Sunday, May 25, 2014

130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah.
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்
ஆசிரியர்: டி. ஞானையா
வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 175
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:
1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி. 
2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.
4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்' என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும் வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின. 

நான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.  சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93!
(http://discoverybookpalace.com/)
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'காயிதே ஆஸம்' என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:
1. ஜஸ்வந்த் சிங்கின் Jinnah: India, Partition, Independence
2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind
3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth

ஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் காத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார்! ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்!

1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத்திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
ஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர! ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் இஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
பாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.

தான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் கைப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை! நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

இந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் புத்தகத்தில் இருந்து:
மகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை? பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன? வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.

அனுபந்தம்:
-------------------
1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)

Saturday, May 17, 2014

129. WHY WEREN'T WE TOLD?

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் : Why Weren't We Told
ஆசிரியர் : Henry Reynolds
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 257 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
Townsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the Frontier என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் இவருடைய மனைவி Margaret Reynoldsம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் உரிமைக்காக களப்பணியாற்றியவர்கள். 

ஆசிரியரின் பள்ளிக் காலங்களில் ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் பழங்குடியினர் பற்றிய வரலாறுகளோ தகவல்களோ பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் வெகு விரைவில் அழிந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் Truganini என்ற பெண்ணோடு அந்த இனமே அழிந்துவிட்டதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற ஆசிரியர், அதுவும் வரலாறு பயின்ற ஆசிரியர் தன் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.
(http://www.westprint.com.au)
மேலைநாடுகளில் வாழ்வது தன் பிறவிப்பயனாக கருதாதவராக இருந்தால் இந்த நாடுகள் எல்லோருக்கும் சொர்க்கபுரியாக இருப்பதில்லை என்பது புரியும். தங்குவதற்கு இடமில்லாமல் பாலத்திற்கு அடியில் தூங்கும் மனிதர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி வெளியேற முடியாமல் அடிவாங்கிக்கொண்டு வீட்டிலே இருக்கும் பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி ஆஸ்திரேலியாவில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருக்கிறது. அது ஆஸ்திரேலியா ஒரு இனத்தின் மொழி கலாசாரம் மற்றும் வரலாற்றை வெற்றிகரமாக அழித்த நாடுகளில் ஒன்று.

Henry Reynolds அத்தகைய மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்பதற்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் பங்காற்றியிருக்கிறார். 1965ல் விரிவுரையாளர் பணிக்காக Townsville வரும் ஆசிரியர் முதன்முதலாக ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் அறிய நேர்கிறார். 1890களில் பழங்குடியினர் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஊருக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிறுவனங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதிலும் அப்பிள்ளைகளுக்கு தம் இனம் மொழி குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தன. 1960களில் இவர்கள் தனி குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஊர்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Townsville போன்ற ஊர்களுக்குப் பழங்குடியினர் குழுவாக வந்து சேர்ந்ததும் அதேநேரத்தில் அரசாங்கம் பழங்குடியினர் வேலைக்கு அமர்த்தப்பட்டால் சம்பளம் கொடுக்கவேண்டுமென்று அறிவுறுத்தியதால் பலர் பண்ணைகளில் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு இறுக்கமான காலகட்டத்தை உருவாக்கின.

Margaret Reynolds ஆசிரியரின் மனைவியே முதன் முதலில் பழங்குடியினரின் நலனுக்காக களப்பணியாற்றுகிறார். பழங்குடியினப் பெண்களை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்துவரும் ஆசிரியர் பிற்பாடு தனது வரலாற்று ஆராய்ச்சிகளின் மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்கிறார். ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்ட முறையில் பழங்குடியினரின்  எதிர்ப்புகளை மறைத்து ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை ஒரு அமைதியான குடியேற்றமாக வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். 1968ம் ஆண்டு வரலாற்று அறிஞர் W.E.H Stanner "The Great Australian Silence" என்ற உரையில் முதன் முதலாக மறுக்கப்படும் பழங்குடியினர் வரலாறுகள் குறித்து தன் கவலைகளைத் தெரிவிக்கிறார். Henry Reynolds பிற்பாடு காலனி அரசின் வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து இது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதைத் தன் வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் settlers என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு அமைதியான குடியேற்றம் என்ற பிம்பத்தை உருவாக்குவது குறித்தும் இன்னும் சிலர் ஒரு சில குற்றப் பின்ன‌ணி உள்ளவர்கள் செய்த செயல் என்று ஒரு இனப்படுகொலையை மறைக்க முயல்வது குறித்தும் தன் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கிறார்.

1994ம் ஆண்டு New South Wales கல்வி அமைச்சராக இருந்த Virginia Anne Chadwick ஆக்கிரமிப்பு போர் (invasion) என்ற பதத்தைப் பயன்படுத்த தனது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தன் கட்சித்தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிறார். ஆசிரியர்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு போர் என்ற பதத்தைப் பயன்படுத்தாத எந்த ஒரு பாடத்திட்டத்தையும் கற்பிக்க முடியாதென்றும் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு அளிப்பதே தமது கடமை என்று போர்க்கொடி உயர்த்தியது. இப்படி பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் தான் கடந்து வந்த பாதைகளையும் பழங்குடியினரின் நிலவுரிமைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் போராடி பெற்ற Eddie Maboவுடனான தனது நட்பைப் பற்றியும் பல நேரங்களில் பழங்குடியினர் வாழ்க்கைமுறை பற்றிய தன் அறியாமை குறித்தும் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

February 13,2008 அன்று ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் Kevin Rudd வரலாற்று முக்கியம்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். அது உங்களின் பார்வைக்கு: 
http://australia.gov.au/sites/default/files/global_site/library/videos/national_apology.wmv

- பிரேம்குமார்
(http://premkumarkrishnakumar.wordpress.com)

Thursday, May 01, 2014

128. கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்: கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும் (கட்டுரைகள்)
ஆசிரியர்: இரா.முருகவேள்
வெளியீடு: பிப்ரவரி 2012ல் பாரதி புத்தகாலயம் 
                   டிசம்பர் 2013ல் பொன்னுலகம் பதிப்பகம்
பக்கங்கள்: 67
விலை: ரூபாய் 50
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
'புலி வருது புலி வருது' என்று பயங்காட்டுவதற்காக சொல்வதை நாம் கேட்டிருப்போம். இப்படி புலிக்கே பயங்காட்டிய கதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, புலியைக் காப்பாற்ற வேண்டும் என்று சில ஆங்கில ஊடகங்கள் அடிக்கடி விளம்பரப்படுத்தின. வழக்கம் போல சில இந்தி நடிகர்களும் அவ்விளம்பரங்களில் வதனம்காட்டி கவனம் ஈர்த்தனர். எனக்குப் புரியவில்லை. புனே நகரில் காத்ரேஜில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு இருமுறை சென்றும் அங்குள்ள புலி/கள் எனக்கு முழு தரிசனம் காட்டும் கரிசனமற்று இருந்தன. சமீபத்தில் நரேந்திர மோடிக்கு முன் சென்னை வண்டலூரை மக்கள் வெள்ளத்தில் நிரப்பியவர் ஜெயலலிதா. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏழு வெள்ளைப் புலிகளுக்கு அவரே பெயரிட்டதைத் தமிழ் ஊடகங்கள் எட்டுத் திக்கும் பரப்பின. அவைதான் நான் முதன்முதலில் நேரில் பார்த்த புலிகள். மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்கள் போல வெண்புலிகளும். அவை புல்லைத் தின்றாலும் ஆச்சரியம் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இவ்வெண்புலிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுண்டு. இன்று இந்து நாளிதழில் (The Hindu) வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை கூட, புலிகளுக்கு இடையே நாடு கடந்த, கண்டங்கள் கடந்த கலப்பின இனப்பெருக்கத்தையே ஊக்குவிக்கிறது. மதம் கடந்த, சாதி கலந்த கலப்பினம் மனிதர்களுக்கே எட்டாத கனவாக இருக்க, நான் மீண்டும் முதலில் ஆரம்பித்த விடயத்திற்கே வருகிறேன். சாம்பாருக்குப் பின் புளிக்குழம்பைத் தவிர்த்து விட்டு நேரடியாக இரசம் சாப்பிடும் என்னைப் போன்ற சாமானியனால் எப்படி புலிகளைக் காப்பாற்ற முடியும் என்று புரியவில்லை. புலியும் நானும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டால், நான் புலியைக் காப்பாற்றுவேனா? இல்லை நாலுகால் பாய்ச்சலில் ஓடி மரத்தில் ஏறிக் கொள்வேனா? கரப்பான் பூச்சியைக் காப்பாற்றுங்கள், கொசுவைக் காப்பாற்றுங்கள், கோழியைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. ஏன் புலி? தேசிய விலங்கு என்பதாலா? எனக்குப் புரியவில்லை.

அரசியல் அமைப்புச் சாசனத்தின் மாதிரியை அமைக்க காங்கிரஸ் கட்சியின் காரிய குழு கூடியது. இந்தியைத் தேசிய மொழி ஆக்கலாமா என்று ஓட்டெடுப்பு. 78 ஆதரவு. 78 எதிர்ப்பு. மேட்ச் ட்ரா! நீண்ட விவாதம், நீண்ட மவுனங்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டெடுப்பு. 78 பேர் ஆதரவு. 77 பேர் எதிர்ப்பு. ஒருவர் செல்லாத ஓட்டு போட்டாரா, இல்லை NOTA போட்டாரா, இல்லை தேர்தலைப் புறக்கணித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. இன்று இந்தியாவிற்குச் சட்டரீதியாக இந்தி தேசிய மொழி ஆகவில்லை என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்களும் நர்சரிப் பள்ளிகளில் இன்று இந்தி படிக்க அந்த ஓர் ஓட்டுதான் காரணம்! அதே போல தேசியப் ப‌றவை மயிலா, இல்லை இன்னொரு பறவையா என்று கடும் விவாதம். கிட்டத்தட்ட இன்னொரு பறவை தேர்வு செய்யப்பட்ட போது, அப்பறவையின் ஆங்கிலப் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினால் ஒரு கெட்ட வார்த்தை வருகிறதென ஓர் உறுப்பினர் எதிர்க்க மயில் பாஸானது. இப்படி புலிக்கும் கூட ஒரு கதை இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மூதாட்டி ஏதோ தனியாகப் பேசுவது போல, யாருக்கும் புரியாத ஓர் ஒளிக்காட்சியைச் சமூக வலைத்தளங்கள் ஆவலுடன் பார்த்து Like / Forward / Comment செய்துவிட்டு மறந்து போயின. அந்தமான் காடுகளில் பேசப்பட்ட ஏதோ ஒரு மொழியின் கடைசி ஆள் அவள். சமீபத்தில் அவளுடன் அம்மொழியும் புதைந்து போனது. சுதந்திர இந்தியாவில் சில நூற்றுக்கணக்கான மொழிகள் இதே முடிவைச் சந்தித்திருகின்றன. தேசியம் என்ற அடையாளத்துடன் ஒற்றை மொழிக்கு நிறுவனங்கள் அமைத்து, பிராந்திய மொழிகளைக் கைவிட்டது தான் முக்கிய காரணம். அந்த இன்னொரு பறவையையும் சில ஆண்டுகளாக மனிதர்கள் யாரும் பார்த்ததாகக் கேள்விப்பட்டதில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன். ஏற்கனவே Tiger Cheetah Leopard என்ற வார்த்தைகளை இரும்புத்தோல் போர்த்திய வாகன‌ங்களாக மட்டுமே புரிந்து கொள்ளும் அடுத்த‌ தலைமுறையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். அப்படி என்றால் புலியை முன்னிலைப்படுத்தி மற்ற உயிரினங்களைக் கொன்றுகொண்டு இருக்கிறோமா? எனக்குப் புரியவில்லை.

புலிகளைக் காப்பாற்றச் சொன்ன அவ்வூடகங்கள் ஒரு வரைபடத்தையும் (graph) வெளியிட்டன. X அச்சில் புலிகளின் எண்ணிக்கை. Y அச்சில் ஆண்டு. முதல்வர் முன்னால் அதிகாரிகள் போல வளைந்து நெளிந்த கோடு, எம்.எல்.ஏ.க்கள் போல திடீரென கீழே விழுந்துவிட்டது. அதாவது புலிகளின் எண்ணிக்கை பாதாளத்துக்குக் குறைந்துவிட்டதாம். ஏன் புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என அவ்விளம்பரங்களே ஒரு விளக்கம் கொடுத்தன. தாவரங்களைத் தாவர உண்ணிகள் தின்கின்றன. அவற்றை ஊன் உண்ணிகள் தின்கின்றன. எனவே ஓரிடத்தில் புலி ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அவ்விடத்தில் தாவர உண்ணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். மேலும் ஓரிடத்தில் தாவர உண்ணிகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் அவ்விடத்தில் தாவரங்களுக்குப் பஞ்சம் இல்லை என்று அர்த்தம். அதாவது உணவுச் சங்கிலியில் உச்சியில் இருக்கும் புலி நலமாய் இருந்தால், கீழ் மட்டத்தில் இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும் நலமாய் இருக்கின்றன என்று அர்த்தம். அதாவது ஒட்டுமொத்த வனமும் / காடும் நலமாய் இருக்கிறது என்று அர்த்தம். இதே விளக்கம் மற்ற ஊன் உண்ணிகளுக்கும் பொருந்தும் போது, அவற்றை ஏன் காப்பாற்ற முனையவில்லை? மன்னன் நலமானால் குடிமக்களும் நலம்தான் என்பது போல் அல்லவா இவ்விளக்கம் உள்ளது? ஏற்கனவே இப்பதிவு பெரிதாகப் போய்க் கொண்டு இருப்பதாலும், இன்னும் சில முக்கிய கேள்விகள் இருப்பதாலும் இவ்விரு கேள்விகளையும் தாண்டிச் செல்கின்றேன்.

அவ்வூடகங்களின் விளம்பரங்களில் இந்திப்பட நடிகர்கள் தோன்ற ஆரம்பித்தனர். அதில் ஒருவர் ஏற்கனவே ஒரு விடைதெரியாத பிரம்மாண்ட‌ ஊழலில் மாட்டியவர். இன்னொருவரின் மனைவி இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் இருந்ததாக வருமான வரி காட்டாமல் மாட்டியவர். அந்த இன்னொருவர் தனது பாக்கெட்டில் இருந்து சில இலட்சங்கள் கொடுத்ததாக அவ்விளம்பரத்தில் சொன்னார். Donate Now என்று விளம்பரம் முடிந்தது. புலியை நான் எப்படி காப்பது என்றே எனக்குப் புரியாத போது, எனது பணம் எப்படிக் காக்கும்? அவ்விளம்பரம் செய்பவர்கள் பற்றி பிறகுதான் கவனித்தேன். மிகப்பெரிய உலகு தழுவிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று. இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விநியோகஸ்த உரிமை. இதுமாதிரி பொன்முட்டையிடும் வாத்துகளுக்கு இந்தி நடிகர்களோடு, இந்தக் கிரிக்கெட் வீரங்களும் வருவார்கள். அப்புலி விளம்பரங்களில் அவர்களைக் காண முடியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் வெளிநாடுகளில் ஆட்டம் போட்டாலும் அவர்களை வைத்துத்தானே தேசபக்தி அளக்கப்படுகிறது! மானைக் கொன்ற வழக்கில் இன்றும் கூட மாட்டிக் கொள்ளாமால் துள்ளி ஒடிக் கொண்டே இருக்கும் சில பிரபல இந்தி நடிகர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் அப்புலி விளம்பரத்தில் வந்தார்களா என்று தெரியவில்லை.

தேசத்தின் மலைகளில் பெரும் பகுதிகளைப் பெரும் நிறுவனங்களும், டீ காபி ரப்பர் தேக்கு யூக்கலிப்டஸ் தோட்டங்களும், அணைகளும், சுரங்கங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் தான் புலி உட்பட வனவிலங்குகள் வாழ்கின்றன. உண்மை இப்படி இருக்கும் போது, சமீபத்தில் புலிகள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டதை அறிவீர்கள். புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல்? சுற்றுச்சூழல்வாதிகளும் அரசும் முன் வைக்கும் திட்டங்கள் ஏன் பழங்குடி ஏழை மக்களையே குறிவைக்கின்றன? மனிதனும் விலங்குகளும் பரந்து விரிந்த காட்டில் இணைந்து வாழவே முடியாது என்று அவர்கள் சொல்வதில் உண்மை உண்டா? என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில்? உங்களுக்கு அநேகமாகப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குப் புரிந்துவிட்டது. அதைச் செய்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசலாம்.
(http://udumalai.com/)
கார்ப்பரேட் என்.ஜி.ஓ.க்களும் புலிகள் காப்பகங்களும். ஆசிரியர் இரா.முருகவேள். பரதேசி திரைப்படத்தின் மூலக்கதையை 'எரியும் பனிக்காடு' என்று தமிழில் மொழிப் பெயர்த்தவர். 'சோளகர் தொட்டி'யின் ஆசிரியர் ச.பாலமுருகன் சிறந்த முன்னுரை கொடுத்திருக்கிறார். புத்தகத்தைப் பற்றி இனிமேலும் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு தான். சின்னப் புத்தகம். காடுகளைப் பற்றி பல விசயங்களைப் பேசுகின்றன. கியோட்டொ ஒப்பந்தம் (Kyoto Protocol) பற்றி எனக்கு முன்பே தெரியும். அதைப் புரியவைத்தது இப்புத்தகம்தான். காட்டில் ஒரு மரத்தை வெட்டிவிட்டு, நம் வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் 10 மரங்கள் நட்டு ஈடு செய்ய முடியாது என்று காட்டுமரங்களின் மதிப்பைப் புரியும்படி எழுதி இருக்கிறார். பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதும் நெல்லிக்காய் பறிப்பதும் வனத்தின் உணவுச் சங்கிலியைப் பாதிப்பதாக கதைகள் சொல்லி, பழங்குடி மக்களை வெளியேற்றி தனியார்மயமாக காடுகள் மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். கார்பன் வணிகம் பற்றியும், அதன்மூலம் வளர்ந்த நாடுகள் மற்றவர்களை விஞ்ஞான ரீதியாகச் சுரண்டுவதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றன. அமெரிக்காவுக்குக் காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்குக் கொரில்லா, இந்தியாவுக்குப் புலி என்ற வரிகளை மறக்கவே முடியாது. இந்தியாவில் எத்தனை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன தெரியுமா? அடேயப்பா! நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள். 

புத்தகத்தில் இருந்து சில வரிகள்:
1. 1960ல் WWF (Worldwide Fund for Nature) க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் ராபர்ட் மெக்னமாரா, டேனியல் லூட்விக் என்ற இருவர் முக்கியமானவர்கள். வியட்நாம் போரில் ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகறிந்தது. அப்போரில் அமெரிக்கா காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களின் இலைகளை உதிர்க்கச் செய்யும் அளவுக்கு ரசாயனங்களைப் பொழிந்தது. இதே போன்று டேனியல் லூட்விக்கின் நிறுவனங்கள்தான் அமேசான் காடுகளில் பேரழிவுகளை ஏற்படுத்தின. வனங்களைப் பாதுகாக்க சரியான நபர்கள் இவர்கள்தானா!
2. புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியில் மக்கள் சீமாற்றுப்புல் அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீமாற்றுப்புல் என்பது எந்த விலங்கும் உண்ணாத புல் ஆகும். இதனை மக்கள் கூரை அமைக்கவும், விளக்குமாறுகள் செய்யவும் பயன்படுத்துவார்கள். இது எளிதில் தீப்பற்றக் கூடியதாகும். எனவே வேனில் காலங்களில் இதை அறுக்க முடியாவிட்டால் மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். இப்போது இப்புல் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளதால், புல்லில் அடிக்கடி காட்டுத்தீ பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொரு தீ பரவும் சம்பவத்திலும் 50, 60 ஏக்கர் காடுகள் அழிகின்றன.
3. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறைவைகள் சரணாலத்தில் நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதிமேதாவிக்கு இது உறுத்தியது. கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்குக் கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை. எனவே அவை வரவில்லை என்று பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்குப் பரத்பூர்தான் சரியான உதாரணம்.
4. சுதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கிலேயர்களும் வேட்டையாட தனிப் பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. இப்பகுதிகள் வனவிலங்கு சரணாலங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோ டூரிஸ்டுகளாக திரும்பி வருகிறார்கள். இப்போதும் கூட வனவிலங்கு சரணாலங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.

வன உயிர்களைச் சுற்றுலா என்ற பெயரில் அதன் வாழிடம் வரை அணுகுவதைத் தவிர்ப்போம். அதற்காக என்னால் எப்படி புலியைக் காப்பாற்ற முடியும் என்று ஒட்டுமொத்தமாக விலகிப் போவதும் தவிர்ப்போம். இப்பிரபஞ்சத்தில் உணவுச் சங்கிலியில் ஓவ்வோர் உயிரும் இன்னொன்றுடன் கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகளால் கட்டித்தான் வைத்திருக்கிறது இயற்கை. 'புலி வருது புலி வருது' என்று உங்களைப் பய‌ங்காட்ட ஒரு சமீபத்திய கதையை உதாரணமாகச் சொல்லி முடிக்கிறேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பூமியின் மையம் வழியே துளையிட்டுக் கொண்டே போனால் இங்கிலாந்து வரும். அதாவது இவ்விரு தேசங்களும் புவியியல்படி இருவேறு துருவங்கள். இங்கு நள்ளிரவு என்றால், அங்கு நண்பகல். அங்கு கோடை ஆரம்பித்தால், இங்கு கோடை முடியும். ஆஸ்திரேலியா கண்டத்தைக் கால்நடைகளின் கண்டம் என்பார்கள். அந்த அளவிற்கு அங்கு மனிதர்களை விட கால்நடைகள் அதிகம். பெரும்பாலான கண்டம் வறண்ட பாலைநிலத்தால் ஆனது. ஆண்டாண்டு காலமாக அங்கு மனிதர்களுடன் கால்நடைகளும் உணவுப்பஞ்சம் இல்லாமல் வாழ்ந்துதான் வந்தனர். அங்கு காலனி பதித்த இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்குத் திடீரென ஒரு யோசனை வருகிறது. இங்கிலாந்து கால்நடைகள் விரும்பி உண்ணும் ஒரு தாவரத்தை ஆஸ்திரேலியாவுக்குக் கொணர்ந்து பயிரிட்டனர். கால்நடைகளும் அத்தாவரத்தை உண்ண ஆரம்பித்தன. பற்பல ஆண்டுகள் கழித்து, திடீரென பெண் கால்நடைகள் கர்ப்பம் தரிப்பது அரிதாகிக் கொண்டே வந்தது. அடுத்த தலைமுறையே இல்லாமல் போய்விடும் அளவிற்குக் குட்டிகள் குறைந்து போனதும், விலங்கியல் வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர். பெண் கால்நடைகளுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. விஞ்ஞான உலகமே ஆச்சரியப்படும் அளவிற்கு ஓட்டுமொத்த ஆண் கால்நடைகளுக்கும் மலட்டுத்தன்மை பரவலாக இருந்தது. அவை உண்ணும் தாவரங்களும் பல ஆண்டுகளாக உண்ணப்படுபவை தான். விஞ்ஞானம் தலையைப் பிய்த்துக் கொண்டது. ஒருவர் பதில் சொன்னார். சுற்றுச்சூழல் பற்றிய எனது அடுத்த பதிவில் அப்பதிலைச் சொல்கிறேன்.

அரசன் அன்றே கொல்வான், இயற்கை நின்று கொல்லும்! பணத்தால் அல்லால், புலி மட்டுமல்லால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்!

- ஞானசேகர்
 (http://jssekar.blogspot.in/)