Tuesday, October 22, 2013

114. மழைப் பேச்சு

ஆணாதிக்கம் என்பது
காரியம் முடிந்ததும்
திரும்பிப் படுத்துக்கொள்வது.
- மகுடேசுவரன் (காமக்கடும்புனல் நூலிலிருந்து)
------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : மழைப் பேச்சு
ஆசிரிய‌ர் : அறிவுமதி
வெளியீடு : சாரல், அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை
முதற்பதிப்பு : 2011
விலை : 200 ரூபாய்
பக்கங்கள் : 112
வாங்கிய இடம் : ஞாபகமில்லை
------------------------------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் எனது 75வது பதிவு இது. பல கவிதைகள் படித்திருந்தாலும் இதுவரை இத்தளத்தில் எந்தவொரு நேரடித் தமிழ்க் கவிதைப் புத்தகம் பற்றியும் நான் எழுதியதில்லை என்பதைச் சமீபத்தில் தான் உணர்ந்தேன். இந்த வாரம் வீட்டிற்குச் சென்றிருந்த போது எனது புத்தகக் கிடங்கில் இருந்த கவிதைத் தொகுப்புகளைப் புரட்டிப் பார்த்து கடைசியாக கவிஞர் அறிவுமதியின் மழைப் பேச்சு தேர்ந்தெடுத்தேன். கவிஞர் அறிவுமதிக்கு அறிமுகம் தேவையில்லை. எனது தளத்தில் முகப்புப் பக்கத்திலேயே இருமுறை அவர் பெயரைக் காணலாம். நான் அதிக‌முறை வாங்கிப் படித்த / பரிசளித்த‌ பட்டியலில் அறிவுமதி அவர்களின் இரண்டு புத்தகங்களும் உண்டு; ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு சொல்லும் 'நட்புக்காலம்'; ஈழத்தமிழனின் வலி சொல்லும் 'வலி'.
(http://eraeravi.blogspot.in)
'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'
என்ற‌ வள்ளுவரின் மூன்றாம் பால் சொல்லும், உடல்களின் உரையாடல்களே இந்த மழைப் பேச்சு. 'காடுகள் உடுத்தி, கடல்கள் உடுத்தி, ஆறுகள் உடுத்தி, அருவிகள் உடுத்தி, இயற்கையின் முழுக் குழந்தைகளாகிக் கேட்டுப் பாருங்கள். நிலாவிலிருந்து உதிர்கிற இலைகளாய் மழைப் பேச்சு உங்களை நனைத்துக் கொண்டே இருக்கும். இது உங்கள் மழைப் பேச்சு' என்று ஆசிரியர் த‌ன்னுரையில் சொல்லும் மழைப்பேச்சுக்குக் கருங்குடையாய் இடையூறு செய்யாமல், 10% கவிதைகளை உங்கள் வாசிப்பிற்குத் தருகிறேன்.

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை

உள்ளே கனக்கிற நீ
மேலே மிதக்கிறாய்

நாகரிகம் என்பது
காமமற்ற தழுவல்

தண்ணீர் விற்பவர்கள்தாம்
காமத்தையும் நகைகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

இரண்டாவது சுற்றுக்கான இடைவெளியை
அழகு செய்வதில் இருக்கிறது
ஆண் பெண் உறவு

ஊறித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது

பயன்படத்தான் செய்கிறது
தும்பி பிடித்த அனுபவம்

எல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய‌
எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்
இலை நுனியில் மழைத்துளி

மூடித் திற‌
திறந்து மூடு
இசைதரும் புல்லாங்குழல்

எல்லா மழைகளுக்கும் பிறகான‌
மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது
நீ விரும்பிச் செய்த மழை

நுனி நாக்கில் முளைக்கின்றன
பறப்பதற்கான சிறகுகள்

இது இன்பத் தமிழ். மணமக்களுக்கான மகிழ்ச்சி நூல். முறையே இப்படி முன்னட்டையும் பின்னட்டையும் சொல்கின்றன. உண்மைதான். அதற்காக‌ எனது திருமணத்திற்குப் பரிசளிக்கக் குறித்துக் கொள்ளாதீர்கள் நண்பர்களே! மூன்று வார்த்தைகளில் உள்ள‌ சில கவிதைகள் கூட‌ புரியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன்.

கவிதைகளுக்குப் பின்னிருக்கும், மனித உடல்களற்ற புகைப்படங்களும் கவி சொல்வதில் கொஞ்சம் நீங்களும் நனைந்து பாருங்கள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

No comments: