Friday, October 11, 2013

113. அத்தாணிக் கதைகள்

-------------------------------------------------------------------------
புத்தகம் : அத்தாணிக் கதைகள்
ஆசிரிய‌ர் : பொன்னீலன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை
முதற்பதிப்பு : திசம்பர் 2004
விலை : 50 ரூபாய்
பக்கங்கள் : 144
வாங்கிய இடம் : நியூ சென்சுரி புக் ஹவுஸ், சிங்காரத்தோப்பு, திருச்சி
-------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் தஞ்சை மாவட்டத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் சின்னஞ்சிறு கிராமம். பஸ், குழாய்த் தண்ணீர், மின்சாரம், சினிமாக் கொட்டகை, தொலைக்காட்சிப் பெட்டி என்னும் பஞ்ச பூதங்களைத் தவிர, மற்றபடி கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்க் கிராமம். விவசாயத்தையே எல்லாமுமாகக் கொண்ட மக்கள். இப்படித்தான் அத்தாணி என்ற கிராமத்தை முன்னுரையில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். பொன்னீலன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 1983 முதல் 1988 வரை அத்தாணியில் பணியாற்றியபோது விவசாய மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்து, நாட்டுப்புற கதைகளைச் சேகரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரி பகுதியில் குடியேறிவிட்டாலும், அங்கும் அவ்வழக்கத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட தோன்றிய சிந்தனையின் முதல் செயல்வடிவமே இப்புத்தகம். அத்தாணிக் கதைகள். 
(http://www.noolulagam.com)
மொத்தம் 51 கதைகள். 18 கதைசொல்லிகளின் விவரங்களைப் புகைப்படங்களுடன் இணைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. பிழைக்கத் தெரிந்தவன் என்ற கதையைச் சிறுவயதில் பாக்யா இதழில் படித்திருக்கிறேன். இரண்டு மடங்கு, எதிரும் புதிரும், எங்கே போகிறார் போன்ற கதைகள் இன்று நிறைய பேருக்குப் பரவலாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. வீரப் பெண் என்ற கதையை எனது அம்மாச்சி மிகப் பெரிய சரித்திர நிகழ்வு போல, சென்ற வாரம் கூட எனக்கு இருநூறாவது முறையாகச் சொன்னாள். அந்த வீரப் பெண் கதையை எனது சிறுகதை ஒன்றில் ஒரே வரியில் நான் மேற்கோளாக‌ எழுதி இருக்கிறேன். நானும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும், மற்ற கதைகள் யாவும் எனக்கு புதியவை போலவே இருந்தன. எல்லாக் கதைகளும் நகைச்சுவை உணர்வுடனேயே எழுதப்பட்டு இருப்பதால், கண்டிப்பாக படிக்கலாம்.

நான் மிகவும் ரசித்த கதைகள்: 
1. பெண்ணுடம்பில் இயற்கையாக நடக்கும் ஒரு காரியத்தைத் தீட்டு என்று சொல்லும் பெண் சாமியான அம்மனையே ஒரு மானுடப் பெண் எதிர்க்கும் - தீட்டு
2. கணவன் கண்ணெதிரேயே கள்ளக் காதலனுடன் சரசம் செய்யும் - சாமர்த்தியசாலி
3. மற்ற நான்கு கால் விலங்குகளுக்கு எல்லாம் பின்னங்கால்களுக்கு இடையே பாதுகாப்பாகத் தொங்க, பன்றிக்கு மட்டும் பின்பாகத்தில் புடைத்துக் கொண்டிருக்கும் பிரம்மனின் படைப்பைச் சொல்லும் - அவசரம்
4. ஊரார் பார்க்க சல்லாபம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் நாயினத்தின் கதை - தர்மர் சாபம்
5. முட்டாள் கணவனைச் சமாளிக்கும் புத்திசாலி பெண்ணின் கதை - பணியார மழை
6. இரண்டு பேர் சேர்ந்து செய்த தவறுக்கு ஒருத்தி மட்டும் ஏன் பிரசவ வலி தாங்க வேண்டும்? - பரமசிவன் வரம்
7. மலை நகர்ந்தது
8. சர்க்கார் முத்தம்

நான் மிகவும் ரசித்த கதைமாந்தர்: மொட்டைப் பெட்டிசன் முனியசாமி

தொடர்புடைய எங்களின் பிற பதிவு: மறைவாய் சொன்ன கதைகள்

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: