டும் வன்முறைகள் பற்றி ஒரு கட்டுரை.

ஐக்கிய நாடுகள் சபையின் 192 உறுப்பு நாடுகளில் 152ல் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ளன. அடுத்த 10 நாடுகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவை விட அமெரிக்காவினது அதிகம். சதாம் உசேனுக்கு எதிரான போரில் ஈராக்கிய மக்கள் தொகையில் 5% பேர் இழப்பு. ஹிட்லரின் நாசிகளுக்கு இணையாக, வியட்நாம் மீது ஏஜென்ட் ஆரஞ்ச் இரசாயன குண்டுகளை வானில் இருந்து கொட்டிவிட்ட கொடுர இனவழிப்புக் கதைகள்.,,,,,

இந்தியப் பயங்கரவாதம். இந்தியாவிற்கு இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பேசுகின்றன 6 கட்டுரைகளும். விவசாயிகளின் பேரெழுச்சியாக ஆரம்பித்த நக்சல்பாரியின் கதையை, இன்றைய சல்வா ஜுடும் (Salwa Judum) வரை பேசுகிறது ஒரு கட்டுரை. வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடி மற்றும் தேசிய இனப் பிரச்சனைகளைப் பேசுகிறது ஒரு கட்டுரை. இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பயங்கரவாதம் பற்றி இரண்டு தனித்தனி கட்டுரைகள். அசோகர் காலம் முதல் 2008 நவம்பர் 26 மும்பை தாக்குதல் வரை பல விசயங்களைப் பேசுகின்றன இவ்விரண்டு கட்டுரைகளும். இப்புத்தகம் சொல்லும் தகவல்களில் வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களில் ஒன்றிரண்டாவது உதாரணமாகச் சொல்ல நான் விரும்பவில்லை. வாசிப்பவர்கள் ஒருசமயம் ஒருசார்புடைய கருத்துடையவராக இருப்பின், அத்தகவல்களை எந்தவொரு வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதால், இப்படியே விட்டுவிடுகிறேன். அவை உங்களின் வாசிப்பிற்கும், தேடலுக்கும், சிந்தனைக்கும், .....

இப்புத்தகம் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்புத்தகம் மேற்கொள் காட்டிய இன்னோர் அற்புதமான புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இரண்டு புத்தகங்களும் அடுத்தடுத்து அமைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அந்தப் புத்தகத்தில் இந்தப் புத்தகம் பற்றி நிறைய பேசுவோம். இப்புத்தகம் படியுங்கள். பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னுள்ள உளவியல் அறியுங்கள். அவை தோன்றுவதற்கான காரணங்கள் உணருங்கள். பின்னர் நீங்களும் சொல்வீர்கள்; பயங்கரவாதம் மதமற்றது - பயங்கரவாதம் மொழியற்றது. இதுவரை மொழியின் அடிப்படையில் நசுக்கப்பட்ட ஈழத்தில், அங்கு இன்று தமிழர்களிடையே மதம் என்ற பிரிவினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கு ஒருபடி மேலே போய் சாதிகளால் பிரித்துக் கொ(ல்)ள்கிறோம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் கையாண்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியின் நவீன வடிவங்கள்! அன்றைக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கேட்டார்:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

அனுபந்தம்:
----------------
1. Mausam, Delhi Belly. இந்த இரண்டு படங்களில் எதைப் பார்ப்பது என்று திரையரங்கின் முன் பயங்கர வாக்குவாதம். கடைசியாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். காசு சுண்டிவிடவில்லை. விமர்சனங்களை வைத்து முடிவு செய்யவில்லை. சுவரொட்டி பார்த்து ஈர்க்கப்படவில்லை. கதாநாயகனின் மதம்தான் தீர்மானித்தது!

2. ஓர் இந்தித் திரைப்படத்தில், அமெரிக்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதிக் காட்சியில் அமெரிக்க அதிபரைச் சந்தித்து, 'My name is Khan; but I am not terrorist' என்பார் ஷாருக் கான். இதே மாதிரி ஓரிஸா அல்லது கர்நாடகா அல்லது குஜராத் என்று ஏதாவது ஒரு மாநிலத்தைச் சுற்றி வந்து, ஓர் உள்ளூர் கவுன்சிலரிடமாவது சொல்ல முடியுமா? என் மதத்தைச் சொல்ல மறுத்ததற்காக பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்ட ஆட்டோக்காரனை நான் இத்தேசத்தில் சந்தித்திருக்கிறேன். இத்தனைக்கும் நான் போய்க் கொண்டிருந்த இடம் DRDO!

- ஞானசேகர்

Sunday, August 04, 2013

107. வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
- மகாகவி
--------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு
ஆசிரிய‌ர் : இரா.நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதற்பதிப்பு : டிசம்பர் 2011
விலை :  70 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தோடு தாய்மொழியையும் கற்பிக்கலாம் என்ற பரிந்துரையுடன் வைசிராய் கர்ஸன் காலத்தில், மெக்காலே கல்விமுறை நடைமுறைக்கு வருகிறது. தாய்மொழிகளை விட சமஸ்கிருத மொழியைப் பாடமாக்க வேண்டுமென வட இந்தியாவில் பரிந்துரைக்கிறார்கள். தேசிய மொழி இந்தி என்று கட்டாயமாக நம்ப வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போல, பள்ளிக் கல்லூரிகளில் செம்மொழியாகப் போதிக்கும் அளவிற்குச் சமஸ்கிருதம் மட்டுமே இருக்க முடியும் எனப் பலரும் நம்பிய அக்காலத்தில், மதராஸ் மாகாணம் எதிர்க்கிறது. மதராஸ் கிறித்தவக் கல்லூரி பேராசிரியராக இருந்த பரிதிமாற்கலைஞர், செம்மொழியாகப் போதிக்கத் தகுந்த முழுத் தகுதியும் தமிழுக்கு இருப்பதாக வைசிராய்க்குக் கடிதம் எழுதுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய், சமஸ்கிருதத்தை விடவும் தமிழுக்கே தகுதி அதிகம் என மேடைகளில் பேசுகிறார். எதிர்ப்பு அதிகரிக்கவே, கர்ஸன் சம‌ஸ்கிருதத்தைக் கைவிட்டு தாய்மொழிப் பாடத்தை வழிமொழிகிறார். சுதந்திரம் பெற்ற பின் எந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இல்லாத சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு நேரு ஆட்சி நிதி ஒதுக்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செம்மொழிகளில் இன்று சமஸ்கிருதம் இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. செம்மொழி (Classical Language) அங்கீகாரம் இல்லாமலேயே, பல நாடுகளில் ஆட்சி மொழியாகவும், பல்கலைக்கழகப் பாடங்களிலும் இருக்கிறது தமிழ். செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்ற மொழிகளுடன் நம் தாய்மொழியை ஒப்பிடுவதே இப்புத்தகம்.

வரலாற்றில் மொழிகள் - செம்மொழிகளின் வரலாறு. அரபி சீனம் பிரெஞ்சு சம‌ஸ்கிருதம் இலத்தீன் ஸ்பானீஷ் ஜெர்மன் பாரசீகம் ஹீப்ரு கிரேக்கம் என ஒவ்வொரு செம்மொழிக்கும் ஒரு கட்டுரை வீதம் மொத்தம் 10 கட்டுரைகள். மொழியின் தோற்றம், வரலாறு, எழுத்து, இலக்கணம், இலக்கியம், பல்வேறு காலங்களில் தோன்றிய சிறந்த‌ படைப்புகள், ப‌டைப்பாளிகள், இன்றைய நிலை என ஒவ்வொரு செம்மொழியைப் பற்றி பட்டியலிடுகிறது ஒவ்வொரு கட்டுரையும். கட்டுரையின் கடைசிப் பத்தி அம்மொழியைத் தமிழுடன் ஓரிரண்டு வாக்கியங்களில் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையின் பின்னிணைப்பாக, அம்மொழியும் தமிழும் பல்வேறு காலங்களில் அடைந்த மாற்றங்களை அட்டவணைப்படுத்தி ஒப்பிடுகிறார் ஆசிரியர். ஏறத்தாழ கிமு 200ல் பெரும்பரிபாடல் முதல் இன்றைய பின்நவீனத்துவம், தலித் இலக்கியம் வரை தமிழ்ப் படைப்புகள் - படைப்பாளிகள் பட்டியல் கால வரிசையில் கடைசி 19 பக்கங்களை அலங்கரிக்கிறது!

பல மொழிகளின் வரலாறும் அமைப்பும் ஆச்சரியப்பட வைக்கின்றன. தமிழைப் போல ழகரம் உடைய, திராவிடக் குடும்பம் சாராத மொழியும் உண்டு. பகுதி விகுதி இலக்கணங்கள் அவ்வளவாக இல்லாத, காலம் குறிக்க குறிப்பான சொற்களற்ற மொழியும் உண்டு. வடமிருந்து இடமாக எழுதப்படும் ஒரே இந்திய மொழி உருது எனத் தெரியும்; அதன் மூலமான அரபியும் அப்படியே எனத் தெரியும்; கோடுகளால் இணைத்து இணைத்தே வரைபடம் போல உண்டாக்கி புதிர் போல எழுதப்படும் மொழியும் இருக்கிறது. அறிவியல் பெயர்கள் இலத்தீன் மொழியில் வைக்கப்படுவது தெரியும்; சர்வதேச‌ சட்டங்கள் பிரெஞ்சில் மட்டுமே மொழிப்பெயர்க்கப்படுவது ஏன் என்றால்.....

தமிழ் பற்றி ஆசிரியர் என்ன சொல்கிறார்? எந்தவொரு மதத்தோடும் பின்னிக் கொண்ட மொழியல்ல. அதிகார முறையில் திணிக்கப்பட்ட மொழியல்ல. யாரும் திட்டமிட்டு செயற்கையாகக் கட்டமைத்த மொழியல்ல. தொல்காப்பியம் முதல், கவிதை என்று நான் ஏதோ கிறுக்குவது வரை புரியும் அளவிற்குக் காலத்தோடு தொடர்ந்து வளர்ந்து வரும் மொழி. மக்கள் காலச்சாரத்தோடு இன்னும் மொத்தமாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும்.....

அனுபந்தம்:
----------
புத்தகத்திற்கு அப்பால்,
1. மொழி என்பது கலாச்சாரத்தின் அடையாளம். இலத்தின் கிரேக்கம் என்ற இருபெரும் மொழிகள் - கலாச்சாரங்கள் ஒரு காலத்தில் மோதிக் கொண்டதின் வீரியம் இக்காலம் வரை வெவ்வேறு வடிவங்களில் உலகம் முழுவதும் உணரப்படுவதை இதே தளத்தில் அடுத்த ஆங்கிலப் புத்தகமாக நீங்கள் படிக்கலாம்.
2. தன் தாய்மொழியை எழுதும் போது முழங்காலிடும் ஒரு சமூகம் உண்டு. தேடிப் பாருங்கள்.

மொழி என்பதே தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே. தாய்மொழி மட்டும் அதில் என்ன விதிவிலக்கு? இப்படி தாய்மொழி எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும் ஒரு சாராரும் ஒவ்வொரு தாய்மொழியிலும் உண்டு. நீங்கள் அச்சாராரைச் சாராதவர் என்றால், கண்டிப்பாக இப்புத்தகம் படிக்கலாம்.

- ஞானசேகர்